அன்பின் முகத்தில் இருந்த கோபத்தில், காதம்பரியே கொஞ்சம் பயந்து தான் போனார்.
“யாரை வீட்டை காலி பண்ண சொல்லணும்..?” என்றான் எதுவும் தெரியாதவன் போல்.
“எல்லாம் அந்த இசை…இல்லையில்லை தேனிசைச் செல்வியை தான்..” என்றாள் சங்கீதா.
“அதனால உனக்கு என்ன கிடைக்கப் போகுது சங்கீதா..? கொஞ்சமாவது மனுஷங்களை அனுசரிச்சு வாழப் பழகு..” என்றான் அன்பு, இழுத்துப்பிடித்த பொறுமையுடன்.
“அதை நீ எனக்கு சொல்றது தாண்ணா வேடிக்கையா இருக்கு. நான் எப்படி இருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சா போதும்ன்னு நீதான அடிக்கடி சொல்லுவ..?” என்றாள் சங்கீதா.
“மத்தவங்களும் இசையும் ஒன்னு கிடையாது. இப்போ அவங்க உனக்கு நாத்தனார் முறை. கொஞ்சமாவது மரியாதை குடுத்துப் பழகு..” என்றான்.
“அவ ஒன்னும் எனக்கு நாத்தனார் கிடையாது. என் மாமனார் நாலு பொண்டாட்டி கூட வச்சிருப்பார். அவங்களுக்கு பிறந்தவங்க எல்லாம் எனக்கு நாத்தனார் ஆக முடியாது..” என்று அவள் பேச,
“உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா, என்னம்மா பேசுற..? வாய்துடுக்கா பேசுவ, மத்தபடி விபரம் இல்லாத பொண்ணுன்னு நினைச்சது எவ்வளவு பெரிய தப்பு..?” என்றான்.
“இப்போ உனக்கு என்ன பிரச்சனை அன்பு அண்ணா..! இது எங்களோட விஷயம். இதுல உனக்கென்ன பிரச்சனை..? நீ ஏன் தலையிடுற..?” என்றாள் கோபமாக.
“பிரச்சனை உன்னது தான்.. ஆனா, வீடு என்னது. யாரை குடி வைக்கணும், வைக்கக் கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும். நீ இல்லை..” என்றான் அன்பு கோபமாக. அவனுடைய கோபம் கூடிக் கொண்டே போனது.
“அப்போ, இந்த வீட்ல எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொல்ல வரீயா..?” என்றாள்.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன்..? நீ என்ன கேட்டுட்டு இருக்க..?” என்றான்.
“பாருங்கம்மா..! இப்பவே எப்படி பேசுறான்னு. இது அவன் வீடாம். அப்போ எனக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லையா..?” என்று அவள் பேச, அவள் பிரச்சனையை வேறு விதமாய் கொண்டு செல்வதாய் பட்டது பல்லவனுக்கு.
“கொஞ்ச நேரம் அமைதியா இரு சங்கீதா. அவன் என்ன தப்பா சொல்லிட்டான்..? சொன்னாலும் சொல்லாட்டியும் இது அவன் வீடு தான். உனக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சாச்சு..” என்றார் பல்லவன். (cakesprices.com)
“என்னங்க நீங்களும் இப்படி பேசுறிங்க..? அதுக்காக அவளுக்கு உரிமை இல்லைன்னு ஆகிடுமா..? என்ன அன்பு இதெல்லாம்..?” என்று காதம்பரி மகளுக்குப் பரிந்து கொண்டு வர,
“நீ முதல்ல வாயை மூடு காதம்பரி. உன்னால அவ கெட்டாளா.. இல்லை அவளால நீ கெட்டயான்னு தெரியலை. ஆனா, ரெண்டு பேரும் பேசி வச்சு பேசுறிங்கன்னு மட்டும் தெரியுது..” என்றார் பல்லவன்.
