நடுத்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் அந்த பகுதியில், அந்த வீடு கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. உள்ளே பத்து குடும்பங்களுக்கு மிகாமல் குடித்தனம் இருந்தனர். நடுவில் இருந்த அந்த பெரிய வீட்டில் இருந்தனர் அந்த வீட்டின் உரிமையாளரான பல்லவன் மற்றும் அவரின் மனைவி காதம்பரி.
இது பல்லவனுடைய தந்தை கட்டிய வீடு. அப்போதே சுற்றி பத்து வீடுகளை மேலும் கீழுமாக எடுத்துக் கட்டியிருந்தார் பல்லவனின் தந்தை. நடுவில் இவர்களுக்கான வீட்டை பெரிதாக கட்டியவர், அனைத்திற்கும் சேர்த்து ஒரு பெரிய காம்பவுண்ட் சுவரையும் கட்டியிருந்தார். அவரது மகன் இப்போது அனைத்து வீடுகளிலும் கொஞ்சம் வசதி செய்து கொடுத்திருந்தான். அனைத்து வீடுகளுக்கும் பொதுவாக இருந்தது அந்த கிணறும், துணி துவைக்கும் இடமும். ஐந்து வீடுகளுக்கு… குளியலறை, கழிவறை என அனைத்தும் பொதுவானதாக இருந்தது. மீதி ஐந்து வீடுகளுக்கு… உள்ளேயே இந்த வசதிகள் இருந்தது. அவற்றிக்கு தகுந்தார் போல, வாடகையை நிர்ணயித்திருந்தனர். பலதரப்பட்ட மனிதர்களும் அங்கே வசித்து வந்தனர்.
பல்லவன்-காதம்பரி தம்பதியின் மகள் சங்கீதா, இப்போது திருமணம் முடிந்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாள். அவர்களின் ஒரே புதல்வன் அன்பு செழியன்.
அன்பு செழியன் – முப்பது வயது நிரம்பிய முரட்டு சிங்கிள். பெயரில் இருக்கும் அன்பு கொஞ்சம் அவனிடமும் இருந்திருக்கலாம் என்று அனைவரையும் எண்ண வைக்கும் ரகம். கொஞ்சம் சிடுசிடுப்பானவன். மனதிற்குள் இருக்கும் நெகிழ்ச்சியை முகத்தில் கூட காட்ட மாட்டான். நல்ல உயரம். அந்த சென்னை தண்ணீர் அவனை கொஞ்சம் பளபளவென்று காட்டியது. எதையும் முகத்திற்கு நேராய் பேசிவிடும் ரகம். அங்கே குடியிருப்பவர்கள் அன்பு செழியனுக்கு தான் அதிகம் பயப்படுவார்கள்.
சிறிய அளவில் தொடங்கிய ஊறுகாய் கம்பெனி, இன்று ஒரு நிலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறது. பல்லவன் மத்திய அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர். படிப்பை முடித்த அன்பு, தொழில் செய்கிறேன் என்று வந்து நின்றதும், முதலில் அதை மறுத்தவர் பல்லவன் தான். அதிலும் அவன் சொன்ன ஊறுகாய் தொழிலைக் கேட்டு, வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அவர் சொல்வதை அப்படியே கேட்டுவிட்டால் அவன் அன்பு இல்லையே. பிடித்த பிடிவாதமாய் நின்று அவன் என்ன நினைத்தானோ அதை அப்படியே நிறைவேற்றிக் கொண்டான். அவன் நினைத்தது போல் எதுவும் எளிதாக அமைந்து விடவில்லை. பணம் அவனுக்கு ஒரு தடையாக இல்லாமல் இருந்தாலும், முதல் மூன்று வருடம், தொழில் இழுத்துக்கோ, பறித்துக்கோ என்று தான் போனது. ஒரு கட்டத்தில் தொழிலை விட்டு விடலாம் என்று விரக்தியான நிலைக்கு சென்று திரும்பியவன் தான் அன்பு செழியன்.
