ஒரு சிண்ட்ரெல்லா கதை 2
மாப்பிள்ளை வீட்டார் விடை பெற்றுச் சென்றிருக்க, மீதமிருந்த பஜ்ஜிகளையும் முருக்கையும் தட்டில் கொட்டிக் கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தார் செளமியின் தாய் கலாவதி. செளமியின் தந்தை சின்னசாமி, ஆர்வமாக பஜ்ஜியை எடுத்து வாயில் வைத்தார். மறு பஜ்ஜியை எடுக்க அவர் கைகள் நகர, பஜ்ஜி தட்டை தூர நகர்த்தி வைத்தார் கலாவதி.
“ஒண்ணு போதும். எண்ணெய் பலகாரம் உங்களுக்கு ஒத்துக்காது. ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம் இருக்கு. வாயை கட்டுப்படுந்துங்க மொதல்ல”
“இன்னொரு பஜ்ஜி மட்டும் குடு. மேலே கேட்க மாட்டேன்” என்று சிறுபிள்ளையாய் சின்னசாமி கேட்க, அவரை முறைத்துக் கொண்டே இன்னொரு பஜ்ஜியை அவர் கைகளில் திணித்தார் கலாவதி.
பெற்றவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் தனியே சேரில் அமர்ந்திருந்த செளமியாவின் தம்பி சங்கர் தன் கைப்பேசியில் மும்மரமாக இருந்தான்.
“செளமி எங்கடா? ரூம்லையா இருக்கா?” என வினவிய அன்னையிடம், சுட்டுவிரலைக் காட்டி மேலே என்றான்.
“செளமிப்பா என்ன நினைக்கறீங்க? இந்த இடம் முடிஞ்சுடுமா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பார்த்தா நல்ல மாதிரியா தான் தெரியுது. உங்க பொண்ணுக்கு போடறதை போடுங்கன்னு சொல்லிட்டாங்க. பெருசா எதிர்பார்க்கற மாதிரி எல்லாம் தெரியலை”
“மொதல்ல அவங்க முடிவு சொல்லட்டும் கலா. அப்பறம் மேற்கொண்டு யோசிப்போம். இப்போவே என்ன அவசரம்?”
“இல்லைங்க, நாம பையனைப் பத்தியும் வீட்டைப் பத்தியும் விசாரிச்சு வச்சுகிட்டோம்னா, அவங்க முடிவு சொல்லவும், மேற்கொண்டு பேச வசதியா இருக்கும்ல.”
“அட, அவசரப்படாதீங்கம்மா. அதான் அப்பா விசாரிக்கலாம்னு சொல்லறாங்களே. சும்மா நச நசங்காதீங்க. செளமிக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு மொதல்ல கேளுங்க. மத்ததெல்லாம் அப்பறம் பார்க்கலாம்” என்று பட்டென்று கூறினான் செளமியாவை விடவும் மூன்று வயது இளையவனான சங்கர்.
“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறேன்ப்பா” என்று சொல்லிய படிக்கு, வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தான்.
மகன் சென்றதும், இன்னும் சிறிது நேரம் எப்படி விசாரிக்கலாம், யாரிடம் கேட்கலாம், காஞ்சிவரத்தில் அவர்கள் உறவினர்கள் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருக்க, மொட்டை மாடியில் தன் இரு தோழிகளுடன் அமர்ந்திருந்த செளமி, ரவீந்திரனைப் பற்றித் தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.
எம்.எஸ்.ஸி பரிட்சை எழுதி முடித்துவிட்டு, ஒரு மாதமாக வீட்டில் இருந்த செளமியாவிற்கு, படிப்பு முடித்த உடனே திருமணம் என்பதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.
ஆனால், கடந்த சில வருடங்களாக தந்தையின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், படிப்பு முடியவுமே மாப்பிள்ளை பார்க்கத் துவங்கிவிடுவர் என்று அறிந்திருந்தாள். மனதளவில் தன்னைத் தயார் படுத்தியும் வைத்துக் கொண்டாள்.
செளமியாவிற்கு வேண்டாம் என்று மறுக்கும் அளவிற்கு தைரியமோ, போதிய காரணமோ இருக்கவில்லை. எம்.எஸ்.ஸி மேத்ஸ் முடித்து, ஒரு பி.எட் படித்துவிட வேண்டும் என்ற அளவில் ஆசை இருந்தது. படிப்பு முடித்து ஒரு வருடமாவது வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை வீட்டில் சொன்ன போது,
“ மொதல்ல கல்யாணம் பண்ணிக்கோ. அப்பறம் உன் வீட்டுக்காரன் படிக்க வச்சா ஒரு டிகிரி என்ன நாலு டிகிரி கூட மேலே படி. யார் வேண்டாம்னா?” என்று கலாவதி மறுத்துவிட்டார்.
