பெங்களூர் பேருந்து நிலையம்.. அந்த இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவர்களின் தேவையைப் பொறுத்து, பேருந்துகள் இருக்கும் இடத்தைத் தேடி நகர்ந்து கொண்டிருந்தனர். அது சீசன் டைம் என்பதால் பேருந்துகளின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட தயாராய் இருந்தது அந்த சொகுசு பேருந்து. பேருந்து புறப்பட தயாராய் இருந்த அந்த கடைசி நிமிட வினாடிகளில் வேகமாய் வந்து அவசரமாய் ஏறினாள் அவள். நடையில் இருந்த வேகம் மனதிலும் இருந்ததோ என்னவோ.. உள்ளே தடக் தடக்கென்று அடித்துக் கொண்டது மனம். கடைசி நேரத்தில் சிலீப்பர் கிடைக்காமல் செமி சிலீப்பர் தான் கிடைத்திருந்தது. கிடைத்த மட்டும் சந்தோசம் என்று நினைத்து ஏறிவிட்டாள். அவள் ஏறிய அடுத்த நிமிடம், பேருந்து கிளம்பியிருந்தது. பேருந்தின் ஆரம்ப கட்ட தள்ளாடலில், தானும் தள்ளாடிக் கொண்டு, கையில் இருந்த பேக்கையும், தோளில் தொங்கிய ஹேண்ட் பேக்கையும் பிடித்தபடி, அவளின் சீட்டிற்கு வந்தாள். சீட்டில் ஹேண்ட் பேக்கை பொத்தென்று போட்டவள், கையில் இருந்த பேக்கை தலைக்கு மேல் இருந்த ஸ்டோரேஜ் சீட் பகுதில் பத்திரப்படுத்தி விட்டு, ஆசுவாசமாய் அமர்ந்தாள்.
தன்னை சில நிமிடங்கள் ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், கலங்கிய கண்ணீரை மீண்டும் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு, அருகே திரும்பிப் பார்த்தாள்.
அவள் இருந்த மனநிலையிலும், உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்த பல யோசனைகளிலும், சுற்றுப் புறத்தை அவள் கவனிக்கவேயில்லை. அவளுக்கு எப்போதும் ஜன்னலோர இருக்கை மிகவும் பிடிக்கும். ஆனால், அவசரத்திற்கு அதுவும் கிடைக்கவில்லை. அருகில் இருந்த சீட்டில் ஒரு ஆடவன் அமர்ந்திருக்க, அதைப் பார்த்தவள் பக்கென்று அதிர்ந்தாள்.
“எப்படி கவனிக்காம உட்கார்ந்தேன்..?” என்று மனதிற்குள் நினைத்தவள்,
“சீட் மாத்தி கேட்கலாமா..?” என்று யோசித்தவள், சாதரணமாய் பார்ப்பது போல், அனைத்து இருக்கைகளையும் பார்வையிட்டாள். பார்த்த வரைக்கும் நான்கைந்து இருக்கைகளில் மட்டும் தான் ஜோடியாக அமர்ந்திருந்தனர். அவர்களை எழுப்பவும் முடியாது. முயற்சி செய்தால், தனக்கு சைடில் இருக்கும் பெண்ணின் அருகில் உட்காரலாம். ஆனால், அந்த பெண்ணின் அருகில் உட்காருவதற்கு பதில் இந்த இருக்கையே மேல் என்று தோன்றிவிட்டது அவளுக்கு. அருகில் இருப்பவனை நோட்டம் விட்டாள். அவனைப் பார்த்தால் தப்பாக எதுவும் நினைக்கத் தோணவில்லை.
“அதுவும் சரிதான்..” என்று சீட்டின் பின்னால் சாய்ந்தவளுக்கு, தேவையில்லாமல் மீண்டும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
‘இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் எனக்கு கண்ணீர் முன்னாடி முன்னாடி வருது. முதல்ல இந்த பழக்கத்தை மாத்தணும்..’ என்று தனக்குத் தானே உருப்போட்டுக் கொண்டாள்.
