சிறிது நேரம் சென்று சித்தார்த் அவனாகவே சந்தியாவை அழைத்தான்.
“ஹாய் சந்தியா…” என்று அவன் உற்சாகமாக பேச,
“எங்கடா இருக்க நீ? சாப்பிட்டியா…” என்றாள் சந்தியா அக்கறையாக.
“நான் இப்ப விருதுநகர்ல இருக்கேன். வெங்கியோட ப்ரண்ட்ஸ் பத்து பேர் சேர்ந்து இங்க வந்தோம். இங்க ஒரு ஹோட்டல்ல எண்ணெய்ல போட்ட பரோட்டா, சால்னா அப்புறம் மட்டன்சாப்பிட்டேன். ரொம்ப டேஸ்ட்டா இருந்தது. இப்ப ஊருக்கு திரும்பி வந்திட்டு இருக்கோம்.
அப்புறம் நான் வெங்கியோட நைட் ஷோ சினிமாக்கு போறேன். உங்க ஊர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் ரொம்ப ஜாலியா இருக்கேன். உங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் சூப்பர். என்னை எதோ ஹீரோ மாதிரி பார்க்குறாங்க. செமயா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். நீ என்னை டிஸ்டர்ப் பண்ணாத ப்ளீஸ்….” என்ற சித்தார்த் போனை வைத்துவிட்டான்.
எல்லாம் என் நேரம் என்று நொந்தபடி சந்தியா போனை வைத்தவள், கதிருக்கு அழைத்துச் சித்தார்த் சொன்னதைச் சொல்லி புலம்ப,
“விடு சந்தியா. அவனுக்கு இதெல்லாம்புதுசு இல்லையா. அவன் விருப்பப்படி இருக்கட்டும்…” என்று அவனும் சித்தார்த்துக்குப் பரிந்து பேச
“எப்படியும் போங்க…” என்று சந்தியா போனை வைத்து விட்டாள்.
மாலை வேதவல்லியும், அப்பத்தாவும் வந்து சித்தார்த்தை பார்த்துவிட்டு சென்றனர்.
“நீ என் பேத்திக்கு ரொம்பத் தோஸ்த்தாமுல. காலேஜ்ல நீ தான் அவளை நல்லா பார்த்துப்பியாம். எப்பவும் அப்படிப் பார்த்துக்க. அவ இதெல்லாம் உனக்குப் பிடிக்கும்னு சொன்னா…” என்று ஒரு பலகார கூடையை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றார் அப்பத்தா.
சித்தார்த்துக்கு அந்த ஊரையும், அங்குள்ளவர்களையும் பிடித்திருந்தது. எவ்வளவு என்று கேட்டால் அந்த ஊரில் யாரவது அவனுக்குப் பெண் கொடுக்கிறேன் என்று சொன்னால் மறுக்காமல் தலை ஆட்டும் அளவிற்கு.
திருமணத்தன்று காலை சந்தியா தன் உறவினர்கள் மற்றும் தோழிகள் படை சூழ, மண்டபத்திற்குச் சென்றாள். சந்தியா காரிலிருந்து இறங்கும் போது பச்சை கலர் சில்க் காட்டன் சட்டையும், கரை வைத்த வேட்டியும் அணிந்து, தலையைத் தூக்கி வாரி. அந்த விடியற்காலை நேரத்தில் கண்களில் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
சந்தியா மண்டபத்திற்குள் நடந்து செல்லும் போது, யாரு இந்த மல்லு வேட்டி மைனர்…? என்று யோசித்துக்கொண்டே சென்றவளுக்கு, அருகில் வந்ததும் தான், அது சித்தார்த் என்று தெரிந்தது.சந்தியா அதிர்ச்சியில் அவனையே பார்க்க. போட்டிருந்த கண்ணாடியை மேலேற்றிய சித்து, சந்தியாவைப் பார்த்து கண்சிமிட்ட, அப்போது அவன் அருகில் வந்த வெங்கி அதே போன்ற உடையுடன், சட்டை மட்டும் சிவப்பு நிறத்தில் அணிந்து கொண்டு நின்றான்.
எல்லாம் ஒரு மார்கமா தான் இருக்குங்க என்று நினைத்த சந்தியா மண்டபத்திற்குள் செல்ல, அவள் அருகில் வந்த சித்தார்த் “எப்படி இருக்கேன்…? சூப்பரா…” என்றதும் சந்தியா தலையில் அடிக்க,
“ஹே உனக்குப் பொறாமை. எத்தனை பொண்ணுங்க என்னைப் பார்க்குது தெரியுமா. அதுங்க பார்க்கிறது கூடப் பரவாயில்லை. உங்க அப்பா எப்படி என்னையே முறைச்சு பார்க்கிறார் தெரியுமா. நான் அவ்வளவு அழகா இருக்கேன்.” என்றான் சித்தார்த் பெருமையாக.
