அவன் உள்ளே வந்ததும், அமைதியாகவே இருந்தாள் அஞ்சலி. அவளை ரசித்துக்கொண்டே நின்றவன்,
“நம்ம லவ்க்கு எவ்ளோ இடைஞ்சல்ஸ் இல்ல.?” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும், புருவத்தைச் சுருக்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்ட நாள்ல இருந்து, இப்போ வரைக்கும் எத்தனை இடைஞ்சல்கள் இல்ல.? இதெல்லாம் தாண்டி ஒரு சில நல்லவங்களால தான் நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திருக்கோம்.” என்றான்.
அவளும் உண்மைதான் என்பதைப் போல் தலையாட்டினாள்.
“என்னை உடனே பார்க்கணும்னு சொன்ன, இப்போ எதுவுமே பேசாம நிக்கற அஞ்சலி. ஏதாவது பேசு. இப்போ உனக்கு யாரும் பர்மிஷன் குடுக்கத் தேவையில்ல. நீ ஒரு ஃப்ரீடம் கேர்ள்.” என்றான் அர்ஜூன்.
அவள் எதுவும் பேசாமல், கண்ணீரை சிந்தினாள். அதைப் பார்த்ததும் அர்ஜூன் பதறிவிட்டான்.
“ஏய்.. என்ன நீ.? எதுக்கெடுத்தாலும் அழற.” என்று அருகில் வந்தவனை அப்படியே பிடித்துக்கொண்டாள் அஞ்சலி.
அவன் மார்பினில் தன் முகம் புதைத்து அழுதாள். அவளின் அந்த செயல் அர்ஜூனுக்கு ஒரு வித இன்பத்தையே தந்தது. அவளைத் தன் இரு கைகளால் அணைத்தபடி அவள் தலையை வருடினான்.
“அழாத கண்மணி. நான் உனக்காகத்தான் காத்திருந்தேன். ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு. நீயும், நானும் சேர்வோம்னு. கடவுள் நம்மள சேர்ந்து வைச்சுட்டார். இனிமேல் நீ எதுக்கும் அழக் கூடாது. நான் உன்னை பத்திரமா பார்த்துக்குவேன். சரியா கண்மணி.” என்றான்.
“என்ன திடீர்னு கண்மணி.? நீ எப்பவும் என்னை இப்படி சொல்ல மாட்டியே.?” என்றாள்.
“உனக்குத் தெரியாது அஞ்சலி. உன்னை எப்போ பிருந்தாவன் காடர்ன்ல முதன் முதல்ல பார்த்தேனோ, அப்போ இருந்தே நீ என் மனசுக்குள்ள கண்மணியா தான் இருந்த. உன் பேர் அப்போ எனக்குத் தெரியாதே! அதனால. ஆனா, இப்பவும் அப்படித்தான்.” என்றான்.
அதைப் பார்த்து சிரித்தவள் நெஞ்சில் அத்தைனை சந்தோஷம், நிம்மதி என்று அவளைப் பார்க்கவே இன்னும் அழகாய்த் தெரிந்தாள் அர்ஜூனுக்கு.
அவன் அவளின் காய்ந்த உதட்டை தன் விரல்களால் தேய்த்தவாறு பார்த்துக்கொண்டிருக்க, அஞ்சலிக்கு உள்ளே பதட்டமானது. அடுத்து அவன் என்ன செய்து விடுவானோ.? என்ற பயம் தொற்றிக் கொண்டது. அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அப்போது, திடீரென்று அவள் அறையின் கதவு தட்டும் ஓசை மீண்டும் கேட்க, இருவரும் அதைக் கண்டு தங்களின் நிலை துறந்தனர்.
கதவைத் திறந்தாள் அஞ்சலி. மதுதான் நின்றிருந்தாள்.
