மயங்கி சரிந்தவளை அள்ளியவன் பெட்டில் விட்டு நெருங்கிப் படுத்தான். அதிரூபன் தூக்கும்போதே ஆதிரைக்கு கிறக்கம் தெளிந்திருந்தது.. ஆனாலும் விழித்துக்கொள்ள மனமில்லை.
அதிரூபன் முத்தமிட்டதை விட.. அதில் தான் மயங்குவோம் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை ஆதிரை. எத்தனை கோபமிருந்தாலும் இவனை மீறவே முடியவில்லையே என வெம்பியவளாய் கண்மூடியிருந்தாள்.
‘பெரிய பட்டுக்கு என்னாச்சு..?” என காதில் கிசுகிசுக்க.. ரூபனிற்கு முதுகு காட்டி படுத்தாள்.
‘சரி.. கிஸ் பண்ணிருக்க கூடாதுதான்.. உன் ஹார்ட் பீட் அப்படி கேக்கும்போது என்னால அமைதியா இருக்க முடியலடி.. ஆனாலும் சாரி..” என ஆதியின் முகத்தை தன்புறம் திருப்ப.. அப்பொழுதும் கண்திறக்கவில்லை ஆதிரை.
‘ஆதி.. ஈவ்னிங் கிளம்பினேனா வரதுக்கு இருபது நாள் பக்கம் ஆகிடும்.. கொஞ்ச நேரமாவது மனம்விட்டு பேசனும்.. கண்ணை திறடி..” என்றான் கெஞ்சலாக.
‘என்கிட்ட மனம் விட்டு எதையும் சொல்லவேணாம்..” என்றாள் கண்மூடிய நிலையிலேயே.
தன் பழைய காதலை சொல்வேன் என நினைக்கிறாள் எனப்புரிந்தவன்.. ‘ப்ச்.. நீ நினைக்கிற அளவுக்கு ஒரு மண்ணும் இல்ல.. கண்ணை திற முதல்ல..” என்றான் அதட்டலாக.
‘ஒரு மண்ணும் இல்லாமத்தான் பட்டு வந்தாளா.?” என கண் திறந்தாள்; கோபமாக.
‘ப்பா.. இப்படி நெற்றிக் கண்ணை திறந்தா.. நான் எப்படி பேசுறது..?” என்றான் பயந்த பாவனையில்.
‘நடிக்காதிங்க..” என கோபமாய் சொல்லி கட்டிலிலிருந்து எழ முற்பட.. இழுத்துப் பிடித்து தன்னோடு அமர வைத்தவன்.. ‘நான் காதலிச்ச ஒரே பொண்ணு நீ மட்டும்தான்.. எனக்கு பழைய காதல்ன்னு எதுவும் கிடையாது..”
‘சரி விடுங்க.. நம்பிட்டேன்..” என்றாள் கடுப்பாக.
‘பேச விடுறியா என்ன.?” என அதட்ட.. ‘பட்டு காதலுக்கு பிறந்திருந்தாலும் சரி.. சந்தர்பத்துக்கு பிறந்திருந்தாலும் சரி.. எனக்கு எதுவும் தெரிய வேணாம்..” என்றாள் காட்டமாக.
‘சந்தர்ப்பத்துக்கு பிள்ள பெத்துக்கிறவனா நானு.?” என முறைக்க.. ‘சரி காதலுக்கு பிறந்ததாவே இருக்கட்டும்.. எனக்கு எதுவும் தெரிய வேணாம்..” என குரலிறங்கி கண்கலங்கினாள்.
‘ஆதி..” என தவிப்போடு தோள் தொட.. ரூபனின் கையை தட்டிவிட்டாள்.
இவளுக்கு வேற மாதிரிதான் சொல்லனும் என.. ‘சரி.. என் பழைய வாழ்க்கையை சொல்லல.. வேற எதாவது பேசலாம்..” என்றான் கனிவாக.
