அவசரமாக படியிறங்கி வந்த பூங்கோதையை செய்தி தாளில் இருந்து கவனத்தை பிரிக்காது கண்டு கொண்டவர் “என்ன எழுப்பிவிட்டுட்டியா” என்று கணீர் குரலில் தணிகாசலம் கேட்க,
சட்டென நடையின்வேகம் குறைந்து விட்டது பூங்கோதைக்கு.
“ஆச்சுங்க பாவம் நைட்டெல்லாம் தூக்கமே இல்லையாம். அதான் எந்திரிக்க லேட் ஆகிருச்சு குளிச்சிட்டு இருக்கான் இப்போ கிளம்பி வந்துருவான்” என்று தயங்கி கூறியவர் கணவரை பார்த்தார். கண்டிப்பு நிறைந்த பார்வையில் நம்பும் தன்மை சிறிதும் இல்லை.
“அத்தை கொஞ்சம் இங்க வாங்களேன்” என்று சமையல் அறையில் இருந்து கொண்டு குரல் பவித்ரா கொடுக்க.
“ஏங்க பவி கூப்பிடுறா நா போய் என்னனு கேட்டுட்டு வறேன்” என்று அனுமதியாய் கேட்டவர் அவரின் முறைப்பை கண்டு,
“என்னம்மா என்ன வேணும்” என்றபடியே அடுகளைக்குள் சென்று மறைந்து கொண்டார் பூங்கோதை.
மனைவியின் செயலில் “ம்ஹும்” என்று தலையாட்டி அலுத்து கொண்டவர் செய்தி தாளில் கவனத்தை செலுத்தினார்.
“அத்தை ஒரு சின்ன ஹெல்ப். பாலா கேசரி வேணும்னு கேட்டான் நா பண்ணி கொண்டு வரேன்னு சொல்லிருந்தேன் ஆனா, அது எப்டி பண்ணறதுன்னு எனக்கு தெரியாது. நீங்க கேசரி பண்ணி கொடுக்குறிங்களா?” என்று சங்கடம் நிறைந்து கேட்க,
“உரிமையா கேக்க வேண்டியத ஏம்மா உதவியா கேக்குற நீ போய் ரெடியாகு நா செஞ்சு வைக்கிறேன்” என்றதும் தான் தவிப்பு மறைந்து புன்னகை மலர்ந்தது.
“சரிங்க அத்தை” என்றவள் சமையல் அறையில் இருந்து வெளியே வர,
“பவித்ரா இங்க வாம்மா” என்று அழைத்தார் தணிகாசலம்.
அருகில் வந்தவள் “என்ன மாமா” என்று கேட்க,
“என்னமா இன்னைக்கு டியூட்டி இல்லையா?”.
“போகணும் மாமா”.
“சரிம்மா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நேரம் இருக்கா இல்ல லேட் ஆகிருச்சா?”.
“இன்னும் டைம் இருக்கு மாமா”.
“சரி வந்து உக்காரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும். நைட்டே இதை பத்தி பேசலாம்னு இருந்தேன் நா வர்றதுக்குள்ள துங்கிட்ட” என்றவர் செய்திதாளை மடித்து ஓரமாய் வைக்க, கேள்வி எதுவும் கேட்காமல் அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள் பவித்ரா.
“இந்த மாமா உனக்கு எது பண்ணாலும் அது உன்னோட நல்லதுக்கு தான்னு நீ நம்புறயா பவி?” என்ற கேள்வியில் திகைப்புடன் எதிரில் அமர்ந்திருந்தவரை பார்த்தாள் பவித்ரா.
“என்ன மாமா திடீர்னு இப்டி இந்த வாழ்க்கையே நீங்க அமைச்சு கொடுத்தது. சொல்லுங்க மாமா நா என்ன செய்யணும்” என்றவளை பெருமையும் கர்வமும் மிளிர பார்த்தார் தணிகாசலம்.
“உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுப்பேன்னு உன்னோட அம்மாகிட்ட நா சத்தியம் பண்ணிருக்கேன்” என்றவரின் முகத்தில் வருத்தம் இழையோடியது.
