“சரி அப்படின்னா நாளைக்கு மார்னிங் நைன் ஓ கிளாக் வரியா?”
“நாளைக்கு நான் அப்பா கூட கடைக்கு போகணுமே?
“ஓஹோ அப்ப நான் வேலை வெட்டி இல்லாதவன்னு சொல்ல வரியா? சரிங்க மேடம், நீங்க கடைக்கு போங்க. சாயங்காலம் நமக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணட்டும்”
“ஐயோ கோப படாதீங்க. நான் நாளைக்கு காலைல சரியான டைம்க்கு வந்திறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
“வாடி வா, நாளைக்கு நீ என்ன பேச போறேன்னு நானும் பாக்கத் தானே போறேன்? இனி உனக்கு நிம்மதியே கிடையாது டி”, என்று எண்ணிக் கொண்டான் ஸ்ரீராம்.
அடுத்த நாள் இருவருக்கும் படபடப்பாகவே விடிந்தது. தனக்கு முன்னே கிளம்பி இருந்த மகளை ஆராய்ச்சியாக பார்த்த சரவணன் “இன்னைக்கு நீ கடைக்கு வர வேண்டாம் ஜானகி. நானும் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துருவேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
“போச்சா?”, என்று ஒரு நொடி சோர்ந்து போனவள் “நல்லதா போச்சு, இப்ப அப்பா கூட போனா கண்டிப்பா அவனைப் பாக்க முடியாது. இப்ப நம்ம வண்டியை எடுத்துட்டு போகலாம்”, என்று எண்ணியவள் அரசியிடம் ஒரு தோழி பேரைச் சொல்லி அவளை பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள்.
ஒன்பது மணிக்கு வரச் சொன்னால் எட்டு மணி நாப்பது நிமிடம் இருக்கும் போதே அங்கு வந்த ஜானகியைக் கண்டு தனக்குள் புன்னகைத்தான் ஸ்ரீராம். அவளை ஒரு உயர் தர ரெஸ்டாரண்ட்க்கு தான் வரச் சொல்லியிருந்தான்.
“நம்ம கல்யாணத்தை நிறுத்த அவ்வளவு அவசரமா ஜானு? நீ தலை கீழ நின்னாலும் இந்த கல்யாணத்தை நடத்தாம விட மாட்டேன் டி”, என்று எண்ணியவன் சுற்றி முற்றி பார்த்த படி ரெஸ்டாரண்ட் உள்ளே சென்றவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
கண்ணை உறுத்தாத ஒரு டிஷர்ட் மற்றும் தரையை தொடும் அளவில் இருக்கும் பாவாடை அணிந்திருந்தாள். ஒரு துப்பட்டாவை கழுத்தில் போட்டு அதை முஸ்லிம் பெண் போல அதை வைத்து தலையிலும் முக்காடிட்டு இருந்தாள். அவள் கையில் பர்ஸ் மற்றும் போன் மட்டும் இருந்தது. அந்த உடையில் அவளைப் பார்க்க சிறு பெண் போல இருந்தாள். “இருந்தாலும் இவ இவ்வளவு அழகா இருந்து தொலைக்க கூடாது. எந்த டிரெஸ்ல பாத்தாலும் அழகா இருக்காளே”, என்று அவன் மனம் ஜொள்ளு ஊத்தியது.
அவள் உள்ளே சென்று அமர்ந்ததை வெளியே நின்றே பார்த்தவன் “நாமளும் உள்ளே போகலாமா?”, என்று யோசித்தான்.
“வேண்டாம் வேண்டாம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும். இது தான் ஸ்ரீராம் கோர்ட்ல நான் அவளுக்கு கொடுக்குற முதல் தண்டனை”, என்று எண்ணியவன் அவளை தனக்காக காக்க வைத்துப் பார்த்து மகிழ்ந்தான்.
ஆனால் எட்டரை மணிக்கே வந்து அவளுக்காக அவன் காத்திருப்பதை யார் அவனுக்குச் சொல்ல?
உள்ளே அமர்ந்திருந்த ஜானகிக்கோ அவன் வருவானா மாட்டானா என்ற கவலையாக இருந்தது. கூடவே அவனிடம் என்ன பேச என்றும் தயக்கமாக இருந்தது.
“முதல்ல பிடிக்கலைன்னு நல்ல முறையா சொல்லிப் பாப்போம். அவனுக்கும் பிடிக்கலை தானே? அதனால சரின்னு சொல்லிறுவான். ஒரு வேளை அவன் சரின்னு சொல்லலைன்னா அவன் குணத்தை எடுத்துச் சொல்லி பிடிக்கலைன்னு சொல்லிறனும்”, என்று எண்ணினாள்.
