தேனிலவு முடிந்து திரும்பி வந்ததும் அவர்கள் வாழ ஆரம்பித்து விட்டார்கள் என்று முதலில் புரிந்து கொண்டது ஈஸ்வரன் தான். அவருக்கு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
அவர்கள் ஒற்றுமையாக பேசிக் கொள்வதைக் காணும் போது சுந்தரிக்கும் சந்தேகம் வந்தது. ஆனால் அவள் மனது இருவரும் ஒன்றாக கடைசி வரை வாழவே மாட்டார்கள் என்று நம்பியதால் அந்த சந்தேகத்தை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
இதற்கு மேல் வேலைக்குச் செல்லாமல் இருக்க முடியாது என்பதால் சென்னையில் வேலை தேட முடிவு எடுத்தான் யுவன். அதை தெரிந்து கொண்ட யுக்தா தாமரையிடம் அந்த விஷயத்தைச் சொன்னாள்.
உடனே அவனிடம் பேசிய தாமரை “எதுக்கு மாப்பிளை, நீங்க வெளிய வேலைக்கு போகணும்? நம்ம கம்பெனியவே பாத்துக்கோங்களேன். இதுக்கு மேல யுக்தா அப்பா கைல பொறுப்பைக் கொடுக்குறது சரி கிடையாது. ஒண்ணுமே இல்லாம பண்ணிருவார். உங்களுக்கு அங்க வேலை பாக்குறது கவுரவ குறைச்சலா இருந்தா சொல்லுங்க, யுக்தா அதை உங்க பேர்லயே எழுதி வைப்பா”, என்று சொன்னாள்.
இப்படி பேசும் தாமரையிடம் மறுத்து பேச முடியாத யுவன் “அதெல்லாம் சொத்தை மாத்த வேண்டாம் அத்தை. நம்ம கம்பெனியை நானும் யுக்தாவும் பாத்துக்குறோம். மாத்தி எல்லாம் எழுத வேண்டாம். நாளைக்கே ரெண்டு பேரும் ஆபீஸ் போறோம் போதுமா?”, என்றான்.
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. அவர் ஏதாவது சொன்னா பெருசு படுத்தாதீங்க. அவரை நீங்க அங்க இருந்து அவமானப் படுத்தி வெளிய அனுப்பினா கூட எனக்கு சந்தோஷம் தான்”
“நாளைக்கு ஆஃபிஸ்க்கு போறோம். அங்க அவர் எப்படி நடந்துக்குறார்னு பாத்துட்டு அப்புறம் பேசிக்கலாம் அத்தை”, என்று சொல்லி போனை வைத்தவன் மனைவியிடம் அந்த விஷயத்தைச் சொன்னான்.
அவனை நெருங்கி அமர்ந்திருந்தவள் அவன் சட்டைக் காலரைப் பற்றிய படியே “கண்டிப்பா நானும் வரணுமா? நீயே எல்லாம் பாத்துக்கோயேன்”, என்று கெஞ்சினாள்.
அவள் தோள் வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தவன் “இப்படி நீ கொஞ்சிறது நல்லா தான் இருக்கு அம்மு. ஆனா அது உன்னோட கம்பெனி டா. நீ தான் பொறுப்பேத்து நடத்தணும். அதனால கட்டாயம் நீ வரணும்”, என்று சொன்னவன் அவள் சரி என்றதும் தன்னுடைய தேடலை அவளிடம் ஆரம்பித்தான்.
அடுத்த நாள் அவன் நினைத்தது போல கலவரம் வெடித்தது. ஆனால் இரண்டு இடத்தில். முதலில் அவர்கள் கிளம்பும் போது சுந்தரி பஞ்சாயத்தை ஆரம்பித்தாள்.
“நீயெல்லாம் என்ன டி மனுஷி? என் மகனோட கனவு என்னன்னு தெரியுமா? ஆசை என்னன்னு தெரியுமா? அவனைப் போய் உனக்கு கூஜா தூக்க வச்சிட்டியே? நீ முதலாளியா இருப்ப. என் மகன் உனக்கு அடிமையா இருக்கணுமா?”, என்று சுந்தரி கேட்டதும் யுக்தா முதல் முறையாக யுவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள்.