காலையில் கேக் ஊட்டியபோது ரூபன் கண்ணீர் விட்டது நினைவு வர.. ‘ஒன்னும் வேணாம்.. இன்னைக்கு பட்டுவோட அம்மா நியாபகம் வந்துச்சில்ல.. அவங்களையே நினைச்சிட்டிருங்க..” என்றாள் ஆற்றாமையாக.
ஆதிரையின் ஆற்றாமை இனித்தாலும்.. அவளின் தவிப்பதை தகிக்க.. ‘மன்னிச்சுக்கோ பெரிய பட்டு..” என்றான் கெஞ்சலாக.
‘எதுக்கு குழந்தைக்கு அப்படி சொல்லி கொடுத்திங்க.?”
‘வேற எப்படி சொல்லி கொடுக்கிறது.?” என ஆழ்ந்து பார்த்தான்.
‘ஏன் உங்களுக்கு தெரியாதா.?” என்றாள் முறைப்பாக.
‘தெரியும்.. ஆனாலும் உனக்கு பிடிக்கனும்ல.?”
‘ஏன் எனக்கு பிடிக்காது..? நான் அத்தனை மோசமா.? அப்போ எதுக்கு என்னை கல்யாணம் செய்துகிட்டிங்க..?” என பொறிந்து தள்ள..
‘அச்சோ பட்டு.. என் பட்டு சொக்க பட்டுன்னுதான கல்யாணம் செய்துகிட்டேன்..” என கொஞ்ச.. ‘சொக்க தங்கம்னுதான் சொல்வாங்க.. சொக்க பட்டுன்னு சும்மா எதையாவது உளறாதிங்க..” என்றாள் கடுப்பாக.
சிரித்தவன்.. ‘உனக்கு பிடிச்சமாதிரி நீயே சொல்லி கொடு..”
என்ன இத்தனை தன்மையா பேசுறான்..? இவன் சரியான வல்லவன்.. பேச்சுல மயக்கி பழைய காதலை சொல்ல நினைக்கிறானோ என்ற கலக்கம் வர.. குழந்தை பேச்சையே வளர்த்த விரும்பி..
‘எங்கம்மா அத்தை மாமான்னு எல்லாரும் சொல்லி கொடுத்தாங்க.. யார் சொன்னாலும் கேட்க மாட்றா.. நீங்க சொன்னாதான் கேட்பா.. நீங்களே சொல்லி கொடுங்க..”
‘குழந்தை எப்படி கூப்பிட்டா உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியாதே..”
ஆதிரை முறைக்கவும்.. ‘நீ சொல்லிக்கொடு கேட்பா..” என்றான் கனிவாக.
‘இங்க தவிர குழந்தை யாரிடமும் ஒட்டறதில்ல.. எதுக்கு குழந்தையை இப்படி மிரட்டி வச்சிருக்கிங்க.?”
‘சின்ன பட்டு பத்தி அப்புறம் பேசலாம்.. இப்போ நம்மளை பத்தி கொஞ்சம் பேசலாமே..” என்றான் கெஞ்சலாக.
தன்னை சமாதனப்படுத்த எண்ணி இவனின் காதலை சொல்லாமல் விடமாட்டான் போலவே என ஆதிரையின் முகம் பதட்டமாக..
ஆதிரையின் பதட்டம் உணர்ந்தவன்.. ‘ப்ரியா பத்தி கேட்டியே.. அதையாவது சொல்லட்டுமா.?” என்றான் கனிவாக.
‘உங்க காதல் இதுல கிராஸாகாதுனா சொல்லுங்க..” என்றாள் முனுமுனுப்பாக.
ம்.. இவளின் கோபம் சிறுகுழந்தைக்கு போன்றது.. அதைவிடுத்து மற்றது பேசினால் தான் கோபப்பட்டதை உடனே மறந்திடுறாளே என வியந்தவன் கண்களுக்கு.. கோபமில்லாமல் கோபம் போல் ஆதிரை முனுமுனுத்தது அத்தனை அழகாய் இருக்க.. ‘என் காதலுக்கும் ப்ரியாக்கும் சம்மதமே இல்ல..” என்றான் ரசனையாக.
