“ஆனா அப்ப உன் மனசு எப்படி இருக்கும்னு இப்ப யுக்தாவை லவ் பண்ணின அப்புறம் என்னால புரிஞ்சிக்க முடியுது ரேவதி. சரி அந்த முரளி போனா போகட்டும். வேற நல்ல பையன் கிடைப்பான். இப்ப வேலைக்கு என்ன பண்ண போற?”
“அது தான் தெரியலை. அம்மா வீட்ல தையல் தைக்கிறாங்க. தங்கச்சி பன்னிரெண்டாவது படிக்கிறா. சாப்பாடுக்கு பிரச்சனை இல்லை. ஆனா கடன் அடைக்க என்ன பண்ண தெரியலை. இத்தனை நாள் என் சம்பளம் உதவியா இருந்துச்சு. இனி என்ன பண்ணப் போறோமோ?”
“சரி இந்தா செலவுக்கு இப்போதைக்கு இதை வச்சிக்கோ ரேவதி. ஒரு ஒரு வாரம் மட்டும் டைம் கொடு, உனக்கு நல்ல வேலையா பாத்து சொல்றேன்”
“பணம் எல்லாம் வேண்டாம் யுவன். வேலை மட்டும் ரெடி பண்ணிக் கொடு. அது போதும்”
“வேலை கண்டிப்பா ரெடி பண்ணுறேன் ரேவதி. இப்போதைக்கு இதை வச்சிக்கோ டா. பழைய படி நாம பிரண்ட்ஸா இருக்கலாம்”
“பணம் வேண்டாம் யுவன்”
“பிரண்ட்ன்னு நினைச்சா இதை வாங்கிக்கோ”
“உன்னோட பிரண்ட்ஷிப், யுக்தாவோட பிரண்ட்ஷிப் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் யுவன். ஒரு தடவை அதை இழந்துட்டேன். இன்னொரு தடவை அதை இழக்க மாட்டேன்”, என்று சொன்ன ரேவதி அந்த பணத்தை வாங்கிக் கொண்டாள்.
“உன்னோட கம்பெனி தில்லுமுல்லு எல்லாத்தையும் உதய் பாத்துக்குறேன்னு சொல்லிட்டான் ரேவதி. அதனால நீ ரொம்ப பயப்பட வேண்டாம். அப்புறம் இது உதயுடைய நம்பர். என்னை இல்லைன்னா அவனை எப்ப வேணும்னாலும் கூப்பிடு’, என்று சொல்லி அவளை வீட்டுக்குச் செல்ல பஸ் ஏற்றி விட்டே அங்கிருந்து கிளம்பினான்.
இங்கே யுக்தா அவனுக்கு அழைத்து அழைத்து சோர்ந்து போனவள் சுந்தரி கொடுத்து விட்டிருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வாய் தான் எடுத்து வைத்திருப்பாள் அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. தொடர்ச்சியாக வாந்தியும் மயக்கமும் வந்தது.
அவள் நடித்த ஒரு படத்தில் இது போல நடந்தது நினைவில் வந்தது. அவள் மூளை வேகமாக சிந்திக்க ஒரு வேளை அப்படியும் இருக்குமோ என்று எண்ணி உடனடியாக ஆபீஸ் விட்டு வெளியே வந்தவள் ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றாள்.
அங்கே தான் செல்வம் ஒரு பெண்மணியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வருவதைப் பார்த்தாள். அவர்களைப் பார்த்து அதிர்ந்தவள் அவர்கள் கண்ணில் படாதவாறு ஓரமாக நின்று கொண்டாள்.
யுவனைப் பற்றிய தவறான வீடியோவை நெட்டில் ஏற்றி விட்டு வெளியே வரும் போது தான் செல்வத்தின் இரண்டாவது மனைவி அவரை அழைத்தாள். அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அங்கே யுக்தா வருவாள் என அவர் கனவா கண்டார்.
தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்பதைக் கூட மறந்து யுக்தா செல்வத்தையும் அந்த பெண்மணியையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த பெண்ணிடம் அவ்வளவு கனிவாக பேசுவது தன்னுடைய தந்தையா என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. அவர் தன்னுடைய தாயிடம் பேசும் முறையும் மனக்கண்ணில் உலா வந்தது.