“விடுங்கப்பா..! நம்ம வீட்ல இதெல்லாம் என்ன புதுசா. என்ன, கொஞ்ச நாள் இல்லாம இருந்துச்சு. இப்ப மறுபடியும்..” என்று நிறுத்தியவன் அதற்கு மேல் பேசாமல் அவனுடைய அறைக்கு சென்று விட்டான்.
“இப்பவும் அவன் என்னைத்தான் அப்படி சொல்லிட்டு போறான். நான் வந்ததுக்கு அப்பறம் தான் வீட்ல பிரச்சனை வருதுன்னு சொல்லாம சொல்லிட்டு போறான்..” என்றாள் சங்கீதா.
“தெரிஞ்சா சரி..” என்ற பல்லவன் வெளியே சென்று விட்டார்.
“அம்மா, நான் தான் சொன்னேன்ல. அன்பு அந்த இசையைப் பார்க்குற பார்வையில என்னமோ இருக்கு. அவளை எது சொன்னாலும் உன் மகனுக்கு கோபம் பொத்துகிட்டு வந்திடுது. இதை இப்படியே விட்டா, நாளைக்கு அவ அண்ணைனை மயக்கி கைக்குள்ள போட்டுகிட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை..” என்றாள் சங்கீதா.
“அந்த இசையைப் பார்த்தா அந்த மாதிரியெல்லாம் தெரியலை சங்கீதா. நல்ல பொண்ணாத்தான் தெரியறா. பாவம் இந்த வயசுல இப்படி நடந்திருக்க வேண்டாம்..” என்றார் காதம்பரி.
“இங்க குடி வந்தப்ப, புருஷன் வெளிநாட்ல இருக்கான்னு பொய் சொன்னவ தானம்மா.. இப்படி சொன்னவளுக்கு, வேற எப்படியும் சொல்ல வராதுன்னு என்ன நிச்சயம்..!” என்றாள் சங்கீதா.
அனைவரும் இசைக்கு சாதகமாக பேசுவதை சங்கீதாவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏதோ அவள் மட்டுமே நல்லவள் என்பதைப் போல் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு குடியிருந்த அனைவரும் இசையைப் பற்றி அப்படியே பேச… அதுவே சங்கீதாவிற்கு ஒரு கோபம். ‘தான்தான்’ என்று ஜம்பமாக திரிபவர்களுக்கு, மற்றவர்களை அவர்கள் முன்னால் உயர்த்திப் பேசினால் அவர்களுக்கு ஆகாது. சங்கீதாவும் அந்த இனத்தை சேர்ந்தவள் தான்.
முதல் நாள் முழுவதும் சோர்வாக இருந்த அகரனுக்கு, அன்று காலையில் இருந்தே காய்ச்சல் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த ஹாஸ்பிட்டலுக்கு போய் கொண்டிருந்தாள் இசை. ரோகிணி வீட்டில் அனைவரும் அன்று வெளியே சென்றிருக்க, இசை மட்டும் தனியாக அவனை அழைத்துக் கொண்டு போனாள்.
அகரனுக்கு ஏதாவது என்றால் அதை இசையால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அவளுக்கு இருக்கும் பற்றுதல் அவன் மட்டும் தானே. இசையும், அகரனும் ஆட்டோவில் ஏறிச் செல்வதை தன்னுடைய அறையிலிருந்து பார்த்து கொண்டிருந்தான் அன்பு.
“இந்த நேரத்துல எங்க போறா..? என்ன பிரச்சனை..? முகமே சரியில்லையே..?” என்று அவன் தனக்குள் யோசித்து, தானாக பேசிக் கொண்டிருக்க,
“அதை இசைகிட்டயே கேட்க வேண்டியது தான..?” என்றது மனம்.
“அப்படி நினைச்ச உடனே பேச முடியாது. அவ ஏதாவது தப்பா எடுத்துகிட்டா..” என்று அன்பு சொல்ல, அப்படியும் மனசு கேட்காமல் இசைக்கு போன் செய்தான்.
“இசை எங்க இருக்கீங்க..?” என்றான்.