—– —— ——
‘அப்போ சொல்லுங்க..” என்றாள் ஆவலாக.
தனக்கு குழந்தையிருக்கு என்ற போதும் தன்னை விரும்பும் மனைவியின் மன அழுத்ததை போக்கும் தவிப்போடும்.. ஆதிரை அனைத்தையும் சரியாக புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையோடும்..
‘ப்ரியா என் அத்தை பொண்ணுனு சொல்றதை விட.. என் நெருங்கிய தோழி.. நலன்விரும்பி.. காதல்ன்ற ஒரு கோணத்தை தவிர.. மத்த எல்லாமும் எனக்கு அவதான்..” என்றான் நெகிழ்வாக.
ஆச்சர்யத்தோடு விழிவிரித்தாள் ஆதிரை.
‘நீ மட்டும் இல்ல.. எங்க உறவைப் பார்த்து சொந்தங்கள் எல்லாரும் அச்சர்யபடுவாங்க.” என பெருமையோடு சொல்லி.. ‘சின்ன வயசுலயிருந்தே என்கூடத்தான் இருப்பா.. இல்ல, நான் அத்த வீட்ல அவளோட இருப்பேன்..
எனக்கும் அவளுக்கும் ஆறு மாசம்தான் வித்யாசம். ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல். எனக்கு படிப்புனா பிடிக்கவே பிடிக்காது.. எல்லா சப்ஜெக்லயும் பெயில்ன்னு எங்கப்பா பெல்ட்ல அடிச்சார்.. இரண்டடிதான் என்மேல விழுந்துச்சி.. நான் கத்துறதை பார்த்து அடுத்த அடிக்கெல்லாம் ப்ரியா குறுக்க வந்துட்டா..
மாமாவ அடிக்காதிங்க வலிக்கும்னு ஒரே அழுகை.. நான் வாங்கின இரண்டடிக்கு இரண்டு மணிநேரம் அழுதிருப்பா..
ப்ரியா அழறதை சகிக்க முடியாம நீ படிக்கிற மாதிரி உன்மாமன் படிச்சா நான் ஏன் அடிக்கப்போறேன்னு எங்கப்பா ப்ரியாவை திட்டினார்.
இனிமே மாமா படிப்பாங்க.. அடிக்காதிங்கன்னு அப்போவும் அழுகை. (Ambien) சரி அடிக்கலன்னு எங்கப்பா சொன்னதுக்கப்புறம்தான் அழுகையை நிறுத்தினா.
அதுக்கப்புறம் சாய்ங்காலம் அவ படிக்கும்போதெல்லாம் என்னையும் படிக்க சொல்வா.. அவளுக்காக இரண்டு நாள் படிச்சேன்.. அதுக்கப்புறம் எனக்கு படிக்க பிடிக்கல.. நீ படின்னு சொன்னதுதான். என்னவோ நான் அவளை அடிச்சமாதிரி அழ ஆரம்பிச்சிட்டா.
எனக்கு செம கோபம்.. அழுது ப்ளாக்மெயில் பண்ணலாம்னு பார்க்கிறியான்னு திட்டிட்டு வந்துட்டேன். நான் திட்டினதால அன்னைக்கு நைட் சாப்பிடாம இருந்திருக்கா.
அத்தை வந்து சொன்னாங்க.. ப்ரியாகிட்ட போய் மன்னிப்பு கேளுன்னு எங்கப்பாம்மாவும் சொன்னாங்க.. அவ்வளோ கொழுப்பாகிடுச்சா அவளுக்குனு பசிச்சா சாப்பிடுவான்னு என்னால மன்னிப்பு கேட்க முடியாதுன்னுட்டேன்.
