ஒரு சிண்ட்ரெல்லா கதை 4
“இதென்னடி கூத்தா இருக்கு? நம்ம ரவிய கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு அந்த பொண்ணு சொல்லிட்டாளாமே? இதுக்குத்தான் நான் ஆலாய்ப் பறந்தேன். நம்ம அபியவே ரவிக்கு குடுக்கறேன்னு. என் பேச்சை இங்க யாரு கேட்கறா” என்று தன் வெங்கலக் குரலால் பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் சேதி சொல்லிவிட வேண்டும் என்பற்காகவே சத்தமாக பேசினார் மரகதம்.
ஹாலில் அமர்ந்திருந்த ரவீந்திரன், மரகதம் வந்த உடனேயே, எழுந்து தன் அறைக்குச் சென்று விட்டான். அடுக்களையில் தேநீர் போட்டுக் கொண்டிருந்த சுகந்திக்கு மரகத்தின் வருகையும், அவர் பேச்சும் இன்னும் இன்னும் ஆத்திரத்தைக் கொடுத்தது.
“இந்த கருமத்துக்குத் தான் இவங்களை கூட கூட்டிட்டுப் போக வேணாம்னு தலைபாடா சொன்னேன். கேட்டாத்தானே! போறப்போவே நல்லா யோசிச்சுக்கோ, இந்த சம்பந்தம் வேணுமா? அபியையே பண்ணிக்கலாமேன்னு அபசகுனமாவே பேசிட்டு கூட வந்தாங்க.அதுக்கு தகுந்த மாதிரியே இப்போ ஆகிடுச்சு” என்று முணுமுணுத்தவண்ணம் இருந்தார்.
“குடும்மா, நான் டீயைக் கொண்டு போறேன். நீ இருக்கற கோவத்தில டீயை அத்தை தலையில கவுத்தீருவ. அதுக்கு வேற நாலு நாளைக்கு பஞ்சாயத்து நடக்கும்” என்று கூறிய இளைய மகன் சுசீந்திரன், தேநீர் கோப்பையை ஹாலிற்கு எடுத்துச் சென்றான்.
தேநீர் குடித்து முடிக்கும் இடைவெளிவரை மட்டுமே மரகதத்தின் வாய் அமைதி காத்தது. பின்பு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் துவங்கியிருந்தது.
“ஆனாலும் இந்த காலத்து பொம்பளை பிள்ளைகளுக்கு ரொம்பவும் கொழுப்பு ஜாஸ்தி தான். அழகு, அறிவு, படிப்பு, சொந்த தொழில்னு எல்லாமே இருக்கற மாப்பிள்ளை கிடைச்சாலும், இது நொட்டை, இது நுரைன்னு காரணம் சொல்லி தட்டிக் கழிக்குதுக” என்று தேநீர் குடித்த தெம்பில் சற்றே வேகமாகத் துவங்கினார்.
“அத்தை, சும்மாவே இருக்கமாட்டீங்களா நீங்க? அந்த பொண்ணு மேல படிக்க போகுதாம். அதனால இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு தான் சொல்லியிருக்கு. அண்ணனை வேணாம்னு சொல்லலை. சும்மா எதவையாவது சொல்லிட்டு வாங்கிகட்டிக்காதீங்க.” என்று சுசீந்திரன் கூறிவிட்டு, தன் அண்ணன் அறைக்கு தேநீர் கொண்டு சென்றான்.
“அட, அதெல்லாம் சும்மா உடான்ஸ் விட்டிருக்காங்க. உனக்கென்ன தெரியும்? நான் நம்ம தரகர்கிட்டையே உண்மைய போட்டு வாங்கிட்டேன். அந்த பொண்ணுக்கு ரவியைப் பிடிக்கலையாம். இந்த மாப்பிள்ளை வேணாம்னு தீர்மானமா சொல்லிடுச்சாம். நம்மகிட்ட அவங்களால பொண்ணு சொன்னதை நேரடியா சொல்ல முடியாதில்ல, அதனால மேல படிக்குதுன்னு சொல்லியிருக்காங்க.”
