பகலில் நன்றாகத் தூங்கி எழுந்த இசை பிரஷாக உணர்ந்தாள். அவளுக்கு முன்பே எழுந்துவிட்ட அகரன், இசையின் செல்லில் ரைம்ஸ் பார்த்துக் கொண்டிருந்தான். மீதியிருந்த கொஞ்ச நஞ்ச பொருட்களையும் அடுக்கும் வேளையில் இறங்கினாள் இசை. சில மணி நேரங்களில் அதையும் முடித்தவள், அகரனை குளிக்க வைத்து, தானும் இன்னொரு குளியலைப் போட்டாள்.
“வா ரோகி..! ஆபீஸ் முடிஞ்சு இப்போதான் வந்தியா..? எப்படி போச்சு இன்னைக்கு..?” என்றபடி, அவளுக்கும் சேர்த்து காபியை கலக்கினாள். அகரனுக்கு பால் கலந்து கொடுத்தவள், ரோகிணியுடன் அமர்ந்தாள்.
“உன்னை இப்படிப் பார்த்து எத்தனை நாள் ஆகுது இசை..?” என்றாள் ரோகிணி.
“ஆரம்பிச்சுட்டியா…?நான் எப்பவும் போல தான் இருக்கேன். உன் கண்ணுக்கு ஒரு மாதிரி தெரிஞ்சா நான் என்ன பண்றது..? அதை விடு, அண்ணா போன் பண்ணினாரா..? எப்படி இருக்கார்..? புதுப் பொண்டாட்டியை வேற பிரிஞ்சிருக்கார்..?” என்று ரோகிணியை வம்பிழுத்தாள் இசை.
“அவருக்கென்ன..? துபாய்ல நிம்மதியா இருக்கார். நான் அப்படியா..? அடுத்த தடவை வரும் போது, என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கார். எனக்குத் தான் யோசனையா இருக்கு..!” என்றாள் ரோகிணி.
“இதுல உனக்கு யோசனை வேறயா..? ஒழுங்கா கிளம்பி அண்ணா கூட போற வழியைப் பாரு..!” என்று செல்லமாய் அதட்டினாள் இசை.
“நமக்கு வெளிநாடெல்லாம் செட்டாகுமான்னு தெரியலை..” என்று ரோகிணி சொல்ல,
“ஆன்ட்டி..! எங்க டாடியும் அங்க தான் இருக்கார்…உங்களுக்கு தெரியுமா..?” என்றான் அகரன். அவன் அப்படி பட்டென்று கேட்டவுடன் ரோகிணிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சில வினாடிகளில் சுதாரித்தவள்,
“அப்படியா கண்ணா..! உங்களுக்கு டாடியைப் பிடிக்குமா..?” என்றாள், அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு.
“டாடியை பிடிக்காம இருக்குமா..? நான் கோவமா இருக்கேன்..” என்றான் அகரன்.
“அச்சோ.. என்ன கோவம் உங்களுக்கு..?” என்றாள்.
“டாடி, இன்னும் வர்ல..! அதான் நான் சேட் ஆ இருக்கேன்..” என்றான் அகரன்.
அவன் அப்படி சொன்னவுடன், இசைக்கு ஒரு மாதிரியாகிப் போனது. இப்போதெல்லாம் அவனுடைய நான்கு வார்த்தைகளில் இரண்டு வார்த்தை டாடி தான்.ஒவ்வொரு நாளும் அவனை சமாளிப்பதே இசைக்கு பெரிய வேலையாக இருந்தது.
“கண்ணா.. நீ ரைம்ஸ் பாரு..! அம்மா ஆண்ட்டிகிட்ட பேசிட்டு வரேன்..” என்று இசை சொன்னவுடன், சமத்தாக போனுடன் சென்று அமர்ந்து விட்டான்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இசை, இப்படியே இருக்கிறதா உத்தேசம்..?” என்றாள் ரோகிணி.
“வாழ்க்கை முழுசுக்கும்..” என்றாள் விரக்தியாய்.
“உன்னோட பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கலாமே..? அகரனுக்காக நீ இதை செஞ்சு தான் ஆகணும்..” என்றாள் ரோகிணி.