“இந்த ஜன்னலை திறந்து விட்டா எவ்வளவு நல்லா இருக்கும்..?” என்று நினைத்தபடி அருகில் பார்க்க, அருகில் இருந்தவனோ கண்களைத் திறக்கவேயில்லை. கண்களை மூடி சாய்ந்திருந்தவனின் முகம் கொஞ்சம் வேதனையில் இருந்ததோ..?
‘இந்த நாட்ல பொண்ணுங்களுக்கு தான் பிரச்சனைன்னு பார்த்தா, இப்போ ஆண்களுக்கும் பிரச்சனை இருக்கு போல..’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், மீண்டும் திரும்பி அருகில் இருந்தவனை எடை போட்டாள். எதுவும் கணிக்க முடியவில்லை. மீண்டும் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
அவளுடைய செல்போன் திடுமென ஒலியெழுப்ப அந்த சத்தத்தில் பட்டென்று கண்ணைத் திறந்தான் அவன். கண்களைத் திறந்தவன் அருகில் இருந்தவளைப் வெறித்துப் பார்க்க,
“சாரி..” என்றவள், வேகமாக போனை சுவிட்ச் ஆப் செய்தாள். அவனுடைய தியானத்தை கலைத்தது போல் இருந்தது அவளின் வருகை.
“நீங்க எதுக்காக இந்த சீட்ல உட்கார்ந்திருக்கிங்க..?” என்றான் பட்டென்று.
“டிக்கெட்ல எந்த சீட் நம்பர் போட்டிருக்கோ அங்க தான சார் உட்கார முடியும்..” என்றாள் அவளும்.
“இல்லை, ஏதோ ஒரு பையன் பேரு சொன்னாங்க. அதான் கேட்டேன்..” என்றான்.
“பொண்ணு நானே தைரியமா உட்கார்ந்திருக்கேன். நீங்க என்ன சார் இத்தனை கேள்வி கேட்குறிங்க..?” என்றாள்.
“நீங்க அன்கம்பர்டபிலா பீல் பண்ணக் கூடாதுன்னு தான் கேட்டேன். தட்ஸ் இட்..” என்றவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.
“என்ன இவ்வளவு வளர்த்தியா இருக்கான்..?” என்று நினைத்தவள் அவனை மீண்டும் ஆராய்ந்தாள்.
ஒருதடவை பார்த்தால் மறுபடியும் பார்க்கத் தூண்டும் முகம், சிரிக்கவே தெரியாது என்பதைப் போல் இருந்தது. கட்டுக்கோப்பான உடலமைப்புடன், வசீகரிக்கும் முகத்தையும் கொண்டிருந்தான். இறுகிப் போயிருந்த முகம், அவன் ஏதோ இறுக்கத்தில் இருப்பதை சொல்லாமல் சொல்லியது.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பட்டென்று கண்களைத் திறந்தான் அவன். அவன் அப்படி திடுமென கண்களைத் திறப்பான் என்று நினைக்காதவள், சட்டென்று திரும்பிக் கொண்டாள்.
“என்ன வேணும் உங்களுக்கு..? எதுக்காக என் முகத்தை பார்த்துட்டு இருக்கீங்க..?” என்றான்.
“அது வந்து..! சார் அந்த ஜன்னலை கொஞ்சம் திறந்து வைச்சா நல்லாயிருக்கும்… அதை எப்படி சொல்றதுன்னு தான்..” என்று எதையோ உளறிக் கொட்டினாள்.
“இது ஏசி பஸ்….!” என்றான்.
“அது எனக்கும் தெரியும் சார். ஆனா, ஏசி வேலை செய்ற மாதிரி தெரியலையே..?” என்றாள்.
அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு அதில் என்ன தெரிந்ததோ…
“நீங்க இந்த பக்கம் உட்காரனுமா..?” என்றான்.
அவன் அப்படி கேட்கவும் அவளுக்கு அப்படி ஒரு வியப்பு. எப்படி சரியாக புரிந்து கொண்டான் என்ற வியப்பு தான்.
