மேக்கப் போடுவதற்காக அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் ஆதிரையை எழுப்பினார் காஞ்சனா. இன்றைய விடியலின் தாக்கத்தில் ஆதிரைக்கு தூக்கம் வந்ததே ஒருமணி நேரம் முன்புதான்.. ‘மேக்கப்லாம் வேணாம்மா..” என நேற்றே மன்றாடி கேட்டுவிட்டாள்.
‘உன் மாமன் நிறைஞ்ச அலங்காரத்தோட வரனும்ன்றான்.. அதோட என் ஆதிம்மாவை இப்ப விட்டா கண்குளிர வேற எப்ப பார்க்க முடியும்.. இப்படி மேக்கப் இப்பவே போட்டுட்டாதான் ஆச்சு..” என கெஞ்சி கொஞ்சியே சம்மதிக்க வைத்திருந்தார்.
அலங்காரம் முடித்து கிளம்பும் நேரம்.. ‘ஆதிம்மா.. அப்பா அண்ணனை கும்பிட்டுக்கோடா..” என குரல் கமறினார் காஞ்சனா.
தந்தை படத்தின் முன் நின்று கைகூப்பியவளுக்கு கண்கள் தன்போல் ஊற்றெடுக்க.. ‘அழாதிங்க மேடம்.. மேக்கப் ஸ்பாயிலாகிடும்..” என அழகுபடுத்திவர்கள் எச்சரிக்கவே.. ‘எதுக்கு அழற ஆதிம்மா..?” என மகளை தேற்றி..
‘ஏங்க.. இப்படி கல்யாணம்னு யாராவது ஒருத்தர் கிளம்பத்தான் செய்வாங்க.. யார் என்ன சொன்னாலும் கலங்க கூடாதுன்னு நம்ம பொண்ணுக்கு நீங்கதான் பக்கபலமா இருக்கனும்.. ஆதி கல்யாண வாழ்க்கையிலயாவது எனக்கு நிம்மதிய கொடுங்க..” என மகளிற்கு கேட்கும் படியாக கணவனிடம் வேண்டிக்கொண்டிருக்க..
இத்திருமணத்தின் மூலம் அன்னைக்கு தன்னால் நிம்மதி கொடுத்திட முடியுமா..? நம் முடிவு சரிதானா.? என பெரும் கவலை எழுந்தது ஆதிரைக்கு.
‘கிளம்பலாமா ஆதிம்மா..?” என காஞ்சனா கேட்க இதயம் அத்தனை வேகமாய் துடித்தது.. மாமா எப்படி தன்னை திருமணம் செய்ய சம்மதித்தார்கள் என ஆதிரையால் இன்னும் நம்பமுடியவில்லை.
‘ஆதி..” என காஞ்சனா மீண்டும் அழைக்க.. ‘ம்மா..” என திணறினாள். ‘கவலைப்படாத ஆதி.. உங்கப்பா நம்ம கூடவே இருப்பார்.. வா நேரமாச்சு..” என்க..
ராஜாத்தி பொய் அழுகையோடு வந்தார். ’என்ன அண்ணி.? உங்க வீட்டுக்குத்தான வரப்போறா..? எதுக்கு அழறிங்க.?” என எதுவும் அறியாததுபோல் கேட்டார் காஞ்சனா.
‘என்னத்த சொல்வேன் காஞ்சனா..? பொண்டாட்டி செத்தன்னைக்கு குழந்தைகளை பார்த்துக்கிறன்னு சொன்னதுக்கு சின்ன பிள்ளைன்னு கூட பார்க்காம என்னவோ அந்த அடி அடிச்சான்.. இப்போ மட்டும் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சான்னு கூடி கூடி பேசிக்கிறாளுங்க..
அப்போ ஆதி வீட்டுல கஷ்டப்பட்டுட்டிருந்தாங்க.. இப்போ அப்படியா.? காஞ்சனா அப்பமூட்லயிருந்து சொத்து வந்து புதுப் பணக்காரங்களாகிட்டாங்க இல்ல..? அதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்.. பொண்ணோட சேர்த்து பொன்னும் வந்தா யார்தான் மறுப்பாங்கன்னு சொல்றா..