“இந்த ஒரு விஷயத்தை தவிர, அவனுக்காக நான் எதை வேணும்ன்னாலும் செய்வேன் ரோகி. முடிந்த அத்யாயங்களை முதல்ல இருந்து ஆரம்பிச்சா, எனக்கும் கஷ்ட்டம், மத்தவங்களுக்கும் கஷ்ட்டம். அந்த கஷ்ட்டத்தை ஏன் மத்தவங்களுக்கு நான் குடுக்கணும். எனக்கு இப்படி இருக்குறதே சந்தோசம் தான்..!” என்றாள் இசை.
“அன்பு சார் அம்மாகிட்ட, ஹஸ்பண்ட் வெளிநாட்ல இருக்கார்ன்னு சொல்லியிருக்க. உண்மை தெரிஞ்சா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது…” என்றாள் ரோகிணி.
“அவங்ககிட்ட மட்டுமில்லை. நான் எல்லாகிட்டையும் சொல்றது தான். நம்மளோட பாதுகாப்புக்காக சில விஷயங்களை செஞ்சு தான் ஆக வேண்டியிருக்கு.. இல்லைன்னா, ஒரு பொண்ணு தனியா இந்த இங்க இருந்திட முடியுமா..? சுத்தி இருக்கவங்க நம்மளை இருக்கத்தான் விட்டுருவாங்களா..? கழுகாட்டம் அவங்க பார்வை நம்ம மேல தான் இருக்கும்..!” என்றாள் இசை. அவள் ஆள் மனதின் காயங்களை கொஞ்சம் கீறி விட்டிருந்தாள் ரோகிணி.
“நாளைக்கு ஆபீஸ் வரியா இசை..” என்றாள்.
“வரணும் ரோகி. ஆனா, அகரனுக்கு இன்னும் இங்க கிரச் பார்க்கலை. இல்லைன்னா நர்சரில சேர்க்கணும். அட்மிஷன் இப்போ இடையில கிடைக்குமான்னு தெரியலை. அது வரைக்கும் என்ன பண்றதுன்னு தான் யோசனையா இருக்கு..” என்றாள் இசை.
“ஏன்..? இத்தனை நாள் அவனைப் பார்த்துக்க ஒரு பாட்டி வந்தாங்களே.. அவங்களையே இங்கயும் வர சொல்ல வேண்டியது தானே..?” என்றாள் ரோகி
“அவங்களுக்கு இந்த வீடு கொஞ்சம் தூரம் ரோகி. முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற யாரும் நம்பிக்கையா இருப்பாங்களா அப்படின்றது சந்தேகம் தான். அதான், என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்..” என்றாள் இசை.
“எங்க வீட்ல விட்டுட்டு போவோம் இசை. அம்மா பார்த்துப்பாங்க. அன்பு சார் ரெக்கமன்ட் பண்ணா, பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல நர்சரி சேர்த்து விட்டுடுவோம். நெக்ஸ்ட் இயர் வேணும்ன்னா, நல்லா ஸ்கூலா பார்த்து அட்மிஷன் போட்டுக்கலாம்..!” என்று வரிசையாக ஐடியா கொடுத்தாள் ரோகிணி.
“ஐடியா, நல்லாத்தான் இருக்கு. ஆனா, அம்மாவுக்கு எதுக்கு வீண் சிரமம்..?” என்று இசை தயங்க,
“அதெல்லாம் ஒரு சிரமும் இல்லை. நீ கவலையை விடு. அகரனும் சமத்தா இருந்துப்பான்..!” என்றாள்.
“ரொம்ப தேங்க்ஸ் ரோகி. நீயும் இல்லைன்னா, நான் ரொம்ப சிரமப் பட்டிருப்பேன்..” என்றாள்.
“அடி வெளுத்திடுவேன்..! உன் தேங்க்ஸ நீயே வச்சுக்க. நான் போய் குளிச்சுட்டு வரேன். ஆபீஸ்ல இருந்து வந்த உடனே இங்க வந்துட்டேன்..!” என்றவள் கிளம்பி செல்ல, அவள் சென்ற பிறகு, அவள் கூறிய அனைத்து விஷயங்களையும் அசை போட்டுக் கொண்டிருந்தாள் இசை.