கணவரின் உடல் நிலை நன்றாக இருக்கும் போதே, மகளை நல்ல முறையில் கரை சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் அந்த தாய்க்கு.
மாலை சூரியன் மெல்ல அஸ்தமிக்கத் துவங்க, மாடியில் படர்ந்திருந்த ராமபாண பூக்கள் மலர்ந்து வாசம் வீசத் துவங்கியிருந்தன. அந்தக் கொடிக்கு சற்று தள்ளி பாயில் அமர்ந்திருந்தனர் மூன்று தோழிகளும்.
செளமிக்கு இந்த பூக்களின் வாசனை தலைவலி கொடுக்கும் என்பதால் சூடிக்கொள்ள மாட்டாள். அதனால் மொட்டவிழ்ந்த வெண் மலர்களை சற்றே எட்ட அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடன் அமர்ந்திருந்த தோழிகள் ரம்யாவும், சிந்துவும் ஆளுக்கு ஒரு பஜ்ஜியை கொறித்துக் கொண்டிருந்தனர்.
“செளமி மாப்பிள்ளை பிடிச்சிருக்கா இல்லையான்னு எதுமே இப்போ வரைக்கும் வாய் திறக்காம இருக்க? ஏதாவது சொல்லுடி. மனசில என்ன நினைக்கறன்னு” என ரம்யா தான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.
“பிடிக்கலைன்னா நேராவே சொல்லிடு செளமி. அதான் நல்லது.” என்று ஒத்து ஊதினாள் சிந்து.
ரம்யாவும் சிந்துவும் செளமியாவுடன் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். அதிலும் சிந்து, செளமியுடன் பள்ளி முதலே ஒன்றாகப் படித்தவள். அடுத்த தெருவில் தான் அவள் வீடும் என்பதால் இன்னமும் செளமியுடன் நெருக்கம். தோழிகள் இருவரும் மாறி மாறி கேள்வி கேட்க, அதைக் காதுகளில் போட்டுக் கொள்ளாத செளமி, பத்தடி தூரத்தில் படர்ந்திருந்த கொடியின் பால் கண்களை செலுத்தியிருந்தாள்.
அவளுக்கு உண்மையில் ரவீந்திரனைப் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி பிரதானமாக மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த கேள்விக்கு பதிலும் தெரியவில்லை.
“ஏ சொல்லு செளமி? என்ன நினைக்கற? பிடிச்சிருக்கா இல்லையா?” என்று ரம்யா திரும்ப வினவினாள்.
ரம்யா உலுக்கியதில் தன் எண்ணவோட்டம் கலையப் பெற்ற செளமி, “தெரியலை ரம்மி. பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு சொல்லத் தெரியலை. ஒரு பத்து நிமிஷம் தனியா பேசின ஒரு ஆளை எப்படி பிடிச்சிருக்குன்னு பிடிக்கலைன்னு சொல்ல முடியும்” என்று கூறி நிறுத்திய செளமி,
“உண்மையா அந்த ஆளை எனக்கு அவளோவா பிடிக்கலைன்னு தான் நினைக்கறேன். அவன் பார்த்த பார்வை பிடிக்கலை. கொஞ்சம் கண்ணியம் கம்மியா பார்த்த மாதிரி தோணுது. ஒரு மாதிரி வெறிச்சு வச்ச கண்ணு வாங்காம குருகுருப்பா பார்த்தான்.” என்று சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லிவிடவில்லை.
