அத்தியாயம் 14_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,945
விக்ரமுக்கு அவளை எப்படி சமாதானப் படுத்த என்று கூட தெரியவில்லை. அதன் பின் மீண்டும் அவன் அவளை அழைக்க அவள் அவன் அழைப்பை எடுக்க வில்லை. அப்போது ஆதி அவனை அழைக்க அவனிடம் காயத்ரி நிலையை சொன்னதும் அவனும் சேதுபதியும் அவசரமாக கிளம்பி வந்தார்கள்.
காயத்ரி கண் விழித்ததும் அங்கே ஒரு பாசப் போராட்டமும் ஆதி காயத்ரி இடையே காதல் பார்வைகளும் அரங்கேற அன்றைய பொழுது அதிகமாக மருத்துவ மனையிலே கழிந்தது.
ஆதியும் சேதுபதியும் போன மீட்டிங் தோல்வியில் முடிய அடுத்த மாடல் ரெடி பண்ண அடுத்த நாள் விக்ரமும் ஆபீஸ் செல்ல வேண்டி இருந்தது.
காயத்ரி கருவுற்று இருப்பதைப் பற்றி சாரதா ரேகாவிடம் சொல்லி சந்தோஷப் பட்டாள் சாரதா. ரேகாவும் காயத்ரிக்கு அழைத்து பேசினாள். ஆனால் காயத்ரி சாரதா இருவருமே மயங்கி விழுந்து ஹாஸ்பிட்டல் போனதை ரேகாவிடம் சொல்ல வில்லை.
இப்படியே மேலும் பத்து நாட்கள் கடந்தது. அப்போது ஒரு நாள் அதிகாலை வேளையில் மாடி பால்கனியில் நின்று ஆதவனை பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
அப்போது “விக்ரம்”, என்று அழைத்தான் ஆதி.
“என்னண்ணா?”, என்று கேட்ட படியே திரும்பினான் விக்ரம்.
“வர வெள்ளிக்கிழமை நம்ம அம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் வருது. அப்பாவுக்கு அறுபது வயசு ஆகிருச்சு. அதை கொஞ்சம் பெருசா கொண்டாடலாமா? இது சும்மா எனக்கு வந்த யோசனை தான். உனக்கு தோணுனதையும் சொல்லு”
“இதுல நான் சொல்ல என்ன இருக்குண்ணா? சந்தோஷமா கொண்டாடலாமே?”
“அது சின்ன விஷயம் இல்லை. எல்லாரையும் அழைக்கணும்;. கண்டிப்பா மஞ்சு குடும்பம் இங்க இருக்கணும். மத்த எல்லா சொந்தக்காரங்களையும் கூப்பிடணும்”
“கண்டிப்பா செஞ்சிரலாம் அண்ணா.. என்ன எல்லாம் பண்ணணும்னு சொல்லு. பண்ணிறலாம்”
“அதெல்லாம் சேந்து பண்ணிறலாம். ஆனா நீ மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கு”
“என்ன வேலை?”
“உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வர வேலை”
“அண்ணா”
“சொந்த்க்காரங்க எல்லாரும் வரப்ப. நீ மட்டும் தனியா நிப்பியா? ரேகாவை அழைச்சிட்டு வா”
அவளை அழைக்க போகிறோம் என்று சந்தோஷமாகவும் அழைத்தால் வருவாளா என்று கவலையாகவும் இருந்தது.
அவன் அமைதியாக இருக்கவும் “என்ன டா? ரேகாவைக் கூப்பிட போறியா இல்லையா?”, என்று கேட்டான் ஆதி.
“போகணும்”, என்று முணுமுணுத்தான் விக்ரம்.
“இங்க பாரு விக்ரம் நான் திருப்பி திருப்பி இதைத் தான் சொல்றேன். உன்னோட மனசும் உயிரும் ரேகா கிட்ட தான் இருக்கு. அவ இல்லாம நீ சந்தோஷமா இருக்க மாட்ட. அப்புறம் எதுக்கு வீம்பு பிடிக்கணும்? இது குடும்பம் விக்ரம். எத்தனை நாள் நாம எல்லாம் ஒண்ணா இருக்க போறோம் சொல்லு. எல்லாத்துக்குமே அட்ஜஸ்ட் பண்ணித் தான் டா ஆகணும்”
“போறேண்ணா”
“சந்தோஷம், அவளைக் கூட்டிட்டு வரது பங்க்சனுக்கா மட்டும் இருக்க கூடாது.. நிரந்தரமா ரேகா இங்கயே இருக்கணும். அதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணு. அவ கிட்ட மனசு விட்டு பேசு”
“ஹிம்ம்”
“ஹிம்ம்னு சொல்லிட்டு இங்கயே நிக்குற? இன்னும் மூணு நாள் தான் இருக்கு. நான் இன்னைக்கே மஞ்சுவை கிளம்பச் சொல்லிறுவேன். அப்புறம் ரேகாவை நீ போய் கூட்டிட்டு வா”
“இன்னைக்கா?”
