கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்திருந்த வானம் போல், செல்வியின் கதிரவன் இன்றி அவளுடைய வாழ்வும் இருண்டு தான் போயிருந்தது. ஏனோ அந்த வானத்தின் இருள் அவளுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது போல.
செல்வியின் கதிரவனாக அவன் வாழ்ந்தது வெறும் மூன்று மாதங்கள் தான் என்றாலும், முப்பது வருடங்களுக்குத் தேவையான நினைவுகளை கொடுத்து சென்றிருந்தான்.
எத்தனை ஆசையாக செல்வியை மனம் முடித்தானோ, எத்தனை ஆசையாக அவளுடன் வாழ்ந்தானோ, அதே வேகத்தில் அவளை விட்டும் சென்று விட்டான்.
“எங்க இருக்க மாமா..? என்னைப் பார்த்துட்டு தான இருப்ப..?” என்றவளின் கேள்விக்கு பதில் அளிக்க அவனில்லை.
அவனில்லாத வாழ்வு எப்படி இருக்கும் என்று இருண்டு போய் இருந்தவளுக்கு வெளிச்சமாய் வந்தவன் தான் அகரன். அந்த கொடிய நாள் செல்வியின் வாழ்வில் வராமலேயே போயிருந்திருக்கலாம்.
அந்த நாளை இன்று நினைத்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் பதறிப் போகும்.
“செல்வி.. இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க..?” என்ற கதிரவனின் குரலில்,
“பொங்கல் வருது..! ஒரே கூட்டமா இருக்கும்.. பார்த்து போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க..” என்ற லட்சுமியின் குரல் மட்டும் கேட்டது.
“ஏன் அத்தை உள்ள இருந்துகிட்டே பேசுறாங்க..?” என்றாள் புரியாமல்.
“அவங்களுக்குப் புரிஞ்சது கூட உனக்குப் புரியலை.. அதான்..” என்றான்.
“என்ன புரியலை..?”
“அம்மா தாயே..! நேரம் ஆகுது, கிளம்பலாமா..?” என்றவன் அவளைத் தள்ளிக் கொண்டு சென்றான்.
“உலகத்துலயே பொண்டாட்டியை தள்ளிட்டு போற ஒரே புருஷன் நானாத்தான் இருப்பேன்..” என்று கதிர் சொல்ல, வாய்விட்டு சிரித்தாள் செல்வி.
“லட்சுமியக்கா.. பிள்ளைகளுக்கு முதல்ல சுத்தி வைங்க. கண்ணே பட்டுடும். அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம்..” என்று வீட்டின் வேலையாள் சொல்ல, லட்சுமியும் அப்படித்தான் நினைத்தார்.
“பெரியம்மா, கதிர் எங்க போறான்..?” என்றபடி வந்தான் சின்னு.
“மதுரைக்கு போறாங்க சின்னு. என்ன விஷயம்..?” என்றார்.
“அதெல்லாம் அவன் வந்த பிறகு கேட்டுக்கடா..!” என்றார் லட்சுமி.
“வரவர.. இந்த கதிரு சரியில்ல. எப்ப பார்த்தாலும் அண்ணி பின்னாடியே சுத்திட்டு இருந்தா, மத்த வேலையெல்லாம் பார்க்க வேண்டாமா..? என்று சின்னு சலிப்புடன் சொல்லி விட்டு சென்றான்.
மீனாட்சி அம்மனின் தரிசனம் நன்றாகவே கிடைத்தது இருவருக்கும். கோவிலுக்குள் சென்றவுடன் ஏதோ ஒரு மன அமைதி கதிருக்குள். அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி அப்படியே வடிந்து, இனம் புரியாத ஒரு உணர்வு வந்து போனது.
“இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு செல்வி…” என்று யோசித்த கதிர்,
“செல்வி, அன்னைக்கு அமுதா கூட சோளக்காட்டுல நின்னு பேசிட்டு இருந்தவன் இவன் தான்..!” என்றான் கதிர்.
“என்ன மாமா சொல்றிங்க..?” என்றாள்.
