முதலில் அதிர்ந்தவள் விருப்பத்துடன் அவன் கைக்குள் புகுந்து கொண்டாள். இத்தனை நாள் தேடலை அந்த ஒற்றை முத்தத்தில் ஆற்றிக் கொண்டிருந்தான் மாதவன். சிறிது நேரம் கழித்து அவள் இதழ்களில் இருந்து பிரிந்தவன் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். அவனைக் காண முடியாமல் அவள் வெட்கத்துடன் தலை குனிய “அழகா இருக்க டி”, என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவளை இறுக்கிக் கொண்டான்.
அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளுக்கு தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி எழுந்தது.
“திடீர்னு அப்பா கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு சொன்னார். எனக்கு என்ன செய்யன்னே தெரியலை. உங்களைப் பாக்கணும்னு அப்ப இருந்து தவிச்சிட்டு இருக்கேன். நாளைக்கு கல்யாணத்துக்கு சொந்தக்காரங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துருவாராம்”
“அவர் சொன்னா நான் விட்டுருவேனா? நாளைக்கு அவர் வரட்டும். அவர் கிட்ட நான் பொண்ணு கேக்குறேன். உங்க சொந்தக்காரங்க முன்னாடி நம்ம கல்யாணம் நடக்கட்டும்”
“எங்க இனத்துல உங்களுக்கு தர மாட்டாங்க”
“தர வைப்போம். நீ ஏன் கவலைப்படுற? உன் வீட்டு முன்னாடி சோறு தண்ணி இல்லாம உக்காந்து தர்ணா பண்ணா தர மாட்டாரா உங்க அப்பா?”
“விளையாடாதீங்க. உங்களை ஏதாவது செஞ்சிட்டா? எனக்கு அது வேற பயமா இருக்கு”
“ஆபத்து வந்தா விலங்குகளைச் சுட வச்சிருக்குற துப்பாக்கி இருக்கே? அதைக் காட்டி தப்பிச்சிருவேன்”
“ஆனாலும் எனக்கு பயமா இருக்கு”
“பேசாம இப்பவே இப்படியே என் கூட வந்துறியா மங்கை? நாம இப்பவே இங்க இருந்து கிளம்பிறலாம். ஒரு வேளை உங்க அப்பா எனக்கு கட்டித் தரலைன்னா என்ன பண்ணுறது?”
“நான் இப்பவே உங்க கூட வந்தா எங்க ஜனங்க அப்பாவையும் குச்சியையும் ஏதாவது செய்வாங்க”
“என்ன செய்வாங்கன்னு ஏதாவது தெரியுமா? இதுக்கு முன்னாடி ஏதாவது நடந்துருக்கா?”
“எனக்கு என்ன செய்வாங்கன்னு தெரியாது. எங்க இனத்துல யாருமே இப்படி அந்நிய ஆம்பளைங்களை இது வரை காதலிச்சு தொலைக்கலை. நான் தான் எல்லாத்தையும் மீறி தப்பு பண்ணிட்டேனோன்னு இருக்கு. நான் உங்க போட்டோவை எடுத்துருக்க கூடாது. அதை பாத்து தானே நீங்க என்னை விரும்புனீங்க?”
“என்னை லவ் பண்ணினது உனக்கு தப்பாவா டி தெரியுது? அப்புறம் நீ போட்டோவை எடுத்ததுனால நான் உன்னை விரும்பலை. உன்னை முதல் தடவை பாத்தப்பவே நீ என் மனசுல பதிஞ்சிட்ட. அதுவும் என் வீட்ல என் கைக்குள்ள இருந்த பார். அப்பவே நான் என் மனசை உணர்ந்துட்டேன். போட்டோவை எடுத்தது எனக்கு உன் மனசை தெளிவு படுத்துச்சு அவ்வளவு தான்”
“எல்லாம் நல்லதா நடக்கும் தானே?”
“நடக்கும் டி. கவலைப்படாதே. உங்க அப்பா வரட்டும் நான் பேசிக்கிறேன் சரியா?”
“அப்பா சம்மதிக்கலைன்னா?”