அதுல ஒருத்தி சொன்னா பாரு.. இன்னும் இரண்டொரு வருசத்துல புள்ள வயசுக்கு வந்திடுவா.. அதெல்லாம் யோசிச்சான அந்த கர்ணன்..? லட்டாட்டம் பொண்ணு கிடைச்சதும் புது மாப்பிள்ளையாகிட்டான்.. ஆசை யாரை விட்டுச்சின்னு நம்ம கர்ணாவை ரொம்ப கேவலமா பேசுறாங்க காஞ்சனா..” என புலம்பவும்..
அச்சோ மாமா இடத்துலயிருந்து நாம யோசிக்வே இல்லையே.. என ஆதிரையின் முகம் வெகுவாய் வாடிட.. ‘உன் பொண்ணை கட்டிக்கலன்னா உயிரை விட்டுருவன்னு நீ சொல்லவும்தான என் பையன் சம்மதிச்சான்.. ஆனா அதை யாரும் நம்பமாட்றாங்க..
இத்தனை சொத்துக்காரங்க ஒத்த பொண்ணை இப்படிபட்டவனுக்கு கொடுக்கனும்னு தலையெழுத்தா என்ன.? இந்த ராஜாத்திதான் ப்ளான் போட்டு ஆதியை வளைச்சி போட்டிருக்கும்னு என்னையும் அசிங்கமா பேசுறாங்க..
ஆதி அப்பா இருந்திருந்தா இப்படி நடக்குமா.? வசதியில்லன்னாலும் பொண்ணை இளவரசி மாதிரி வளர்த்தாரு.. அப்படியிப்படின்னு கல்யாணத்துக்கு முன்னவே கண்டபடி பேசுறாங்க.. இன்னும் கல்யாணம் நடந்ததுக்கப்புறம் என்னென்னல்லாம் கேட்கனுமோ..” என்றார் பாவமாக.
ஆதிரை மொத்தமாய் மனமுடைந்தாள். தன் சுயநலத்திற்காக தான் எடுத்த முடிவால் கர்ணா மாமாவிற்கு எத்தனை அசிங்கம் என நினைக்க தாளமுடியவில்லை.
காஞ்சனா.. ‘என்ன அண்ணி நீங்களே இப்படி புலம்புறிங்க.. கர்ணாவோட கல்யாணம் முடிவு செய்யும்போதே இதெல்லாம் வரும்னு நமக்கு தெரியும்தான.? யாரோ என்னவோ பேசட்டும்.. நம்ம ஆதிக்காக பொறுத்துக்க மாட்டிங்களா.?” என்றார் தன் பங்கிற்கு.
‘அட அட.. அரட்டையடிக்க உங்களுக்கு நேரங்காலமே கிடையாதா.? மணி அஞ்சாகிடுச்சி.. கிளம்புங்க.. “ என இளங்கோ அவசரப்படுத்த.. தந்தைமுன் கண்ணீரோடு நின்ற ஆதிரை.. ‘அப்பா.. நான் தப்பான முடிவெடுத்துட்டேன்.. கடைசி நேரத்துல என்ன செய்யிறதுனு தெரிலப்பா.. என்னை பார்த்துக்குவிங்கதான.? மனமுருக வேண்டினாள்.
ஆதிரை கண்மூடி வேண்டிக்கொண்டிருக்க.. இளங்கோ ராஜாத்தி காஞ்சனா அனைவரும் பெருத்த நிம்மதியுடன் ஒருவரையொருவர் பார்த்து சத்தமின்றி புன்னகைத்துக்கொண்டனர்.
‘ஆதிம்மா.. உன் வேண்டுதலை உங்கப்பா கண்டிப்பா நிறைவேத்துவார்.. முகூர்த்தத்துக்கு நேரமகிடுச்சி வா..” என இளங்கோ ஆதரவோடும் அன்போடும் அழைக்கவும்.. ‘சித்தப்பா..” என இளங்கோவின் பாதம் பணிந்தாள் கண்ணீரோடு.