யுவனோ அன்னையை அடக்க முடியாமல் அப்பாவை பாவமாக பார்த்தான்.
“விடு சுந்தரி, சும்மா எதுக்கு எடுத்தாலும் அந்த பிள்ளையை கரிச்சு கொட்டிட்டு இருக்க? யுவன், நீ மருமகளை கூட்டிட்டு கிளம்புப்பா”, என்று ஈஸ்வரன் சொன்னதும் தான் தப்பித்தோம் பிழைத்தோம் என கிளம்பினான்.
காரில் செல்லும் போது “உன்னோட கனவு என்ன யுவன்? வெளிநாட்டுக்கு போகனும்னு அடிக்கடி சொல்லுவியே? அதுவா? இல்லை சைண்டிஸ்ட் ஆகணும்னு சொல்லுவியே அதுவா?”, என்று கேட்டாள் யுக்தா.
“வெளிநாட்டுக்கு போகணும்னு அப்படிங்குறது என்னோட கனவுன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா சைண்டிஸ்ட் ஆகணும்னு ஆசை. அதுவும் நாம படிச்ச டிப்பார்ட்மெண்ட்ல பெரிய ஆளா வரணும்னு என்னோட கனவு. அதனால தான் எல்லாரும் இஞ்சினீயரிங்க் படிக்கச் சொன்னப்ப நான் அதை எடுத்தேன். ஆனா அதுக்கு நம்ம நாட்டுல தான் மதிப்பு இருக்காதே. அதான் வெளிநாடு போகலாம்னு நினைச்சேன். அதை விடு. எனக்கு இப்ப உன் அப்பாவை நினைச்சா தான் டென்ஷன் ஏறுது”
“அவரைத் தான் நீ பாத்துக்குவியே?”
“நல்லா அவர் கிட்ட என்னையே மோத விடுற டி. நீ ரொம்ப நல்லவ. நான் என்ன தான் மிரட்டினாலும் அவர் அடங்குறாரான்னு பாரேன்”
“அவர் எப்பவும் இப்படி தான். விடு யுவன். அவர் என்ன சொன்னாலும் நாம பாத்துக்கலாம்”
“அடப் பாருடா நீ எப்ப இவ்வளவு தைரியசாலியா மாற ஆரம்பிச்ச?”
“உன்னோட காத்து என் பக்கம் வீசுதுள்ள அதான்?”
“அடியே நீ இவ்வளவு பேசுவியா? அப்புறம் மாமாவோட காத்து மட்டுமா வீசுது?”, என்று சரசக் குரலில் கேட்க அதில் வெட்கம் கொண்டவள் ஐயோ, ரோட்டை பாத்து வண்டியை ஓட்டு”, என்றாள்.
“பதில் சொல்லு டி அம்மு”
“பகல்ல நீயும் நானும் பிரண்ட்ஸ் தானே? அதனால நைட் சொல்றேன்”, என்று சிரித்தாள் யுக்தா.
“நல்லா தேரிட்ட டி. நான் சொன்னதை வச்சு எனக்கே ஆப்பு அடிச்சிட்டியா?”, என்று சிரித்த படி காரைச் செலுத்தினான்.
கம்பெனி வந்ததும் அவர்கள் முன்பு பார்த்த வேலையை செய்ய ஆரம்பிக்க தமாதமாக அலுவலகம் வந்த செல்வம் அவர்களைக் கண்டு திகைத்தார்.
அவர் யுவன் மற்றும் யுக்தாவிடம் சண்டையிட ஆரம்பிக்க யுவனுக்கு அவரை அடக்குவதற்குள் போதும் போதுமென ஆகி விட்டது.,
கடைசியில் “இது என்னோட சொத்து தானே? அதனால நானே பாத்துக்குறேன். அதுக்காக உங்களை வெளிய போகச் சொல்லலை. மத்த வேலை எல்லாம் போய் பாருங்க. ஆனா நானும் யுவனும் தான் இங்க எல்லா பொறுப்பையும் எடுத்துக்குவோம்”, என்று யுக்தாவே வாயை திறந்து சொன்னதும் தான் அமைதியானார்.