“உண்மையாவா சொல்லறக்கா?” என்று இம்முறை முத்துராமனும் உடன் சேர்ந்து கேட்க,
“அட, ஆமா முத்து. நான் எதுக்கு பொய் சொல்லப் போறேன். நம்ம கிட்ட நாசூக்கா வேணாம்னு சொல்லிட்டு, அந்த தரகர்கிட்ட வேற மாப்பிள்ளை இருந்தா காமிங்கன்னு சொல்லியிருக்காங்க அவங்க வீட்டில. நீயே வேணா விசாரிச்சுப் பாரேன்.” என்று தன் தம்பியிடம் கூறினார்.
அண்ணன் அறைக்கு தேனீர் கொடுத்த சுசீந்திரன் கதவை திறந்த வாக்கிலேயே வைத்துவிட்டு வெளிவந்து விட்டான். மரகதம் பேசுவது பிடிக்காமல், அவர் வீட்டினுள் வருவது கண்ட உடனேயே எழுந்து உள்ளே சென்றிருந்த ரவீந்திரன், திறந்திருந்த தனதறையின் கதவை மீண்டும் மூட எழுந்து வந்திருக்க, கூடத்தில் மரகதம் இறுதியாகச் சொன்னது ரவியின் காதுகளில் விழுந்திருந்தது.
கதவை பட்டென்று மூடிவிட்டு தன் கட்டிலில் அமர்ந்தான். அவன் மூளை வேகவேகமாக கணக்குகள் இட்டிருந்தது. “முட்டாள், முட்டாள். போன இடத்தில வாயவச்சுகிட்டு சும்மா இல்லாம, கொஞ்சம் கூட யோசிக்காம மடத்தனமா பேசியிருக்க. அவ ஃப்ரெண்டு, இந்த செளமிகிட்ட விஷயத்தை சொல்லியிருக்கணும். அதனால தான் அந்த பொண்ணு வேணாம்னு சொல்லியிருக்கணும்” என்று ஒரே ஒரு தடவை மட்டுமே தோன்றியது.
மறுகணமே, “அதெப்படி அவ என்னை வேண்டாம்னு சொல்லலாம். அவ என்ன அவளோ பெரிய அழகியா? நான் கண் சிமிட்டினா எவளோ பேர் க்யூவில வந்து நிப்பாளுக தெரியுமா? இவ என்ன என்னை வேண்டாம்னு சொல்லறது?” நான் சொல்லறேன்டீ, உன்னை பிடிக்கலை. ஐ டோண்ட் லைக் யூ” என்று சீறிய ரவீந்திரன், தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானான். தன் கைப்பேசியிலிருந்த அவளது புகைப்படத்தை அழித்தான்.
ஆனாலும் அவன் மனதில் ஆத்திரம் பொங்கி வழிந்தது. அதை வெளியேகாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் இயலவில்லை.தன் கோபத்தை தன் அன்னையிடம் தவறாமல் கொட்டவே செய்தான். அதன் பின்னர், இரண்டொரு நாளில் செளமியைப் பற்றிய கோபம் சிறிது மட்டுப்பட்டுவிட, அந்த நிகழ்வைப் பற்றி மறந்து தன் வேலைகளில் ஈடுபடலானான்.
சாதாரணமாக நடமாடிய போதும் அவன் மனதின் மூலையில், “ஏன் வேணாம்னு சொல்லியிருக்கா? ஒரு வேளை, அந்த மஞ்ச சுடி போட்டு குடுத்துட்டாளோ? என்ன காரணத்தினால பிடிக்கலையாம் அந்த மேனாமினிக்கிக்கு? என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைச்சுடுவானாமா?” என்ற எண்ணமே கொண்டிருந்தான்.
*****
எங்கே “அந்த மாப்பிள்ளையைத் தான் கட்டிக் கொள்ள வேண்டும்” என்று வீட்டினர் வற்புறுத்துவார்களோ என்று பயந்திருந்தவள், தன் முடிவை வீட்டில் ஏற்றுக் கொண்டது நினைத்து மகிழ்ந்து தான் போனாள்.