“நீங்க எழுந்துக்கோங்க..” என்றவன், அவள் எழுந்துகொள்ளவும், தானும் எழுந்து வந்தவன்,
“இப்போ போய் உட்காருங்க..!” என்றான்.
அந்த ஒரு செய்கையே அவன் மீதான நல்லெண்ணத்தை விதைத்தது. உட்கார்ந்திருந்த வாக்கில் இடம் மாறி அவளை அவஸ்தை பட வைக்காமல், அவன் இடம் மாறிய விதம் நிஜமாகவே அவளைக் கவர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ்..! ” என்றாள் ஆத்மார்த்தமாக.
“இட்ஸ் ஓகே..!” என்றான்.
“நான் வராஹினி..” என்றாள்.
“நான் அர்ஜீன்..” என்றவன் மீண்டும் சீட்டில் சாய்ந்து கைகளால் கண்களை மூடிக் கொண்டான்.
கண்களை மூடியவனின் மனதை ஏனோ அவனால் மூடி வைக்க முடியவில்லை. எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கிறானோ.. அதையேதான் அந்த நிமிடம் வரை நினைத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். உள்ளத்து உணர்வுகளை கட்டுப்படுத்த முடிந்தவனுக்கு, ஏனோ தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் கட்டுப் படுத்த முடியவில்லை.
பேருந்தின் ஓட்டத்தில் அவன் நினைவுகளும் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. இரவு நேரங்களில் ஒலிக்கும் இளையராஜாவின் இன்னிசை கீதங்கள்,ஒருவேளை அந்த பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்தால், அவன் உள்ளத்து காயங்களுக்கு மருந்தாக இருந்திருக்குமோ என்னவோ..? நவீன பேருந்துகளில் இப்பொழுதெல்லாம் இளையராஜாவை கேட்க முடிவதில்லை.
பேருந்தின் விளக்குகள் சற்று நேரத்தில் தங்களின் ஒளியை பின்வாங்கிக் கொள்ள, மிதமான வெளிச்சம் மட்டுமே நிலவியது. யோசனையில் இருந்தவனை, முகத்தில் மோதிய அவளின் துப்பட்டா தொந்தரவு செய்து கொண்டிருந்தது. கண்களைத் திறந்து துப்பட்டாவை விலக்கியவன், அதை அவளிடம் சொல்ல முற்பட்டு அவள் புறம் திரும்பினான். சீட்டின் ஒருபுறமாக தலையை சாய்த்திருந்தவள், பெயருக்குக் கூட, கண்களை மூடவில்லை. அந்த மங்கிய ஒளியிலும், அவள் அழுது கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது அர்ஜூனுக்கு.
“என்னாச்சு இந்த பொண்ணுக்கு..? இந்த நேரத்துல அழுதுகிட்டு வந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க..?” என்று தனக்குள் நினைத்தவன், ஏனோ அதை வெளியே கேட்கவில்லை. அவனுக்குக் கேட்கவும் தோன்றவில்லை. பொதுவாக அவனுக்கு அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுவது பிடிக்காது. இருந்தாலும் அவளின் முகத்தில் தான் நிலைத்திருந்தது அவனின் பார்வை. அவனுக்கு இருந்த பல சிந்தனைகளில் அவளை அப்போது தான் சரியாக பார்த்தான். மங்கிய ஒளியிலும் தேவதையாக தெரிந்தாள் அவள். மதி முகம் என்பது அவளுக்கு பொருத்தமாக பொருந்தியது.
“என்ன பிரச்சனையா இருக்கும்..?” என்று யோசித்தான்.
“என்ன பிரச்சனையா இருக்கப் போகுது..? அழகா இருக்காங்க. ஏதாவது காதல் விஷயமா தான் இருக்கும்..” என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.
அவன் அப்படி யோசித்த பின்பு, அவளைப் பற்றி நினைக்கவில்லை. அவளை கவனிக்க கூடாது என்று மனதிற்குள் தோன்றினாலும், அவளின் ஒவ்வொரு செய்கையும் அவன் கண்ணில் பட்டுக் கொண்டு தான் இருந்தது.
கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், தனது ஹேண்ட் பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, வாயில் சரித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அப்போது தான் சாப்பிடாததே அவள் நியாபகத்திற்கு வந்தது. பசியை அவள் முற்றிலும் மறந்திருந்தாள்.
கருத்தில் பட்டதை கவனித்தில் எடுக்காமல் அவளை கவனிப்பதையே நிறுத்தியிருந்தான் அர்ஜூன்.
சிறிது தூரம் சென்ற பின், பேருந்தின் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நின்று விட்டது.
“என்னாச்சு..?” என்றனர் அனைவரும்.
“போலீஸ் தான் நிறுத்தியிருக்காங்க. முன்னாடி இருக்குற பஸ்ல செக் பண்ணிட்டு இருக்காங்க. ஏதோ பொண்ணை காணோமாம்..” என்று அந்த பேருந்தின் ஆட்களை ஏற்றும் பையன் சொல்லிவிட்டு சென்றான்.
அவன் அப்படி சொல்லிவிட்டு சென்ற அடுத்த நிமிடம் அதீத பதட்டமடைந்தாள் வராஹினி. அவளுடைய செய்கைகளை கண்டு கொண்டவனுக்கு, அவர்கள் தேடி வந்திருப்பது அவளைத் தான் என்று தெரிந்து போனது.
“அவங்க தேடுற பொண்ணு நீங்கதானா..?” என்றான் அமைதியான குரலில், அதே சமயம் அழுத்தமாகவும்.
“நான் சொல்லத் தேவையில்லைங்க. அவங்க இப்போ இந்த பஸ்ல வந்து தேடுனா, நீங்களாவே மாட்டிப்பிங்க..” என்றான் அர்ஜூன்.
“அது எனக்கும் தெரியும் சார்..! கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்..!ப்ளீஸ். நான் முகத்தை மறைச்சு தூங்குற மாதிரி தூங்குறேன் சார். அவங்க கேட்டா நீங்க ஏதாவது சொல்லி சமாளிங்க சார்..ப்ளீஸ்..” என்று அவள் கேட்கும் போதே, கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது.
“நான் என்ன சொல்லி சமாளிக்கிறது..?” என்றான் அர்ஜூன் புரியாமல். யாரென்று தெரியாத ஒருத்திக்காக போலீசிடம் பொய் சொல்ல அவனுக்கு மனமில்லை.
“வாட் நான்சென்ஸ்…”என்றான் பட்டென்று. அவன் குரலில் அப்படி ஒரு கோபம். அவன் முறைத்த முறைப்பில் அவளுக்கு மனம் விட்டுப் போனது. அவர்களுக்கு சைடில் அமர்ந்திருந்த அந்த குண்டு பெண்ணிற்கு இவர்கள் சண்டை கட்டிக் கொள்வதைப் போல் இருந்தது.
“அந்த பொண்ணு சொல்றதை கேளுப்பா. பஸ்ல வந்துமா சண்டை போடுவிங்க. நல்ல புருஷன் பொண்டாட்டி போங்க..” என்று தலையில் அடித்தார் அந்த பெண்.
“புருஷன் பொண்டாட்டியா..?” என்ற அர்ஜூன் உள்ளுக்குள் அதிர்ந்து போனான்.
“நீங்க பார்த்திங்களா..?” என்று அவன் கோபமாக அந்த பெண்ணிடம் கேட்கப் போக, அவனைத் தடுத்தாள் வராஹினி.