“கடைசில என் பொண்ணை மயக்கி அவ சொத்தை உன் கண்ட்ரோல்ல கொண்டு வந்துட்டல்ல? எதுக்கு டா இப்படி அடுத்தவங்க சொத்துக்கு அலையுறீங்க?”, என்று கேட்டார் செல்வம்.
“இதை நீங்க சொல்றது தான் அதிசயமா இருக்கு மாமா. ஆமா இது என்ன உங்க சொத்தா?”, என்று யுவன் கேட்க அவர் அதற்கு பதில் சொல்ல முடியாமல் முறைத்த படி அங்கிருந்து சென்றார்.
அடுத்து வந்த நாட்களில் அவர் தினமும் அலுவலகம் வருவார். அவரை யுக்தா மற்றும் யுவன் இருவரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
அவ்ர்களை கண்டு கொதித்துக் கொண்டிருந்த செல்வம் அவர்களை பழி வாங்க கட்டம் கட்ட காத்திருந்தார். மிகப் பெரிய பிளான் ஒன்றைச் செய்தார். அடியாட்களை ஏவி விட்டு யுக்தாவை கடத்த முடிவு எடுத்தார். அதற்காக சரியான நாளுக்காக காத்திருந்தார்.
ஆனால் எப்போதும் யுவன் அவளுடனே இருப்பதால் அவரால் அதைச் செய்ய முடிய வில்லை. ஆனால் அவர் நினைக்காத ஒன்று நடந்தது. அதுவும் அவருக்கு சாதகமாகவும் அமைந்தது.
ஒரு நாள் காலை எப்போதும் போல் அலுவலகம் வந்தார்கள் யுக்தாவும் யுவனும்.
ஒரு பதினொரு மணி போல் யுவனுடைய போனுக்கு அழைப்பு வந்தது. ஏதோ புது எண் எனவும் குழப்பத்துடன் அதை எடுத்து பேசினான்.
“ஹலோ யுவன், யுவன் தானே பேசுறது?”, என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
“யுவன் தான், நீங்க யாருங்க?”
“யுவன் நான் ரேவதி பேசுறேன். பிளீஸ் என்னைக் காப்பாத்து”, என்று படபடப்பாக பேசினாள் ரேவதி.
“ரேவதி நீயா? என்ன ஆச்சு? எங்க இருக்க?”
“நான் எல்லாம் அப்புறம் சொல்றேன். பிளீஸ் எனக்கு உன்னைத் தவிர வேற யாரையும் தெரியாது. நான் செஞ்ச பழைய விஷயங்களை எல்லாம் நினைவுல வச்சிட்டு என்னை பழி வாங்கிறாத யுவன். வாழ்வா சாவான்னு போராட்டத்துல இருக்குறேன். நீ மட்டும் தான் இப்போதைக்கு எனக்கு நம்பிக்கை”
“சரி வரேன், எங்க இருக்க? சொல்லு”, என்று அவன் கேட்டதும் அவள் இடத்தைச் சொன்னாள். அதைக் கேட்டு அதிர்ந்து போனவனுக்கு அது மோசமான இடம் என்று தெரியுமாதலால் “ரேவதி அங்க எதுக்கு போன?”, என்று கேட்டான்.
“நான் விருப்ப பட்டு வரலை யுவன். என்னை இங்க கடத்திட்டு வந்துட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை மும்பைக்கு அனுப்ப போறாங்களாம். பிளீஸ் ஏதாவது பண்ணி என்னை இங்க இருந்து கூட்டிட்டு போ. எனக்கு பயமா இருக்கு யுவன். இங்க இருக்குற ஒரு அக்கா தான் மொபைல் கொடுத்தாங்க. ரொம்ப நேரம் பேச முடியாது என்னால. பிளீஸ் சீக்கிரம் வா யுவன்”
“நான் கிளம்பி வந்துட்டு தான் இருக்கேன் ரேவதி. உங்க வீட்ல யாருக்காவது தகவல் சொல்லவா? அவங்களும் என் கூட வருவாங்கல்ல?”