“அப்பாவும், சங்கரும் என் முடிவுக்கு மறுப்பு சொல்லமாட்டாங்க. இந்த அம்மா தான் எதாவது சொல்லுவாங்களோன்னு ரொம்ப பயமா இருந்தது. நல்லவேளை அப்பாவே பேசி சரிகட்டிட்டார். “என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டாள்.
மாப்பிள்ளை வீட்டில் மேலே படிக்கப் போவதால் இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என்று வீட்டில் பதில் சொல்லிவிட்டனர் என்றும் தம்பியின் மூலம் தெரிந்த போது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது செளமிக்கு.
“இதான் சாக்குன்னு வச்சு பி.எட் படிக்க வீட்டில பர்மிஷன் கேட்கலாம் போலையே.” என்று மனதினுள் மெல்லிய ஆசையும் துளிர்விட்டிருந்தது.
“ஏ, ரொம்ப கனவு காணாத, அடுத்த வாரம் வேற ஒரு கோஷ்டி பொண்ணு பார்க்க வர்றாங்க. ஒரு மூணு மாசத்துக்குள்ள உன்ன பேக்கப் பண்ணறது தான் ப்ளான். மூட்டை முடிச்சோட ரெடியா இரு” என்று அவள் கையில் நறுக்கென்று கிள்ளிய சங்கர் கூறியிருந்தான்.
செளமிக்கு சற்றே வருத்தம் இருந்தாலும், “சரி, கல்யாணம் முடிஞ்சு பி.எட் பண்ணிக்கறேனே! என்ன இப்போ!” என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.
அவ்வப்போது அவள் தோழிகள், சிந்துவும், ரம்யாவும் அவள் வீட்டிற்கு வந்து செல்வர். அப்படி வந்திருந்த ஒரு தினம், “ஏ, நான் நெக்ஸ்ட் வீக் நான் டெல்லி போகப் போறேன்” என்று ரம்யா கூறினாள்.
“ஏ, சூப்பர்டீ. செமயா எஞ்சாய் பண்ணுவல?” என்று சிந்து ஆர்வமாக வினவ, “எங்கடீ. உனக்குத் தான் எங்க அப்பா பத்தி தெரியுமே! டெல்லில ஒரு இண்ஸ்ட்டியூல யு.பி.எஸ்.ஸி படிக்க பணம் கட்டியிருக்கார். போர்டிங் ஸ்கூல் மாதிரி இருக்குமாம். ரொம்ப ஸ்டிரிக்டாம். எப்படி மேனேஜ் பண்ண போறேன்னே தெரியலை” என்றாள் ரம்யா கவலையுடன்.
அவளுக்கு டெல்லி செல்வது குறித்து மகிழ்ச்சியாகவே இருந்த போதிலும், கடந்த ஒரு வாரமாக செளமியாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வித நெருடல் தோன்றிக் கொண்டே இருந்தது. செளமியிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்ற யோசனை வரும் நேரமெல்லாம்,
“வேணாம் ரம்மி. அவங்க உன்னை ஜட்ஜ் பண்ணுவாங்க. செளமி தான் மாப்பிள்ளை வேணாம்னு சொல்லிட்டதால அவங்க வீட்டில வேற அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களே. அதனால முடிஞ்ச விஷயம் முடிஞ்சதாவே இருக்கட்டும். உன் விஷயம் அவங்க வீட்டு ஆளுங்களுக்குத் தெரிஞ்சா, உன்னால தான் செளமி கல்யாணம் நடக்காம போச்சுன்னு பேர் வந்துடும். வேணாம்” என்று பவானி கூறிய வார்த்தைகளே அவள் காதுகளில் ரீங்கரிக்க, ரம்யா குழப்பத்திலேயே இருந்தாள்.
“அப்ப ஒரு வாரம் மட்டும் தான் இங்க இருப்பியா?” என செளமி வருத்தத்துடன் வினவினாள். ரம்யாவுடனான நட்பு கல்லூரி காலத்தில் துவங்கியதே என்ற போதும். செளமிக்கு ரம்யாவை ரொம்பவும் பிடிக்கும். அலட்டிக் கொள்ளாமல் எதார்த்தமாக பழகும் ரம்யாவை, செளமி ரொம்பவும் நம்புவாள்.