அன்று முழுவதும் இசை இல்லாத ஆபீஸ் அன்பிற்கு வெறுமையாய் இருந்தது. ஒரு பொருள் நம் அருகில் இருக்கும் போது, அது நமக்குத் தேவையா? தேவையில்லையா..? பிடிக்குமா..?பிடிக்காதா..? இப்படி எதுவுமே நமக்குத் தெரியாது. அது கொஞ்சம் விலகி செல்லும் போதோ, இல்லை அடுத்தவர் கைகளுக்கு செல்லும் போதோ தான், நாம் அதை என்னவாக மனதில் நினைத்திருக்கிறோம் என்று புரியும்.
அன்பின் நிலைமையும் இப்போது அப்படித்தான் இருந்தது. இசையின் மேல் அவனுக்கு இருந்த உணர்வு, இப்போது கொஞ்சம் தெளிவாய் தெரிய ஆரம்பிக்க, படபடத்துப் போனான் அன்பு. அவனுக்குத் தெரிந்து இதுவரை அவன் எந்த பெண்ணையும் இப்படி நினைத்தது கிடையாது. முதன் முறையாக இசையின் மீது, அதுவும் அவள் திருமணம் ஆனவள், ஒரு குழந்தையின் தாய் என்று தெரிந்த போதும், அவனின் மனம் மாறாமல் இன்னமும் அவளின் நினைவில் சுற்றிக் கொண்டிருப்பதை தான் அவனாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“நீ எப்போ இருந்து அன்பு, இப்படி கீழ்த்தரமா மாறின..? இது உனக்கே நல்லா இருக்கா..?” என்று அவனின் மனம் அவனை கேள்வி கேட்க, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் அன்பு. வீட்டிற்கு செல்லவும் தோணவில்லை. அவன் செய்ய வேண்டிய வேலைகள் வரிசை கட்டி காத்திருக்க, மனம் எதிலும் ஈடுபாடு காட்ட மறுத்தது.
“அன்பு நீ இப்படியே இருக்குறது சரியில்லை..! உன்னோட கவனத்தை தொழில்ல காட்டு. நீ இப்படியெல்லாம் இருக்குறவன் கிடையாது..” என்று தனக்குத் தானே அறிவுரை கூறிக் கொண்டு கிளம்பினான் அன்பு. எல்லாம் வீட்டிற்கு செல்லும் வரை மட்டும் தான். அவன் கார் உள்ளே நுழையும் போதே, அகரன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.
“இந்த நேரத்துல விளையாடிட்டு இருக்கான்..?” என்று யோசித்துக் கொண்டே இறங்கி சென்றான் அன்பு. அங்கே இசை துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தாள், அகரனை அருகில் விளையாட விட்டுக் கொண்டு.
“துணி துவைக்க வேற நேரமே கிடைக்கலையா..?” என்று மனதிற்குள் முனுமுனுத்துக் கொண்டவன், மனதை கல்லாக்கிக் கொண்டு அவனைக் காணாதவன் போல் சென்றான்.
“இப்போதான் வரிங்களா அங்கிள்..!” என்றான் அகரன் மழலைக் குரலில். அவனின் குரலில் சென்ற கால்கள் அப்படியே தேங்கி நின்றது.
“ஒரு குழந்தைக்கு இருக்குற பாசம் கூட என்கிட்ட இல்லையே..? அவன் அம்மாவைப் பார்த்தா தான பிரச்சனை..? இவன் என்ன பண்ணான்..?” என்று எண்ணிய அன்பு,
“ஆமாங்க சார்..! நீங்க இந்த நேரத்துல என்ன பண்றிங்க..?” என்றான் அவன் அளவிற்கு முட்டி போட்டு.
இசையின் பக்கம் கைகாட்டியவன்,
“மம்மிக்கு துணைக்கு இருக்கேன்..” என்றான் அகரன்.
“பெரிய பாடிகாட் தான் போல.. அகர் குட்டி சாப்பிட்டாச்சா..?” என்றான்.
“நான் சாப்புட்டேன்..நீன்ங்க..!” என்றான் மழலையாய்.
“நான் இனிமேல் தான் சாப்பிடனும் கண்ணா. ஓகே, சமத்தா போய் தூங்குங்க. குட்நைட்..!” என்றான் அன்பு.
“ஓகே.. சமத்தா போய் தூங்குங்க…குட்நைட்..” என்றான் அகரனும் அவனைப் போலவே. அவன் சொல்லிய விதத்தில் அன்பிற்கு சிரிப்பு வந்தது.