“எப்படியாவது சம்மதம் வாங்குவோம். அப்படி சம்மதிக்கலைன்னா நீ லவ் பண்ணினதுக்கு உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பாங்க. வச்சா வச்சிட்டு போகட்டும். நான் உன்னை என் ஊருக்கு கூட்டிட்டு போறேன்”
“அப்படிக் கூட்டிட்டு போனா உங்க அம்மா என்னை ஏத்துக்குவாங்களா? அவங்களை மாதிரி எனக்கு சேலை கட்டவே தெரியாது”
“அம்மா அன்னைக்கே சரின்னு சொல்லிட்டாங்க டி. உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க. அதைச் சொல்ல கோவிலுக்கு வந்தா நீ திட்டி அனுப்பிட்ட. உன்னைக் கூட்டிட்டு ஊருக்கு வரச் சொன்னாங்க. அப்புறம் சேலை கட்டுறது எல்லாம் பெரிய விஷயமா? ஊருக்கு போனதும் முதல் வேலையா உனக்கு சேலை கட்ட தான் சொல்லித் தருவேன்”
“ஏன் இது நல்லா இல்லையா?”
“சாத்தியமா நல்லா இல்லை”, என்று அவன் சொல்ல அவள் முகம் கூம்பிப் போனது.
“நீ இப்ப கட்டிருக்குறது அழகா தான் டி இருக்குது. ஆனா எங்கயாவது தெரியுதா பாரு. எல்லாம் மூடி வச்ச மாதிரி இருக்கு. அப்படி கட்டினா இப்படி இருக்காதுல்ல? அதான் சொன்னேன்”, என்று சொல்லி அவன் கண் சிமிட்ட அவள் முகம் சிவந்தது.
அவள் வெட்கத்தை ரசித்தவன் “ஐயோ கொல்றடி, அப்படியே பிங்க் கலர்ல உன் முகம் மாறிருச்சு”, என்று அவளுடைய கன்னம் வருட அவள் மேலும் சிவந்து தான் போனாள்.
அவன் உணர்வுகள் தறிகெட்டு எழும்ப அதை அடக்கியவன் “உன் மேல செம கோபத்துல இருந்தேன் டி” என்றான்.
அவன் சொன்னதில் சகஜமானவள் “என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.
“இத்தனை நாள் எதுக்கு என்னைப் பாக்கலை? கோவிலுக்கு கூட நீ வரலை? கொஞ்சமாவது என்னைப் பத்தி யோசிச்சியா?
“அது… அது வந்து… நிஜமாவே உங்களுக்கு நான் தகுதி இல்லைன்னு நினைச்சு…”
“தகுதின்னு நீ எதைச் சொல்ற மங்கை? மனசு ஒண்ணு சேந்த பிறகு வேற எதுவும் நமக்குள்ள வரக் கூடாது. என்னை விட நீ ரொம்ப அழகு. உடனே நான் நீ எனக்கு பொருத்தம் இல்லைன்னு நினைச்சு விலகி போனேனா?”
“நான் ஒண்ணும் அழகில்லை. நீங்க தான் அழகு”
“மங்கை, நான் உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கேனா டி? ஸ்கூல் படிக்கும் போது எனக்கு நிறைய பரு வரும். அந்த தடம் கூட அப்படியே இருக்கு பாரு. ஆனா உன் முகம் எப்படி எந்த பரு மரு எதுவும் இல்லாமல் அழகா இருக்கு. அப்படியே சாஃப்டா இருக்க டி?”
“ஐயோ போதும் விடுங்க. உங்க கம்பீரம் எவ்வளவு அழகுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்”, என்று சிணுங்கியவள் “இங்க உள்ள சுத்தமான தண்ணீர் காரணமா இருக்கலாம். உங்க முகத்தையும் என்னோட முகம் மாதிரி மாத்துறேன் சரியா?”, என்று கேட்டாள்
“அது மாறுதோ மாறலையோ? உனக்கு என்னைப் பிடிச்சிருக்குல்ல? நீ ரசிக்கும் படியா இருக்குறதே எனக்கு போதும். சரி மேடம் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க. நான் வேண்டாம்னு ஒதுங்கி இருந்த நீங்க எப்படி மனசு மாறுனீங்க?”
“அதுவா? அப்பா மாப்பிள்ளை பாக்குறேன்னு கிளம்பினதும் தான். எனக்கு அழுகையா வந்துச்சு. எனக்கு உங்களைத் தவிர வேற யாரையும் அந்த இடத்துல வச்சிப் பாக்கணும்னு தோணலை. குச்சியா கண்டு பிடிச்சு கேட்டான். எனக்கும் உங்களைப் பாக்க ஆசையா இருந்துச்சு”
“இப்பவாது தோணுச்சே. உனக்காக கோவிலுக்கு வந்து எத்தனை நாள் தவம் இருந்தேன் தெரியுமா டி? உன் வீட்ல வந்து பாக்கணும்னு தோணும். என் கிட்ட பேசாம இருக்குற இந்த உதட்டைக் கடிச்சு வைக்கணும்னு தோணும்”, என்று சொன்னவன் அதை செய்கையில் அவளுக்கு புரிய வைக்க மீண்டும் அங்கே ஒரு முத்த யுத்தம்.