“இல்லை செளமி, நாளைக்கு அக்கா வீட்டுக்கு போறோம். சென்னைக்கு. அங்கிருந்து டெல்லி.”
“ஏ, என்னடீ, திடீர்ன்னு சொல்லற?”
“எனக்கே இப்போ தாண்டி தெரியும். சென்னையில இண்ஸ்ட்டியூட் சேர்த்திவிடறேன்னு தான் அப்பா இவளோ நாளும் சொல்லிட்டு இருந்தாங்க. அதனால நானும் பெருசா எதும் யோசிக்கலை. சென்னை தானே வீக்கெண்ட் ஆனா இங்க வந்தரலாம்னு இருந்தேன்.”
“அப்போ எங்களை மீட் பண்ணறது இதான் லாஸ்ட்டா” என சிந்து சோகமாக வினவ,
“சே, என்னடீ இப்படி சொல்லற? அதெல்லாம் இல்ல, அதான் ஃபோன், வாட்ஸ்ஸப், இண்ஸ்டான்னு நிறைய இருக்கே. காண்ட்டாக்ட்ல தானே இருப்போம்” என்று தோழிகளைச் சமாதானம் செய்தாள் ரம்யா.
ரம்யா சென்னை கிளம்பிச் செல்லும் வரையிலும் கோவில், பேக்கரி, ஐஸ்கிரீம் பார்லர் என தோழிகள் மூவரும் சுற்றித் திரிந்தனர்.
நான்கைந்து தினங்கள் கடந்து விட்டிருக்க, அன்றைய தினம் செளமி காலையிலேயே அருணாச்சலேஷ்வரரைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தாள். காலை வேளையில் இப்படி கோவில் வருவது செளமிக்கு மிகவும் பிடித்தம். வெளியூர்காரர்கள் வரத் துவங்கும் முன்னர், கூட்டமில்லாத கோவிலில் மெல்ல நடக்க மனதினுள் பெரும் நிம்மதி பெருக்கெடுத்து ஓடும்.
அந்த அமைதியான தனிமையை அனுபவிக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகாலையில் செளமியா கோவில் வருவாள். யாரையும் உடன் அழைத்து வராமல் தான் மட்டுமே வருவாள். அன்றும் தரிசனம் முடித்து, மெல்ல, காற்றை உள்ளே இழுத்து ஆழ்ந்து சுவாசித்தி வண்ணம் பிரகாரத்தில் நடந்தாள்.
“ஹலோ!என்னங்க உங்களைத் தான்” என பின்னால் இருந்து சப்தம் கேட்டு திரும்பியவளின் எதிரே நின்றிருந்தான் ரவீந்திரன். அவனைச் சற்றும் அந்த இடத்தில் எதிர்பாராத காரணத்தினால், சற்றே திடுக்கிட்ட போதும், வலிய புன்னகையை முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டு இதழ்பிரிக்காமல் சிரித்தாள் செளமி.
அதிகாலையிலே தலைக்குக் குளித்து, தளர்வாய் பின்னலிட்டிருந்த கூந்தலில், கோவிலில் கொடுத்த பிரசாத மலரைச் சூட்டியிருந்தாள். ஒப்பனைகள் அற்ற நிர்மலமான முகத்தில் ஒரு வித சாந்தம் குடிகொண்டிருந்தது.
அவள் முகத்தில் இருந்து சில நொடி கண்களை அகற்றாத ரவீந்திரன், “என்னை நியாபகம் இருக்கா?” என வினவ, செளமி தலையை மட்டும் அசைத்தாள்.
“ஃப்ரெண்ட்ஸ் கூட கிரிவலம் வந்தோம். காலையில தரிசனம் பார்த்துட்டு திரும்ப திண்டிவனம் கிளம்பறோம்.” என்று இவள் கேளாமலேயே விவரித்தான்.
“தரிசனம் முடிஞ்சதா?” என்று செளமி வினவ, “ஆச்சு.” என்றான் அவன். அதற்கு மேல் என்ன பேசவென இருவருக்குமே தோன்றாமல் போக, சிறிது மெளனம் காத்தனர். அவளுடன் சேர்ந்து அவனும் மெல்ல நடக்கத் துவங்கியிருந்தான்.
