“ஸோ.. சொல்வேன்ட் இப்படி மேல இருந்து கீழ இறங்கிறது தான் decending paper chromatography.. இதே நேர் எதிர் ascending paper chromatography.. மொபைல் பேஸ்ல உள்ள லிகுய்ட் ட்ராவெல் ஆகி வெவ்வேறு ஸ்பாட்டில் பிரிந்து நிற்கும்.. அப்புறம் டெடிக்ஷன் சொலியூஷன் கொண்டு என்ன காம்பௌண்ட் என ஐடென்டிஃபை பண்ணலாம்..”
சக்தியின் குரல் மட்டுமே கணீரென வகுப்பறை எங்கும் ஒலித்தது.
இளமஞ்சள் வண்ண காட்டன் புடவை அவளை பாந்தமாய் தழுவி இருக்க
தன் டெஸ்கில் லேசாய் சாய்ந்து,
நின்ற இடத்தில் இருந்தே அனைவர்மீதும் பார்வையை வைத்து சிரத்தையாய் பாடம் எடுக்க மாணவர்கள் கவனமும் அவளை தவிர எங்கும் சிதறவில்லை.
பாடவேளை முடிய இன்னும் சில நிமிடங்கள் தான் இருப்பதால் அந்த தலைப்போடு முடித்துக் கொண்டவள் அன்று நடத்திய தலைப்புகளை மாணவர்களோடு சின்ன கலந்துரையாடல் போல் பேசி அவர்களின் புரிதலை அனுமானித்தாள்.
அதில் நேரம் செல்ல பெல் அடித்ததும்
அத்தோடு நிறுத்திவிட்டு தன் புத்தகத்தை எடுக்க சென்றவள் விடைக்கொடுக்க மாணவர்கள் எல்லாம் எழுந்து நிற்கவும்,
“எப்படா பெல் அடிக்கும் தப்பிக்கலாம்னு பார்த்துட்டு இருந்தீங்களா.. நாளைக்கும் வந்து இதை தான் கன்டினியூ பண்ணுவேன் பார்..”
என போலியாய் மிரட்ட,
“நாங்க ரெடி மேம்..” என எல்லோரும் கோரஸ் போடவும் சிரிப்புடன் வெளியேறினாள்.
அவள் படித்த கல்லூரி தான்.. அங்கே ஒவ்வொரு இடத்திலும் ஆயிரமாயிர இனிய நினைவுகள் நிரம்பியிருக்க வேலையால் ஏற்படும் சோர்வையும் மீறி எப்போதும் அவை ஒரு புத்துணர்ச்சியையே கொடுக்கும்..
இன்றும் அதேபோல் ஓர் இதமான மனநிலையில் வராண்டாவில் பொறுமையாய் நடந்து செல்ல
அது கடைசி பாடவேளை என்பதால் கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் கூட்டமும் கலைந்து அங்கும் இங்கும் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்ப்பட்ட பியூன்,
“மேம் உங்களை தான் தேடிட்டு வந்தேன்.. சேர்மன் சர் உங்களை வர சொன்னாங்க..”
என்று சொல்லி செல்ல எதற்கு என யோசித்துக் கொண்டே அவர் அறை இருக்கும் கட்டிடத்தை நோக்கி சென்றாள்.
‘விஜய்வரதன்..’ என பெயர் தாங்கிய கதவை தட்டிவிட்டு அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைய அங்கு மேசையின் மறுபக்கம் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
சக்தி படித்தபோதும் விஜய் தான் நிர்வாகி.. அப்பொழுது அவருக்கு பெரும் இரசிகைகள் பட்டாளமே இருந்தது அவள் உட்பட..!!
இப்போதும் வயதின் முதிர்வு இருந்தாலும் கம்பீரம் குறையாத மரியாதைகுரிய தோற்றம்..!
“குட் ஈவினிங் சர்..”
சக்தியை கண்டதும் அவர் புன்னகையோடு,
“குட் ஈவினிங்.. வா சக்தி.. உட்கார்..”
