“இப்படி வந்துட்டு வந்துட்டு ரெண்டு பேரும் ஒடுறீங்களே? ஒரு ரெண்டு நாள் இங்கயே தங்குற மாதிரி வரலாம்ல பாரதி? உன் புருஷன் நம்ம வீட்ல எல்லாம் தங்க மாட்டாரா?”, என்று கேட்டாள் மீனா.
“அப்படி எல்லாம் இல்லை அத்தை. அவங்க அந்த மாதிரி எல்லாம் நினைக்க மாட்டாங்க. நான் அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன். கண்டிப்பா இங்க வந்து தங்குறோம் போதுமா?”, என்று சொன்னாள் பாரதி.
வெளியே மூர்த்தியும் தமிழும் பேசிக் கொண்டிருந்தார்கள். “எப்படி பாரதி பின்னாடியே ஒட்டிக்கிட்டு போறான் பாருங்க தம்பி. இனி நைட் முழுக்க இன்னும் பாரதி அக்கா எப்ப வருவானு கேட்டு எங்க உயிரை எடுப்பான்”, என்று மகனைப் பற்றி சொல்லி சிரித்தார் மூர்த்தி.
“அதுக்கு காரணம் நீங்க தான் சித்தப்பா. அவனுக்கு துணைக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இருந்திருந்தா அவன் இப்படி பாரதி பின்னாடி ஒட்ட மாட்டான்ல? நானும் சின்ன வயசுல என் அத்தை பின்னாடி இப்படி தான் அலையுவேனாம். இப்ப வரை என் அம்மா அப்பா கிட்ட இன்னொரு பிள்ளை பெத்துருக்கலாம்லன்னு கேட்டுட்டே இருப்பேன்”, என்று தமிழ் சொன்னதும் அந்த வயதிலும் வெட்கப் பட்ட மூர்த்தி “போங்க மாப்பிள்ளை. அதை எல்லாம் யோசிக்கல. ஏன்னா அப்ப நாங்க பாரதியையும் எங்க மகளா தான் பாத்தோம்”, என்று சொன்னதும் கணவனுக்கு காபி எடுத்து வந்த பாரதி கண் கலங்கினாள்.
கண்களால் அவளுக்கு தைரியம் சொன்ன தமிழ் மூர்த்தி புறம் திரும்பி “வரும் போது கேசவன் மாமாவை பாத்தேன் சித்தப்பா”, என்றான் தமிழ்.
“ஓ”, என்று சொன்ன மூர்த்தி வேறு எதுவும் சொல்ல வில்லை. ஆனால் கேசவன் பேசியதை எல்லாம் இப்போது அனைவரிடமும் சொல்லி விட்டான் தமிழ்.
அனைத்தையும் கேட்டவர்களுக்கு ஒரு வேளை கேசவன் பக்கமும் நியாயம் இருக்குமோ என்று தோன்றியது. அதற்கு மேல் அதைப் பற்றி அவர்கள் எண்ண வில்லை. பாரதியும் அதை பற்றி அதிகம் யோசிக்க வில்லை. ஏனென்றால் என்ன தான் கேசவன் உண்மையான பாசத்தை வைத்திருந்தாலும் அதை உணராத பாரதியால் அவரது அன்பை உண்மை என்று நம்ப முடியாது.
“மாமா இன்னும் அக்காவை எப்ப இங்க கூட்டிட்டு வருவீங்க?”, என்று தமிழிடம் பிரவீன் கேட்க அனைவர் கவனமும் அவன் மேல் சென்றது.
அவனுக்கு தமிழ் பதில் சொன்னான். பின் காபி குடித்துக் கொண்டே மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பாரதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் தமிழ். போகும் போது அவன் சொல்லாமலே அவன் தோள் மீது கை வைத்து அமர்ந்திருந்தாள் பாரதி.
அவள் அமைதியாக வரவும் “என்ன பாரதி அமைதியா இருக்க? உங்க அப்பா பேசினதைச் சொன்னேனே? அதைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா? உங்க அப்பா பேசினதை சொன்னதுக்கு நீ எதுவுமே சொல்லலை, ஏன் பாரதி?”, என்று கேட்டான் தமிழ்.
“அவர் பாயிண்ட் ஆப் வியுல அவர் நல்லவரா இருக்கலாம். ஆனா என் கஷ்டத்தை நினைச்சு பாத்தா அவர் எனக்கு நல்ல அப்பாவா இல்லை. அதனால நான் அவரை பத்தி எல்லாம் தேவையில்லாம யோசிக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள். அவனும் அதன் பின் எதுவும் கேட்க வில்லை. அன்று இரவு ஒரு இரண்டு நாள் பிரவீன் கூட இருக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அதைப் பற்றி அவனிடம் எப்படி பேச என்று எண்ணினாள்.
அவள் ஏதோ யோசனையில் இருக்கவும் “உனக்கு ஏதாவது வேணுமா பாரதி? இல்லை என் கிட்ட ஏதாவது சொல்லனுமா?”, என்று கேட்டான் தமிழ்.