“சரிங்க பெரிய மனுஷா..” என்றவன் இசையை திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான். அவளுக்கும் எதுவும் வித்யாசம் தெரியவில்லை.
அதற்கு அடுத்து வந்த நாட்கள், இசைக்கும், அகரனுக்கும் நிம்மதியாய் கழிய, அன்பு செழியனுக்கு தான் பெரிய சோதனையாய் அமைந்தது. அங்கிருந்த அனைவரிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டான் அகரன். இசை அவனை யாரிடமும் பேசக் கூடாது,பழகக் கூடாது என்று சொல்லவே இல்லை. அவன் மனிதர்களை பழக வேண்டும், மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்றே நினைத்தாள். வந்த சில நாட்களிலேயே அனைவருக்கும் அகரன் செல்லப் பிள்ளையாகிப் போனான்.
அன்பின் புது அலுவலக் கட்டிடமும் முடியும் தருவாயில் இருந்தது. இதுவரை வெஜ் ஊறுகாய் வகைகளை மட்டுமே தாயாரித்துக் கொண்டிருந்தவன், இப்போது நான்வெஜ் பக்கமும் கவனத்தைத் திருப்பியிருந்தான். அவனுடைய வளர்ச்சி, அவனின் வேகத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும் ஏற்ப, நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.
அனைத்தும் சரியாய் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தான், அவனின் தங்கை சங்கீதாவும் வந்தாள். அவளின் வருகைக்கு பின்னர் காதம்பரியை கையில் பிடிக்க முடியவில்லை. அதிலும் மகள் மூன்று மாசம் முழுகாமல் இருக்க, அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
“மாப்பிள்ளைக்கு எத்தனை நாள் லீவ் சங்கீதா..?” என்றார் பல்லவன்.
“அவர் இன்னும் ஒருவாரத்துல கிளம்பிடுவார்ப்பா..! நான் டெலிவரி வரைக்கும் இங்க தான்..!” என்றாள் சங்கீதா.
“ஆமாங்க..! இவ இங்கயே இருக்கட்டும். மாப்பிள்ளை அப்பப்போ வந்து பார்த்துட்டு போகட்டும். வாயும் வயிருமா இருக்க பொண்ணு.. அங்க தனியா என்ன பண்ணுவா..?” என்றார் காதம்பரி.
“எனக்கொண்ணும் பிரச்சனையில்லை காதம்பரி.. மாப்பிள்ளை என்ன சொல்லுவாரோன்னு தான் யோசனையா இருக்கு..” என்றார் பல்லவன்.
“அதெல்லாம் அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்..! அவரே சொல்லிட்டார்..” என்றார் காதம்பரி.
“அவரே சொல்லிட்டா ஒன்னும் பிரச்சனையில்லை..!” என்ற பல்லவனுக்கு மனதில் யோசனையாகத் தான் இருந்தது.
“அப்பா, அவருக்கு அமெரிக்கா வேலை எல்லாம் பிடிக்கலையாம். இங்கயே வந்து விவசாயம் பண்ண போறேன்னு சொல்லிட்டு இருக்கார்..” என்றார் சங்கீதா கவலையாய்.
“நல்ல விஷயம் தானம்மா..! என்ன இருந்தாலும் சொந்த நாட்ல, சொந்த ஊர்ல இருக்குற மாதிரி இருக்குமா..?” என்றார் பல்லவன்.
“என்னப்பா..? நீங்களும் அவர் மாதிரியே பேசுறிங்க..? எனக்கு அவர் இப்படிப் பேசுறது சுத்தமா பிடிக்கலை..!” என்றாள் சங்கீதா.
“விடும்மா..! அவருக்கு இருக்குற சொத்து சுகத்துக்கு அவர் எதுக்கு வெளிய போய் வேலை செய்யணும்..? அவர் அப்படிக் கூட நினைச்சிருக்கலாம்..” என்றார் பல்லவன்.
“உங்ககிட்ட சொன்னதுக்கு நான் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்..!” என்றாள் சங்கீதா.
“நீயே சொல்லுண்ணா..! அவர் வேலையை விட்டுட்டு வந்து இங்க விவசாயம் பண்ண போறாராம்..” என்றாள்.