“ஒரு வேளை நானா அப்படி நினைச்சுக்கறேனோ என்னவோ? உண்மையில அவன் நல்லவன் தானோ? தெரியலையே. ரூம்ல தனியா அவன் கூட பேச நின்னப்போ அவன் பார்த்த பார்வை எனக்கு அவன் மேல நம்பிக்கை ஏற்படுத்தல. கொஞ்சம் இடுப்பு சேலை ஃபேன் காத்துல விலகினப்போ அவன் கண் போன இடம், “இன்னும் கொஞ்சம் விலகுமாங்கற மாதிரி” எதிர்பார்த்த அவன் ஏக்கமான பார்வை சுத்தமா பிடிக்கலை. இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணுமா வேண்டாமான்னு கூடத் தெரியலை. சொன்னா அபத்தமா இருக்குமில்ல. சொன்னா என்ன நினைப்பீங்க? ஆமா இவ பெரிய ரதி, எல்லாரும் இவளை பார்த்த உடனே இவ அழகில மயங்கிடறாங்களா?ன்னு என்னையே தப்பா பேசினாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்ல ” என்ற ரீதியில் செளமியின் எண்ணவோட்டம் அமைந்திருந்தது.
அதனால் தானோ என்னவோ, தோழிகள் சென்ற பின்னர், கீழே இறங்கிவந்த போது பெற்றோர், இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா என்று கேட்ட போதும் “தெரியலை” என்ற பதிலையே அளித்தாள் செளமியா.
“இதென்னடி பதில். தெரியலைன்னு. பிடிச்சிருக்கு. இல்லைன்னு சொல்லாம, இப்படி தெரியலைன்னு சொன்னா என்னடீ அர்த்தம்?” என்று கலாவதி சற்றே கோபமாகக் கேட்டார்.
“தெரியலைன்னா தெரியலன்னு தானே பதில் சொல்ல முடியும்? வேற என்ன சொல்லறதும்மா?” என்று நிதானமாக பதில் கேள்வி கேட்ட மகளின் மீது இன்னமும் கோபம் எழுந்தது அந்தத் தாய்க்கு.
“அட, விடு கலா. நீ உள்ள போடா செளமி. போய் ரெஸ்ட் எடு.” என்று கலாவை சமாதானம் செய்த சின்னசாமி, “சின்னபுள்ள, அதைப் போயி நசநசன்னு கேட்டுகிட்டு.” என்று மனைவியை அடக்கினார்.
“அதுக்கிலைங்க. அவளுக்கு பிடிக்கணும் இல்லையா?அதை தெரிஞ்சுக்கத் தானே கேட்டேன்” என்றார் கலா குரலைத் தாழ்த்திக் கொண்டு.
“பிடிக்கலைன்னு சொல்ல காரணம் இருந்தா சொல்லப் போறா? மாப்பிளை பையன் பார்க்க கண்ணுக்கு லட்சணமா இருக்கான். எம்.பி.ஏ படிச்சிருக்கான். சொந்தமா எலக்ட்ரிக் கடை பிசினஸ் இருக்கு. பெருசா நகை நட்டும் எதிர்பார்க்கலை.அப்பறம் வேண்டாம்னு சொல்ல என்ன காரணம் இருக்கப் போகுது அவளுக்கு”
“இருந்தாலும் பிடிச்சிருக்குனு அவ வாயில இருந்து வந்துட்டா எனக்கு திருப்தியா இருக்கும்” என்றார் கலா விடாமல்.
“சொல்லுவா. சொல்லுவா. மொதல்ல மாப்பிள்ளை வீட்டில இருந்து சம்மதம்னு சேதி வரட்டும். அப்பறமா நாம செளமிகிட்ட கேட்டுக்கலாம். அவ விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடந்துடப் போகுதா என்ன?”என்று சின்னசாமி சிரிப்புடன் பேசியது உள்ளறையில் அமர்ந்திருந்த செளமியின் காதுகளிலும் விழுந்தது.
“சரி எப்படியும் இறுதி முடிவு எடுக்கப்படும் வரையில் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?” என்று நினைத்த செளமி தன் மனதின் புகைச்சலை மறைத்துக் கொண்டாள்.
செளமியின் வீட்டை விட்டு வெளியே சென்ற ரம்யாவும், சிந்துவும் அவரவர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
தன் வீட்டிற்குச் சென்று சேர்ந்த ரம்யா, தன் அக்கா பவானியிடம் செளமியின் மாப்பிளையைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
கொஞ்சமே தயக்கத்துடன் பேசிய ரம்யா, “டீ பவா. நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லணும். ஆனா தயக்கமா இருக்குடீ”
“என் கிட்ட என்ன தயக்கம்? என்ன விஷயம் சொல்லு?” என்று தங்கையின் தோள் பிடித்து அழுத்தி வினவினாள் ரம்யாவின் அக்கா பவானி.
“நீ யார்கிட்டையும் சொல்ல மாட்டேன்னு சொல்லு. எப்போ தான் உன் கிட்ட நான் சொல்லுவேன்” என்று வம்படியாகக் கேட்டாள் ரம்யா.