என்றவர்,
“ஸோ.. ஆரியன், பேபி எல்லாம் எப்படி இருக்காங்க.. பேபி இப்போ என்ன வயசு..”
என்று விசாரிக்கவும் முகம் மலர, “நல்லா இருக்காங்க சர்.. துருவ்விற்கு இப்ப ஒன்றரை வயசு..”
என கூறினாள்.
“ஹோ.. சரி மா… அப்புறம் ஒரு பர்சனல் ரெக்வஸ்ட்காக தான் உன்னை வர சொன்னேன்..”
“என்னது சர்..”
“என் பொண்ணு விஷயமா தான்.. அவ கீப்போர்ட் கத்துக்கனும்னு ஆசைபடுறாள்.. அதை உன்கிட்ட தான் அவ காத்துக்கணும்னு என் வீட்டம்மா ஆசைபடுறாங்க.. அதான் உன்கிட்ட கேட்கலாம் நினைச்சேன்… உனக்கு நேரம் இருக்குமா சக்தி..? உங்க வீட்டுக்கு தான் வரணும் என்றாலும் ஓகே அனுப்பி வைக்கிறேன்..”
என்று கேட்கவும் அவளுக்கு முறுவல் பூத்தது.
“இதை கேட்கணுமா சர்.. மித்ராவிற்கு சொல்லிக் கொடுக்க எனக்கு கசக்குமா என்ன..? தாராளமா அனுப்பி வைங்க..”
என்றவள் மற்ற விவரங்களையும் பேசிவிட்டு விடைபெற்றாள்.
அதன்பின் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
‘இன்றைய நாளில் இரண்டு குட் நியூஸ்..’ மனதில் உற்சாக சாரல் வீச உடனே ஆரியனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.
அவளின் ஸ்கூட்டி செல்லும் முன்பே மனம் காற்றில் பறந்து அவனை வட்டமிட்டது.
உள்ளே வண்டியை நிறுத்திவிட்டு அவள் கதவை தட்டும் முன்னரே தானாக திறந்த ரம்யா,
“ஷ்.. எங்க பெல் அடிச்சு அவனை எழுப்பி விடுவியோனு பார்த்துட்டே உட்கார்ந்து இருந்தேன்.. நல்ல வேளை..”
என்று நிம்மதியாய் சொல்லி உள்ளே செல்ல அவரை தொடர்ந்து வந்தவள்,
“ஏன் அத்தை.. என்ன பண்ணினான்..”
என நகைப்போடு கேட்டாள்.
ஹால் ஸோஃபாவில் அமர்ந்திருந்த திருவின் தோளில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் துருவ். ஆரியன் சக்தியின் செல்ல மகன்..
“இன்னைக்கு மேக்னா மேகாவோடு வந்திருந்தாள். மேகாவை பார்த்ததும் ஆட்டம் தான்.. மதியம் தூங்கவும் இல்ல.. இப்ப அவ கிளம்பி போனதும் ஒரே அழுகை.. ஒருவழியா சமாதானம் ஆகி இப்ப தான் கண்ணை மூடினான்..”
“மேக்னா வந்துட்டு ஏன் அதுக்குள்ள போனா… நான் வர வரையும் ஆவது இருக்க சொல்லலாம்ல அத்தை..”
“சொல்லாம இருப்பேனா..? சாயுங்காலம் மாப்ள எங்கயோ போகணும்னு சொல்லி இருந்தாங்களாம்.. காலைல இருந்து வீட்டு நியாபகமா இருக்கவும் ஒரு எட்டு வந்துட்டு போகணும்னு நினைச்சு இருக்கா..
நீ கேட்பேன்னு தெரிஞ்சு தான் ‘உனக்கு ஃபோன் பண்றேன்னு..’ சொல்ல சொன்னாள்..”
“பண்ணட்டும்.. பேசிக்கிறேன்..”