“வாவ்..! சூப்பர், ரொம்ப நல்ல விஷயம். நான் கூட மாப்பிள்ளைகிட்ட இதை சொல்லலாம்ன்னு நினைச்சிருக்கேன். ஆனா, அவர் என்ன சொல்லுவாரோன்னு நினைச்சு தான் எதுவும் சொல்லலை..!” என்றான்.
“அண்ணா நீயுமா..சுத்தம்..” என்று கடுப்பாக,
“சங்கீதா, மாப்பிள்ளை எக்காரணம் கொண்டும் வேலையை விடக் கூடாது. அது உன்கைல தான் இருக்கு..!” என்றார் காதம்பரி.
“நீ சும்மா இரு அன்பு..! அவர் வெளிநாட்ல வேலை பார்க்கிறார் அப்படின்னு தான் பொண்ணுக் குடுத்தோம். இப்போ மண்ணைக் கிளருன்னே வந்து நின்னா, அதெப்படி..?” என்று சிடுசிடுக்க,
“அப்பறம் மண்ணைக் கிளருறது அவ்வளவு கேவலமில்லை. நாளைக்கு உன் பையனுக்கு பொண்ணுக் குடுக்குறவங்க, ஊறுகா விக்கிறவன்னு சொல்லிட்டா..” என்றார் பல்லவன்.
“என் பையன் ஊறுகா விக்கலை. அந்த கம்பெனிக்கே முதலாளி அவன்..” என்று சிலுப்பிக் கொண்டார் காதம்பரி.
“ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..!” என்று அன்பு நகரப் போக,
“அண்ணா, இவர் சொந்ததுலையே ஒரு பொண்ணு இருக்கு. இவருக்கு தங்கச்சி. பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கா. பேசாம அவளையே உங்களுக்குப் பார்த்துட்டா என்ன..?” என்றாள் சங்கீதா.
“இது கூட நல்ல யோசனையா தான் இருக்கு சங்கீதா..” என்றார் காதம்பரி.
“பொண்ணு..!” என்று அவள் சொன்ன உடனேயே இசை தான் அவன் கண் முன் வந்தாள். இப்போதெல்லாம் அன்பு அவளிடம் நேரடியாக எதையும் பேசுவதில்லை. அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இசை மட்டும் அன்பின் மனதில் இருந்து செல்வேனா என அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.
“பார்க்கலாம் சங்கீதா..!” என்ற பதிலை தங்கைக்கு சொன்னவன், தன்னுடைய அறையை நோக்கி சென்று விட்டான். ஆனால் அவனுடைய முகம் பட்டென்று மாறியதை சங்கீதா கவனித்து விட்டாள்.
“என்னம்மா..? அண்ணன் ஏன் ஒரு மாதிரி போறான்..? அவன் முகமே சரியில்லையே..?” என்றாள் சங்கீதா.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை சங்கீதா. அவனுக்கு வேலை ஜாஸ்தி, அவ்வளவுதான். அதான் நீ சொன்ன பொண்ணையே பார்க்கலாம்ன்னு சொல்லியிருக்கானே அப்பறம் என்ன..?” என்றார் காதம்பரி.
“எதுவும் இல்லைன்னா சரித்தான்..!” என்றாள் சங்கீதா.
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், கொஞ்சம் லேட்டாகத் தான் எழுந்தாள் இசை. அகரன் ஒரு வாரமாக,அருகில் இருக்கும் நர்சரி பள்ளிக்கு போய்க் கொண்டிருந்தான்.அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, அவன் எழுவதற்குள் சமைக்க வேண்டும் என்று வேகமாய் எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் இசை. ஏனோ எழுந்ததில் இருந்தே ஏதோ நடக்கப் போவதைப் போல் இருந்தது மனசு. அவள் எண்ணியதைப் போலவே அழுது கொண்டே வந்தாள் கங்கா.
“என்ன கங்கா..? ஏன் அழுதுகிட்டே வர..?” என்றாள் இசை.
“அக்கா, அவர் நைட் புல்லா குடிச்சுட்டு வந்து வீட்ல ஒரே சண்டை. அன்பு சார்க்கு தெரிஞ்சா வேலையும் போய்டும். வீடும் போய்டும். ஆனா, இவருக்கு அதெல்லாம் எங்க தெரியுது..? ஏண்டா கல்யாணம் பன்னோம்ன்னு இருக்கு..? பெத்தவங்களை ஏமாத்திட்டு வந்ததுக்கு நான் நல்லா அனுபவிக்கிறேன்..” என்று அவள் அழுகும் போது, பாவமாய் இருந்தது இசைக்கு. இரவு முழுவதும் அழுதிருப்பாள் போலும்..முகமே சிவந்து வீங்கிப் போயிருந்தது.