விடாமல் நின்று, தரத்தைக் கூட்டி, விலையை அதற்கு ஏற்ப நிர்ணயம் செய்து, இப்படி பல வழிகளிலும் போராடி தான் இப்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கிறான். இப்போது முன்னணி டிவி சேனல்களில் விளம்பரம் செய்யும் அளவிற்கு அவனுடைய ஊறுகாய் கம்பெனி வளர்ந்து நிற்கிறது.
பளீர் வெள்ளை நிற சட்டையும், கருப்பு பேன்ட்டுமாக ஐடி அலுவலகம் செல்பவனைப் போல் கிளம்பி வந்தான் அன்பு.
“அம்மா..! டிபன் ரெடியா..?” என்ற அன்பின் குரல் கேட்கும் முன்னரே, அனைத்தையும் தயாராக எடுத்து வைத்திருந்தார் காதம்பரி.
“சாப்பிட வா அன்பு..” என்றவர் அவனுக்கு பரிமாற, சாப்பிட அமர்ந்தவன், யோசித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“என்ன அன்பு..? யாரையும் பார்க்க போறியா..?” என்றார் காதம்பரி.
“ஆமாம்மா..! பேங்க் மேனேஜரை பார்க்க போறேன்..!” என்றான் அன்பு.
“அந்த வீடு வாங்குற விஷயம் என்னாச்சு அன்பு..?” என்றார் காதம்பரி.
“இப்போ அதுக்கு என்ன அவசரம்..? மாப்பிள்ளை வீட்ல போதும்ன்னு சொன்னாலும், நீங்க விடவே மாட்டிங்க போல..?” என்றான் ஒரு மாதிரி சிரிப்புடன்.
“எல்லாம் நம்ம சங்கீதாக்காக தான அன்பு. செய்றதுல ஒண்ணும் தப்பில்லையே..!” என்றார்.
“செய்றதுல தப்பில்லைம்மா..! ஆனா, இப்படி செஞ்சுகிட்டே இருக்குறதும் தப்புத்தான். ஏற்கனவே அவ பேர்ல ஒரு வீட்டை எழுதிக் கொடுத்தாச்சு. ஒரு கிரவுண்ட் இடமும் வாங்கிக் குடுத்திருக்கு. 200 பவுன் நகை போட்டிருக்கு. அது இல்லாம காரு, கல்யாண செலவுன்னு ஏகப்பட்ட செலவு. இன்னும் அடுத்தடுத்து செலவும் வரும். இதுக்கும் மேல நீங்க என்ன எதிர்பார்க்குறிங்க…?” என்றான் கொஞ்சம் கோபத்துடன்.
“என்ன அன்பு, தங்கச்சிக்கு செய்றதுல போய் கணக்குப் பார்க்குற..?” என்றார் காதம்பரி.
“அம்மா..! நீங்க புரிஞ்சு தான் பேசுறிங்களான்னு எனக்குத் தெரியலை. சங்கீதாவுக்கு செய்றதுல நான் கணக்கு பார்க்கலை தான். அதுக்காக எல்லாத்தையும் தூக்கிக் குடுக்க முடியாது. நான் என்ன சினிமாவுல வர அண்ணனா..? பிராக்டிகலா பேசுங்கம்மா..!” என்றவன் சாப்பிட்டு முடித்து எழுந்து விட்டான்.
காதம்பரியின் மனச்சுணக்கம் அவரின் முகத்தில் இருந்தே தெரிந்தது. ஆனால் அன்பு அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் போல் இருந்து விட்டான்.
சங்கீதாவை கட்டிக் கொடுத்த வீடும் நல்ல வசதியான வீடு தான். பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல், பார்க்கவும் நன்றாக இருக்க, வசதியும் இருக்க, பல்லவன் அந்த சம்பந்தத்தையே முடித்திருந்தார். ஊர் தான் கொஞ்சம் தூரமாக இருந்தது.அதில் காதம்பரிக்கு கொஞ்சம் மனக்குறை இருக்கத்தான் செய்தது. திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளைக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்க, அப்போது தான் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தார் காதம்பரி.
“உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது..? வாடகையை எல்லாம் சரியான நேரத்துக்கு வாங்குங்கன்னு..!” என்று எரிச்சலுடன் சொன்னவன், வேகமாய் அவர்களைத் தேடி சென்றான்.
அன்பு, வாடகை கேட்டு வருவான் என்று எதிர்பார்க்காத அந்த பெண்,
“வாங்கண்ணே..! இன்னும் ரெண்டு நாள்ல வாடகை குடுத்துடுவோம்..!” என்று கையைப் பிசைந்தாள். அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,
“லவ் பண்ணி, ஊருக்குத் தெரியாம கல்யாணம் பண்றது பெரிய விஷயமில்லை. அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும். இல்லையா, வீட்ல பார்க்குற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு பேசாம இருந்திருக்கணும். இப்படி எதுவுமே இல்லாம, ஊரை விட்டு ஓடி வந்து, ரெண்டு பேரும் என்னத்த கண்டுட்டிங்க..?” என்றான் கோபமாய்.
“அவருக்கு வேலை இல்லைண்ணா..! அவர் பிரண்ட் ஒருத்தர்கிட்ட கடனா கொஞ்சம் பணம் கேட்டிருக்கோம். வந்த உடனே குடுத்துடுறோம்..!” என்று அவள் கெஞ்ச,
“இப்படியே எத்தனை நாளைக்கு கடனை வாங்கி,காலத்தை ஓட்டுவிங்க..! அவனை வந்து என்னை பார்க்க சொல்லுமா. வண்டி ஒட்டுவான் தானே. கம்பெனில ஏதாவது வேலை போட்டுத் தரேன்..!” என்றான் அன்பு.
“ரொம்ப நன்றிண்ணா..!” என்றவளுக்கு மனதில் அப்படி ஒரு சந்தோசம்.
இங்க பாருமா கங்கா.. உனக்காகத் தான் இந்த உதவியைக் கூட பண்றேன். உன் புருஷன் பேரென்ன..? ஆங்…சிவா, அவன் வந்தா சொல்லிடு. வேலைக்கு வந்துட்டா, அங்க சரியா இருக்கணும். இல்லைன்னா தயவு தாட்சண்யமே பார்க்க மாட்டேன்..!” என்றவன் அங்கிருந்து அடுத்த வீட்டிற்கு செல்ல, கங்கா வீட்டைத் தவிர அனைவரிடமும் வாடகையை வாங்கிக் கொண்டு தான் வந்தான் அன்பு செழியன்.
அவன் வீட்டிற்குள் வர, அங்கே பல்லவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்றவன், வாங்கி வந்த வாடகைப் பணத்தை அவருக்கு அருகில் வைத்தான்.
“அந்த சிவா மட்டும் தான் தரணும்..! அவனை கம்பெனிக்கு வர சொல்லியிருக்கேன். ஒரு வேலையை போட்டுக் குடுத்துட்டா, அவனுக்கும் வேலை கிடைச்ச மாதிரி இருக்கும். நமக்கு வாடகை வந்த மாதிரியும் இருக்கும். நான் கிளம்புறேன்ம்மா..!” என்று சொன்னவன், அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
பல்லவன் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவனும் அவரிடம் எதுவும் பேசவில்லை. அவனின் தாத்தா சொத்துக்களில் இருந்து வரும் எந்த வருமானத்தையும் அவன் தொடுவதில்லை. அது எப்போதும் பல்லவனை சார்ந்தது. அதை நினைத்து அவருக்கு மனதிற்குள் பெருமையாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.
“இன்னும் எத்தனை நாளைக்கு ரெண்டு பேரும் இப்படி பேசாம இருக்க போறீங்க..?” என்றார் காதம்பரி.
“நேரம் காலம் வந்தா எல்லாம் தானா நடக்கும்..!” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட்டார் பல்லவன்.
பல்லவனும், அன்பு செழியனும் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவன் தொழில் தொடங்கியதை அவர் வேண்டாம் என்று சொன்ன அன்று ஆரம்பித்தது இந்த பேசா விரதம். இப்போது அதில் வெற்றி பெற்று, ஒரு நிலைக்கு வந்த பிறகும் அவனால், அவருடன் சகஜமாக பேச முடிவதில்லை. பல்லவனும் பேசவில்லை.