“அகரனுக்கு காய்ச்சல் சார். ஹாஸ்ப்பிட்டல் போய்கிட்டு இருக்கோம்..” என்றவள்,
“எதுக்கு கால் பண்ணிங்க சார்..” என்றாள். அவள் பேச்சிலேயே சோர்வு நன்றாக தெரிந்தது.
“காய்ச்சல்னு சொல்லியிருந்தா, நாங்க யாராவது கூட வந்திருப்போமே இசை…! சரி எந்த ஹாஸ்ப்பிட்டல் போறீங்க.. சொல்லுங்க நான் வரேன்..” என்றான்.
“இல்லை பரவாயில்லை சார்..” என்றாள்.
“இதுல என்னங்க இருக்கு..? மாதவனுக்காக நான் இதை செய்றேன்னு நினைச்சுக்கங்க..சொல்லுங்க,,” என்றான்.
அவள் ஹாஸ்ப்பிட்டல் பேரை சொல்ல, அவளிடம் போனில் பேசிக் கொண்டே கிளம்பியிருந்தான் அன்புச்செழியன்.
“இப்பதான அன்பு வந்த..? எங்க கிளம்பிட்ட..?” என்று காதம்பரி கேட்டுக் கொண்டிருக்க,
“அகரனுக்கு காய்ச்சல்ம்மா..! இசை தனியா ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க. நானும் போயிட்டு வந்திடுறேன்..” என்று அவரின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி சென்றான் அன்பு.
“நடக்கட்டும்…நடக்கட்டும்..” என்று சங்கீதா சிரிக்க,
“இதெல்லாம் ஒரு உதவி சங்கீதா. உன் இஷ்ட்டத்துக்கு கற்பனை பண்ணாத..” என்று காதம்பரி கொஞ்சம் கோபமாகவே சொல்லிவிட்டார்.
அங்கே ஹாஸ்பிட்டலில், அகரனுக்கு ஜுரம் அதிகாம இருக்க, ஒரு இன்ஜெக்ஷனை போட்டுவிட்டு, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொல்ல, அப்படியே அமர்ந்திருந்தாள் இசை.
அகரன் அப்படியே துவண்டு போயிருக்க, அவனை விட இசை அதிகம் துவண்டு போயிருந்தாள். ஏதோ ஒரு எண்ணம் அவளுக்குள் வதைத்துக் கொண்டிருக்க, அதை வெளியே சொல்லத் தெரியாமல் எதிரே இருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்த அன்பு, இருவரையும் பார்த்து அதிர்ந்து போனான். அகரன் காய்ச்சலால் துவண்டிருந்தான். இசை கவலையால் துவண்டிருந்தாள். நேராக அகரனின் அருகில் சென்ற அன்பு, அவனுக்கு காய்ச்சல் எப்படி இருக்கிறது என்று பார்த்தான். வரும் போதே விசாரித்து விட்டு தான் வந்திருந்தான்.
காய்ச்சல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. அகரன் உறக்கத்தில் இருக்க, அன்பு என்ற ஒருத்தன் அங்கு வந்ததையே பொருட்படுத்தாமல் இருந்தாள் இசை. அவளிடம் எப்படி பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் அன்பு. ஆபீஸ் விஷயம் என்றால் மணிக் கணக்கில் பேசுவான். ஆனால், அவள் தனிப்பட்ட விஷயங்களில் அவனுக்கு பேசுவது கொஞ்சம் தயக்கம் தான். எடுத்த எடுப்பில் எந்த பெண்ணிடமும் நெருங்கி விட முடியாதே.
“சாதாரண ஜுரம்ன்னு தான் சொன்னங்க இசை. சரியாகிடும், நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை..” என்றான் அன்பு. ஆனால், அவனின் வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
“என்னாச்சு..? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கா..?” என்று யோசித்த அன்பு,
“இசை..” என்றான் மீண்டும். அவளைத் தொட்டு பேசவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது. வேறுவழியில்லாமல், அவளின் கையைப் பிடித்து அன்பு அவளை உலுக்க, அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது.. அவளுக்கும் காய்ச்சல் அடிக்கிறது என்று.