செளமிக்கு அவனிடம் மேலே பேச வேறு விஷயங்கள் இருக்கவில்லை. ஆனால் அவனுக்கு இருந்தது. “அவள் தன்னை வேண்டாமெனக் கூறக் காரணம் என்னவாக இருக்கும்” என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அவளது தடுமாற்றத்தைக் காண வேண்டும் என்ற குரூர எண்ணம் தோன்றியது.
“அவ ஃப்ரெண்ட் சொன்ன காரணத்தை வெளிப்படையா சொல்லுவாளா? சொல்ல முடியுமா ?முடியாதே! எதாவது சப்ப கட்டு கட்டுவா இல்லையா? அதை அவ வாயால கேட்டே ஆகணும்!” என்று உள்ளூர ஆவல் எழ,
“ஸோ, உங்க ஹையர் ஸ்டடீஸ் ப்ளான் எந்த அளவில இருக்குங்க? மேல படிக்க போறீங்கன்னு கேள்விபட்டேன்.” என்று அவனாகவே அவளது தற்போதைய கல்யாணப் பேச்சைப் பற்றி பேசலானான்.
சலேரென்று அவனை ஒரு நொடி பார்த்தவள், “ம்ம்ம் போகுது.” என்று மட்டுமே பதிலளித்தாள். அவன் கண்களில் ஒருவிதக் குறும்பு கொப்பளித்தது. அது ஆச்சர்யமான விதமாக ஒரு ஸ்னேகபாவத்தையே தோற்றுவித்தது. அவன் கேட்ட விதம் குதர்க்கமாக ஏனோ இருக்கவில்லை. உண்மையான அக்கறை இல்லாவிட்டாலும், பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவன் குரலில் தொனித்தது.
“உங்களை நேரில் பார்க்க ஒரு சந்தப்பம் அமைஞ்சா ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். கேட்கவாங்க?” என அதே குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் ரவீந்திரன் வினவ, செளமிக்கு சற்றே படபடப்பு தோன்றியது. செளமியின் பதிலை எதிர்பாராமல், அவனே மேலே தொடர்ந்தான்.
“என்னை உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்தினால பிடிக்காம போயிருக்கு. கரெக்டுங்களா? உங்களுக்கே பிடிக்கலையா? இல்லை யாராவது ஏதாவது சொன்னாங்களா?”
“அது, பி.எட் படிக்கணும்னு..” என செளமி பதில் சொல்லத் துவங்கும் முன்னர்,
“ஹலோ, ஹலோ, காது குத்தாதீங்க. என்னை பிடிக்கலை. அதனால தானே மேலே படிக்கப் போறேன்னு பொய் சொல்லி அவாய்ட் பண்ணீங்க” என்று நேராகவே வினவியிருந்தான் ரவி. செளமி அவனது இந்த நேரடிக் கேள்வியால் அதிர்ந்து தான் போனாள்.
“அது, அது வந்து..” என அவள் பதிலில் தடுமாற்றம் துவங்கியிருக்க, தோள்களைக் குலுக்கிக் கொண்டு அட்டகாசமாகச் சிரித்தான் ரவீந்திரன்.
“பயப்படாதீங்கங்க, ஜஸ்ட் சும்மா ஒரு ஃபன்னுக்கு தான் கேட்டேன். உண்மையை சொல்லணும்னா, எனக்கும் உங்களை அவளோ பிடிக்கலைங்க.” என்று கூறிவிட்டு, கொஞ்சமும் சிரிப்பு மாறாமல் அவளை ஏறிட்டான்.
செளமிக்கு அவன் பேச்சு அதிர்ச்சியாக இருந்தது. அவன் சொல்வதை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்க, அவள் எண்ணம் பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் அவனே மேலே பேசினான்.