என கூறி உள்ளே சென்று ஃப்ரெஷ்னப் ஆகி வந்தவள்,
“அவனை கட்டிலில் படுக்க வைக்கிறேன் மாமா..”
என்று சொல்ல பேரனின் முகம் பார்த்துவிட்டு,
“சரி மா.. இந்தா..”
என மெல்ல துருவ்வை அவளிடம் கொடுத்தார்.
தான் கைமாறபடவும் மெல்லமாய் சிணுங்கியவனை சமாதானம் பேசி தட்டிக் கொடுக்க அன்னை என உணர்ந்துக் கொண்டு,
“ம்மா..” என முணுமுணுத்து
இன்னும் அவள் கழுத்தோடு ஒன்றினான். அதில் இருவருக்குமே புன்னகை பூத்தது.
“சரிங்க மாமா.. இவனை தூங்க வைக்கிறதுக்குள்ள நீங்க தான் டயர்ட் ஆகி இருப்பீங்க.. நீங்க ரெஸ்ட் எடுங்க..”
என சொல்லிவிட்டு துருவ்வை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்றவள் கட்டிலில் நடுவே படுக்க வைத்தாள்.
துருவ் தோற்றத்தில் ஆரியனின் மறு பிரதி தான்.. முதல் பார்வையிலே இவனின் மகன் என்று சொல்லிவிடலாம்..!! அவன் முகத்தையே வாஞ்சையாய் பார்த்தபடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் வரையிலும் தட்டிக் கொடுத்துவிட்டே எழுந்து வர அதற்குள் அவளுக்கு டீ போட்டிருந்தார் ரம்யா..
அதனை வாங்கி கொண்டு பின்கட்டு வாசலில் தன் மாமியார் உடன் அமர்ந்துவிட்டாள். முன்பு ரம்யாவிடம் இருந்த தயக்கங்கள் தடுமாற்றங்கள் எல்லாம் இப்போது இல்லை. ஆரியனே சில சமயம் கிண்டல் செய்யும் அளவு இருவருமே மற்றவரை நன்கு புரிந்து வைத்திருந்தனர். புரிதல் கொண்ட உறவுகள் என்றுமே அழகானது அல்லவா..!!
“உங்க அம்மா போட்டோஸ் எல்லாம் அனுப்பினாங்க சக்தி.. இப்போ அஸ்ஸமில் இருக்காங்க போல.. அந்த ஊரு பேர் கூட என்னவோ சொன்னாங்களே..”
“மஜூலி..”
“ஆங்.. அது தான்.. என்ன அழகா இருக்கு தெரியுமா..?? கடவுளின் படைப்பே அற்புதம் தான் மா..”
என சிலாகித்து சொல்ல அவளும் ஆர்வமாய்,
“நான் போட்டோஸ் எதையும் பார்க்கலயே.. எங்கே கொடுங்க..”
என்று கேட்க அவர் தன் அலைபேசியில் எடுத்துக் கொடுத்தார்.
உண்மை தான்.. புகைப்படத்தில் பார்க்கவே அந்த பசுமையான சூழல்கள் கண்களுக்கு குளுமையாய் இருந்தது.
அந்த பின்னணியில் அகம் போலவே முகத்திலும் மகிழ்ச்சி பொங்க போஸ் கொடுத்து நின்றிருந்த விஷாகன் யாமினியை காண அவளில் இதழ்கள் மேலும் விரிந்தது.
துருவ் பிறந்த பின்னும் இரண்டு மாதம் அம்மா அப்பா கவனிப்பில் சீராடிவிட்டு தான் புகுந்த வீடு திரும்பினாள். அதில் ஆரியன் தான் அங்கும் இங்கும் அல்லாடி போனான் என்பது வேறு விஷயம்..!!
விஷாகன் சொன்னது போலவே யாமினியே சர்வம் என்பது அவருக்காகவே தன் நேரங்களை செலவிட்டு இழந்த பல தருணங்களுக்கு ஈடு செய்தார்.