“ம்ம்.. என்ன, ரெண்டு பேரும் தனியா ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கீங்களா.? கரடி மாதிரி வந்து நுழைஞ்சிட்டேனோ! எல்லாம் மேரேஜ்க்கு அப்பறம் தான். வாங்க கீழ உங்கள கூப்பிடறாங்க.” என்று அஞ்சலியின் கையைப் பிடித்துக் கொண்டு செல்ல, அவளோ அர்ஜூனை ஒரு ஏக்கப் பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள்.
பின்னாலேயே அர்ஜூனும் சென்றான். அங்கே சென்றதும் தான் ரகுராமும், அர்ஜூனின் அம்மா, ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் இருந்ததைப் பார்த்தாள் அஞ்சலி.
அவர்கள் அனைவரையும் பார்ப்பதற்க்கே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அஞ்சலி வந்ததுமே ரகுராம் எழுந்தார்.
அவளிடம் வந்து, “ஸாரி டா மா. உன்னைப் புரிஞ்சுக்காம இத்தனை நாள் நான் நிறைய தப்பு பண்ணிருக்கேன். ஆனா, உன் விஷயத்துல எவ்ளோ பெரிய தப்பு பண்ண துணிஞ்சேன்னு என்னை நினைச்சா எனக்கே கோபமா வருது. அப்பாவ மன்னிச்சிடு டா.” என்றார் கெஞ்சலாய்.
இது நிஜமாலுமே தனது அப்பா தானா.? என்று அவளுக்கு ஒரு சந்தேகமே வந்து விட்டது.
“இல்ல பா. பரவால்ல. நான் எதுவும் நினைக்கல. நீங்க எதுவும் வேணும்னே பண்ணல. நீங்க இப்படி வந்து என்கிட்ட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க எப்போ வந்தீங்க.? அம்மா என்கிட்ட நீங்க வந்த்தா சொல்லலையே!” என்றாள் விழித்தபடி.
“அவர் மும்பைக்கு போகவே இல்ல அஞ்சலி. அவர் உன்னோட கல்யாணம் முடிஞ்சு, உங்கள ஹனிமூன் அனுப்பி வைச்சுட்டுத்தான் கிளம்புவேன்னு சொல்லிட்டார்.” என்றதும், அஞ்சலி வெட்கத்தில் நெளிந்தாள்.
“நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் டா.” என்று அவளை ஆசிர்வாதித்தபடி அவளை உச்சி முகர்ந்தார் ரகுராம்.
இத்தனை வருடங்களாய் தனக்குக் கிடைக்காத தந்தையின் அரவணைப்பு, இன்று கிடைத்ததை நினைத்து பூரித்துப் போனாள் அஞ்சலி.
ஆரம்பித்தது அவர்களது கோலாகலமான திருமண விழா. ஒரு வாரம் திருவிழா போல் அனைத்தும் நடந்து முடிந்த கையோடு இதோ இப்போது தேனிலவுக்கு கிளம்பி விட்டார்கள் அர்ஜூனும், அஞ்சலியும்.
அன்று நடந்த சம்பவத்தால் கேரள பயணத்தை ரத்து செய்த அர்ஜூன், இப்போது அதை தேனிலவுக்கு என்று திட்டமிட்டான்.
அதைக் கேட்டு ரவி, “அடப்பாவி, என் கூட ட்ரிப்புக்கு பிளான் போட்டுட்டு, மனசு சரியில்ல மச்சான் வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ அதே ட்ரிப்புக்கு ஹனிமூன் போறியா.?” என்று ஆதங்கப்பட்டான்.
அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, “விடு மச்சான், உன்னோட ஹனிமூன் கூட அங்கயே பிளான் பண்ணிடுவோம்.” என்று அர்ஜூன் சொல்ல அந்த இடமே சிர்ப்பலையில் மிதந்தது.