அவர்களின் நெருக்கமும் அவர்களின் புன்னகை முகமுமே சொன்னது அவர்களின் உறவை. இவர் தனக்கு நல்ல தந்தையாக இருக்க வில்லை என்று எண்ணியிருந்தவளுக்கு அவர் தாமரைக்கு நல்ல கணவராகவும் இருக்க வில்லை என்று புரிந்தது.
“மிஸ்ஸஸ் செல்வம், அடுத்து நீங்க தான் உள்ள வரணும்”, என நர்ஸ் சொல்ல “இவங்க மிஸ்ஸஸ் செல்வம்னா என்னோட அம்மா யாரு? அம்மா உனக்கு இப்படி ஒரு விஷயம் இருக்குறது தெரியுமா மா? தெரிஞ்சா நீ தாங்குவியா? யுவனைக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி எனக்கு இதெல்லாம் பெருசா தெரிஞ்சிருக்காது. ஆனா இப்ப என்னால கணவன் மனைவி உறவை புரிஞ்சிக்க முடியுது. நான் யுவனை வேற ஒரு பொண்ணு கூட பாத்தா எப்படி எனக்கு வலிக்குமோ அது மாதிரி தானே உனக்கும் வலிக்கும்”, என்று மானசீகமாக தன்னுடைய அன்னையிடம் பேசினாள்.
மகப்பேறு மருத்துவரிடம் இருந்து யுக்தாவுக்கு அழைப்பு வர யுக்தா தந்தையை மறந்து அந்த அறைக்குள் சென்றாள். அவளை பரிசோதித்த டாக்டர் அவள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். அதைக் கேட்டு மிகவும் சந்தோசத்துடன் வெளியே வந்தாள். அப்போது தான் செல்வத்தின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
இனி தன்னுடைய அன்னைக்கு இவர் தேவை இல்லை என்று முடிவு எடுத்தாள். பின் செல்வத்தை மறந்து குழந்தை விஷயத்தை நினைவுக்கு கொண்டு வந்தாள். யுவனுக்கு போனில் சொல்லலாம் என்று முதலில் நினைத்தவள் நேரிலே சொல்லலாம் என்று முடிவு எடுத்து வீட்டுக்கு கிளம்பினாள். அவளுக்கு சந்தோசத்தில் உள்ளுக்குள் ஒரு வித பூரிப்பு வந்திருந்தது. அவள் வீட்டுக்கு சென்ற போது வீட்டில் சுந்தரியும் ஈஸ்வரனும் இல்லை. அவர்கள் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தார்கள்.
தன்னுடைய ஹேன்ட் பேகில் இருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே போய் அமர்ந்தாள். பின் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தாள். அதில் யுவனின் அழைப்புகள் பதிவாகி இருந்தது. அவனுக்கு அழைக்க நினைக்கும் போது செல்வம் லைனில் வந்தார்.
“இவர் எதுக்கு கால் பண்ணுறார்?”, என்று எண்ணியவள் அதை எடுத்து காதில் வைத்தாள்.
“என்னமோ உன் புருஷனை தலைல தூக்கி வச்சி ஆடின. இப்ப அவன் மானமும் அவனுக்கு பொண்டாட்டியா இருக்குறதுனால உன் மானமும் எப்படி கப்பல் ஏறுது பார். நியூஸ் போட்டுப் பாரு”, என்று சொல்லி விட்டு போனை வைத்தார்.
யுவனுக்கு அழைக்க வேண்டும் என்பதை மறந்து டிவியைப் போட்டு அமர்ந்தாள். யுவனைப் பற்றிய செய்தி வந்தது. அதுவும் யுக்தாவின் கணவர் என்றே செய்தியில் சொன்னார்கள்.
உடனே தன்னுடைய போனை எடுத்து நெட் ஆன் செய்து பார்த்தாள். பேஸ்புக் வாட்சப் என அனைத்திலும் அவன் புகைப்படமும் விடியோவும் வந்திருந்தது. அதைக் கண்டு உடைந்து போனாள். பார்த்த உடன் அந்த வீடியோ போலி என்று புரிந்தது. ஆனால் அந்த இடத்தில் யுவன் இருக்கும் புகைப்படம் உண்மையானது தான். கூடவே அவன் அருகே நிற்கும் அந்த பெண் யார் என்றும் அவளுக்கு குழப்பமாக இருந்தது.