“ஆமா, நம்ம வீட்டு மருமகளா அவளுக்கு பொறுப்பு இருக்குல்ல? காயத்ரி இருக்குற நிலைமைக்கு அம்மாவுக்கு துணைக்கு ரேகா தான் இருக்கணும். போய் அழைச்சிட்டு வா”
“அவளுக்கு புராஜெக்ட் இருக்குனு சொன்னா”
“அதெல்லாம் அப்ப. இப்ப எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு அன்னைக்கே சொன்னா. அழைச்சிட்டு வா”
“சரி”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.
அதே நேரம் ஆஃபிஸ்க்கு அரை மனதாக கிளம்பிக் கொண்டிருந்தாள் ரேகா.
அவளுக்கு என்ன டா இது வாழ்க்கை என்ற சலிப்பு வந்திருந்தது. காலையில் எழுகிறாள், அந்த கேவலமான ஹாஸ்டல் சாப்பாடை அவசரவசரமாக உள்ளே தள்ளி விட்டு ஓடுகிறாள். மாலை ஆறு மணி வரை கம்ப்யூட்டர் மிசினைக் கட்டிக் கொண்டு அதன் பின் ஏழு மணிக்கு மீண்டும் ஹாஸ்டல் வந்து அடைந்து விடுகிறாள். மீண்டும் அடுத்த நாள் அதே நிலை.
தனி அறையில் யாரும் துணைக்கு இல்லாமல் தினமும் தூக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு வாழ்க்கையை அவள் எப்படி ரசிப்பாள்?
தலையை சீவிக் கொண்டிருந்தவளுக்கு விக்ரம் நினைவில் வந்தான். விக்ரம் வீட்டில் இருந்த போது அவள் விக்ரம் உடன் சந்தோஷமாக வாழ வில்லை என்றாலும் தனிமையை உணர்ந்ததே இல்லை.
அவளுக்கு இன்னொரு அன்னையாக சாரதா இருந்தாள். ஆபீஸ் விஷயங்களை நகைச் சுவையுடன் அவளிடம் பகிர்ந்து கொள்ளும் தந்தையாக சேதுபதி இருந்தார்.
உடன் பிறந்த சகோதரி போல காயத்ரி இருந்தாள். என்ன தான் கணவருக்கு அண்ணன் என்றாலும் தனக்கும் கூட பிறந்த பிறப்பு போல் அன்பு செலுத்தும் ஆதி இருந்தான். இதை எல்லாம் விட இரவு முழுவதும் விலகி இருந்தாலும் அவள் இருந்த அறைக்குள்ளே இருந்தான் அவளது விக்ரம். ஆனால் இப்போது அவளிடம் இருப்பது வெறுமை மட்டுமே.
அவனுடைய நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள். அது அவளை விட்டு அகல்வேனா என்று சண்டித்தனம் செய்தது.
கிளம்பி முடித்தவள் சாப்பிடப் போகலாம் என்று எண்ணி தட்டை எடுத்தாள். பின் என்ன நினைத்தாளோ அதை அதே இடத்தில் வைத்து விட்டு பேகை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மதியம் இரண்டு மணி போல் அவளைத் தேடி ஆஃபிஸ்க்கு வந்தான் விக்ரம். அவனுடைய வரவு தெரிவிக்கப் பட்டதும் இருக்கும் கோபம் எல்லாம் மறந்து சந்தோஷமாக அவனைத் தேடி ஓடி வந்தாள்.
காரின் மீது சாய்ந்து நின்றவனை ஆசையாக காதலாக அவள் பார்க்க அவனும் அப்படியே அவளைப் பார்த்தான்.
ஒரு நிமிடம் இருவரும் அமைதியாக மற்றவர்களை ரசித்த படியே இருந்தார்கள். முதலில் ரேகா தான் “எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
“ஏதோ இருக்கேன். நீ எப்படி இருக்க?”
“இங்கயும் அதே தான். சரி என்ன இந்த நேரம் வந்துருக்கீங்க?”
“நீ இப்ப ஊருக்கு வரணும். வா கிளம்பலாம்”, என்றதும் அவள் முகத்தில் சந்தோஷம் வந்தது. புன்னகையுடன் “என்ன திடீர்னு?”, என்று கேட்டாள்.
“உன் காதல் உண்மைன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்”, என்று அவன் சொல்வான் என்று அவள் எதிர் பார்க்க அவனோ “அம்மா அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் வச்சிருக்கோம். வீட்டு மருமகளா நீ வரணும்”, என்றான் விக்ரம்.