“என்ன இவளுக்கும் இப்படி காய்ச்சல் அடிக்குது..? அதுவே தெரியாம உட்கார்ந்திருக்கா..” என்று வேகமாக வெளியே சென்றவன் அங்கிருந்த நர்சை அழைத்துக் கொண்டு வர, அங்கு வந்து அவளைப் பார்த்த நர்ஸ்..அவளுக்கும் ஒரு இஜென்க்ஷனை போட்டார்.
“பொண்டாட்டி, பிள்ளைக்கு காய்ச்சல் இப்படி கூடுற வரைக்கும் என்ன சார் செய்விங்க..? இப்பல்லாம் காய்ச்சல் வந்தாலே பயமா இருக்கு, எதையும் ஆரம்பத்துலையே பார்த்துடுங்க சார்..” என்றாள் அந்த நர்ஸ்.
“பொண்டாட்டி, பிள்ளையா..? இதை மட்டும் இசை கேட்கணும்..” என்று நினைத்துக் கொண்டவன்,
“டாக்டரை பார்க்க முடியுமா..?” என்றான்.
“இப்ப வந்திடுவாங்க சார்..! பயப்படுற மாதிரி ஒண்ணுமில்லை. வைரஸ் பீவர் தான்..” என்று சொல்லிவிட்டு நர்ஸ் நகர,
அதற்கு பிறகு டாக்டர் வந்து, ஒன்றுமில்லை என்று சொல்லும் வரைக்கும் அன்புக்கு கொஞ்சம் படபடப்பாகத் தான் இருந்தது.
“இப்போ கூட்டிட்டு போங்க. நாளைக்கும் சரியாகலைன்னா, கூட்டிட்டு வாங்க. பிளட் டெஸ்ட் பார்த்திடலாம்..” என்றார் டாக்டர்.
“ஓகே டாக்டர்..” என்றவன், மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்தான். அகரனை அவன் தூக்கிக் கொள்ள,
“நானே வரேன் அன்பு சார்..” என்றாள் இசை சோர்வாக.
“பராவாயில்லை இசை..! நீங்க இருங்க வந்திடுறேன்..” என்றவன், முதலில் அகரனை தூக்கி சென்று காரில் படுக்க வைத்து விட்டு வந்தான்.
இசையை அழைக்க, அவள் சோர்வாக இருந்தாலும், மெதுவாக தனியாகவே நடந்து வந்தாள். அவளுடைய செயலில் எரிச்சல் அடைந்தவன்,
“இப்ப நான் தொட்டு கூட்டிட்டு போனா என்னவாம்..?” என்று கடுப்புடன் சொல்லிக் கொண்டவன், அங்கிருந்த நர்சை அழைத்து,
அவங்களை கொஞ்சம் கார் வரைக்கும் விட முடியுமா..? என்று கேட்டு, அந்த நர்சின் உதவியை வாங்கிக் கொண்டான்.
அன்பு மட்டும் வராமல் போயிருந்தால்… என்று அந்த நிலமையிலும் எண்ணிக் கொண்டாள் இசை. வரும் போது அவளுக்கும் கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது. அகரனின் மேல் கவனம் இருந்ததால் அவளுக்கு காய்ச்சல் வந்தது கூட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
“ரொம்ப தேங்க்ஸ் அன்பு சார்..!” என்றாள் இசை.
“வச்சுக்கங்க நீங்களே..” என்று எரிச்சலுடன் சொன்னவன், அதற்கு பிறகு வீடு வந்து சேரும் வரை அவளுடன் பேசவேயில்லை.
இசைக்கு இருந்த சோர்வில், அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இறங்கும் போது கூட அவன் எந்த உதவியும் செய்யவில்லை.