“இவன் என் கிட்ட கூட சொல்லாம அங்க தான் இன்னைக்கு போனானா?”, என்று கோபம் கனன்றது. எதுக்காக யுவன் அங்க போனான் என்று கோபம் வந்தாலும் அவனை முழு மனதாக அவளால் சந்தேகப் பட முடியவில்லை.
அவள் குழப்பத்தில் இருக்கும் போது தான் “அம்மு, வீட்டுக்கு வந்துட்டியா? நான் உன்னை ஆஃபிஸ்ல போய் தேடிட்டு வரேன். போன் பண்ணினேன். நீ எதுக்கு எடுக்கலை?”, என்று கேட்ட படி வீட்டுக்குள் வந்தான் யுவன்.
“நீ இன்னைக்கு அந்த மாதிரி இடத்துக்கு போனியா யுவன்?”, என்று கேட்டாள் யுக்தா. அவள் கண்கள் கூர்மையாக அவனை அளவிட்டது. அவனுக்குமே அவளுடைய கோபம் புது விதமாக இருந்தது.
“உன்னைத் தான் கேக்குறேன். நீ அங்க போனியா இல்லையா?”
“உனக்கு எப்படி தெரியும்?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டான் யுவன்.
“ஆக நீ அங்க போன, அப்படி தானே?”
‘யுக்தா எதுக்கு போனேன்னா?”
“இந்த காரணத்தை நீ போறதுக்கு முன்னாடி சொல்லிருக்கணும். இப்ப சொல்லி ஒரு யூசும் இல்லை. எப்ப அந்த இடத்துக்கு போயிட்டு வந்தியோ இனி நீ எனக்கு தேவையே இல்லை”, என்று சொன்னவள் உடனே வீட்டை விட்டு கிளம்பி விட்டாள்.
வீட்டுக்கு வந்ததும் செல்வம் அவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தார். அவரை இன்னொரு பெண்ணுடன் அவரைப் பார்த்ததை யுக்தா அவரிடம் காட்டிக் கொள்ள வில்லை. ஒன்று அவர் மேல் இருந்த பயம் ஒரு காரணம். மற்றொன்று இப்போது அவரைக் கேள்வி கேட்டால் அவர் தாமரையைக் ஏதாவது செய்து விடுவாரோ என்று பயந்து அவரை பகைத்துக் கொள்ளாமல் தன்னுடைய அறைக்குள் வந்து முடங்கி விட்டாள்.
தாமரை அவள் முகத்தைப் பார்த்து என்னவென்று விசாரிக்க அவளும் நடந்ததைச் சொன்னாள். அடுத்த நொடி யுக்தாவை ஓங்கி ஒரு அரை வைத்தாள் தாமரை. “இப்படி வாழ்க்கையவே கெடுத்துட்டு வந்துருக்கியே டி படுபாவி. யுவன் மாப்பிள்ளை தங்கம் டி. ஒழுங்கா கிடைச்ச வாழ்க்கையை வாழத் தெரியாம வந்து ஒப்பாரி வைக்கிற? உன் அப்பன் ரத்தம் உன் உடம்புல ஓடுதுள்ள? அப்ப இப்படி தான் இருப்ப”, என்று சொல்லி விட்டு கீழே சென்றாள்.
“என்ன முகம் தொங்கிப் போய் வருது? ரெண்டு பேரும் ஓவரா ஆடினீங்கல்ல? அதுக்கு தான் இது. கார் டிரைவர் கிட்ட கறி நண்டு எல்லாம் வாங்கச் சொல்லிருக்கேன். செஞ்சு வச்சிரு. ஏன்னா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றார் செல்வம்.
அதே நேரம் அங்கே யுவன் சுந்தரி குதி குதியென்று குதித்துக் கொண்டிருந்தாள். “என்னமோ மருமக மருமகன்னு தலைல தூக்கி வச்சீங்க? இப்ப பாத்தீங்களா ஒண்ணும் இல்லாத விசயத்துக்கு என் மகனை நம்பாம வீட்டை விட்டுப் போயிருக்கா. இனியாவது அவ குணத்தை புரிஞ்சிக்கோங்க. போனவ போனதாவே இருக்கட்டும்”, என்றாள் சுந்தரி.
“நேரம் காலம் தெரியாம பேசாத. உள்ள போ”, என்று ஈஸ்வரன் மிரட்டியதும் அவரை முறைத்து விட்டு உள்ளே சென்றாள். பின் யுவனிடம் ஈஸ்வரன் என்னவென்று விசாரிக்க நடந்ததை விளக்கினான்.