“நீங்க எனக்கு எது பண்ணாலும் அது நல்லதா தான் இருக்கும். உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு மாமா நீங்க தயங்காம விஷயம் என்னனு சொல்லுங்க”.
“ஒரு நல்ல வரன் வந்துருக்குடா நல்ல குடும்பம் பையனும் டாக்டருக்கு தான் படிச்சிருக்கான் ஆனா ஃபாரின்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கான். நீ என்னமா சொல்ற? அவங்கள பொண்ணு பாக்க வர சொல்லவா” என்று கேட்டு அவள் முகம் பார்த்தார் தணிகாசலம்.
எதிர்பாராதா கேள்வியில் சட்டென ஒப்பு கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டாள் பவித்ரா. இதுவரை திருமணத்தை பற்றி யோசித்து பார்த்தது இல்லை வாழ்க்கை முழுமைக்கு மருத்துவ சேவை ஒன்றே போதும் என்று எண்ணியிருக்க, தணிகாசலம் கேட்டதும் சரி இல்லை என்று பதில் கூற முடியாமல் ஆள்காட்டி விரலை நீவிவிட்டபடி அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.
அவளின் அமைதி அவரின் மனதில் ஏதேதோ எண்ணங்களை தோற்றுவித்து கலக்கத்தை உண்டு பண்ண.
“என்னமா எதுவும் சொல்லாம இருக்க. எனக்காக சரின்னு சொல்ல வேணாம் பையனோட ஃபோட்டோவை பாத்துட்டு பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு! ஒன்னும் அவசரமில்ல. உன்னோட விருப்பத்துக்கு மாறா மாமா நடந்துக்க மாட்டேன்” என்று தன்மையாய் கூற,
“அவ என்ன சொல்றது” என்று சமையல் அறையில் இருந்து வேகமாக வந்த பூங்கோதை,
“பவி நீ போய் கிளம்பு லேட் ஆகிருச்சு” என்று வேகமாக சொல்ல,
அனுமதி கேட்கும் பார்வையில் தணிகாசலத்தை தயங்கி பார்த்தாள் பவித்ரா.
“நீ போம்மா மாமா எதுவும் சொல்ல மாட்டாரு” என்றதும் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட,
அவள் அறைக்குள் செல்லும் வரை அமைதிக்காத்தவர் “என்னாச்சு உங்களுக்கு நா முன்னாடியே உங்ககிட்ட சொல்லிருக்கேன் விஷ்வா பவி ரெண்டுபேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு. அப்ப சரின்னு தலையாட்டிட்டு இன்னைக்கு வேற வரன் வந்துருக்குன்னு சொல்றிங்க”,பூங்கோதையின் பேச்சில் கீற்றாய் கோபம் எட்டி பார்த்தது.
“அப்ப இருந்த நிலைமை வேற இப்போ இருக்குற நிலைமை வேற கோதை அவனை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம அன்னைக்கு சரின்னு சொன்னேன். ஆனா.. இன்னைக்கு அவன் நடந்துக்கிறதை பாக்கும் போது ரெண்டுபேருக்கும் ஒத்து வராதுன்னு தோணுது”.
“என்ன ஒத்து வராது அன்னைக்கொரு பேச்சு இன்னைக்கொரு பேச்சு பேச கூடாது. எப்பவும் ஒரே மாதிரி ஒரே மனநிலையோட இருக்கணும்” என்றார் அழுத்தம் நிறைந்த குரலில் பூங்கோதை.
“இங்க பாரு கோதை என்ன நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும் நா முடிவு எடுத்தது எடுத்தது தான். பவிக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டி கொடுக்க போறேன். அந்த பொண்ண கண்டாலே எரிஞ்சு விழுகுறான் எந்த நம்பிக்கையில ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற?” என்றவருக்கு பொறுமை மெல்ல மெல்ல கரைய தொடங்கியது.
“கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிரும் பெரியவங்கன்னு நாம ரெண்டு பேர் எதுக்கு இருக்கோம் எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பான்” என்றார் திடமாக.