“வீட்டு கீ குடுங்க இசை..” என்றவன், அகரனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று அவனைப் படுக்க வைத்து விட்டு வந்தான். அதற்குள் இசை மெதுவாக வீட்டிற்குள் வந்து விட்டாள். காரில் இருந்த மாத்திரைகள், டானிக் என்று அனைத்தையும் எடுத்து வந்தவன்,
“எப்ப, என்ன குடுக்கணும்ன்னு அதுலயே எழுதியிருக்கு…! அகரனுக்கு குடுத்தாச்சு. நீங்க டேப்லட் போட்டுகோங்க. ரெஸ்ட் எடுங்க..” என்று இயந்திர கதியில் சொன்னவன், வேறு எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான்.
“அண்ணா, இசை அக்காவுக்கு என்னாச்சு..?” என்றாள் கங்கா.
“பீவர்..! பார்த்துக்கோ கங்கா..” என்று அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வேகமாய் சென்று விட்டான்.
“அண்ணா எதுக்கு கோபமா போறார்..?” என்று புரியாத கங்கா, இசையிடம் சென்றாள். அன்பு, கார் சத்தம் கேட்டதில் இருந்து, நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் சங்கீதா.
“இவளுக்கு எங்கண்ணன் என்ன வேலைக்காரனா..?” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டாள்.
காய்ச்சலில் துவண்டு படுத்திருந்த தேனிசைச்செல்வியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இந்த கண்ணீர் அவள் மீது அவளுக்கே வந்த கழிவிரக்கத்தால் வந்தது. அவளின் நினைவு கதிரவனிடம் சென்றிருந்தது.
திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் காய்ச்சலை இழுத்துக் கொண்டிருந்தாள் செல்வி.
“என்ன செல்வி..? காய்ச்சல் இப்படி நெருப்பா கொதிக்குது..? என்கிட்டே கூட சொல்லலை..” என்ற அவளை கடிந்து கொண்ட கதிர்,
“ஐயோ மாமா..ஒண்ணுமில்லை. சாதாரண காய்ச்சல் தான். சரியா போய்டும்..” என்றாள்.
“அதெப்படி சாதாரண காய்ச்சல்ன்னு உனக்குத் தெரியும். எதையும் ஆரம்பத்திலேயே பார்த்துட்டா, பிரச்சனை இல்லை..” என்றான் கதிர்.
“நான் தான் சொல்றேன்ல..”
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்..!” என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு செல்ல,
“செல்விக்கு என்னாச்சு கதிர்..?” என்ற லட்சுமி, அவன் தூக்கிக் கொண்டு வரவும் பயந்து விட்டாள்.
“இவளுக்கு காய்ச்சல் அடிக்குதும்மா.. போய் ஒரு ஊசியைப் போட்டு கூட்டிட்டு வரேன்..” என்றவன் அவளை அப்போதும் தூக்கிக் கொண்டே செல்ல,
“வீட்ல இருந்து வாசல் வரைக்கும், நடந்து போக முடியாத அளவுக்கா காய்ச்சல் அடிக்குது..?” என்ற லட்சுமி பதற,
“ஐயோ அத்தை..! இவர் தான் அப்படி பண்றாருன்னா, நீங்களுமா..? என்னை இறக்கி விட சொல்லுங்க..” என்றாள் செல்வி.
“நீ உன் வேலையை மட்டும் பாரு..” என்று தூக்கிக் கொண்டே தான் சென்றான்.
“கதிரு பைக் வேண்டாம்.. கார்ல கூட்டிட்டு போ..!” என்று லட்சுமி சொல்ல,
“அதுவும் சரி தான்..!” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றவன், திரும்பி வீடு வரும் வரை அவளைப் பாடாய் படுத்தி விட்டான். ஹாஸ்பிட்டலில் இருந்த டாக்டர் கூட
“நீங்க படுத்துற பாட்ல..அவங்களுக்கு காய்ச்சல் கூடத்தான் போகுது..” என்று சொல்லி சிரித்து விட்டார்.
“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டிங்க..? எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்டாட்டி. அவளையும் சரியா பார்த்துக்கலைன்னா, இன்னொரு பொண்டாட்டிக்கு நான் எங்க போவேன்..?” என்றான் கதிர்.