“ஆமா, இவன் தான்..!” என்றவன், அங்கிருந்த வண்டிகளையும் பொருட்படுத்தாது, வேகமாய் அவனிடம் சென்று அவனைப் பிடித்து நிறுத்தினான். முதலில் கதிரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.
“ஹேய்..! நீதான அன்னைக்கு அமுதா கூட பேசிட்டு இருந்தது. அன்னைக்கு கேட்டதுக்கு கூட படிச்சவன்னு சொன்ன..? ஏண்டா இப்படி பண்ண..?” என்றான் கதிர் அவன் சட்டையைப் பிடித்து.
“சட்டையை விடுங்க சார்..! விடுங்கன்னு சொல்றேன்ல.. இப்பவும் சொல்றேன். நான் அமுதா கூட படிச்சவன் தான்..” என்றான்.
“சார் அமுதாக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பிரண்டும் அமுதாவும் லவ் பண்ணாங்க. ஒரு கட்டத்துல சண்டை போட்டு பிரேக்கப் பண்ணிகிட்டாங்க. அது கூட அமுதாவால தான். கொஞ்ச நாள்ல அமுதாவுக்கு கல்யாணம்ன்னு தகவல் வந்தது. அவனுக்கு அமுதாவை மறக்க முடியலை. அவனும் போன் பண்ணி மிரட்டி கூட பார்த்தான். அமுதா அசையவே இல்லை. அவன் வீட்ல கொஞ்சம் வசதி கம்மி சார். அதான் அமுதா ஒரே முடிவா மாட்டேன்னு சொல்லவும், இவன் குடிச்சு குடிச்சு குடிகாரனா போய்ட்டான். அதைத் தான் சார் அன்னைக்கு அமுதாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்..” என்றான் அவன்.
“சார்..! அவளோட ரெண்டாவது லவ்வர் கூட ஓடிப் போயிருப்பா. அவனால தான அமுதாக்கும் என் பிரண்டுக்கும் இடையில பிரேக்கப்பே ஆச்சு..” என்றான் அவன்.
“என்னது..? இன்னொருத்தனா..?” என்ற கதிர் அதிர்ந்து போனான்.
“அட ஆமா சார்..! அவன் கொஞ்சம் பார்க்க ஸ்டைலா இருப்பான். எப்படியோ அமுதாவை கரெக்ட் பண்ணிட்டான். நான் கூட, அவனையும் விட்டுட்டு இப்படி கல்யாணம் பண்றாளேன்னு நினைச்சேன். பரவாயில்லை, அவனையாவது ஏமாத்தாம போயிட்டாளா..?” என்றான் அவன் நக்கலாக.
கதிருக்கும், செல்விக்கும் தான் அவமானமாக போனது. அவனைப் பிடித்து ஏன்டா கேட்டோம் என்றானது. செல்விக்கு முகமே செத்துப் போனது.
“பாரு.. பிள்ளையை எப்படி வளர்த்து வச்சிருக்குது உங்க பெரியம்மான்னு. இதுல அன்னைக்கு அம்புட்டு வாய் வேற..? இதெல்லாம் தெரிஞ்சா உங்கப்பா அன்னைக்கே உசுரை விட்டுருவார். அந்தம்மா கூட குடும்பம் நடத்தி, இத்தனை நாள் அவர் உசுரோட இருக்குறதே பெரிசு..” என்று தலையில் அடித்துக் கொண்டான் கதிர்.
“என்ன தான் பிடிக்காதவளாக இருந்தாலும், செல்விக்கு அமுதாவை நினைத்து கொஞ்சம் கவலையாக இருந்தது. இப்போது விஷயத்தை கேள்விப் பட்ட பிறகு, அவளை நினைத்து அவமானமாக இருந்தது. பிறந்த வீட்டு கவுரவம் காற்றில் பறந்து கொண்டிருந்தது.
“கதிர் மாமா.. இதை யார்கிட்டயும் சொல்லிடாதிங்க..” என்றவளுக்கு கண்கள் கலங்கிப் போக,
“ஆமாடி..! இதை மைக்செட் போட்டு வேற சொல்லுவாங்களா.? எனக்கு வேற வேலை இல்லை பாரு..! இங்க இவனைப் பார்த்ததையே மறந்துடு சரியா. போனவ எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்ன..?” என்றான் கதிர்.