“நான் யார்கிட்ட டீ சொல்லப் போறேன். சரி சொல்லு. யார் கிட்டையும் சொல்ல மாட்டேன்.” என்று பவானி உறுதியாகக் கூற, அதன் பின்னரே ரம்யா பேச்சைத் துவங்கினாள்.
“எனக்கு செளமி மாப்பிள்ளையை கொஞ்சமும் பிடிக்கலை பவா.”
“உனக்கு பிடிச்சா என்ன பிடிக்கலைன்னா என்ன ரம்மி. செளமிக்கு பிடிச்சா போதாதா?” என்று வினவிய பவானியின் குரலில் சற்றே எரிச்சல் தென்பட்டது.
“செளமிக்கு பிடிக்குதோ இல்லையோ. அந்த ஆள் சரியில்லை பவா. ரொம்ப தப்பா தோணுது.”
“என்னடீ சொல்லற?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் பவானி.
“ஆமா பவா. செளமி கூட தனியா பேச அந்த ஆள் ரூமுக்கு வந்தானா. நானும் சிந்துவும் அவ கூட தான் இருந்தோம். அவன் வரவும் நாங்க எந்திரிச்சு வெளிய ஹாலுக்கு வந்துட்டோம்.”
“சரி.”
“அப்போ கதவு கிட்ட என்னை க்ராஸ் பண்ணறப்போ..”என்று சொல்லி நிறுத்திய ரம்யா, மேலே எப்படிச் செல்வது என்று நிறைய தடுமாற்றம் காட்டினாள்.
“சொல்லித் தொலைடீ. என்னாச்சு?” என்று பதட்டத்துடன் வினவினாள் பவானி.
“என்னை க்ராஸ் பண்ணறப்போ, “நைஸ் ரேக்ஸ்”ன்னு சிரிச்சுட்டே மெல்லமா சொன்னாண்டீ பவா. என் காதில தெளிவா விழுந்துச்சு.”
“நைஸ் ரேக்ஸ்ஸா? அப்படின்னா? அலமாறி நைஸ்னு ஏன் சொல்லணும்?அதுவும் உன் கிட்ட?” என்று பவானி கேட்டவும், ரம்யாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளாமல் போல இருந்தது.
“ரேக்ஸ்னா அலமாறின்னு மட்டும் மீனிங் இல்லை பவா.”
“அப்பறம்?”
“அது, அது வந்து அவன் மீன் பண்ணது என் செஸ்ட்டை” என்று தனது துப்பட்டாவை சரி செய்த படிக்கு ரம்யா சொல்லி முடிக்க, பவானி செய்வதறியாது ரம்யாவின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளுக்கு இதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்ள என்றே புரிபடவில்லை. ரம்யா சொல்வது பொய்யாக இருக்குமோ என்று சந்தேகிக்கவும் தோன்றவில்லை.
முன் பின் பார்த்திறாத ஒருவர் மீது இப்படி அபாண்டமாக பழி போட ரம்யா முட்டாளில்லை என்று பவானிக்குத் தெரியும்.
“எனக்கும் பயங்கற அதிர்ச்சி பவா. மொதல்ல அவன் சாதாரணமா ஏதோ சொல்லறான். என் காதில தப்பா விழுந்துதுன்னு தான் நானும் நினைச்சேன். ஆனா, வீட்டில இருந்து கிளம்பும் போது, என்னைப் பார்த்து ஒரு மாதிரி சிரிச்சாண்டீ பவா. அதனால தான் எனக்கு டவுட்டே வந்தது. எனக்கு அந்தாளை பிடிக்கலை பவா. இதை எப்படி செளமிகிட்ட சொல்லறதுன்னும் தெரியலை. என்ன பண்ணறது டீ?” என்று கவலையுடன் வினவினாள் ரம்யா.
பவானிக்கு தலையே சுற்றியது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எல்லாம் அவள் எதிர்கொண்டதேயில்லை. ரம்யாவுமே செய்வதறியாது கையைப் பிசைந்தாள்.
“உனக்கு தப்பா கூட கேட்டிருக்கலாம்ல ரம்மி. எந்த ப்ரூஃபும் இல்லாம ஒரு ஆளை எப்படி தப்பானவன்னு பழி சொல்ல முடியும்?” என்று பவானி வினவினாள்.