இப்போது யாமினியும் சில மாதங்களுக்கு தன் பணியில் இருந்து ப்ரேக் எடுத்து இருந்தார். விஷாகன்
இதுவரை பணி ஆற்றிய எல்லா ஊர்களுக்கும் மீண்டும் ஒரு முறை செல்லவே இந்த இடைவேளை..
விஷாகன் தன் அனுபவங்கள், பழகிய மக்கள், இரசித்த இடங்கள் என தான் அறிந்த உலகத்தை யாமினிக்கும் தன் வழியாய் அறிமுகப்படுத்த விருப்பம் கொண்டார்.
இப்பொழுது அவர்கள் செக் லிஸ்ட்டில் உள்ள ஊர்களில் ஏற்கனவே சில இடங்கள் முடிந்த நிலையில் விஷாகனை காட்டிலும் யாமினி தான் ஆர்வமாய் பயணத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
சொந்தகளில் தொடங்கி நாட்டு நடப்புவரை மாமியாரும் மருமகளும் அலசி ஆராய்ந்ததில் நேரம் கரைய ஆரியனும் வந்துவிட அவனை கவனிக்க சக்தி எழுந்துவிட்டாள்.
அவனுக்கு காஃபி கலந்து வந்தபோது அறையில் உறங்கும் மகனை கொஞ்சிக் கொண்டிருந்தான் ஆரியன்.
“போதும்.. போதும்.. அவனை எழுப்பி விட்டுடாதே..”
என காஃபியை அவன் கையில் திணிக்க,
“போடி.. உனக்கு பொறாமை..”
என்று மெல்ல காஃபியை சிப்பியவன்,
“என்ன மேடம் ஜி.. முகம் இன்னைக்கு எக்ஸ்ட்ரா பிரகாசமா இருக்கே.. என்ன மேட்டர்..”
என்று கேட்க, “எப்படி டா.. எப்படி கண்டுப் பிடிக்கிற..”
என அவள் வியக்க மிதப்பாய் காலரை தூக்கிவிட்டு,
“அதெல்லாம் மாமன் பல வித்தைகள கைவசம் வைச்சு இருக்கேன்.. நீ செப்பு..”
என்றான்.
“ஆமா இன்னைக்கு இரண்டு விஷயம் நடந்தது.. விஜய் சர் கூப்பிட்டு மித்ராவிற்கு கீப்போர்ட் கத்து தர சொல்லிக் கேட்டார்..”
“ஹே பார்ரா..”
“நானும் ஓகே சொல்லிட்டேன்.. அதுவும் சக்திபிரியா அக்கா என்கிட்ட தான் அவ கத்துக்கணும்னு சொன்னாங்கலாம்.. கேட்டப்ப அவ்வளவு சந்தோஷம்..”
என்று சொல்ல அவனும்,
“சூப்பர்.. நல்ல விஷயம் தான்..”
என சந்தோஷித்தான்.
“ம்ம்.. அப்புறம் இன்னொன்னு என்னானா..” என இழுத்து,
“ஏ.ஜே சர் ஆபிஸ்ல இருந்து ஒரு மெயில் வந்தது..” என்று சொல்லவும் அவன் புருவங்கள் ஆச்சரியமாய் உயர்ந்தது. ஏ.ஜே ஒரு முன்னணி இசை அமைப்பாளர்..!!
“ரியலீ..?? என்ன விஷயமா..??”
அவன் பரபரப்பாய் கேட்க,
“துபாய்யில் ஒரு பெரிய மியூசிக் கன்சர்ட் ஆர்க்கனய்ஸ் பன்றாங்களாம்.. அதில் 30 மியூஷியன்
அவரோட சேர்ந்து கலந்துக்க போறாங்க… அதில் ஒருவரா என்னை
இன்வெய்ட் பண்ணி இருக்காங்க..”
என்று சொல்லவே, “வாவ்.. செம்மல.. கலக்குறடி.. வேற லெவல்..”