“விடு கங்கா..! உன் வீட்டுக்காரரை எந்த வழியில் திருத்தனுனோ, அந்த வழியில் தான் திருத்தனும். அவன் வேலைக்குப் போறது பெரிய விஷயமில்லை. அன்பு சார்கிட்ட கேட்டு, நீ வேலைக்கு வா. அப்போதான் உனக்கும் ஒரு நம்பிக்கை வரும். அவனுக்கும் ஒரு பயம் வரும்..!” என்றாள் இசை.
“எனக்கென்னக்கா வேலை கிடைக்கும்..?” என்றாள் கங்கா.
“எந்த வேலையும் கவுர குறைச்சல் இல்லை. ஏதோ ஒரு வேலை. உனக்குன்னு ஒரு வருமானம்… அப்போ உனக்கு ஒரு நம்பிக்கை வரும் பாரு… அந்த நம்பிக்கையை யாராலும் குடுக்க முடியாது..!” என்றாள் இசை.
“சரிக்கா..! நான் அன்பு அண்ணாகிட்ட கேட்டுப் பார்க்கிறேன்..!” என்றாள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காதம்பரிக்கு எரிச்சலாக வந்தது. அதை அப்படியே வந்து அன்பிடமும் காட்டினார்.
“எதுக்கும்மா காலையிலேயே இவ்வளவு கோபமா இருக்கீங்க..?” என்றான்.
“நான் தெரியாம கேட்கிறேன்… உன்னோட கம்பெனில அபலைப் பெண்களுக்கா வேலை குடுக்குறியா அன்பு.. போறவங்க வரவங்க எல்லாம் வேலைக்கு வர..?” என்றார்.
“இப்ப என்ன நடந்தது..?” என்றான். காதம்பரி அவர் கேட்டதை சொல்ல, யோசித்தான் அன்பு.
“இதுல தப்பென்ன இருக்கு..? நான் கூட இதை யோசிக்கலை பாருங்க. அந்த பொண்ணு புருஷனுக்கு வேலை போட்டு குடுத்ததுக்கு பதிலா, அந்த பொண்ணுக்கு வேலை போட்டு குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும். இசைக்கு தோணின விஷயம் எனக்குத் தோணாம போய்டுச்சே..!” என்றான் அன்புவும்.
“நீ இப்படி இருக்குறதுனால தான், அந்த பொண்ணு அது இஷ்ட்டத்துக்கு முடிவு எடுக்குது..” என்று எரிச்சலாக சொன்னார்.
“புரியாம பேசாதிங்க…! என்கிட்டே வேலை தான் கேட்க சொல்லியிருக்காங்க. அவங்க ஒன்னும் வேலை போட்டு தரலை. ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு..” என்றான்.
“என்னன்னு தெரியலை அன்பு..! நீ அந்த பொண்ணுக்கு வரவர ரொம்ப சப்போர்ட் பண்ற..? எனக்கு இது சரியா படலை..” என்று காதம்பரி சொல்லிவிட்டு செல்ல, தலையைப் பிடித்துக் கொண்டான் அன்பு. சமீப காலமாக, காதம்பரிக்கு இசை மேல் அப்படி ஒரு கோபம். அவள் எது செய்தாலும் அதில் ஒரு குற்றம் குறை கண்டு பிடித்தார். இதுவரை அவளிடம் எதையும் நேராக காட்டியதில்லை. அதற்கு காரணம் சங்கீதா தான். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்து இசையை பிடிக்கவில்லை. அதனால் அவளின் பேச்சைக் கேட்டு கேட்டு காதம்பரிக்கும் பிடிக்காமல் போனது.
“நீ சொன்னது சரியா இருக்கும் போல சங்கீதா. அவனுக்கு இசை மேல அப்படி ஒரு நம்பிக்கை. புருஷன் வெளிநாட்ல இருக்கும் போது, என்பையனை வளைச்சுப் போட பார்க்கிறாளோ..?” என்றார் காதம்பரி.