அப்பா என்றதும் சந்தியா சுற்றி விழிகளால் தேட, துரை சித்தார்த்தை பார்த்து முறைத்துக்கொண்டு தான் இருந்தார். ஆனால் ஆசையாக இல்லை. கோபமாக. அதைப் பார்த்து சந்தியாவுக்கு வருத்தமாக இருந்தது.
சந்தியாவின் முகம் வாடுவதைப் பார்த்த சித்தார்த் பேச்சை மாற்றும் பொருட்டு “நீ என்ன என்னைப்பார்த்தே இப்படித் திகைச்சிட்ட. இன்னும் நீ கதிரை பார்த்தா என்ன சொல்லுவ. இருக்கிறதுலேயே அவர் கலர் தான் சூப்பர்.” என்றதும், சந்தியா உண்மையிலேயே பயந்து விட்டாள்.
அந்தப் பயம் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து கதிர் மண்டபத்திற்கு வரும் வரை தொடர்ந்தது. கதிர் மண்டப வாசலில் வந்து நின்றதும், சந்தியா மாடியில் அவள் அறையில் இருந்து ஜன்னல் வழியாகஎட்டிபார்த்தாள்.
கதிர் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் கம்பீரமாக, அழகாக நின்றான். சந்தியா அவனை விழி எடுக்காமல் பார்த்து ரசிக்க. கதிர் அருகில் நின்ற சித்தார்த் அவளைப் பார்த்து கிண்டலாகப் புருவத்தை உயர்த்த. சந்தியா அவனைப் பார்த்துப் பொய்யாக முறைத்தாள்.
இதுவரை எல்லாம் நன்றாகத் தான் சென்றது. துரை மட்டுமே முகத்தைத் தூக்கி வைத்துகொண்டு இருந்தார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மாப்பிள்ளை மண்டப வாசலில் வந்து நிற்கும் போது செய்ய வேண்டிய மரியாதையைப் பெண்ணின் சகோதரன் தான் செய்வார். அப்படியாரும் இல்லையென்றால் பெண்ணின் தந்தை தான் செய்ய வேண்டும்.
சந்தியாவிற்கு உடன் பிறந்த சகோதரன் யாரும் இல்லாத காரணத்தால். தன் சகோதரியின் மகனை அழைத்துக் கதிருக்கு செயின், மோதிரம் போட சொன்னார் துரை. அது வரை சரி தான். ஆனால் திருமண மாலையையும் அவனையே போட சொன்னார். அது அவர் போட வேண்டியது.
சந்தியாவின் அத்தை மகன் கதிரை விட இளையவன், ஏன் சந்தியாவை விட அவன் இளையவன். கதிருக்கு அவர் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது போல் இருந்தது. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. சுற்றியிருந்த உறவினர்களுமே ஒரு மாதிரி பார்த்தனர்.
சித்தார்த்துக்கு இந்த முறை பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் புன்னகையுடன் இருந்த கதிர் முகம் மாறியவுடன் குழப்பத்துடன் சுற்றி பார்க்க, அப்போது காவேரி தன் கணவனிடம் கோபமாகப் பேசுவதை வைத்து தான் அவனுக்குப் புரிந்தது.இதையெல்லாம் மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சந்தியா அழுதாள். இப்படித் திருமணம் செய்வதற்குத் தன் தந்தை திருமணத்திற்குச் சம்மதிக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
கதிரும் எவ்வளவு தான் பொறுத்து போவான். தன் தந்தை அவனை ரொம்பவும் சோதிக்கிறார் என்று சந்தியாவுக்குப் புரிந்தது. தான் மட்டும் அன்று கதிரையும், நந்தினியையும் இணைத்துப் பேசாமல் இருந்திருந்தால். கதிர் தன்னைப் பார்க்க கல்லூரிக்கே வந்திருக்க மாட்டான். இதெல்லாம் தன்னால் ஆனால் தன் அப்பாவோ கதிரை தான் குற்றவாளியாகப் பார்க்கிறார்.