பேங்க் வேலையை முடித்து கம்பெனிக்கு சென்று சேர்வதற்குள் மதிய நேரம் ஆகியிருந்தது. அவன் தினமும் செல்லாவிட்டால் கூட, அங்கே நடக்கும் வேலைகள் அனைத்தும் எந்த குறையுமில்லாமல் நடக்கும்.
அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் அது இசை தான். அவளும், அவனுடைய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரைக்கும் யாரிடமும் எந்த அனாவசிய பேச்சும் வைத்துக் கொள்ள மாட்டாள். அவளுடைய வேலையை சரியாக செய்வதால், பலருக்கு அவளைக் கண்டால் ஆவதில்லை. அந்த கம்பெனியின் அனைத்தும் அவளுக்கு அத்துபடி. அன்பு செழியனுக்கு பி.ஏ என்று சொன்னால் கூட மிகையாகாது.
இசை-இருபத்தி நான்கு வயது. வயத்துக்கு மீறிய முதிர்ச்சி அவள் முகத்தில் எப்போதும் இருக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பதை போன்ற ஒரு அழகு. அமைதியாக இருக்கும் அந்த அழகு, சில சமயம் சீரவும் செய்யும்.
அன்பு செழியன் வந்ததைப் பார்த்தவள், அவனுக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு வேலையில் மூழ்கிப் போக, அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே சென்றான் அன்பு.
“சார் உங்களைப் பார்க்க சிவான்னு ஒருத்தர் வந்து காத்துகிட்டு இருக்கார் சார்..!”என்று சொல்லவும்,
“அனுப்புங்க..!” என்றான்.
அன்பு செழியனைப் பார்க்க, பயந்து கொண்டே தான் வந்தான் சிவா. அவனுடைய கோபம் பற்றி தான் சிவாவுக்கு தெரியுமே..!
“பார்த்து மெதுவா வாங்க சிவா..! சீக்கிரம் வந்தா ஆகாது பாருங்க..!” என்றான் அன்பு நக்கலாய்.
“அண்ணா..! கங்கா சொன்னா..!” என்று அவனைப் பார்த்தான் சிவா.
“என்ன சொன்னா..?” என்றான் அன்பு பொறுமையாய்.
“நீங்க இங்க வேலை போட்டுக் குடுத்திங்கன்னா, நான் ஒழுங்கா இருப்பேன் அன்பு அண்ணா..!” என்றான்.
“எப்படி..? நேத்து அந்த டாஸ்மார்க் பக்கத்துல குடிச்சுட்டு கும்மியடிச்சுட்டு இருந்தியே அப்படியா..?” என்றான் அன்பு நக்கலாய்.
“இல்லண்ணா அது வந்து..!” என்று இழுத்தான் சிவா.
“இங்க பாரு..! உன்னைய ரொம்ப நல்லவன்னு அந்த பொண்ணு நம்பிகிட்டு இருக்கு. இத்தனை நாள் நீ எப்படி இருந்தியோ எனக்குத் தெரியாது. இனி ஒழுங்கா இருந்து தான் ஆகணும். லவ் பண்ணி கல்யாணம் பண்ணா பத்தாது. கட்டுனவளை ஒழுங்கா வச்சு காப்பாத்தணும். அந்த துப்பு இருக்குறவன் தான் கல்யாணம் பண்ணனும்..!” என்றான் பட்டு பட்டென்று.
“இனிமேல் சரியா இருப்பேன் அன்பண்ணா.!” என்று அவன் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டினான் சிவா.
“இவன், இன்னையில இருந்து இங்க ஜாயின்ட் பண்றான். கந்தன் ஓட்டிட்டு இருந்த வண்டியை இவன்கிட்ட குடுங்க. இவன் சரக்கெல்லாம் சரியான டைம்க்கு போகணும். அதை கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..!” என்றான்.
“ஓகே சார்..!” என்றாள் இசை.