அடுத்தநாள் காலைலயும் சாப்பிடாம மயக்கம் போட்டுட்டா.. வீட்ல எல்லாரும் என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க.. அவ மேல இன்னும்தான் கோபம் அதிகமானுச்சி. ப்ரியாவை திட்டறதுக்குதான் வீட்டுக்கு போனேன்.. ஆனா அவ முகத்தை பார்த்ததும் பாவமாகிடுச்சி.
ஏன் ப்ரியா இப்படி பண்றன்னு தன்மையா கேட்டேன். நீ படிக்கலனா நானும் படிக்க மாட்டேன்.. ஸ்கூல் போகமாட்டேன்.. சாப்பிடமாட்டேன்னு தேம்பிதேம்பி அழுதா.
ப்ரியாவோட வீங்கின முகம் பார்த்து வேற வழியில்லாம நான்தான் இறங்கிபோய் இனி படிக்கிறேன்னு சொன்னேன்.
பெரிய பொண்ணானதுக்கப்புறமாவது மாறுவான்னு பார்த்தா கொஞ்சம் கூட மாறல.. என்னை மட்டும் யாரும் ஒன்னும் சொல்லிடக்கூடாது.. உடனே அழ ஆரம்பிச்சிடுவா. இப்படியே அழுது அழுது என்னை பத்தாவது வரைக்கும் பெயிலாகாம படிக்க வச்சிட்டா..
அவ சூப்பரா படிப்பா.. டாக்டர் ஆகனும்னு அவளுக்கு ஆசை.. அதனால மேக்ஸ்பையோ எடுத்தா.. என்னையும் அதையே எடுக்க சொன்னா.. என்னால அதை படிக்க முடியாதுனு சொன்னேன்.
இந்த குரூப் எடுத்தாதான் அவளால எனக்கு சொல்லிதர முடியும்னு வழக்கம்போல அழுது ஆர்பாட்டம் செய்தா.. அவளுக்காக ஒத்துக்கிட்டு ஸ்கூல் போனா நான் எடுத்த மார்க்குக்கு அந்த குரூப் தரமாட்டன்னுட்டாங்க.
அவளும் மேக்ஸ்பையோ வேணாம்னுட்டு என் மார்க்கு கொடுத்த கம்ப்யூட்டர் சயின்சையே எடுத்தா. ப்பா.. எனக்கு சொல்லி கொடுத்து சொல்லி கொடுத்தே அவ இன்னும் பிரில்லியன்ட் ஆகிட்டா.. அவ இல்லன்னா நிச்சயம் என்னால பாசாகிருக்கவே முடியாது.
அடுத்து ரெண்டு பேரையும் சென்னைல டாப்பர் காலேஜ் சேர்த்தாங்க. அவளுக்கு மெரிட்ல சீட் கிடைச்சது. எனக்கு டொனேசன் கொடுத்து சேர்த்தாங்க.
காலேஜ் படிக்கிற பசங்களா அவனுங்க.? ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமா இருந்தானுங்க.. ப்ரியாவைப்போல என்னால மேனேஜ் செய்ய முடியல..
சின்ன வயசுல அழுது ஆர்பாட்டம் செய்தவ காலேஜ் வந்ததும் ரொம்ப மெச்சூர்ட் ஆகிட்டா.. என் முகத்தை பார்த்தே எனக்கு படிக்க பிடிக்கலன்னு கண்டுபிடிச்சிட்டா. எத்தனைதான் அழுதாலும் சரி.. என்னால படிக்க முடியாதுனு தெளிவா சொல்லிட்டேன்.
படிக்க பிடிக்கலன்னா வேற என்ன செய்ய ஐடியா வச்சிருக்கிங்க மாமான்னு கேட்டா.. படிக்கிறதை தவிர வேற என்னன்னாலும் செய்வேன்னு சொன்னேன்.