“ம்ம்..” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. எவ்வளவு சந்தோஷமாக வந்தார்களோ.. போகும் போது, அவ்வளவு மனச்சுமையுடன் சென்றார்கள்.
“என்னாச்சு கதிரு..? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டிங்க..?” என்றார் லட்சுமி.
“கோவிலுக்கு மட்டும் போயிட்டு வந்துட்டோம் ம்மா..!” என்றான் கதிர்.
“ஏப்பா..? சினிமாவுக்கு போகணும்ன்னு சொன்னிங்க..?” என்றார்.
“இல்லைம்மா, இன்னொரு நாள் பார்த்துக்கலாம்ன்னு நினைச்சு வந்துட்டோம்..” என்றான் கதிர்.
“அட போ கதிரு.. செல்வி எவ்வளவு ஆசையா கிளம்பி வந்தா. ஒரெட்டு கூட்டிட்டு போயிட்டு வந்திருக்கலாம். சரி சாப்பிட்டிங்களா இல்லையா, இல்லைன்னா வந்து சாப்பிடுங்க..” என்று சொல்லிவிட்டு செல்ல,
அன்றே பொங்கல் சீருடன் வந்தார் மங்கை. அவரைப் பார்த்த செல்விக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
“அம்மா..! வாங்கம்மா..” என்று அவள் குதித்துக் கொண்டு ஓட,
“இன்னும் ஓடிகிட்டே இருக்குற பழக்கத்தை நீ விடவேயில்லையா..?” என்று மங்கை அதட்டல் போட,
“நீங்க இன்னும் என்னைத் திட்டுற பழக்கத்தை விடவே இல்லை போல..” என்றாள் செல்வியும் அவரைப் போலவே.
“வாங்கத்தை..!” என்று கதிர் அழைக்க,
“வா மங்கை..!” என்றார் லட்சுமியும்.
“அண்ணன் இல்லையா மதினி..?” என்றார் மங்கை.
“லோடு ஏத்திட்டு மார்கெட் வரை போயிருக்கார்..” என்றார் லட்சுமி.
“நீங்க எதுவும் நினைக்கலைன்னா, பொங்கல் சீர் குடுத்து, தலைப் பொங்கலுக்கு வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன்..!” என்றார் மங்கை.
“நாங்க எப்படியத்தை..?” என்று கதிர் கேட்கும் போதே, செல்வியின் முகம் சுண்டிப் போக ஆரம்பித்தது. அதை கதிரவன் கவனிக்கவும் தவறவில்லை.
“ஏதோ அன்னைக்கு கோபம். நீங்களும், நாங்க எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டிங்க..? ஆனா, அதுக்காக அப்படியே இருக்க முடியாதுல்ல தம்பி. எனக்கு மூத்த பொண்ணு இவ. எனக்கும் ஆசை இருக்கும்தான..” என்றார் மங்கை.
“நாங்க வர்றது பிரச்சனையில்லை அத்தை. ஆனா, செல்வி அப்பா..” என்று அவன் இழுக்க,
“அவருக்கு எந்த கோபமும் இல்லை தம்பி. அவர் வந்து கூப்பிட்டா நீங்க வரமாட்டிங்களோன்னு நினைச்சு தான், என்னை மட்டும் அனுப்பி விட்டார்..!” என்றார் மங்கை.
“நாங்க கண்டிப்பா வரோம் அத்தை..! நீங்க கவலைப் படாம போயிட்டு வாங்க. ஆனா, ஜல்லிக் கட்டு இருக்கு. அது முடிஞ்ச உடனே வந்திடுறேன். செல்வியை முன்னாடியே அனுப்பி வைக்கிறேன்..” என்றான்.
“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை.. நீங்களும் அண்ணனும் கண்டிப்பா வரணும் மதினி..” என்று சொல்லிவிட்டே சென்றார். வண்டியில் வந்த பொங்கல் சீர் அனைத்தையும் அங்கு இறக்கி விட்டு சென்றார் மங்கை.