இதையெல்லாம் யார் போய் அவரிடம் சொல்வது. கேட்பதற்குத் தான் அவருக்குப் பொறுமை இருக்கிறதா என்று மனதிற்குள் வேதனைப்பட்டே சந்தியா நொந்து போனாள்.மாப்பிள்ளை அழைப்பு முடிந்து கதிர் நேராக மணமேடைக்குத் தான் செல்ல வேண்டும். ஆனால் அவன் மாடியை நோக்கி சென்றான். ஒரு வேளை மேலே அவன் அறையில் உடை எதுவும் சரி செய்யப் போகிறானோ என்று நினைத்த சுபாஷும், சித்தார்த்தும் அவனுடன் சென்றனர்.
சோலைக்கு எதோ சரியில்லை என்று புரிந்ததால். அவன் பதற்றத்துடன் பின்னே செல்ல. அவனைப்பார்த்து பாலாவும் சென்றான்.மேலே சென்ற கதிர் தனது அறைக்குச் செல்லாமல். நேராகச் சந்தியாவின் அறைக்குள் சென்றவன், ஜன்னலின் அருகே நின்று கொண்டிருந்த சந்தியாவைத் தொட்டுத் திருப்பினான். கதிரை அங்கே எதிர்பார்க்காத சந்தியா திகைத்து விழித்தாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்ததும், கதிரின் கோபம் சற்று அடங்கியது.
மணமகள் அலங்காரம் முடிந்து மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பித்ததும், சந்தியாவை அவள் தோழிகளுடன் விட்டுவிட்டு உறவுப்பெண்கள் கீழே சென்றுவிட்டனர். அதனால் அப்போது வேறு யாருமில்லை.கதிர் சுற்றி இருந்த மற்றவர்களைப் பார்க்க, எல்லோரும் அமைதியாக வெளியே சென்றனர். அந்த அறையில் கதிரும், சந்தியாவும் மட்டும் தனித்து இருந்தனர்.
சந்தியாவின் அருகில் நின்ற கதிர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் அவன் மனதிற்குள் குமுறிக்கொண்டிருக்கிறான். என்று புரிந்த சந்தியா “போதும் மாமா என்னால நீங்க அவமானப்பட்டது. கல்யாணத்தை நிறுத்திடுங்க.” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்ட கதிர், அதுவரை எரிமலையாக இருந்தவன், இப்போது குளிர்ந்த நீரோடை போல் மாறி விட்டான்.
“ஹே எதாவது உளறாத… மனசு சரியில்லை அப்படியே போய் மனமேடையில உட்கார்ந்தா நல்லாயிருக்காதுன்னு தான் உன்னைத் தேடி வந்தேன். வாழ்க்கையில ஒரு முறை நடக்கிற கல்யாணத்தில அழுது வடிஞ்சா நல்லாயிருக்காது இல்ல. நான் சொல்றது சரியா…” என்றதும், சந்தியா புரிந்தும், புரியாமலும் தலை ஆட்ட,
“ஒரு முறை தான் கல்யாணம் பண்ணிக்க முடியும் இல்ல….” என்று கதிர் சோகமாக இழுக்கவும். சந்தியா அவனைப்பார்த்து முறைத்தாள்.
“இப்பத்தான் புரியுதா….” என்று அவளைப்பார்த்து கதிர் சிரிக்க, சந்தியாவும் புன்னகைத்தாள்.
மணமேடைக்குச் செல்ல வேண்டிய நேரத்தில், மணமக்கள் இருவரும் ஒரு அறையில், திருமணத்தைப் பற்றி எண்ணமே இல்லாமல் நின்று கொண்டிருந்தால், மற்றவர்களும் அப்படியே இருப்பார்களா என்ன…?
என்னாச்சு மாப்பிள்ளைய இன்னும் காணோம் என்று ஆளாளுக்குக் கேட்க ஆரம்பிக்க, அப்போது ஒரு பொடிசு வந்து கதிர் மாமா சந்தியா அக்காவோட பேசிட்டு இருக்காங்க என்று போட்டுக் கொடுத்ததும், இந்நேரத்தில் பெண்ணும், மாப்பிள்ளையும் அப்படி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று எல்லோருக்கும் பதற்றம் தொற்றிக்கொன்றது.
துரைக்கே கல்யாணம் நடக்குமா என்று மனதிற்குள் பயம் வந்துவிட்டது. அவருக்கே நன்றாகத் தெரியும், தான் இன்று நடந்து கொண்டது அதிகப்படி என்று. அவர் குற்ற உணர்வுடன் வேதவல்லியை பார்க்க. அப்போது அவரும் துரையைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்வை ‘நீயெல்லாம் ஒரு மனுஷனா, பெத்த பொண்ணு வாழ்க்கையில இப்படி விளையாடி பார்க்கிறியே…’ என்பது போல் இருந்தது.