என்று அவளை அணைத்து கொண்டாட்டமாய் கூறினான். வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்ஸிற்கு பிறகு சில இசை அமைப்பாளர்களின் அறிமுகம் தானாகவே அவளுக்கு கிடைத்தது. அதில் ஏ.ஜேவும் நேரடியாய் அவளை பாராட்டியதோடு மட்டும் இன்றி சில பாடல்கள் ரெக்கார்டிங் போது அழைத்து வாசிக்கும் வாய்ப்பும் கொடுத்து உள்ளார். அந்த நிலையில் அவர் ஏற்பாடு செய்யும் உலகளாவிய இசை நிகழ்ச்சியில் அவளை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது இருவருக்குமே அத்தனை பெருமையாக இருந்தது.
ஆம்.. வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ் பிறகு சக்திக்கு மட்டும் அல்ல மற்றவர்கள் பாதையும் மாறி இருந்தது.
யோகி தற்போது வளர்ந்து வரும் இன்டிபென்டென் மியூசிக் உலகில் அவனுக்கென ஓர் அடையாளத்தை பத்தித்து வருகிறான். அவனே எழுதி இயற்றிய பாடல்கள் ட்ரெண்டிங் பாக்ஸில் பல மாதங்கள் நின்றது.
ஸ்வேதா நான்கு படங்களில் பாடி தமிழ் சினிமா பின்னணி பாடகியாய் உருமாறி வருகிறாள்.
லெனினிற்கு தமிழில் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் மலையாள படம் ஒன்றில் பாடி இப்போது தான் வெளியாகி இருக்க அது கேரளத்தில் சூப்பர் ஹிட் ஆனது.
கெளதம் முந்தைய இரசி(கை)கர்கள் வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ் பிறகு இரட்டிப்பாக அவன் இசை அமைப்பாளர் கண்களில் பட்டானோ இல்லையோ பல இயக்குனர்களின் கவனத்தில் விழுந்தான்.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் உதய்குமாரின் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு படம் ஒப்பந்தம் ஆகி இருக்கிறான். அது இசையை மையப்படுத்திய படம் என்பதால் ஒரு பாடலை தங்கள் ஆர். ஓ. எல் குழுவிற்கு கொடுக்க கேட்டு வாங்கி இருக்க அதுவும் ஐவரின் வரிசையில் இருந்தது.
இவ்வாறு குழு பெயரை போலவே இவர்கள் வாழ்க்கையின் தாளமும் இனிமையாய் இசைக்க தொடங்கி உள்ளது.
“ஆனா நாலு நாள்டா.. துருவ்வை நினைச்சால் கவலையா இருக்கு.. அவன் இல்லாம அத்தனை நாள் எல்லாம் என்னால இருக்க முடியாது.. எப்படி அக்சப்ட் பண்ணுவேன்..”
என்று தவிப்பாய் கூறினாள்.
“முன்னாடி நான் இல்லாம இருக்க முடியலனு சொல்லுவ.. இப்ப என்னை டீலில் விட்டாச்சு…”
என்று அவன் பெருமூச்சோடு சொல்ல அவனை இடித்து,
“விளையாடாத ஆர்யா.. எனக்கு சீரியஸா என்ன செய்றது தெரியல..”
என்று அவள் சொல்லவும்,
“ம்ஹும்.. டேட் எப்போ சொன்னாங்க..”
புருவங்கள் சுருங்கிட யோசனையாய் அவன் கேட்க அவள் சொன்னதும்,
“சரி.. ஒன்னு பண்ணுவோம்.. நீ நான் துருவ் மூணு பேருமே கிளம்பலாம்.. நீ உன் கான்ஸ்ர்ட்டை பார்.. நானும் என் பையனும் துபாய்யை சுத்தி பார்ப்போம்..”
என்றான் அசால்ட்டாய். அதில்,
“நிஜமாவா சொல்ற ஆர்யா.. உன்னால வர முடியுமா.. நீ வருவீயா..”