“சார்..பிளீஸ்..! என் வாழ்க்கையே உங்க கைல தான் இருக்கு..ஒரு சின்ன உதவி சார்..” என்று அவள் மன்றாடிக் கொண்டிருக்கும் போதே, போலீஸ் இவர்கள் இருந்த பேருந்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அதை கவனித்தவள், துப்பட்டாவை தலையோடு சுற்றிக் கொண்டவள், இடையில் இருந்த சீட்டின் கைப்பிடியை மேலே தூக்கி விட்டு, பட்டென்று அவனின் இடது தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் திடுமென அப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காத அர்ஜூனுக்கு மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி. முதன் முறையாக தன்மேல் விழுந்த ஒரு பெண்ணின் ஸ்பரிசம், ஆளாளாப்பட்ட அர்ஜூனையே கதி கலங்க வைத்தது. அவனின் கைகளை இறுக்கிப் பிடித்திருந்தவளின் கரங்கள் நடுங்கிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெளிவாக புரிந்தது. ஒரு பக்க முகத்தை துப்பட்டாவும், மறுபக்க முகத்தை அர்ஜூனின் கை வளைவும் மறைத்திருந்தது. அவனுக்குள் ஒரு அவஸ்தையான உணர்வு
“இப்ப என்ன பண்றது..? இந்த பொண்ணு ஏன் இப்படி பட்டுன்னு இப்படி பண்ணிடுச்சு..?” என்று அவன் கடுப்பில் இருக்க, போலீஸ் வந்து விட்டனர்.
“அர்ஜூன்..! அவளுக்கு என்ன பிரச்சனைன்னு உனக்குத் தெரியாது. அந்த பொண்ணோட முகமே சரியில்லை. பெரிய ஆபத்துல இருந்து கூட தப்பிச்சு வந்திருக்கலாம். ஒரு உதவி தானே… செஞ்சா நீ குறைஞ்சு போய்ட மாட்ட..” என்று அவனின் மனம் அவனை சமாதானப் படுத்தியது.
அவனும் முடிந்தவரை இயல்பாக இருக்க முயற்சி செய்தான். செய்ய வேண்டும் என்று முடிவு செய்தபின், அவனை விட யாரால் சிறப்பாக செய்ய முடியும்.
அவனுடைய கைகள் அவளைத் தோளோடு தாங்க, அசதியில் தானும் கண்களை மூடிக் கொண்டான். கண்கள் மட்டும் தான் மூடியிருந்தது. அவர்களைப் பார்த்தால், இயல்பான கணவன், மனைவி இருப்பதைப் போலவே தான் இருந்தது.
ஒவ்வொரு இருக்கையாக தேடிக் கொண்டு வந்த போலீஸ், சரியாக அர்ஜூனின் அருகில் வந்து நிற்க, அவளின் கைகளை தந்தியடிக்க ஆரம்பித்தது.
“சார்..! இங்க யாருமே இல்லை சார். தனியா ஒரு பொண்ணு கூட இல்லை..” என்றார் அந்த கான்ஸ்டபில்.
“அவங்களுக்கு போன் பண்ணி கேளுங்க. அந்த பொண்ணு தனியா வந்ததா..? இல்லை யார் கூடவும் சேர்ந்து வந்ததான்னு..?” என்றார் அந்த சப்இன்ஸ்பெக்டர்.
“அந்த பொண்ணு தனியா தான் வந்திருக்கு சார். யாரும் கூட வரலைன்னு உறுதியா சொல்றாங்க..” என்றார் அவர்.
“அப்படியே எந்த பஸ்ல அந்த பொண்ணு கிளம்புச்சுன்னும் பார்த்திருக்க வேண்டியது தானே..! எதை முக்கியமா செய்யணுமோ அதை செய்ய மாட்டாங்க. அப்பறம் நம்ம மேல குறை சொல்றது..” என்று புலம்பிய அந்த சப்இன்ஸ்பெக்டருக்கு எரிச்சலாக வந்தது.
அர்ஜுனையும், அவளையும் பார்த்த அவருக்கு உள்ளுக்குள் ஏதோ தோன்ற, மீண்டும் அவர்களையே பார்த்தார். நடப்பதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை போன்ற முக பாவனையுடன் அவரைப் பார்த்த அர்ஜூன்,
“என்ன சார் பிரச்சனை..?” என்றான், வெகு இயல்பாய்.
“உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு சார்.. நீங்க..” என்று அந்த சப்இன்ஸ்பெக்டர் இழுக்க,
“நோ..நோ..! நான் அதுக்காக கேட்கலை சார். நாங்க வேற ஒரு பொண்ணைத் தேடி வந்தோம் சார். சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்..” என்றவர்,
“அடுத்து வர்ற பஸ்ல செக் பண்ணுங்க..” என்று ஆர்டர் போட்டபடி, கீழே இறங்கி சென்றார். அந்த அளவிற்கு அர்ஜூன் வெகு இயல்பாய் தன்னை காட்டிக் கொண்டான்.
அவர்கள் சென்று, பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகும் கூட, அவள் அதே நிலையில் இருக்க, அர்ஜூனுக்கு தான் அவஸ்தையாக இருந்தது.
“அவங்க போய் அரைமணி நேரம் ஆச்சு..” என்றான் கடுமையான குரலில். அவன் அப்படி சொல்லும் போது அவன் உடல் இறுக, பட்டென்று எழுந்தாள் வராஹினி.
“தேங்க்ஸ்..!” என்றாள். அவளிடமிருந்து ‘சார்’ என்ற அழைப்பு காணாமல் போயிருந்தது.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..? இதுக்கு முன்னாடி என்னைத் தெரியுமா உனக்கு..? அட்லீஸ்ட் பார்க்கவாவது செஞ்சிருக்கியா..? என்ன தைரியத்தில் இப்படி என் தோளில் சாஞ்சு தூங்குற மாதிரி நடிச்ச..?” என்றான் எரிச்சலுடன். அவள் ஏற்படுத்திய தாக்கத்தை மறைக்க, வார்த்தைகளை விட்டுக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
“சாரி..! நான் வேணும்ன்னு அப்படி பண்ணலை. எனக்கு வேற வழி தெரியலை. என்னை தப்பா மட்டும் நினைக்காதிங்க பிளீஸ்..” என்றவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ, அப்படியே வார்த்தைகளை நிறுத்தி விட்டான்.
“வேற யாராவது இருந்திருந்தா.. நானே கிளம்பி போலீஸ் கூட போயிருப்பேன். பக்கத்துல இருக்குறவங்க தோளில் எல்லாம் சாய்றதுக்கு நான் ஒன்னும் வேற மாதிரி பொண்ணு கிடையாது..”என்றாள் பட்டென்று.
ஏனோ அவள் அப்படி சொன்னது அவனுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. பல ரணங்களை மனதில் வைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அந்த ரணங்களின் மருந்தாகவே தெரிந்தது அவளின் வார்த்தைகள்.
“வார்த்தை ஜாலத்துக்கு மயங்காத அர்ஜூன்..” என்று அவனின் ஆழ்மனம் அவனை எச்சரிக்க, மீண்டும் எப்போதும் போல் அமர்ந்து கொண்டான்.
“என்னோட நிலைமை இப்படி ஆகிப் போச்சே..?” என்று நினைத்த வராஹினிக்கும் அடுத்து அவனை நேருக்கு நேராக பார்க்கும் சக்தியில்லை.
அதற்கடுத்து வந்த நிமிடங்கள் அனைத்தும் ஏதோ அவஸ்தையுடனே கழிந்தது அவளுக்கு. மன உளைச்சலில் இருந்தவள் அவளையும் அறியாமல் உறங்கிப் போனாள்.
என்னதான் வெளியே கடினமாக காட்டிக் கொண்டாலும், அவள் முகம் புதைத்த இடம் அர்ஜூனுக்குள் வெம்மையை ஏற்றிக் கொண்டிருந்தது.
“என்ன இது..? எப்படி சுத்தினாலும் கடைசில இவ கிட்ட தான் வந்து நிற்குது நினைப்பு..” என்று அலுத்துக் கொண்டவன், முடிகளை கைகளால் கோதிக் கொண்டு தூங்க முயற்சி செய்தான். தூக்கம் தூரே சென்று நெடு நேரமாகியிருந்தது.