“ஹலோ.. அப்ப எங்களுக்கு என்ன நாலு பொண்டாட்டியா இருக்கு..?” என்று அந்த டாக்டரும் சிரிப்புடன் கேட்க,
“அது எனக்கெப்படி தெரியும் டாக்டர்..! நீங்கதான் சொல்லணும்..” என்றான் கதிர்.
“எப்படிம்மா இவரை சமாளிக்கிறிங்க..?” என்ற டாக்டர்,
“கடைசி வரைக்கும் இப்படியே இருங்க..” என்று வாழ்த்தியே அனுப்பினார். அவரின் வாழ்த்து பலிக்காமல் போனது யாருடைய குற்றம்.
வீடு திரும்பு வழியில் அவளுடைய வீட்டிற்கும் அழைத்து சென்றான் கதிர்.
“அது வந்து அத்தை.. உங்களைப் பார்க்காம, உங்க மகளுக்கு காய்ச்சலே வந்திடுச்சு. ஆதான், உங்களைப் பார்க்க விட்டு, கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன். ஏக்கத்துல கூட காய்ச்சல் வரும்ன்னு சொல்லுவாங்க தானே..?” என்றான்.
அவன் அப்படி சொல்லவும் செல்வி எப்படி உணர்ந்தாள் என்று சொல்ல முடியவில்லை. உள்ளூர்தான் என்றாலும் அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்று தான், அவள் அங்கு வராமல் இருந்தாள். அவனானால், அவளுக்கு எதற்கு காய்ச்சல் வந்திருக்கும் என்று யூகித்து சரியாக அவளை அழைத்து வந்திருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக, கதிரவனை அவளுக்கு நிறைய பிடிக்க ஆரம்பித்து. அவன் சொன்னதைப் போல் அவளை ராணியாகவே வைத்திருந்தான். உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள் என்பார்களே அது போலத் தான் வைத்திருந்தான் கதிரவன். தன்னுடைய மொத்த காதலையும் அவள் மீது மட்டும் தான் கொட்டினான். அவள் கண் கலங்கினால் அவளுக்கு முன்பாக இவனுக்கு கண்ணீர் வந்திருக்கும்.
அந்த முரடனுக்குள் இப்படி ஒரு முரட்டுக் காதல் இருக்கும் என்று செல்வி நினைத்துக் கூட பார்க்கவில்லை. தந்தையின் அன்பையும் சேர்த்தே அவனிடம் இருந்து பெற்றாள் செல்வி. மகனின் சந்தோஷம் கண்டு லட்சுமிக்கும் அப்படி ஒரு நிறைவு.
பழைய நினைவுகளின் தாக்கத்தில், அவளுக்கு காய்ச்சல் குறையாமல் இருக்க, அகரனுக்கு காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது. அவளின் அருகில் வந்த அகரன்,
“மம்மி..” என்றான் சோர்வான குரலில். அவனுடைய தொடுதலில் இசை கண் விழிக்க,
“அக்கா..! கஞ்சி வச்சிருக்கேன்.. கொஞ்சம் குடிக்கிறிங்களா..?” என்றாள் கங்கா.
“இப்போ வேண்டாம் கங்கா..!” என்ற இசை,
“அகர் குட்டிக்கு இப்போ எப்படி இருக்கு..?” என்றாள்.
“குட்டி பையனுக்கு காய்ச்சல் குறைஞ்சிருக்குக்கா.. உங்களுக்குத் தான் குறையலை..” என்றாள் கங்கா.
“அது சரியாப் போய்டும் கங்கா..!” என்றாள் இசை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ரோகிணியும் வந்துவிட்டாள்.
“இசை என்னாச்சு..? எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லியிருந்தா, நான் உடனே கிளம்பி வந்திருப்பேனே..?” என்று ரோகிணி சொல்ல,
“பரவாயில்லை ரோகி..! சாதாரண காய்ச்சல் தானே. இப்போ ஓகே..” என்ற இசை,
“உனக்கு யார் சொன்னது..?” என்றாள்.