என குதிக்காத குறையாய் அவன் கையை அழுத்தி ஆர்வமாய் பார்க்க சிரித்தவன்,
“ஆமா டி.. உண்மையா தான் சொல்றேன்.. நாமளும் எங்கேயும் ட்ரிப் போகவே இல்லைல.. நாலு நாளை ஒரு வாரமா எக்ஸ்டென் பண்ணி நம்ம ட்ரிப்பா சுத்தி பார்த்துட்டு வரலாம்..”
என்று சொல்லி, “என்ன ஓகே வா..” என புருவம் உயர்த்த குதூகலமாய்,
“அச்சோ.. நீ தான் டா வேற லெவல்… என் செல்லம்ஸ்…”
அவன் கன்னத்தை பிய்த்து எடுக்காத குறையாய் கிள்ளி கொஞ்சியவள்,
“வா.. போய் அத்தை மாமா கிட்டயும் சொல்லலாம்..”
என்று அதே வேகத்தில் அவர்களோடும் பகிர எல்லோருக்கும் சந்தோஷமே..!!! அப்படியே அதை தன் பெற்றோருக்கும் அழைத்து கூறினாள்.
அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென ஆரியன்,
‘சக்தி.. ‘ என உரக்க அழைக்கவும் என்னவோ ஏதோ என போனை வைத்துவிட்டு அறைக்கு ஓடியவள் அங்கே அவள் கண்ட காட்சியில் மனதில் பனிமழை பொழிய ஆச்சரியமாய் நின்று விட்டாள்.
ஏனெனில் அவளின் கப்போர்ட் அருகே கால் நீட்டி அமர்ந்திருந்த துருவ் அவனின் முட்டி உயரம் இருக்கும் புல்லாங்குழலை இரண்டு கைகளிலும் நழுவி விடாமல் இறுக்க பிடித்து ஊதும் இடத்தில் வாய் வைத்து சப்பிக் கொண்டிருந்தான்.
“அடி.. என் அழகு..”
கன்னத்தில் கைவைத்து அவள் வியக்க ஆரியனும் தன் மகனின் சேட்டையை இரசித்துக் கொண்டே,
“வெளியே இருந்து உள்ள வந்து பார்க்கிறேன்.. ஸாரை கட்டிலில் காணும்.. எங்கடான்னு பார்த்தால் நீ கீழ் தட்டில் வைத்திருந்த ஃப்லூட்டை கையில் வைச்சு கிட்டு இந்த கோலத்தில் உட்கார்ந்து இருக்கான்..”
என்றான்..
“எவ்வளவு அழகா பிடிச்சு இருக்கான் பார் ஆர்யா.. என்ன கண்ணா..!!! அம்மா மாதிரி உங்களுக்கும் வாசிக்கனுமா..”
என்று கொஞ்சலோடு அவனை அள்ளிக் கொள்ள அருகில் செல்ல,
“சக்தி.. இரு.. இரு..”.
என வேகமாய் தன் அலைபேசியை எடுத்த ஆரியன்,
“நீயும் ஒரு ஃப்லூட் எடுத்துக்கிட்டு அவனை போலவே கையில் பிடிச்சு அவன் பக்கத்தில் உட்கார்..”
என்று சொல்ல அவள் கண்களும் பளீச்சிட்டது.
“ஓகே.. வெய்ட்..”
வேகமாய் தானும் ஒன்றை வைத்துக் கொண்டு மலர்ந்த சிரிப்போடு அவன் அருகே மண்டியிட்டு அமர ஆரியனும் அவர்கள் எதிரே ஃபோனில் புகைப்படம் எடுக்க வேண்டி மண்டியிட்டு அமர அம்மாவும் அப்பாவும் தன்னை சூழ்ந்துக் கொள்ளவும் சந்தோஷத்தில் துருவ் புதிதாய் முளைத்த முன்பற்கள் தெரிய சிரிக்க அப்படியே அத்தருணம் சிறைபிடித்து சேமிக்கப்பட்டது அழகோவியமாய்..!!!