“உனக்கு தெரியதுல்ல? போன மாசம் தான் என்னோட அப்பா தவறிட்டாங்க. வீட்ல இருக்குறது அம்மாவும் தங்கச்சியும் தான். அவங்க கிட்ட சொன்னா பயந்துருவாங்க”
“சாரி ரேவதி எனக்கு தெரியாது. சரி நீ போனை வை. நான் அரை மணி நேரத்துல அங்க வந்துறேன்”, என்று சொன்னவன் தன்னுடைய சித்தப்பா மகன் உதயை அழைத்தான். அவன் போலீசாக இருப்பதால் அவனிடம் நடந்த விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டான். அவனும் உடனே கிளம்பி வருவதாக சொன்னான்.
அதே நேரம் யுவன் வேகமாகவும் படபடப்பாகவும் செல்வதை செல்வம் பார்த்து விட்டார். கூடவே ரேவதி என்று அவன் பேசுவதும் கேட்டது. அவனை மாட்ட வைக்க சந்தர்பம் பார்த்துக் கொண்டவர் ஆச்சே. அதனால் வேகமாக அவனை பின் தொடர்ந்தார்.
உதய் அந்த இடத்துக்கு வரும் போது ஏற்கனவே அங்கே யுவன் காத்திருந்தான். அந்த இடத்துக்கு வந்திருப்பதைக் கண்ட செல்வம் போலீசைக் கண்டு முதலில் பயந்தாலும் தனக்கு சாதகமாக ஏதாவது நிகழாதா என்று மறைந்த படி காத்திருந்தார்.
உதயுடன் சென்ற யுவன் ரேவதியை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தான். அதை பார்த்துக் கொண்டிருந்த செல்வம் இது தான் சரியான நேரம் என்று எண்ணி அவர்களை தெளிவாக போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த தவறான இடத்துக்கு யுவன் வந்தது போல போட்டோக்களையும் எடுத்தார்.
பின் அவசரமாக ஒரு இடத்துக்கு சென்றார். அது அவருடைய தெரிந்தவரின் கம்ப்யூட்டர் சென்டர் தான். பணத்தை வாரி இறைத்து யுவன் முகத்தை மங்களாக வைத்த மாதிரி வேறு ஒரு பெண்ணுடன் சேர்த்து தவறான விடியோவை உருவாக்கச் சொல்லி நெட்டில் பதிவிட்டார். கூடவே ரேவதி யுவன் ஒன்றாக அந்த இடத்தில் நிற்கும் போட்டோவையும் பதிவிட்டார். ஆனால் ரேவதியை ஒரு வேளை யுக்தாவுக்கு தெரிந்திருந்தால் இந்த பிரச்சனை உப்பு சப்பு இல்லாமல் போய் விடும் என்பதால் ரேவதி முகத்தை மங்களாக போடச் சொன்னார். யுவன் தெளிவான புகைப்படமும், மங்கலான விடியோவும் நெட்டில் பரவியது. அப்போது அவருக்கு போன் வரவும் அங்கிருந்து சென்று விட்டார்.
இங்கே யுவனைக் காணாத யுக்தா அவன் போனுக்கு அழைத்தாள். அந்த நேரம் அவன் ரேவதியுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவள் அழைப்பை கவனிக்க வில்லை. போன் சைலெண்ட் மோடில் கிடந்தது.
“சொல்லாம கொள்ளாம எங்க போய்ட்டான்? வயிறு வேற பசிக்குதே?”, என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தாள் யுக்தா.
அதே நேரேம் “என்ன ஆச்சு ரேவதி, நீ எப்படி இவங்க கிட்ட மாட்டிக்கிட்ட? உன்னை யார் கடத்தினா?”, என்று கேட்டான் யுவன்.