“நீங்க தப்பா நினைக்காதீங்க. நினைச்சாலும் இப்ப என்ன? அதானே உண்மை. நீங்க அவளோ ஒண்ணும் அழகும் இல்லை, பெரிய படிப்பும் இல்லை, ஒரு ஃப்ரொஃபெஷனல் டிகிரி கூட முடிக்கலை நீங்க. என்னை விட கொஞ்சம் கலர் வேற கம்மியா இருக்கீங்க. வசதியும் அப்படியொன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல. அதனால நானே இந்த சம்பந்தம் வேணாம்னு தான் வீட்டல பெரியவங்ககிட்ட சொன்னேன். அவங்க தான், “ பொண்ணுலாம் போய் நேர்ல பார்த்துட்டு வந்ததுக்கு அப்பறம் பிடிக்கலைன்னு சொன்னா எப்படிடான்னு கேட்டு கன்வின்ஸ் பண்ணாங்க.”
“நானும் சரி, போனாப் போகட்டும்னு நினைச்சு சம்மதிச்சேன். பட், நல்ல காலம் நீங்க மேல படிக்க போறீங்கன்னு சொல்லி உங்க வீட்டில மேற்கொண்டு கல்யாணப் பேச்சை நிறுத்திட்டீங்க. நான் தப்பிச்சேன்” என்று சிரிப்பு மாறாமல், அவளைப் பற்றித் தான் தவறாக அவளிடமே பேசுகின்றோம் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் வெளிப்படையாகப் பேசியவனைக் கண் இமைக்காமல் பார்த்தாள் செளமி.
“இப்படியும் பேசுவார்களா?” என அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் மனதில் தோன்றிய ஒட்டுதல் இல்லாமையின் காரணமாகவே அவள் ரவியைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தாளே தவிர, அவனைப் போன்று உருவக் கேலியோ, நிற வேறுபாடோ சொல்லி அவனை நிராகரிக்கவில்லையே. இவ்வாறெல்லாம் செளமி எண்ணிக் கொண்டிருக்க,
“சரிங்க, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணறாங்க. நான் கிளம்பறேன். பைங்க.””என்று சொல்லி, இவள் பதிலுக்காக காத்திறாமல் சற்றே தள்ளி நின்றிருந்த தன் நண்பர்கள் நோக்கி நடக்கத் துவங்கினான்.
செளமி மீதி பிரகாரத்தை குழப்பமான எண்ணங்களுடன் சுற்றி வந்தாள். அங்கே ரவியோ, “யார்டா அந்த பொண்ணு? தெரிஞ்சவங்களா?” என்று வினவிய தன் நண்பர்களிடம், “கொஞ்ச மாசம் முன்னாடி பொண்ணு பார்த்துட்டு வந்தேன் மச்சான். இந்த ஊரு தான். எனக்கு பொண்ணு பிடிக்கலைன்னும் சொல்லிட்டேன். ஆனா, அந்த பொண்ணுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்காம். நான் வேணாம்னு சொல்லியும் திரும்ப திரும்ப ப்ரோக்கரை விட்டு பேச சொல்லறாங்க.”
“ஏண்டா அந்த பொண்ணுக்கு என்ன குறை? நல்லா லட்சணமா அழகா தானே இருக்கா? ஏன் வேணாம்னு சொன்ன?” என்ற நண்பனின் கேள்விக்கு ரவி பதில் சொல்லும் முன்னர்,
“டே, ஹோம்லியா இருக்காடா ரவி? ஏன் வேணாம்னு சொன்ன? நிஜம்மாவே பிடிக்கலையா டா உனக்கு. சரியான லூசு டா நீ?” என்று மற்ற நண்பன் சொல்லியிருந்தான். ரவி அசட்டையாக தோள் குலுக்க,
அத்தோடு நில்லாமல், “டே, நம்ம ரைஸ் மில் சாந்தகுமார் இருக்கான்ல டா. அவனுக்கும் பொண்ணு பார்க்கறாங்க. அவங்களும் உங்க ஆளுங்க தானே. நான் வேணா இந்த பொண்ணைப் பத்தி அவகிட்ட சொல்லவா? நல்ல பொண்ணா தெரியுது. இதைப் போயி வேணாம்னு சொல்லியிருக்கான் பாரேன் இந்த லூசுப் பய” என்று அந்த நண்பன் பேசிக் கொண்டே செல்ல, ரவியின் ஆழ்மனதில் ஒரு சிறிய பொறாமை தீ அந்த நொடி பற்றத் துவங்கியது.