சிறிது நேரம் கழித்து அவன் விலகியதும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் “இப்பவும் எனக்கு அந்த சந்தேகம் இருக்கு?”, என்றாள்.
“ஏது? சந்தேகமா? என்ன டி சந்தேகம்?”
“நான் உங்களுக்கு பொருத்தம் தானா?”
“போச்சு டா”
“உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலைல?”
“அடப் போடி, எங்க அம்மா அன்னைக்கு நீ போன பிறகு பொண்ணு ரொம்ப அழகுன்னு சொல்லிட்டு இருந்தாங்க தெரியுமா. நீ அம்மாவை நேர்ல பாக்குற வரைக்கும் நம்ப மாட்ட. பாத்த பிறகு உனக்கே தெரியும்”
“ஆனா, அந்த பொண்ணு….”, என்று வெண்ணிலா பற்றி கேட்டாள்.
“அவ ஒரு லூசு. என் கிட்ட அவ மனசை சொன்னா. நான் கேக்கலைன்னதும் அம்மாவை சம்மதிக்க வைக்க பார்த்தா. அம்மா என் விருப்பம் தான்னு சொல்லிட்டாங்க. அது தெரியாம அவ உன் கிட்ட வந்து உளறிருக்கா. நீயும் நம்பிட்ட. என் அன்பு மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? என் சட்டையைப் பிடிச்சு சண்டை போட்டுருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன் டி”
“ஐயோ ஐயோ எனக்கு பதில் சொல்லி முடியலை. நீ என் வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு அதை தெரிஞ்சிக்கோ”
“அப்படி ஒரு சம்பவம் நடக்குமாங்க? எனக்கு என்னமோ தப்பா நடக்க போற மாதிரி பயமா இருக்கு”
“கட்டாயம் நல்லதே நடக்கும். நான் நடக்க வைப்பேன் டி”
“சரி நான் போகட்டா? குச்சி தேடுவான்”
“அதுக்குள்ளயா? உன்னை விடவே மனசில்லை டி”
“இல்லை, எங்க ஆட்கள் குச்சி கிட்ட என்னை எங்கன்னு கேப்பாங்க. அவன் தனியா சமாளிக்க கஷ்டப் படுவான்”
“பிளீஸ் ரொம்ப நாள் கழிச்சு பாத்துருக்கோம். ஒரு பத்து நிமிஷம் மட்டும் இரு டி”
“இல்லை நான் போறேன்”
“சரி போ”, என்று கோபப் பட்டவன் ஒரு மரத்தடியில் இருந்த பாறையில் அமர்ந்தான்.
“சரி, சரி இருக்கேன் போதுமா?”, என்று அவள் சொன்னதும் “அங்க நின்னா எப்படி? இங்க கிட்ட வா”, என்று சொன்னான்.
தயக்கத்துடன் அவன் அருகில் வந்து நின்றதும் அவள் கையைப் பிடித்து சுண்டி இழுத்தான். திடீரென்று அவன் இப்படி செய்வான் என்று தெரியாமல் அவன் மார்பில் மீது வந்து விழுந்தாள் வனமங்கை.
அவளை பிடித்து அருகில் அமர வைத்தவன் அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவள் கைகள் அவன் தலையை வருடி விட்டது.
பத்து நிம்டம் என்பது பல பத்து நிமிடங்களாக கடந்த பிறகு “நேரம் ஆச்சு”, என்று தயக்கத்துடன் சொன்னாள். அவனுக்கும் அது புரிய “சரி, கிளம்பு” என்று சொல்லி எழுந்து கொண்டான். எழுந்த அவளோ அவசர அவசரமாக அருவியை நோக்கிச் சென்றாள்.
“ஏய் என்ன டி அங்க போற? குளிக்க போறியா என்ன?”
“இவ்வளவு நேரம் எங்க போனேன்னு எல்லாரும் கேப்பாங்க. குளிச்சிட்டு போனா கேக்க மாட்டாங்கல்ல? அதான்”, என்று சொல்லி அவள் அருவிக்குள் செல்ல அவளுடைய புத்திசாலித்தனத்தைக் கண்டு புன்னகைத்தான் மாதவன்.