‘ப்ச்.. அழக்கூடாதுடா.. நாங்கள்லாம் இருக்கோம்ல.? உன் மனசு எங்களுக்கு புரியாதா..?” என கனிவாய் கடிந்து.. ‘தீர்க்காயுசோடவும் ஆரோக்கியத்தோடவும் நீ சந்தோசமா வாழப்போறதை நாங்க பார்க்கத்தான் போறோம்…” என ஆசிர்வதித்து அழைத்து சென்றார் கோவிலுக்கு.
அவனை வேறு மாமா வர சொல்லியிருக்காங்க.. தன் திருமணத்தை காண சகியாமல் வராமல் இருந்திடுவானா.? இல்லை இங்கு வந்து ரகளை செய்து தன்னை மணந்திடுவானா.. என அவளையுமறியாமல் சிறு எதிர்பார்ப்பு வர.. பதட்டத்தோடு விநாயகரை வழிபட்டாள் ஆதிரை.
கோவிலில் நான்கு ஜோடிகள் திருமணத்திற்காக காத்திருக்க ஐந்தாவதாகத்தான் ஆதிரையின் திருமணம் என்பதால் மணமகளை கூட்டம் விட்டு சற்று தள்ளி நிறுத்தியிருந்தார் காஞ்சனா.
பட்டு வேஷ்டியில் தன் பதினொரு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகனோடு நின்றிருந்த கர்ணனைதான் வேதனையோடு பார்த்திருந்தாள் ஆதிரை. என்னை மன்னிச்சிடு மாமா.. உங்களுக்கு தீராத பழிசொல்லை உண்டாக்கிட்டேன்..
மாணிக்கம் சார்.. மத்த சொந்தபந்தம் எல்லாரும் வந்துட்டாங்க.. இப்போ கல்யாணம் வேணாம்னா இன்னும்தான் அவமானம் என கர்ணனிடம் மனதோடு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்க.. ‘ஆதிம்மா..” என அருகில் கேட்ட குரலில் திரும்பியவள் பெரிதாய் அதிர்ந்தாள். ம்.. கணேசன் தன் குடும்பத்தோடு வந்திருந்தார்.
‘மகாலஷ்மியாட்டம் இருக்கடா..” என்றார் மகிழ்வோடு. பின்னே கனகா.. மாரியப்பன் என ஒவ்வெருவராய் பேச்சு கொடுக்க யாரிடமும் பேச பிடிக்காமல் தலைகுனிந்தவள்.. எங்க இவனை மட்டும் காணோம்..? காதல் தோல்வியில மனசொடைஞ்சிட்டானா.? ம்.. நான் இல்லன்னா இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொருத்தியை மயக்கிடுவான் என நினைத்த தருணம்.. ‘ஆதி வா.. அடுத்து நாமதான்..” என ஆதிரையின் கையை பிடித்தான் கர்ணன்.
‘மாமா..” என திணறியவாறு கர்ணனோடு செல்ல.. அங்கே மணவறையில் வேறு ஜோடியின் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்க.. ‘இவங்களுது முடிஞ்சதும் உன் கல்யாணம்.. இங்கயே நின்னாதான் ஆச்சு.. இல்ல பின்னால இருக்க ஜோடி முந்திப்பாங்க..” என்றான் சின்ன சிரிப்போடு.
ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து திருமணம் நின்றுவிடாதா என மனம் பரிதவித்துக் கொண்டிருக்க, கர்ணனின் சிரிப்பில் பெரிதாய் அதிர்ந்தவள்.. ‘மா..மா.. இந்த கல்யாணத்துனால உங்க.. உங்க..” என ஆதிரை தவிக்க.. அதிரூபன்.. ‘எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என ஆதிரை வளைத்தான் தன்னோடு.
திடமான ஆண்குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் அதிரூபனைக் கண்டதும் பேரதிர்ச்சியோடு தன் இடுப்பிலிருந்த அவனின் கையை விடுவிக்க போராட.. முன்னே அமர்ந்திருந்த மணமக்கள் மணம்முடித்து மணவறைவிட்டு விலகவே.. ‘வா..” என தன்னோடு சேர்த்தவாறு தானும் அமர்ந்தான்.. ஆதிரையின் கண்கள் அன்னையை தேட..