“எனக்கும் அத்தை சொல்றது தான் சரின்னு படுது மாமா..” என்றாள் செல்வி.
“ரெண்டு பேரும் தேவையில்லாம பயப்படாதிங்க..! அதெல்லாம் ஒன்னும் நடக்காது..” என்று அவர்களுக்கு உறுதியளித்தான். அந்த உறுதியை அவனால் காப்பாற்ற முடியாமல் போகும் என்று தெரிந்திருந்தால் அப்படி ஒரு உறுதியை கொடுத்திருக்க மாட்டானோ..?”
சந்தோஷமாகத்தான் ஜல்லிக்கட்டிற்கு கிளம்பி சென்றான். பொங்கலில் இருந்து, பத்து நாட்கள் வரை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் ஜல்லிக் கட்டு நடக்கும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தான் கதிரின் அத்தனை வெற்றிகளும். ஒவ்வொரு வருடமும் அதிக காளைகளை அடக்குவதில் அவன் தான் வெற்றியாளன்.
அன்றும் அப்படித்தான்.. பல காளைகளை அடக்கிவிட்டு, வெற்றியாளனாய் மகிழ்ச்சியில் அனைவரும் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்க, வாடிவாசலில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பைக் தாண்டி வந்த காளை..கூட்டத்திற்குள் புகுந்திருந்தது. நான்கு ஐந்து பேர் சேர்ந்து அதை அடக்க முயற்சிக்கும் போது, அவர்கள் அனைவரையும் குத்தித் தள்ளியது. அதில் கதிரவனும் அடக்கம்.
அவன் வாங்கிய பரிசுகள், கேட்பாரற்றுக் கிடக்க, அவனோ அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவனுடைய கடைசி நிமிடங்கள் முழுவதும் போராட்டத்துடன் தான் சென்றது.
“செல்வி..செல்வி..” என்றே அவனுடைய இறுதி மூச்சு சுவாசம் செய்தது.
“அய்யா.. கதிரு..!” என்ற லட்சுமியின் ஒப்பாரியும்,
“மாமா..!” என்ற செல்வியின் ஒப்பாரியும், அந்த ஊரையே இரண்டாய் கிழித்திருந்தது. ஊரின் செல்லப் பிள்ளையாய் இருந்த கதிரவனின் உயிர் பிரிந்ததில், அந்த ஊர் முழுவதும் ஒப்பாரி சத்தங்கள் தான் கேட்டுக் கொண்டிருந்தது.
“ஐயோ..! செல்வி..” என்ற மங்கையின் அழுகையில், மீண்டு வரும் சக்தி அவனுக்கு இருந்திருந்தால், கதிரவன் கண்டிப்பாக திரும்பி வந்திருப்பான்.
காலையில் சந்தோஷமாக, தன்னை அணைத்து முத்தமிட்டு சென்றவன், இந்த நிமிடம் இல்லை என்பதை ஜீரணிக்கவே சிலமணி நேரங்கள் எடுத்தது.
“அத்தனை காளையையும் அடக்கிட்டு, சிங்கம் மாதிரி வந்தாரே.. கடைசில இப்படி ஆகிப் போச்சே..” என்று சின்னு கதறி கதறி அழுது கொண்டிருந்தான். இதுவரையில் அப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததே இல்லை என்னும் வகையில், அவ்வளவு கூட்டம். எல்லாம் கதிரவனுக்காக கூடிய கூட்டம் மட்டுமே.
செல்வியை கண்ணுக்குள் வைத்துத் தாங்கியவன், இப்போது கண் மூடியிருந்தான். அவன் உடலை விட்டு செல்வி இம்மியும் நகரவில்லை. அழுது ஓய்ந்து போனவளுக்கு, தொடர்ந்து அழ, கண்ணீர் தான் இல்லை. அவளின் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாது என்று சொன்னவனே, எல்லா கண்ணீரையும் எடுத்துக் கொண்டான் போல.
அவனின் உடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் மீதே மயங்கி சரிந்தாள்.