அவ டாக்டர்க்கு படிக்க ஆசைப்பட்டு படிக்க முடியாம ஆகிடுச்சின்றதால என்னை ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்குறிங்களான்னு கேட்டா.. அவ ஆசைக்காக ஓ.கே சொன்னேன்.
எவ்வளோ பணம் கட்டி காலேஜ்ல சேர்த்துவிட்டோம்.? படிக்காம இப்படி கம்பௌன்டர் வேலை பார்க்கிறியேடான்னு வீட்ல எல்லாரும் திட்டினாங்க. அந்த வேலையை மாமா ரொம்ப பிடிச்சி செய்யிறாங்க..
இப்படியே இருக்கமாட்டாங்க.. கொஞ்ச நாள் போனதும் மெடிக்கல் சம்மதமா எதாவது படிப்பாங்க.. இனி திட்டாதிங்கனு வழக்கம்போல எனக்காக அவ பேசவும்தான் அப்பா அமைதியானார்.
ஒரு வருசம் வேலை செய்தேன்.. மேற்கொண்டு எதாவது படிங்கனு கெஞ்சினா.. இப்பவும் எனக்கு படிக்க பிடிக்கல.. ஆனா உயிருக்கு ஆபத்தான நிலையில சரியான நேரத்துக்கு ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வர ஆம்புலன்சை எனக்கு ரொம்ப பிடிக்குது.. அது ஓட்ட கத்துக்கிறேன்னு சொன்னேன்.
ஒரே மாசத்துல ஓட்டி கத்துக்கிட்டதும்.. டிரைவிங் லைசன்ஸ் எடுத்து ஆம்புலன்ஸ் ஓட்ட ஆரம்பிச்சேன். சம்பள பணத்தை வீட்ல யாரும் வாங்கிக்க மாட்டனுட்டாங்க.. அதுக்கு ஏன் மாமா வருத்தப்படுறிங்க..? பணம் சேர்த்து வச்சி சொந்தமா ஆம்புலன்ஸ் வாங்குங்கன்னா..
ஆதிரை.. ‘சரி.. சம்பாதிச்சி ஆம்புலன்ஸ் வாங்குனிங்க.. உங்களை வல்லவன் ஆக்கினது அவங்கதான்.. எல்லாம் ஓ.கே. இப்போ அவங்க என்ன ஆனாங்க.? ப்ரியா இருந்திருந்தான்னு உங்கத்தை சொன்னாங்களே..” என்றாள் சிறு பதட்டத்தோடு.
‘என்னை ஏமாத்திட்டு போய்ட்டா..” என்றான் வேதனையோடு.
என்ன..? ஏமாத்திட்டு போய்ட்டாளா.? ஒருவேளை இவனை காதலிச்சிருப்பாங்களோ எனப் பதறியவள்.. இப்பேச்சு ஆரம்பிக்கும்போது காதல் என்ற கோணம்தவிர மற்ற எல்லாமும் அவதான் என சொன்னது நினைவு வர சற்று ஆசுவாசமானாள்.
ஒருவேளை யாரையாவது லவ் பண்ணி வீட்டை விட்டு போய்ட்டாங்களோ என்னவோ.? அவன் சரியானவன் இல்லையென்பதால் அவங்களோடான உறவை தள்ளி வைத்திருப்பார்களோ என யோசித்தவள். ‘ஏன் இப்படி அபத்தமா சொல்றிங்க.? அறியாத வயசிலயிருந்து எத்தனை தெளிவா உங்களுக்கே பக்கபலமா இருந்திருக்காங்க.. அவங்க போய் தப்பு செய்வாங்களா என்ன.?” என்றாள் ப்ரியாவிற்காக.
‘செய்துட்டாளே.. தப்பு செய்துட்டாளே..” என்றான் ஆற்றாமையாக. கோபத்திலும் ப்ரியாவின் பிரிவை தாள முடியாத வேதனையிலும் முகம் வெகுவாய் சிவந்திருந்தது.