“அன்பு சார் தான் போன் பண்ணி சொன்னார்.”
“அவர் மட்டும் இல்லைன்னா, இன்னைக்கு கொஞ்சம் சிரமம் தான் ரோகி…” என்றாள் இசை.
“சரி விடு..! இப்போ ரெஸ்ட் எடு. அகரனை நான் பார்த்துக்கறேன்…” என்ற ரோகிணி,
“அகர் கண்ணா, தூங்குறிங்களா.. இல்லை ஆன்ட்டி கூட வரீங்களா..?”என்றாள் ரோகிணி.
“நான் வரலை..!” என்ற அகரன், இசையின் கழுத்தை கட்டிக் கொண்டான்.
“அவன் என்கூடவே இருக்கட்டும் ரோகி..!” என்ற இசையும் அவனைக் கட்டிக் கொள்ள, அவள் ஏதோ டிப்பரசனில் இருக்கிறாள் என்று தெரிந்தது.
ஊரில் இருந்து வந்ததில் இருந்தே அவள் அப்படித்தான் இருக்கிறாள். எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சல் அவளுக்கு. அதுவே காய்ச்சலாக மாறியிருந்தது.
அவர்களை விட்டுவிட்டு சென்ற அன்புச்செழியனுக்கு இருப்பு கொள்ளவில்லை. நினைவு முழுதும் இசையும், அகரனும் மட்டுமே இருந்தனர். அந்த நர்ஸ் சொன்ன, பொண்டாட்டி,பிள்ளை என்ற வார்த்தைகள் அவனையே சுற்றிக் கொண்டிருக்க, அன்பிற்கு மனதிற்குள் என்னவோ செய்தது.
நினைத்த நேரத்திற்கு சென்று அவர்களைப் பார்க்கவும் முடியாது அவனால். அது இசைக்கு எப்படி ஒரு பேச்சை வாங்கித் தரும் என்று அன்பிற்கு தெரியும். வேறு யாரும் தேவையில்லை. சங்கீதாவே போதுமென்று தெரியும். அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மாதவனின் போன் வர,
“சொல்லுங்க மாதவன்..? என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கிங்க..?” என்றான்.
“அது ஒண்ணுமில்லை அன்பு… நான் நாளைக்கு ஊருக்கு வரேன். அப்பாவும் கூட வரேன்னு சொன்னார். இப்ப என்னடான்னா.. மங்கை அம்மாவும் வரதா சொல்றாங்க. சங்கீதாவுக்கு இது ஐந்தாவது மாசம். அதனால் நாத்தனார் முறைக்கு வளையல் போடணும்ன்னு சொல்றாங்க. செல்வியை வச்சே போடணும்ன்னு சொல்றாங்க. நீங்க அத்தை,மாமாகிட்ட கேட்டு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்…” என்றான்.
“இதையெல்லாம் கேட்கணுமா மாதவன்… நியாயமா இதை நாங்க தான் யோசனை பண்ணியிருக்கணும். அவங்க சொல்ற அளவுக்கு இருந்திருக்கோம். கண்டிப்பா என்ன செய்யணுமோ செஞ்சிடலாம். நீங்க கிளம்பி வாங்க..! அவங்களுக்கும் எந்த தயக்கமும் வேண்டாம்..” என்றான் அன்பு.
“ஓகே அன்பு..! ரொம்ப தேங்க்ஸ்..!” என்று மாதவன் போனை வைக்க போக,
“அப்பறம் ஒரு விஷயம் மாதவன்..” என்று அன்பு நிறுத்த,
“சொல்லுங்க அன்பு..” என்றான்.
“ஆங்..இல்லை, நீங்க நேர்ல வாங்க பேசிக்கலாம்..!” என்று போனை வைத்து விட்டான் அன்புச்செழியன்.
“என்னவா இருக்கும்..?” என்று மாதவன் யோசித்துக் கொண்டிருந்தான் அங்கே.