“ஐயோ செல்வி..! அந்த புள்ளைக்கு என்னாச்சுன்னு பாருங்களேன்..” என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கத்த, அவளுக்கு மயக்கம் தெளிய தண்ணீரை தெளித்துக் கொண்டிருக்க,
“அடியேய் மங்கை.. உன் மக முழுகாம இருக்காடி..” என்று அந்த பெரிய மனுஷி அதற்கும் ஒரு ஒப்பாரியை வைத்தார்.
அவளுக்கு நாட்கள் தள்ளிப் போயிருந்தது கூட, அப்போது வரை அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. மனதில் இருந்த பாரத்தோடு இந்த பாரமும் சேர்ந்து கொள்ள, அந்த வயதில் அதற்கு மேல் அவள் கண் முன் நின்றது எல்லாமே நிர்மூலமாய் தெரிந்தது.
“நீ அப்பா ஆகிட்டன்னு.. இப்படி உன்னை பிணமா வச்சுகிட்டு சொல்லுவேன்னு நான் கனவுல கூட நினைக்கலை மாமா..!” என்று செல்வி மீண்டும் கதற, அதைப் பார்த்த, கண்ணீர் வராதவர்களுக்கும் கண்ணீர் வந்தது.
பாதிப் பேர் கதிரவனுக்காக அழ, பாதிப் பேர் செல்வியை நினைத்தே அழுதனர்.
“பாவி..! மூனே மாசத்துல எம்புள்ளைய இப்படி நிர்கதியா விட்டுட்டு போயிட்டானே..!இப்படியெல்லாம் போய்டுவோம்ன்னு தெரிஞ்சு தான், அவளை அந்த தாங்கு தாங்குனியா..?” என்ற மங்கையின் ஓலக் குரல் அங்கிருந்தவர்களின் மனதை கணக்க செய்தது.
கதிரவனின் உடலை எடுக்கும் போதே, செல்வி பாதி பிணமாகி விட்டாள். அவனின் உடலிற்கு முன், அவளின் பூவையும் பொட்டையும் எடுக்கும் போது, மொத்தமாக நடை பிணமாகவே ஆகிவிட்டாள் செல்வி.
பொங்கலுக்கு அவன் வாங்கித் தந்த மல்லிகை…மணத்தை இழந்திருந்தது.
நேற்று சிரித்து பேசி, வம்பிழுத்து அவளை சந்தோஷத்தில் திக்கு முக்காட செய்தவன்.. அவளை திக்கற்று நிற்க வைத்து விட்டு சென்று விட்டான்.
கதிர் இறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்த நிலையில்… மணிகண்டனின் சொந்தத்தில் இருந்த ஒரு கிரகம்…
“பிள்ளை கருத்தரிச்ச நேரம் சரியில்லை மணி. அதான் நம்ம புள்ளைய காவு வாங்கியிருக்கு..” என்றது வாய்கூசாமல். இது ஒன்றே போதுமே, அவுள் சாப்பிடும் வாய்களுக்கு.
“ஒத்தப் பிள்ளைய ராஜா மாதிரி வளர்த்தேனே..! எனக்கு அவன் கொள்ளி போடுவான்னு நினைச்சேனே. கடைசில அவனுக்கு நான் கொள்ளி போடுற மாதிரி ஆகிடுச்சே..” என்று மணிகண்டன் மறுபடியும் அழ ஆரம்பித்தார்.
கதிர் இருக்கும் போதே, பொறாமையில் இருந்த சில மானங்கெட்ட உறவுகள், அவன் இல்லையென்றதும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ஆரம்பித்தது.
“மொத்ததுல உங்களுக்கு மருமக வந்த நேரமும் சரியில்ல..பேரப் புள்ளை கருத்தரிச்ச நேரமும் சரியில்லை. இப்பவே அப்பனைத் தூக்கி முழுங்கின பிள்ளை.. இன்னும் யாரை எல்லாம் என்ன செய்ய காத்திருக்கோ..” என்ற வார்த்தைகள் எல்லாம் சகஜமாக வந்து விழ,
அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த செல்வி, ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளுக்குள் செத்துக் கொண்டிருந்தாள்.