தேனிலவில் ஒரு அங்கமாய், அவர்கள் முதல் சந்திப்பின் அடையாளமாய் இருந்த பிருந்தாவன் கார்டனுக்குச் சென்று ஒரு பகல் முழுதும் இருந்துவிட்டு, அடுத்ததாய் கேரளாவுக்குச் சென்றனர்.
இதோ, இப்போது அதே மலம்புழா டேமிற்க்கு வந்திருந்தனர். அதையும், அர்ஜூன் அஞ்சலியிடம் சொல்லவில்லை. அவள் நன்றாக கண் அயர்ந்த சமயத்தில் வேகமாய்க் காரை ஓட்டிக்கொண்டு இங்கே வந்துவிட்டான்.
கண் விழித்துப் பார்த்த பிறகுதான் அவளுக்கு அங்கே வந்திருக்கிறோம் என்று தெரிந்தது.
“அர்ஜூன் எப்போ இங்க வந்தோம்.?” என்றாள்.
“ம்ம்.. உனக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு தான்.” என்று அவள் கைகளைக் கோர்த்து நடந்து சென்றான்.
இன்றும் அதே ரோப் கார் ரைடிங்க் மற்றும் பார்க்கில் சில போட்டோக்களை எடுத்துக்கொண்டு சுற்றினர். அன்று போலில்லாமல் சந்தோஷமாய் இருந்தது அஞ்சலிக்கு.
“கண்மணி, போட் ரைடிங் போலாமா.?” என்றான் அர்ஜூன்.
அவன் சொன்னதுமே, அஞ்சலிக்கு முகம் வாடிப் போனது. ஏனென்றால், அந்த தொங்கு பாலத்தைக் கடந்து தான் போக வேண்டும் என்பதால்.
“என்ன ரெடியா கண்மணி.? பிரிட்ஜ்ஜ க்ராஸ் பண்ணிப் போலாமா.?” என்று அவன் கேட்க,
“எனக்கு பயமா இருக்கு அர்ஜூன்.” என்றாள்.
“நிஜமா சொல்லு, பயமா இருக்கா.? அன்னைக்கு திரும்பி வரும் போது, அழுதுட்டே ஓடி வந்தியே அது மட்டும் எப்படி.?” என்றான்.
“அது எப்படின்னு எனக்கே தெரியல அர்ஜூன். உன்னை என் வாழ்க்கைல இனி சந்திக்கவே போறதில்லனு வெக்ஸாகி ஓடி வந்த டைம். எப்படின்னு இப்போ வரைக்கும் தெரியல. ஆனா, இப்போ பார்க்கும் போது பயமா இருக்கு.” என்றாள் நடுங்கியபடி.
“சரி நீ கண்ணை மூடிக்கோ, நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன் கண்மணி.” என்றான்.
அவனின் கண்மணி கொஞ்சலில் தன்னை கரைத்தவள், கண்களை இறுக மூடி கையை நீட்ட, அவளது கரத்தை விடுத்து, இடுப்பை அணைத்து, கால்களையும் பிடித்து அப்படியே தூக்கிவிட்டான் அர்ஜூன்.
இதை எதிர்பாராதவள், அவனை கண் விழித்துப் பார்க்க, “இப்போ, ஓகே வா கண்மணி…” என்று அவன் சிரித்துக்கொண்டே பாலத்தில் நடக்க, அஞ்சலியின் பயம் போய் இப்போது அர்ஜூனின் மேல் உள்ள காதல் தான் அதிகமாய் வெளிவந்தது.
அதே காதலுடன் அவன் கன்னத்தைத் தன் கையால் வருடியபடியே வந்தாள் அஞ்சலி. அவளை ஆசையுடனேயே பார்த்துக்கொண்டு வந்தான் அர்ஜூன். காதல் பார்வைகள் பல மொழி பேசின.
காதலும், ஆசையும் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு அங்கே விருந்தளித்தது. கை கொண்டு சேர்ந்தவர்கள் காதல் வாழ நாமும் வாழ்த்துவோம்…