“ஆமா சொல்லணும். ஆனா எப்படி சொல்லன்னு தெரியலை”
“என் கிட்ட என்ன தயக்கம்? எதுவா இருந்தாலும் சொல்லு மா”
“இல்லை எனக்கு பிரவீன் கூட ரெண்டு நாள் இருக்கணும் போல இருக்கு? நாம ஒரு ரெண்டு நாள் மாமா வீட்ல தங்கலாமா? விரும்பி கேட்டான். அத்தையும் கேட்டாங்க. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம்”
“ஆமாங்க, நானும் அம்மா வீட்டுக்கு போக தான் ஆசைப் படுறேன்”
“என்ன சொல்ற பாரதி”
“ஆமாங்க, எனக்கு அத்தையும் மாமாவும் தான் அம்மா அப்பா மாதிரி. எங்க அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான். இதோ கல்யாணம் முடிஞ்சிட்டுன்னு அவங்களுக்கு என்னன்னு இருக்காங்க. கட்டிக்,கொடுத்த மக எப்படி இருக்கா? மருமகன் எப்படி இருக்கார்ன்னு ஒரு நாளும் விசாரிச்சாங்களா? இல்லை மறுவீட்டுக்கு வாங்கன்னு அழைச்சாங்களா? அவருக்கு எப்பவுமே நான் ஒரு பொண்ணா தெரியலை. அம்மா இருந்திருந்தா இப்படி ஒரு அப்பாவை மன்னிச்சிருக்கவே மாட்டாங்க. இன்னைக்கு உங்களை நேர்ல பாத்ததும் நீழிக் கண்ணீர் வடிச்சிருக்காரு”
“கலங்காத பாரதி”
“முடியலைங்க, என்னை மாமா தான் படிக்க வச்சாங்க. அவர் அது கூட செய்யலை. அவர் ஏன் அப்படி மாறிப் போனார்? எனக்கு எங்க சித்தி மேல கூட இவ்வளவு வெறுப்பு வராதுங்க. ஏன்னா ஊர் உலகத்துல பொதுவா யாரும் மூத்த தாரத்தோட பிள்ளைகளை பொறுப்பா பாக்க மாட்டாங்க. ஆனா இவர்…”
“சரி விடு பாரதி. இனி உனக்கு அம்மா அப்பா யாருமே இல்லைன்னு நினைக்க கூடாது. உனக்கு தான் நான் இருகேனே?”, என்று அவன் சொன்னதும் அவனை நெகிழ்ந்து போய் பார்த்தாள்.
அவள் பார்வையில் என்ன உணர்ந்தானோ தன்னுடைய இரு கை நீட்டி வா வென்று கண்களால் அழைக்க விருப்பத்துடன் அவன் கைகளுக்குள் சரண் புகுந்தாள். அவனும் ஆறுதலாக அவளை அனைத்துக் கொண்டான்.
அவனிடம் இருந்து விலகிய படியே “நாம எப்ப மாமா வீட்டுக்கு போறோம்?”, என்று கேட்டாள் பாரதி.
“இன்னைக்கு தானே அங்க போயிட்டு வந்தோம். நாளான்னைக்கு போகலாம். ஒரு மூணு நாள் இருந்துட்டு வரலாம்”, என்று அவன் சொன்னதும் சந்தோஷமாக சரி என்றாள்.
அடுத்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாக விடிந்தது என்றால் தமிழுக்கு பரபரப்பாக விடிந்தது. ஏனென்றால் இன்று தான் ரிஷியும் சஹானாவும் பாரதியைப் பார்க்க வருகிறார்கள். பாரினில் இருந்து வந்த ரிஷி ஏற்கனவே தமிழுக்கு அழைத்து எப்போது அங்கே வருவது என்றும் வீடு எங்கே இருக்கிறது என்றும் கேட்டு விட்டான்.
தமிழும் இன்று வரச் சொன்னதால் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என்று அவனுக்கு தெரியும். அவர்கள் வந்ததும் பாரதி என்ன சொல்வாள் என்று எண்ணி அவனுக்கு படபடப்பாக இருந்தது.
பாரதியும் தமிழும் குளித்து முடித்து கீழே சென்ற போது கோகிலாவும் பாண்டியனும் சாப்பிட வர நால்வரும் பேசிய படியே சாப்பிட்டார்கள்.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் போது தோட்டக்காரன் வந்து “சின்னயா, சின்னம்மாவைத் தேடி யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க”, என்றான்.
“என்னைத் தேடியா? யாரு?”, என்று குழம்பினாள் பாரதி.
“யார் மணி வந்துருக்கா?”, என்று கேட்டார் பாண்டியன்.
“அவங்க பேர் ரிஷின்னும் சஹானான்னும் சொன்னாங்க”, என்று மணி சொன்னதும் “அவங்களை உள்ள வரச் சொல்லு”, என்று சொன்ன தமிழ் அவங்க யார் என்னும் விதமாய் பாரதியைப் பார்த்தான். அவனுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல காட்டிக் கொண்டான்.
அவள் முகம் ரத்த பசை அற்று வெளிறிப் போய் இருந்தது. சஹானாவும் ரிஷியுமா என்று அதிர்ந்து போனாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த தமிழ் குழப்பமாக அவளைப் பார்ப்பது போல பார்த்தான்.
அவள் அதிர்ச்சியாக அமர்ந்திருக்கவும் கோகிலா மற்றும் பாண்டியன் கூட அவளைக் குழப்பமாக பார்த்தார்கள். அன்னை மற்றும் தந்தையின் பார்வையில் குழப்பத்தைக் கண்ட தமிழ் அவர்களுக்கு சந்தேகம் வரக் கூடாது என்று எண்ணி “யார் பாரதி அவங்க?”, என்று கேட்டு பாரதியை நடப்புக்கு கொண்டு வந்தான்.
அவன் கேள்வி கேட்டதும் தான் நடப்புக்கு வந்தாள் பாரதி. மூவரும் தன்னுடைய முகத்தைப் பார்த்த படி இருக்க “அது அது வந்து… சஹானா என் கூட படிச்சா. ரிஷி அவளோட அண்ணன்”, என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள்.
அவள் சொன்னதை பாண்டியனும் கோகிலாவும் சரி என்று கேட்டுக் கொண்டு கைக் கழுவ சென்றார்கள். ஆனால் தமிழ் அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான் . இவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்த பாரதியின் கைகள் தந்தி அடித்தன. நெற்றியில் வியர்வை பூத்தது.