இளங்கோ அவரின் மனைவியின் பின்னிருந்த காஞ்சனா.. ‘ஆதிம்மா நான் இங்கதானிருக்கேன்..” என சந்தோச கண்ணீரோடு குரல் கொடுக்கவும் முன்பே முடிவுசெய்திருக்கிறார்கள் என அன்னையின் முகத்திலேயே தெரிந்தது.
ஐயர் திருமணத்திற்கான பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்க.. ‘ரொம்ப நன்றிண்ணா..” என அதிரூபன் கர்ணனிடம் சொல்ல.. ஆதிரை கர்ணனை அதிர்வோடு பார்க்கவும்.. ‘டிசைன் டிசைனா ரியாக்ஷன் கொடுத்திட்டிருக்காம கல்யாணத்தை என்ஜாய் பண்ணு.. வந்திருக்கவங்க கண்ணெல்லாம் உங்கமேலதான் இருக்கும்.. அதிலும் மாணிக்கம் சார் உன்னையே பார்த்திட்டிருக்கார்..” என்றான் சிரிப்போடு.
ஆதிரையின் முகம் இன்னும் அதிர்ச்சியோடே இருக்கவும்.. ‘எல்லாருக்கும் ஆதிரை அதிரூபன் கல்யாணம்னுதான் இன்வைட் செய்திருக்காங்க.. உன் கர்ணா மாமாவை யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க..” என அதிரூபன் கனிவாய் எடுத்துரைக்க.. ‘பின்னாடி எத்தனை ஜோடி காத்திண்டிருக்கு..” என ஐயர் கடியவும் மளமளவென திருமண சடங்குகள் நடைபெற்றது.
இத்தனை அதிர்விலும் தன்னால் நேரவிருந்த கெட்டபெயரிலிருந்து மாமா தப்பித்தார்கள் என்ற நிம்மதியும்… இத்தனை பேர் முன்னிலையில் திருமணம் தடைபெற்றால் நிச்சயம் அன்னையால் தாளமுடியாது என்ற தவிப்பும்.. இனி இவனோடுதான் தன் வாழ்வா என்ற ஆற்றாமையுடனும் மனம் பெரிதாய் உழன்று கொண்டிருக்க..
ஆதிரையின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தும்.. நெற்றியில் திலகமிட்டும் தன் மனைவியாக்கிக்கொண்டான் அதிரூபன். அதிரூபனின் விரலோடு ஆதிரையின் விரல் கோர்க்கப்பட விரலை விடுத்து அவளின் கையை மொத்தமாய் பற்றிக்கொண்டு மணவறையை வலம் வரும்போதுதான் திருமணம் நடந்தேவிட்டது என புத்தியினுள் உரைத்தது ஆதிரைக்கு.
அடுத்ததடுத்த ஜோடிகள் திருமணத்திற்காக காத்திருக்க இவர்களின் திருமணம் பதினைந்து நிமிடத்தில் முடிந்திருந்தது. கணேசன் கனகா பாதம் பணிந்தெழுந்தவன்.. காஞ்சனாவின் பாதம் பணிய.. காஞ்சனாவின் ஆனந்த கண்ணீர் ஆதிரையின் கையைத்தொட.. ‘ம்மா..” என அணைத்துக்கொண்டாள்.
‘அழாத.. அழாத.. உங்கப்பா உன்கூடவே இருந்திருக்கார் பார்த்தியா.? கடைசி நேரத்துல கர்ணாவோட கல்யாணம் வேணாம்னு நினைச்சதான.? அவர்தான் ரூபனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கார்.. உங்கப்பா ஆசிர்வதத்துலதான் இந்த கல்யாணம் நடந்திருக்கு..” என நெகிழ்ச்சியாய் சொல்லி.. ‘உங்க சித்தப்பா அத்தைகிட்டல்லாம் ஆசிர்வாதம் வாங்கிக்கோ..” என அவர்களிடம் அழைத்து சென்றார்.