“இதுக்கு நீ.. என்னையும் கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம் மாமா. இந்த பேச்செல்லாம் கேட்கணும்ன்னு தான் என்னை விட்டுட்டு போனியா..? நீ இருந்தப்போ எதிர்ல நின்னு பேச பயந்தவங்க எல்லாம்.. இப்போ எப்படி பேசிட்டு இருக்காங்க பாரு மாமா..” என்று மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள் செல்வி.
“இப்ப எதுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க..?” என்று லட்சுமி பொறுக்க மாட்டாமல் கேட்டே விட்டார்.
“என்ன லட்சுமி..? நாங்க என்ன இல்லாததையா சொல்லிட்டோம். கல்யாணத்துலையே ஆயிரத்தெட்டு பிரச்சனை. கட்டுனா, இவளைத்தான் கட்டுவேன்னு கதிரு ஒத்தக் கால்ல நின்னு இவளைக் கட்டிகிட்டான். அப்படி கல்யாணம் பண்ணி என்னத்தை சாதிச்சுட்டான். வாழவேண்டிய வயசுல போய் சேர்ந்துட்டான். எங்கமேல கோவத்துக்கு வந்து பிரயோஜனம் இல்லை..” என்று அவர்கள் நியாயவாதிகளாய் பேச ஆரம்பித்தனர்.
“அதுக்காக..” என்று லட்சுமி ஆரம்பிக்க,
“வாயை மூடு லட்சுமி..! அவங்க என்ன இல்லாததையா சொல்லிட்டாங்க. அவங்க சொல்றதும் உண்மை தான..? போனது நம்ம பிள்ளை..அந்த பொண்ணு வந்த நேரமும் சரியில்லை.. வயித்துல வாங்குன நேரமும் சரியில்லை..” என்று மணிகண்டன் எறிந்து விழ, அவர் இப்படி பேசுவார் என்று கொஞ்சமும் செல்வி எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் செல்வியைப் பேச பேச, மங்கைக்கு பெத்த வயிர் பத்தி எறிந்தது. அவள் வாழ்க்கையையே தொலைத்து விட்டு நின்றிருக்க, அவளுக்கு ஆறுதல் சொல்லவில்லை என்றாலும், அவளின் ரணத்தை கீறாமல் இருந்திருக்கலாம்.
“நமக்கு பிள்ளை தான் போய்ட்டான்… அவளுக்கு புருஷனே போய்ட்டாங்க..” என்ற லட்சுமி கதிரின் நினைப்பில் அழத் தொடங்கினார்.
“செல்வி..!” என்ற மங்கையின் குரலில் அனைவரும் பேச்சை நிறுத்த, அங்கே அப்படி ஒரு அமைதி.
“உன்னைத்தான் செல்வி..! வா வீட்டுக்குப் போகலாம்..” என்றார் மங்கை உறுதியாக.
“அதெப்படி போக முடியும். முப்பது நாள் அவ இங்க தான் இருந்தாகணும்..” என்றனர் மணிகண்டனின் உறவினர்கள்.
“எதுக்கு..? முப்பது நாளுக்குள்ள, அவளை முழுப் பிணமா ஆக்குறதுக்கா..? என் பொண்ணுக்கு வாழ்க்கையே போய்டுச்சு. உங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி நடந்திருந்தா, இப்படித்தான் வாய்கூசாம பேசுவிங்களா..? நீங்கள்லாம் மனுஷ ஜென்மங்க தானா..?” என்று மங்கை கேட்க,
“பார்த்து பேசு மங்கை..” என்று வெகுண்டு கொண்டு வந்தார் மணி.
“நீங்க பேசாதிங்க..! கதிர் தம்பியோட அப்பான்ற ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். தப்போ சரியோ, அவன் இருந்தவரைக்கும் என் மகளை மகாராணி மாதிரி வச்சிருந்தான். அவனே இல்லைன்னு ஆனதுக்கு அப்பறம் என் மகளுக்கு இங்க என்ன வேலை..? கிளம்பு செல்வி..” என்றார் மங்கை.