“நான் வி. எஸ் அப்படிங்குற மருந்து பேக்டரில சுப்பர்வைசரா வேலை பாக்குறேன் யுவன். அங்க பல தில்லு முல்லு நடந்துச்சு. அதை கண்டு பிடிச்சு தட்டிக் கேட்டேன். இங்க எல்லாம் இப்படி தான். இந்த விஷயத்தை எல்லாம் வெளிய சொல்லக் கூடாதுன்னு என்னை மிரட்டினாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா அங்க வேலை பாக்கப் பிடிக்கலை. அதனால வேலையை விடலாம்னு யோசிச்சேன். அப்ப தான் எதிர்பாராத விதமா என்னோட அப்பா இறந்துட்டாங்க. நிறைய கடன் வாங்கினதுனால கடன்காரங்க தொல்லை அதிகமாகிருக்கு. அதை எங்க கிட்ட சொல்லாம மனசுக்குள்ளே புழுங்கி அவருக்கு மாரடைப்பு வந்துருச்சு. அவர் இறந்த பிறகு தான் எங்களுக்கு விஷயமே தெரியும். அதுக்கப்புறம் கடனைக் கட்ட எல்லாருக்கிட்டயும் கொஞ்சம் டைம் கேட்டேன். கடனைக் கட்டணும்னா நான் வேலைக்கு போய் தானே ஆகணும்னு மறுபடியும் வேலைக்கு போனேன். அப்புறம் எல்லாம் சரியா தான் போயிட்டு இருந்துச்சு. அப்ப தான் டெல்லில இருந்து எங்க எம். டி இந்த பிரான்ச்க்கு வந்தான்”
……
“எனக்கு இங்க நடக்குற தில்லு முல்லு தெரியும்னு இங்க இருக்குறவங்க அவன் கிட்ட சொல்லிருப்பாங்க போல? எனக்கு விஷயம் தெரிஞ்சதுனால என்னைய வச்சு என்னைக்குனாலும் அவங்களுக்கு ஆபத்துன்னு அவன் தான் என்னை விட்டு வைக்க கூடாதுன்னு ஆள் வச்சு கடத்தி. இங்க கொண்டு வந்து விட்டுட்டான். இங்க இருக்குறவங்க கிட்ட சொன்னா நீ மோதினது பெரிய இடம் மா. திரும்பி போக முடியாதுன்னு சொல்லிட்டாங்க. போலீசும் அவங்க பக்கம் தானாம். அப்ப தான் ஒரு அக்கா போனை கொடுத்து யாருக்காவது பேசி ஹெல்ப் கேளுன்னு சொன்னாங்க. எனக்கு நாலு மாசம் கழிச்சு முரளின்னு ஒருத்தன் கூட கல்யாணம் முடிவு பண்ணிருந்தாங்க. அவனுக்கு தான் முதல்ல கால் பண்ணினேன். ஆனா அவன் நான் விஷயத்தை சொன்ன உடனேயே காலை கட் பண்ணிட்டான். அப்ப தான் உனக்கு பண்னினேன். நீ நம்பர் மாத்திருப்பியோன்னு பயமா இருந்துச்சு. ஆனா நீ நம்பர் மாத்தாது என்னோட அதிர்ஷ்டம். இந்த உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் யுவன். நான் உனக்கும் யுக்தாவுக்கும் பண்ணின பெரிய பாவத்தைக் கூட மன்னிச்சு எனக்கு பெரிய அளவுல உதவி பண்ணிருக்க. ரொம்ப தேங்க்ஸ். உன் உண்மையான நட்பை புரிஞ்சிக்காம காதல் அது இதுன்னு உளறினது இப்ப அசிங்கமா இருக்கு”
“உனக்கு என் மேல இருந்தது லவ் இல்லை ரேவதி. அது சின்ன ஒரு அட்ராக்சன் அவ்வளவு தான். அந்த வயசுல எல்லாருக்கும் தோணுறது தான். அதுக்காக நீ பண்ணினது எல்லாம் ரைட்டுன்னு சொல்ல மாட்டேன். யுக்தாக்கு நீ பண்ணினது பெரிய துரோகம் தான்”, என்று அவன் சொன்னதும் அவள் தலை குனிந்தாள்.