கூடவே தன்னைக் கண்டதும் அன்று நடந்ததை அவன் நினைத்துப் பார்ப்பனோ என்று அவளுக்கு கொஞ்சம் வெட்கமும் வந்தது. “ஏன் அப்படி பண்ணினான்? வேணும்னு தான் பண்ணினானா? ஒரு வேளை கூட்டத்துல தெரியாம கை பட்டிருக்குமோ?”, என்று ஒரு நொடி அவனுக்காக எண்ணியவளுக்கு அந்த தொடுகை இப்போது நடந்தது போல உடல் சிலிர்த்தது. கட்டாயம் அது தெரிந்து நடந்தது தான் என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்தது. ஏனென்றால் அந்த தொடுகையின் அழுத்தம் அப்படி.
அவளை அறியாமலே ‘பொறுக்கி’ என்று அவள் உதடுகள் முணுமுணுத்தது. ஆனால் புன்னகையுடன்.
ஒன்பது பத்து வரைக்கும் வெளியே நின்றவன் அதற்கு மேல் அவனுக்கே எரிச்சல் வர ஆரம்பிக்க உள்ளே சென்றான். “ஹாய்”, என்ற படி அவள் எதிரே போய் நின்றதும் தன்னுடைய போனில் இருந்து தலையை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.
ஜீன்ஸ் டிஷர்ட் சகிதம் அட்டகாசமாக கிளம்பி வந்தவனை பார்த்ததும் அவள் திகைத்துப் போனாள். அவனை இவ்வளவு அருகில் பார்த்ததில் கொஞ்சம் மூச்சுத் திணறி தான் போனாள்.
கல்லூரியில் படிக்கும் போது அவள் ஆண் நண்பர்களுடன் பழகி இருக்கிறாள் தான். ஆனால் இப்படி ஒரு நாளும் எவனையும் கண்டு மூச்சுத் திணறியதில்லை.
பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு “ஹாய்”, என்றதும் அவள் எதிரே அமர்ந்தான் ஸ்ரீராம்.
இருவருக்கும் இடையே அழகான மௌனமே நிலவியது. அப்போது அங்கே பேரர் வர அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்தான்.
வெஜ் ரோல், இரண்டு பப்ஸ், கிரேப் ஜூஸ், வெண்ணிலா ஐஸ்கிரீம் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தான் பேரர்.
அவன் முன் எப்படி சாப்பிடுவது என்று அவள் தயக்கமாக அவனைப் பார்க்க “முதல்ல சாப்பிடலாம். அப்புறம் பேசலாம் ஜானு”, என்றான்.
இருவரும் மௌனமாக அதை உண்டார்கள். முதலில் சாப்பிட்டு முடித்த அவன் அவளைப் பார்த்தான். பேன் காற்றில் அவள் தலை முடிகள் சிலுப்பிக் கொண்டிருக்க அதைக் கண்டு அவன் முகம் மென்மையானது. இவள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் வந்தது.
அவளோ ரசித்து ருசித்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய இதழ் வழியாக இறங்கும் ஐஸ்கிரீமின் குளுமை அவன் தொண்டைக்குள் இறங்குவது போல இருந்தது.
ஐஸ்கிரீம் கப்பை கையில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை ரசித்துப் பார்க்கும் போது அவளுடைய துப்பட்டா விலகியது. அதில் அவன் அன்று கை வைத்த நிகழ்வு நினைவில் வந்து அவனை விதிர்க்க செய்தது. ஏதோ சட்டென்று அந்த இடமே அனலாகிப் போன உணர்வு. அவன் உணர்ந்த அதன் பரிமாணம் அவனை உணர்வுகளின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. இது வரை அவன் இப்படி எந்த பெண்ணிடமும் தடுமாறியது இல்லை. அதை அவன் உணரவும் இல்லை.
அடுத்த நொடி தன்னுடைய சேரில் இருந்து எழுந்தவன் வாஷ் பேஷன் நோக்கி நடந்தான். போகும் அவனை நிமிர்ந்து பார்த்த ஜானகி பின் ஐஸ்கிரீமே முக்கியம் என அதில் ஒன்றி விட்டாள். கையை கழுவிய படி தன்னை சமன் படுத்திக் கொள்ள போராடினான் ஸ்ரீராம். இது அவன் முதல் முறை அனுபவித்த உணர்வு.