“யுக்தா உன் மேல சந்தேகப் பட்டுட்டான்னு நினைக்காதே யுவன். கண்டிப்பா என் மருமக அப்படி கிடையாது. நீ அங்க போனதுனால தான் கோபப் பட்டிருப்பா. உண்மை தெரிஞ்சா மனசு மாறிருவா”, என்று ஆறுதல் சொன்னார் ஈஸ்வரன்.
இது தான் யுவன் யுக்தா வாழ்க்கையில் நடந்தது. இருவரும் பழைய விஷயங்களை அசைப் போட்ட படி தனித் தனி அறையில் படுத்திருந்தார்கள்.
அப்போது யுக்தாவின் அறைக்குள் வந்த தாமரை “நீ என்ன டி இன்னும் தனியா இங்க படுத்துருக்க? இன்னும் வீம்பு புடிச்சிட்டு இருக்கியா? ஒழுங்கா மாப்பிள்ளை ரூமுக்கு போ பாப்பா”, என்றாள்.
“அங்கயா? அவன் என்னை திட்டிட்டு போய்ட்டான் மா”, என்று குழந்தை போல புகார் வாசித்தாள்.
“இப்ப மாப்பிள்ளை மேல உனக்கு கோபம் இல்லை தானே பாப்பா?”
“இல்லை மா”
“அப்புறம் என்ன? நீயே போய் பேசு. உனக்காக தானே அவர் குடும்பத்தையே விட்டு இங்க வந்துருக்கார்”
“சரி மா பேசுறேன்”
“சரி இந்த பாலை குடிச்சிட்டு மாப்பிள்ளைக்கும் இதைக் கொடுத்துரு. நான் கீழே படுத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு திரும்பினாள் தாமரை.
“அம்மா”
“என்ன பாப்பா?”
“நீ சந்தோஷமா இருக்கியா? அப்பாவை பிரிஞ்சு வந்தது உனக்கு வருத்தமா இருக்கா?”
“சந்தோஷமா இருக்கேன்னான்னு தெரியாது. ஆனா நிம்மதியா இருக்கேன். உன் அப்பாவை விட்டு வந்தது எனக்கு சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கு யுக்தா”
“அம்மா அப்பாவுக்கு… இன்னொரு…”
“இன்னொரு குடும்பம் இருக்கு. அதானே?”
“அம்மா”
“தெரியும் யுக்தா. எப்பவோ தெரியும். அதான் விடுதலைன்னு சொல்றேன். இன்னும் என் காலம் நல்ல படியா போகும். இன்னும் உன்னையும் மாப்பிள்ளையையும் நல்லா பாத்துக்குவேன். அப்புறம் என் பேரனோ பேத்தியோ வந்துருவாங்க. அவங்களை பாத்துக்குறதுல என் காலம் போயிரும் டி. நீ சந்தோஷமா இரு. மாப்பிள்ளை கூட நீ சந்தோஷமா இருக்கணும். அது போதும் எனக்கு. எழுந்து போ டி”
சிறு புன்னகையுடன் யுவன் அறைக்குள் நுழைந்தாள் யுக்தா. அவள் வருகையைக் கண்டவன் “நீ எதுக்கு டி இங்க வர? முதல்ல வெளிய போ”, என்று கத்தினான்.
“உன் அத்தை தான் இதை உன் கிட்ட கொடுக்கச் சொன்னாங்க. எனக்கு மட்டும் பால். உனக்கு மட்டும் பூஸ்ட். இந்த அம்மாவுக்கு என்ன ஒரு ஒர வஞ்சனை பாத்தியா?”
“அதுக்கு சண்டை போட தான் இந்நேரம் இங்க வந்தியா?”
“சண்டை மட்டும் தான் போடணுமா?”, என்று அவள் தளைந்த குரலில் கேட்க “இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. நீ அதைத் தானே பண்ணுற?”, என்று கேட்டான் யுவன்.
“நீ பண்ணினது மட்டும் சரியா? அதைப் பாத்து எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? வீடியோ எல்லாம் பொய் தான். ஆனா அந்த போட்டோ உண்மை தானே? நீயும் ஆமான்னு வேற சொல்ற?”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது. அதைக் கண்டு இறங்கி வந்த யுவன் “நீ முதல்ல இங்க வா டி”, என்று அழைத்தான்.