“ப்ச் நா சொல்றத நீங்க முதல புரிஞ்சுக்கோங்க நம்ம பையன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அவன் என்னோட வளர்ப்பு. நா சொன்னா கண்டிப்பா கேட்பான்”.
“இல்ல கோதை இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்கலாம் எனக்கு இதுல உடன்பாடு இல்ல. அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும்னு நா நினைக்கிறேன். உன்னோட ஆசையால அது பாழாகிட கூடாது,
கணவன் மனைவிக்குள்ள பிரதானமா இருக்க வேண்டியதே அன்பும் அரவணைப்பும் தான். அஸ்திவாரமே நல்லா இல்லாத போது கட்டிடத்தை எப்டி எழுப்ப முடியும்?. அவங்க ஒன்னும் சின்ன பசங்க இல்ல எல்லாத்தையும் சொல்லி சொல்லி புரிய வைக்கிறதுக்கு.
பவி என்னோட தங்கச்சி பொண்ணு அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன். அவளுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்குறேன்னு வாக்கும் கொடுத்துருக்கேன்” என்று கவலை இழையோட அழுத்தமாய் கூறினார் தணிகாசலம்.
“ஏங்க நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது” என்று இருவரும் அவரவர் எண்ணத்தை அழுத்தமாக சொல்லி கொண்டிருக்க,
“அம்மா” என்ற விளிப்பில் பேச்சை நிறுத்திவிட்டு இருவரும்மேலே பார்க்க, விஷ்வா நின்று கொண்டிருந்தான்.
வேகமாக படிகளில் இறங்கி வந்தவன் “எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க” என்று அமர,
‘கேட்டுறுப்பானோ’ என்று எண்ணி கொண்டே கணவருக்கும் மகனுக்கும் தட்டை எடுத்து வைத்து பரிமாற தொடங்கினார் பூங்கோதை.
உணவோடு மௌனமும் பரிமாறபட மூவரும் பேசவில்லை உணவு உள்ளே சென்றாலும் கவனம் மட்டும் ஒருவர் மீது ஒருவராய் மாறி மாறி பயணித்தது. பொறுத்து பார்த்தவர் இனி அமைதி காத்து பயன் இல்லை என்பதை உணர்ந்து மௌனத்தை உடைத்தார் தணிகாசலம்.
“என்னடா முடிவு பண்ணிருக்க?”என்று தன்மையாய் கேட்க,
“எதை பத்தி” என்றான் சாவாதினமாக இட்டிலியை உள்ளே இறக்கியபடி விஷ்வா.
தணிகாசலம் பூங்கோதையை முறைத்து பார்க்க, கணவரின் பார்வையில் பயந்து போனவர் இன்னும் இரண்டு இட்டிலிகளை மகனின் தட்டில் வைத்து “என்னடா விஷ்வா மறந்துட்டியா நேத்து அப்பா சொன்னாரே ஆபீஸுக்கு வர சொல்லி அத பத்தி தான் கேக்கிறாரு நீ என்ன முடிவு பண்ணிருக்க?” என்று நினைவு படுத்தினார் பூங்கோதை.
“அதை பத்தி நா யோசிக்கவே இல்ல ம்மா ரெண்டு நாள் வெய்ட் பண்ணுங்க என்னோட பதில சொல்றேன். இப்போ நா கிளம்புறேன் எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு” என்று கைகழுவி எழுந்து விட்டான் விஷ்வா.
மகனின் பேச்சில் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார் தணிகாசலம். ‘ஆத்திரத்தை காட்டினால் மொத்தமும் பாழாகிவிடும் விட்டு பிடிக்கலாம் இரண்டு நாள் தானே’ என்று மனதை தேற்றி கொள்ள,
“இருடா பேசிட்டு இருக்கும் போதே எந்திரிச்சு போற” என்ற பூங்கோதை பவித்ராவை அழைத்தார்.
மஞ்சள் நிற காட்டன் புடவையை உடுத்தி கொண்டு மிதமான ஒப்பனையில் கிளம்பி வெளியே வந்தவள் “சொல்லுங்க அத்தை”.
“நீ எதுலமா போற?”.