பின் மீண்டும் வந்து அவன் சேரில் அமர்ந்த போது அவள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்திருந்தாள். அப்போது அவளது மேலுதடில் சிறிது ஐஸ்கிரீம் ஒட்டியிருக்க அதைப் பார்த்தவனுக்கு துடைத்து விட வேண்டும் என்ற வேகம் எழ அவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
“கடவுளே பொறுக்கின்னு சொன்னதுனால இவ கிட்ட கோப பட்ட நான் உண்மைலே பொறுக்கியா மாறிருவேன் போலயே?”, என்று அவன் எண்ணிக் கொண்டு எப்படி அவளை உதடை துடைக்கச் சொல்லலாம் என்று எண்ண அவளோ எழுந்து சென்று கை வாயைக் கழுவி விட்டு வந்து அமர்ந்தாள்.
அதற்குள் அவனும் தன்னை சமன் படுத்திக் கொண்டான். அதன் பின் இருவருக்கும் யார் முதலில் பேச்சை ஆரம்பிக்க என்று குழப்பமாக இருந்தது.
பின் அவனே “ஜானு”, என்று அழைத்தான்.
“ம்ம்”, என்ற படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“பேசணும்னு வந்துட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
“நீங்க பேசுவீங்கன்னு நினைச்சேன்”
“நான் இப்ப என்ன பண்ணனும்?”
“நமக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நாம அதை நிறுத்தணும். இன்னைக்கு சாயங்காலம் எங்க வீட்டுக்கு வரும் போது எல்லார்க் கிட்டயும் நீங்க என்னைப் பிடிக்கலைன்னு நீங்க சொல்லணும். நானும் அப்ப உங்களைப் பிடிக்கலைன்னு சொல்றேன். நம்ம ரெண்டு பேரும் சேந்து சொன்னா வேற பிரச்சனை அங்க வராது”, என்று கண்கள் மின்னச் சொன்னாள்.
அவன் எதையோ யோசித்த படி இருக்கவும் “இது தான் பெஸ்ட் பிளான். நீங்க என்ன சொல்றீங்க? இல்லைன்னா உங்களுக்கு ஏதாவது தோணுதா?”, என்று கேட்டாள் ஜானகி.
“நீ சொல்றது நல்ல ஐடியா தான். நாம ரெண்டு பேரும் பிடிக்கலைன்னா சொன்னா அண்ணன் அண்ணி வாழ்க்கையிலயும் நம்ம அம்மா அப்பாக்கிடையேயும் எந்த பிரச்சனையும் வராது”, என்று அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் கண்கள் விரிந்தது. “ஆமா ஆமா. அப்படியே சொல்லிருங்க. ரொம்ப தேங்க்ஸ். என்ன சொல்லுவீங்கன்னு பயந்துட்டே இருந்தேன். சாயங்காலம் வீட்ல வச்சுப் பாக்கலாம். நான் இப்ப கிளம்புறேன், பை”, என்று உற்சாகமாக சொல்லி விட்டு எழுந்தாள் ஜானகி.
“என்ன மேடம் எழுந்துட்டீங்க? நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே? அதுக்குள்ள எழுந்து ஓடினா எப்படி?”, என்று அவன் நக்கலாக கேட்டதும் திரும்பி பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த நக்கலிலும் கோபத்திலும் “ராம்”, என்று அதிர்வாக அழைத்தாள்.
“அடச்சீ உக்காரு டி. உன் காரியம் முடிஞ்சதும் ஓடுற? நீ சொல்றதுக்கு எல்லாம் மண்டையை ஆட்ட என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா?”, என்றான் ஸ்ரீராம்.
“ஏய் யாரைப் பாத்து டீன்னு சொன்ன? கொன்னுறுவேன் கொன்னு”, என்று கத்திய படியே அவன் எதிரே அமர்ந்தாள் ஜானகி.
“வருங்கால பொண்டாட்டியை டீன்னு சொல்ல எனக்கு உரிமை இல்லையா? எனக்கு மட்டும் தான் டீ உரிமை இருக்கு. நான் இப்பவே என் மாமனார் கிட்ட கேக்க போறேன்”
அவன் சொன்ன பொண்டாட்டி என்ற சொல்லில் அதிர்ச்சி அடைந்தவள் “என்னது மாமனாரா?”, என்று திகைத்த படி கேட்டாள்.
“ஆமா உன் அப்பா கிட்ட தான். அவர் தானே எனக்கு மாமனார்”, என்று சொல்லி அவளுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தான் ஜானகியின் ராமன்.