“மத்த விபரம் எல்லாம் அவங்ககிட்ட கேட்டுக்கோ சிவா..!” என்றவன், அதற்கு பிறகு வேலையில் மூழ்கிப் போனான்.
அந்த கம்பெனியில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வேலை பார்த்தனர். அதிலும் கொஞ்சம் வயது கூடியவர்கள் தான் அதிகம். அவர்களின் கைப்பக்குவமும் அவனின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.
“இசை சாப்பிட வரலையா..?” என்று சிலர் கேட்க,
“நீங்க போங்க நான் வரேன்..!” என்றாள் இசை. அவளுக்கும் லேசாக பசி எடுப்பதைப் போல் இருந்தது. சாப்பிட செல்லும் முன் போனை எடுத்தவள், அதில் யாருக்கோ போன் பேச முற்படும் போது அழைத்தான் அன்பு.
“இசை நாளைக்கு ஹெல்த் டிபார்ட்மென்ட்ல இருந்து வருவாங்க. எல்லாமே சரியா இருக்கணும். ஏதாவது தேவைன்னா முன்கூட்டியே சொல்லிடுங்க. மிளகாய் ஆர்டர் போட்டது வந்துடுச்சா..?” என்றான் வேக வேகமாய்.
“நேத்தே வந்துச்சு சார்..! கொஞ்சம் கிளீனிங் வொர்க் மட்டும் பெண்டிங் இருக்கு. கிளீன் பண்ண வரவங்க நாளைக்கு லீவ் சார். வேற ஆளைத்தான் ஏற்பாடு பண்ணனும்..!” என்றாள்.
“இதை முன்னாடியே சொல்லனும்ன்னு உங்களுக்குத் தெரியாதா..? எதையும் கடைசி நிமிஷத்தில் சொல்லாதிங்க..! அதுக்கு என்ன ஏற்பாடு பண்ணணுமோ பண்ணுங்க..!” என்றான்.
“ஓகே சார்..!” என்றவள் அப்படியே நிற்க, அவனும் பேசாமல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு? ஏன் நிக்குறிங்க..?” என்றான்.
“சாரி சார்..! எனக்கு நாளைக்கு லீவ் வேணும்..!” என்றாள்.
“என்ன விளையாடுறிங்களா..? இப்பத்தான சொன்னேன், நாளைக்கு ஹெல்த் டிப்பார்மென்ல இருந்து வராங்கன்னு. கண்டிப்பா நாளைக்கு முடியாது. அதுக்கு அடுத்த நாள் வேணும்ன்னா எடுத்துக்கோங்க..!” என்றான்.
“இல்லை சார்..! எனக்கு நாளைக்கு கண்டிப்பா லீவ் வேணும்..!” என்றாள் உறுதியாக.
“என்ன இசை இது..? உங்க இஸ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க. நான் தான் தெளிவா சொல்றேனே..?” என்று எரிச்சல் அடைந்தான் அன்பு.
“புரியுது சார்..! ஆனா, நான் நாளைக்கு கண்டிப்பா வரமாட்டேன். அதையும் மீறி நீங்க முடியாதுன்னு சொன்னா, எனக்கு இந்த வேலையே வேண்டாம்..!” என்றாள் பட்டென்று.
“இது என்ன விதமா பேச்சு..? நான் அப்படி எதுவும் செய்ய மாட்டேங்குற உங்க நம்பிக்கையா..?” என்றான்.
“இல்ல சார்..! என்னோட நிலைமை அப்படி..!” என்பதோடு பேச்சு முடிந்தது என்று அவள் நிற்க,
“இப்ப சாப்பிட போங்க..! அதைப்பத்தி அப்பறம் பேசலாம்..!” என்று சொல்லவும், மீண்டும் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
அந்த பார்வையின் அர்த்தம், எப்போதும் பேசினாலும் அவள் பதில் அதே தான் என்பது. போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அன்பு.
எல்லாரிடமும் பட்டென்று பேசுவதைப் போல், இசையிடம் மட்டும் அவனால் எப்போதும் பேச முடிந்ததில்லை.