“பாலா வரேன்னு சொல்லிருக்கான். என்ன அத்தை?”.
“அவனுக்கு ஃபோன் பண்ணி வர வேணாம்னு சொல்லிரும்மா எனக்கு டேப்லெட் வாங்கணும் நீ விஷ்வா கூட போய் வாங்கி கொடுத்துட்டு அப்றமா ஹாஸ்பிடல் போ அவனையே டிராப் பண்ண சொல்றேன்” என்று இருவரையும் ஒன்றாக அனுப்பி வைக்க வேண்டி நைச்சியமாய் பேச,
மனைவி எதற்கு அடியெடுத்து வைக்கிறாள் என்று புரிந்தும் அமைதியாக அமர்ந்திருந்தார் தணிகாசலம்.
“ம்மா எனக்கு டைம் ஆகுது முன்னாடியே வாங்கி வைக்க மாட்டீங்களா? மருந்து சீட்டு கொடுங்க ஈவ்னிங் நானே வாங்கிட்டு வறேன்” என்று எரிச்சல் மேலோங்க கூறினான் விஷ்வா.
“மருந்து சீட்டு இருந்தா நானே போய் வாங்கிக்க மாட்டேனா. எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லடா பவிக்கு தான் என்ன மாத்திரைன்னு தெரியும். எப்பவும் அவ தான் வாங்கிட்டு வந்து கொடுப்பா” என்று கவலை தேங்கிய முகத்துடன் உரைத்தார் பூங்கோதை.
நடப்பதை வேடிக்கையாய் பார்த்து கொண்டிருந்த தணிகாசலத்திற்கு சிரிப்பு பீறிட்டது. ‘நாடகத்தை அற்கேற்றம் செய்வதில் கில்லாடி தான்’ என்று மனைவியை மனதில் மெச்சி கொண்டவர், கன்னத்தில் வைத்து சுவாரஸ்யத்துடன் கவனிக்க தொடங்கினார்.
அவனின் உதாசீனம் நிறைந்த பார்வையில் சுருங்கி போனவள் மனதில் எழுந்த வலியை தொண்டை குழியில் அடக்கி விழுங்கிவிட்டு “சாரி அத்தை கொஞ்சம் எமெர்ஜென்சி இன்னைக்கு சீக்கிரம் போகணும். ஈவ்னிங் வரும் போது வாங்கிட்டு வரேன் நைட் போடுறதுக்கு தானே வேணும்” என்று தயக்கத்துடன் பூங்கோதையை பார்த்தாள் பவித்ரா.
தங்கை மகளின் தயக்கம் எதனால் என்பதை புரிந்து கொண்டவருக்கு வலுக்கட்டாயமாக மகனுடன் அனுப்பி வைக்க மனம் வரவில்லை. ‘பாதி வழியில் இறக்கி விட்டு சென்றாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை’ என்ற எண்ண ஓட்டத்தில், பேச வாய் திறந்த மனைவியை முந்திக் கொண்டு பேச தொடங்கினார் தணிகாசலம்.
“பரவாயில்ல ம்மா நீ கிளம்பு. உன்னோட அத்தைக்குமருந்து தானே வேணும் ஈவ்னிங் வரும் போது நானே வாங்கிட்டு வந்து கொடுக்குறேன்” என்று பூங்கோதையிடத்தில் பார்வையை நிலை நிறுத்தி கூற, சரியென்று தலையாட்டியவள் இருவரிடமும் விடைபெற்று கொண்டு சென்றுவிட்டாள்.
ஏக்கம் நிறைந்து வாசலை பார்த்து கொண்டிருந்தவரிடம் “கோதை ரூம்ல ஃபைல் வச்சுறுப்பேன் அத எடுத்துட்டு வா எனக்கு டைம் ஆகுது” என்று சொல்ல, நாடகம் எடுபடவில்லையே என்று முகம் வாடியவர் ஃபைலை எடுத்து கொடுத்து விட்டு,
“டேய் விஷ்வா போற வழியில என்ன கோவில்ல இறக்கி விட்டுருடா” என்றவர் பூஜை அறைக்குள் மறைந்து கொள்ள,