“மொதல்ல நானும் அப்படி தான் பவா நினைச்சேன். ஏதோ அலமாறி, ஷெல்ஃப் பத்தி சொல்லறான்னு. ஆனா வெளிய வந்து யோசிச்சப்போ, அந்த ரூம்ல ஷெல்ஃபே இல்லை. அவ டிரஸ்ஸிங் டேபிளும் பீரோவும் தான் இருக்கும். அப்பறம் ஏன் ரேக்ஸ்னு சொன்னான்னு நினைச்சு தான் கூகுள் பண்ணேன். இதப்பாரு..”என்று தன் கைப்பேசியை எடுத்து தான் தேடியிருந்த வார்த்தைக்கான பொருளை பவானியிடம் காட்டினாள்.
“ரேக்ஸ் இன் யு.எஸ் இங்கிலிஷ் மீன்ஸ் அ வுமன்ஸ் பிரெஸ்ட்ஸ்” என்று கட்டியது கைப்பேசி திரை. இதைப் பார்க்கவும் பவானி அருவருப்பாக முகம் சுழித்தாள்.
“என்ன தாண்டீ பண்ணறது இப்போ? இதை உன் ஃப்ரெண்ட் செளமிகிட்ட சொல்லிட்டியா?” என்று சற்றே கவலையுடன் வினவினாள் பவானி.
“இல்லை”என்று தலையசைத்தாள் ரம்யா.
“குட். யார்டையும் சொல்லாத. செளமி ஒ.கே சொல்லற ஐடியால இருக்காறாளா? அதை தெரிஞ்சுகிட்டு அப்பற இதை சொல்லறதா வேணாமான்னு முடிவெடுக்கலாம்.”
“அப்படியா?சொல்ல வேணாமா அப்போ?”
“வேணாம் ரம்மி. இது உன் மேல தப்பா திரும்ப நிறைய சான்ஸ் இருக்கு. உன் டிரஸ்ஸிங்கை மொதல்ல தப்பா பேசுவாங்க. அவ டைட்டா டிரஸ் போட்டிருந்தா, அதனால அப்படின்னு முட்டாள் தனமா உன்னை அசிங்கபடுத்துவாங்க. அதனால தான் சொல்லறேன். நீ இதைப் பத்தி யார்கிட்டையும் மூச்சுவிடாத. சிந்துகிட்ட கூட. சரியா?”
“ம்ம்ம்ம்” என்று தலையசைத்தாள் ரம்யா.
“செளமி என்ன முடிவுல இருக்கா? இந்த பையனை பிடிச்சிருக்குனு சொல்லிட்டாளா வீட்டில?”
“எனக்கு என்னவோ செளமியே வேணாம்னு சொல்லிடுவான்னு தான் தோணுது. எல்லாரும் போனதுக்கு அப்பறம் நாங்க மாடில இருந்தப்போ மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு சிந்து கேட்டா. செளமி ஒழுங்காவே பதில் சொல்லலை. அவ முகத்தில அவளோ செழிப்பு இல்லை. அவளே வேண்டாம்னு சொல்லிடுவான்னு நினைக்கறேன் பவா”
“சரி. அப்படி இருக்கற பட்சத்தில நாம அவளை குழப்ப வேணாம். அவளாவே வேணாம்னு சொல்லிட்ட இந்த பிரச்சனையை இத்தோட விட்டுடலாம். இல்லைன்னா சொல்லிடலாம். என்ன சொல்லற ரம்மி?”
“நீ சொல்லறது சரி பவா. அவ என்ன நினைக்கறான்னு நான் தெரிஞ்சுகிட்டு சொல்லறேன். அப்பறமா நாம யோசிப்போம்.” என்றாள் ரம்யா.
“ரம்மி, என்கிட்ட சொன்ன மாதிரி எக்காரணம் கொண்டும் செளமிகிட்ட உளறிடாத. அவ நம்மளை நம்பாம போயிட்டா வம்பா போயிடும். சரியா. நீ செளமி என்ன முடிவுல இருக்கான்னு தெரிஞ்சுட்டு சொல்லு. நாம யோசிக்கலாம். ” என்று சொல்லிய பவானி தங்கையை ஆறுதல் படுத்தினாள். ரம்யா குழப்பமான மனநிலையுடன் இருந்த போதும், தன் அக்கா சொல்வது சரியென்று பட்டுவிட, செளமியின் பதிலைத் தெரிந்து கொள்ள எத்தனித்தாள்.