“எனக்கு என்னதான் ஆச்சு..? எதுக்கு இவகிட்ட மட்டும் நான் இப்படி இறங்கிப் போய் பேசிட்டு இருக்கேன். இவளை விட்டா, வேலைக்கு வேற ஆளே கிடைக்காதா..? வரவர இவளும் ரொம்பத்தான் பண்றா..!” என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தவன், முக்கியமான விஷயத்தை மறந்தான்.
அதற்கடுத்து வேலைகள் அவனை இழுத்துக் கொள்ள, அதற்குள் மூழ்கிப் போனவன், இசையைப் பற்றி மறந்தான். ஆனால் அவளுக்குத்தான் எரிச்சலாக் இருந்தது. அவள் கேட்ட லீவைப் பற்றி அவன் அதற்கு மேல் பேசாமல் இருக்க, அவன் வேண்டுமென்றே தன்னுடைய லீவை புறக்கணிப்பதாக நினைத்தாள் இசை.
“எதுக்கு இசை இப்போ இவ்வளவு டென்ஷனா இருக்க..?” என்றாள் ரோகினி. இசையின் நண்பி.
“இன்னும் நான் கேட்ட லீவைப் பத்தி சிவா சார் ஒன்னும் சொல்லலை.. ரோகினி. அதான் யோசனையா இருக்கு..?” என்றாள் இசை.
“அவர் சொல்றதும் சரிதான இசை.. நாளைக்கு ஹெல்த் டிப்பார்மென்ட்ல இருந்து வந்தா, கண்டிப்பா நீ இங்க இருந்து தான் ஆகணும். உன்னை அந்த அளவுக்கு அன்பு சார் நம்புறார். அவர் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டார்ன்னு உனக்குத் தெரியும் தான..?” என்றாள் ரோகினி.
“எனக்கும் அது புரியுது ரோகினி..! ஆனா, நான் நாளைக்கு கண்டிப்பா வீடு பார்க்க போயே ஆகணும். இப்ப இருக்குற வீட்ல இருந்து எவ்வளவு சீக்கிரம் காலி பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நான் காலி பண்ணியாகணும். என்னோட நிலைமை என்னன்னு உனக்குத் தெரியும் தான ரோகினி. நான் என்ன பண்றது..?” என்றாள்.
“நாளைக்கு ஒரு நாள் அர்ஜஸ் பண்ணு இசை. இப்படி ஒரு நல்ல வேலை, முக்கியமா பாதுகாப்பான வேலை வேற எங்க தேடுனாலும் கிடைக்காது. வீடு நாளைக்கு மறுநாள் கூட வீடு தேடலாம்..!” என்றாள் ரோகினி.
ரோகினி சொல்லவும் இசை யோசனையுடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கு ஒரு நாள் கடப்பது ஒரு யுகமாய் இருந்தது. பார்த்திருக்கும் வீட்டின் ஓனர், மறுநாள் அவளை வீட்டைப் பார்க்க வர சொல்லியிருந்தார். சென்னையில் நல்ல வீடு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.
“இன்னும் என்ன யோசனை..?” என்றாள் ரோகினி.
“அந்த ஹவுஸ் ஓனர் நாளைக்கு வர சொல்லியிருக்கார்..!” என்றாள் இசை.
அவளை யோசனையுடன் பார்த்த ரோகினி,
“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா..?” என்றாள்.
“என்ன..?”
“நம்ம அன்பு சார் வீட்லயே ஒரு வீடு காலியாகப் போகுது. எப்படியும் ஒரு வாரத்துல காலி பண்ணிடுவாங்க. பேசாம நீ அன்பு சார்கிட்ட கேட்டுட்டு அங்கேயே குடி வந்துடேன். நானும் அங்க தான் இருக்கேன். பக்கம் பக்கமாவும் போய்டும். துணைக்குத் துணையாவும் போய்டும்..!” என்றாள்.
“அது சரி வராது..” என்றாள் இசை.
“அதான், ஏன்..?” என்றாள் ரோகினி.