“ஓ”, என்று சொன்ன ரேகாவுக்கு சப்பென்று போனது. இப்போதும் அவன் தனக்காக வரலையா? குடும்பத்துக்காக தான் வந்தனா என்று எண்ணி சோர்ந்து போனாள்.
“என்ன ஓ? வீட்டாள்கள், அப்புறம் எல்லா சொந்தக்காரங்களும் வருவாங்க. மஞ்சுவும் குடும்பத்தோட நாளைக்கு வந்துருவா. நீயும் வரணும். உன்னைக் கூப்பிடத் தான் நான் வந்தேன். கிளம்பலாமா?”, என்று அவன் கேட்டதும் அவனை ஆழ்ந்த பார்வை பார்த்த ரேகா “சரி நான் உங்க கூட வரேன். ஆனா ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கட்டுமா?”, என்று கேட்டாள்.
“எனக்கு தெரியலை, நான் இப்ப வரது விருந்தாளியாவா இல்லை அந்த வீட்ல ஒருத்தியாவான்னு எனக்கு தெரியலை விக்ரம். எனக்கு என்ன பன்னன்னு எனக்கு தெரியலை. உங்களால நான் பைத்தியமா ஆகிட்டு இருக்கேன். கல்யாணம் முடியாதப்ப எப்படியோ தனியா இருந்துட்டேன். ஆனா இப்ப என்னால முடியலை. நான் உங்களுக்கு என்ன பாவம் பண்னினேன்? எதுக்கு என் லைப்ல வந்து என்னை டார்ச்சர் பண்ணுறீங்க? இப்ப வான்னு சொல்ற நீங்க பங்ஷன் முடிஞ்சதும் போன்னு சொல்வீங்க. உங்களுக்கு அது சாதாரணம். ஆனா எனக்கு கஷ்டமா இருக்கு விக்ரம்”
“நான் உன்னை வீட்ல இருந்து போகச் சொல்லலையே? நீயா தானே போன?”
“நீங்க போக வச்சீங்க. எங்க இல்லைன்னு சொல்லுங்க பாப்போம்”
“இப்ப என்னை என்ன பண்ண சொல்ற ரேகா? எனக்கும் கிட்ட தட்ட பைத்தியம் புடிக்கிற நிலைமைல தான் இருக்கேன். உன்னை என்னைக்கு பாத்தேனோ அன்னைல இருந்து நானும் நானா இல்லை. அதெல்லாம் உனக்கு புரியவே புரியாது”
“இப்படி பேசினா பேசிட்டே தான் இருக்கணும் விக்ரம்”
“சரி அப்படின்னா நீயே முடிவு சொல்லு. வீட்ல எல்லாரும் உன்னை கூட்டிட்டு வரச் சொல்றாங்க. எனக்கும் நீ வரதுல விருப்பம் தான். ஆனா நீ வந்தாலும் நமக்குள்ள எல்லாம் சரியாகிரும்னு என்னால உறுதி கொடுக்க முடியாது”
“உங்க மனசை தெளிவா சொன்னதுக்கு நன்றி விக்ரம். நானும் என் முடிவைச் சொல்லிறேன். நான் இப்ப வரேன். உங்களுக்காக இல்லை. எனக்காகவும் அத்தை மாமாவுக்காகவும் தான். பங்ஷன் முடியுற வரைக்கும் தான் அங்க இருப்பேன். அதுக்கு அப்புறம் நான் கிளம்பி வந்துருவேன்”
“நீ பங்ஷன் முடிஞ்சு கிளம்புன்னு நான் சொல்ல மாட்டேன் ரேகா. அதே நேரம் நீ இங்கயே இரு. உன்னை நல்லா பாத்துக்குவேன்னும் என்னால சொல்ல முடியலை. அதனால உன் இஷ்டப் படி முடிவு செஞ்சிக்கோ”
“சரி, என்னைக்கு பங்க்ஸன்னு சொன்னீங்க?”
“வெள்ளிக் கிழமை”
“சரி நான் சனிக் கிழமை கிளம்பிருவேன்”
“அது உன் இஷ்டம்”
“சரி வெயிட் பண்ணுங்க. லீவ் சொல்லிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் அவனுடைய காரில் ஏறினாள்.
“ஹாஸ்டல் போய் ஏதாவது எடுக்கணுமா?”, என்று கேட்டான் விக்ரம்.
“என்னோட பொருள் தான் உங்க வீட்ல இருக்கே. அதுவே போதும். அதெல்லாம் இருக்கா? இல்லை என்னை வேண்டாம்னு சொன்ன மாதிரி அதையும் தூக்கி போட்டுட்டீங்களா?”, என்று அவள் நக்கலாக கேட்டதும் அவளை முறைத்தவன் எதுவும் சொல்லாமல் தன்னுடைய கோபத்தை காரில் காட்டினான்.
வீட்டுக்கு சென்றதும் அனைவரும் ரேகாவை சந்தோஷமாக வரவேற்றார்கள்.