“எத்தனை நியூஸ் பார்க்கிறோம்.. அப்படித்தான் இருக்கனும்ன்னு இல்ல, ஆனா, அந்த இசையை அண்ணன் பார்க்குற பார்வையில் ஏதோ ஒன்னு இருக்கும்மா. அது மட்டும் உறுதி. காலாகாலத்துல அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிடுங்க. இல்லைன்னா, அசிங்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை..” என்றாள் சங்கீதா.
“பேசாம, நீ சொன்ன பொண்ணையே பார்த்து, பேசி முடிச்சுடலாம்..!” என்றவர்,
“மாப்பிள்ளை எப்போ வரார்..? இருக்குற ஒரு வார லீவையும் அவங்க வீட்லயே இருந்து போக்கிட்டா, அப்பறம் பொண்டாட்டி வீட்டுக்கு எப்போ தான் வருவார்..?” என்றார் காதம்பரி.
“இங்க வந்துட்டு தானம்மா போனார். அண்ணன் வேலையா வெளிய போய்ட்டா, அவர் என்ன செய்வார்..?” என்றவள்,
“பேசாம ஒன்னு பண்ணுவோம்..! நாம அண்ணனையும் கூட்டிகிட்டு பொண்ணுப் பார்க்க போகலாம். வரும் போது அப்படியே அவரையும் கூட்டிட்டு வந்துடலாம்..!” என்றாள் சங்கீதா.
“இதுவும் நல்ல ஐடியா தான். ஆனா, அன்பு இதுக்கு ஒத்துக்கணுமே…?” என்றார்.
“அந்த ரோகிணிக்கு என்னைப் பத்தி இன்னும் தெரியலைம்மா..! என்னோட புகுந்த வீட்டை வந்து பார்க்கட்டும். அப்பதான் நான் எப்படி வசதியான குடும்பத்துல வாக்கப்பட்டிருக்கேன்னு தெரியும். பட்டிக் காட்டுல கல்யாணம் பண்ணவங்களுக்கு இவ்வளவு வாய் ஆகாதுன்னு என் காதுபடவே பேசுறா..?” என்றாள் சங்கீதா.
“அப்படியா பேசுனா… அவளை முதல்ல வீட்டை காலி பண்ண சொல்றேன்..” என்றார் காதம்பரி.
“அம்மா.. அப்படி சொன்னா, அண்ணா காரணம் கேட்கும். அதுமட்டுமில்லாம அவ அண்ணா ஆபீஸ்ல தான வேலை செய்றா..” என்றாள் சங்கீதா.
“நம்ம அன்புக்கு யார் யாரை எங்க வைக்கனும்ன்னே தெரியலை..!” என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றார் காதம்பரி.
பொதுவாக அங்கு குடியிருக்கும் பாதி பேருக்கு சங்கீதாவைப் பிடிக்காது. அவள் ஒரு அலட்டல் பேர்வழி என்று அனைவருக்கும் தெரியும். தனக்கு கீழ் இருப்பவர்கள் என்றால், அவளின் பார்வையே மாறிவிடும். அவளைப் போல் உண்டா என்று அவளுக்கு ஜால்ரா தட்டுபவர்களையே அவளுக்குப் பிடிக்கும். காதம்பரியும் நல்லவர் தான், சங்கீதாவின் போதனை இல்லாதவரை.
அன்பிற்கும் அவளின் குணம் தெரியுமாதலால், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். அவன் எவ்வளவு சொல்லியும் அவள் குணத்தை இதுவரை மாற்ற முடியவில்லை அவனால். அவளின் கல்யாணத்திற்கு பிறகு, அப்படி சொல்வதையும் விட்டு விட்டான் அன்பு. ஆனால் அவள் ஒரு விஷயத்தை அவனிடம் சொன்னால், அதை அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டான் அன்பு செழியன். எதுவுமே அவனுக்கு சரியென்று பட்டால் தான் செய்வான்.
இத்தனை நாட்கள் அவள் சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு முக்கிய காரணம் அவள் கணவன் என்பதை அன்பு அறிவான். அவன் மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகாமல் இருந்தால், தங்கை என்றோ தங்கள் வீட்டிற்கு வந்திருப்பாள் என்று தெரியும் அவனுக்கு.
அந்த காம்பவுண்டில் குடியிருந்த பாதிப் பேர், அவள் எப்போது ஊருக்குக் கிளம்புவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.