“வேலை செய்ற முதலாளி வீட்லயே குடியிருந்தா, அது மரியாதையா இருக்காது. அது சரியாவும் இருக்காது..!” என்றாள்.
“நீ நினைக்கிற மாதிரி கிடையாது…. அன்பு சார். அவரைப் பொறுத்தவரைக்கும் இந்த கம்பெனி மட்டும் தான் அவரோட சொத்து. மத்த எல்லா வருமானமும் அவங்க அப்பா அம்மா பொறுப்பு தான். அதே மாதிரி தேவையில்லாத விஷயத்தில் தலையிடவும் மாட்டார். நான் அங்கே தானே இருக்கேன். எனக்குத் தெரியாதா..?” என்றாள் ரோகினி.
“நீ சொல்றதும் சரி தான் ரோகினி.. நான் சார்கிட்ட பேசிப் பார்க்குறேன்..” என்றாள்.
அன்று அவளுடைய வேலைகளை முடித்தவள், அன்பு செழியனைத் தேடித் போக, அவன் குடோனில் இருந்தான். அவனைத் தேடி குடோனுக்கே சென்று விட்டாள்.
அன்றைக்கு வெளியே அனுப்ப வேண்டிய பெட்டிகள், ஸ்டாக்குகள் என்று அனைத்தையும் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான் அன்பு. அவனுடைய வேலைகளை முடிக்கும் வரை காத்திருந்தாள் இசை. சிறிது நேரத்திற்குப் பிறகே அவளை கவனித்தான் அன்பு.
“சொல்லுங்க இசை..! நாளைக்கு கண்டிப்பா நீங்க லீவ் எடுக்க முடியாது. அதையும் மீறி நீங்க பிடிவாதம் பிடிச்சா, உங்க இஷ்ட்டபடியே வேலையை ரிஸைன் பண்ணிடுங்க..!” என்றான் கறாராய்.
அவளுக்கு ஏண்டா அவனிடம் வந்தோம் என்று ஆகிவிட்டது. எரிச்சலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க,
“உங்களுக்கு ஏதாவது சொல்லனுமா..?” என்றான்.
“ஒண்ணுமே இல்லை சார்..!” என்றவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அவள் அதை வெடுக்கென்று சொல்லிவிட்டு சென்றதைப் போல் இருந்தது அன்புவுக்கு.
“நான் என்ன சொல்லிட்டேன்னு இவ இப்படி பண்ணிட்டு போறா..? எல்லார்கிட்டையும் இருந்த மாதிரி இந்த பொண்ணுகிட்டையும் இருந்திருக்கணும். கொஞ்சம் பாவம் பார்த்தா, ஓவர் ஆட்டியூட் காட்டுது..!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அன்பு.
அவள் எரிச்சலுடன் திரும்பி வருவதைப் பார்த்த ரோகினி,
“என்னாச்சு..? அன்பு சார் என்ன சொன்னார்..?” என்றாள்.
“நான் எதைப் பத்தியும் கேட்கலை. அவரும் ஒரு மண்ணும் சொல்லலை. எனக்கு இவர்கிட்ட உதவி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இருக்குறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு ஆயிரம் வீடு..!” என்று பொருமித் தள்ளினாள் இசை.
“நீ.. வீடு விஷயமா பேசப் போனன்னு அவருக்கென்ன தெரியும்?. தெரியாத பட்ச்சத்தில் நீ அவரை இப்படி பேசுறது தப்பு. அவர் நமக்கு முதலாளி..” என்றாள் ரோகினி.
“பெரிய முதலாளி.. தம்மாத்துண்டு கம்பெனி வச்சிருக்கான். இது பில்டப் மட்டும் ஜாஸ்தியா இருக்கு.ஊறுகா விக்கிறவனுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது..” என்றாள் இசை.
“ஊறுகான்னாலே கொழுப்பு தான இசை..!” என்ற ரோகினி சிரிக்க,
“சிரிக்காத ரோகினி.. நானே செம்ம கடுப்புல இருக்கேன்..!” என்றவள் நிமிர, அங்கே அவளை முறைத்தவாறு நின்றிருந்தான் அன்பு செழியன்.