மாணிக்கம் அவரின் மனைவியோடு வர.. ‘சார்..” என அவரின் பாதத்திலும் விழப்போக தடுத்தவர்.. ‘என் ஆசிர்வாதம் உனக்கு எப்போவும் இருக்கும்..” என தன் பரிசை கொடுத்து
‘கல்யாணத்துக்கு அழைக்கும்போதே அம்மா சொன்னாங்க.. ஒரு குழந்தைக்கு தாயாக நினைச்ச உன்னை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு..” என பாராட்டி..
‘பேக்கரில ஸ்ட்ரிக்டா இருக்க மாதிரியே வாழ்க்கையிலும் இருக்க கூடாதும்மா.. இலகுற இடத்துல இலகிடனும்..” என உரிமையோடு புத்தி புகட்டி கிளம்பியிருந்தார்.
அனைத்தும் முடித்து காலை ஏழு மணிபோல் அனைவரும் ஆதிரையின் வீட்டை வந்தடைந்தனர். கல்யாண விருந்து வீட்டில்தான்.. வீட்டின் முன்புறம் அந்த பெரிய திடலில் விருந்துண்பதற்கு தயாராக டேபிள்சேர்களை போடப்பட்டிருக்க.. ‘அபி.. நீயும் ரோஜாவும் விருந்தெல்லாம் சரியா வைக்கிறாங்களான்னு கவனிங்க..” என்ற கர்ணனை அழைத்தார் காஞ்சனா.
‘என்னாத்த..?” என கர்ணன் வர.. ‘ஆரத்தி எடுத்ததும் உள்ள போய் கதவை தாழ்போட்டுகிட்டா.. பால் பழம் கொடுக்கனும்..” என்றார்.
‘ஆதி..” என கர்ணன் குரல்கொடுக்க.. ‘மாமா..” என கதவை திறந்தாள் மெதுவாக.
உள்ளே வந்த கர்ணன்.. ‘ரூபா.. “ என அதிரூபனையும் அழைத்து அங்கிருந்த கட்டிலில் அமரச்செய்தான். ஆதிரை நின்றிருக்க.. கர்ணன் பேசும் முன்னே.. ‘அண்ணா நீங்க போங்க.. நான் பேசிக்கிறேன்..” என ரூபன் சொல்லவும் கர்ணன் சென்றான்.
கதவை தாழிட்டவன்.. ‘எங்கப்பாம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கும்போது அப்பா தோள்ல தூங்கிட்டிருந்த பட்டுவைப் பார்த்ததும் உன்முகம் ரொம்ப வாடிடுச்சி.. ஆனா எனக்கு தெரியும்.. உனக்கு என் பட்டுமேல எந்த வருத்தமும் இல்ல..
உன் வேதனைல்லாம் நான் இன்னொருத்தியோட குடும்பம் நடத்தியிருக்கேன்றது மட்டும்தான்.. ஆமாம்தான..?” என கேட்க.. ஆதிரைக்கு கண்ணீர் வர.. அதிரூபன் துடைத்துவிட கையை உயர்த்தியதும்.. ‘தொடாதிங்க..” என தானே துடைத்தவள் ரூபனிற்கு முதுகுகாட்டி நின்றாள்.
‘சில விசயங்களை..” என ஆரம்பிக்க.. ‘உங்க கடந்த காலத்தை நான் கேட்க விரும்பல..” என்றாள் முகச்சுழிப்போடு.
‘ஆதி.. “ என கணேசன் கதவை தட்ட.. ‘இரண்டு நிமிசம்.. வரேன்ப்பா..” என சொல்லி.. ‘ஆதி.. நீ முகம் சுழிக்கிற அளவுக்கு கடந்த காலம்னு எனக்கு ஒன்னுமில்ல.. ஆனா சில விசயங்களை இப்போ என்னால ஓபனா சொல்ல முடியல.. நேரம் வரும்போது கண்டிப்பா சொல்வேன்.. உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லபோறேன்..?” என்க.. அதிரூபனின் உரிமை பேச்சை சகிக்க முடியாமல் கதவை திறந்து ஆதிரை வெளியேற.. ‘நீங்களும் வந்து உக்காருங்க தம்பி..” என ஆதிரை அமர்ந்திருந்த சோபாவை காட்டி.. பால் பழம் எடுக்க போனார் காஞ்சனா.