படுக்கையில் அவளை நெருங்க வில்லையே தவிர நாள் முழுவதும் அவனது சீண்டலும் தீண்டலும் இருந்து கொண்டே தான் இருந்தது. மொத்தத்தில் அவனால் உயிர்ப்புடன் நடமாடிக் கொண்டிருந்தாள் சுஜி.
இன்னும் இரண்டு நாட்களில் கடை திறப்பு விழா இருப்பதால் அதைப் பற்றி வெகு நேரம் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான் புவி. அவன் வெற்று மார்பில் தலை வைத்து அவளும் கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவளது விரல்கள் அவன் மார்பின் ரோமங்களை வருட அவன் உணர்வுகள் எழ ஆரம்பித்தது. அவளை தன்னிடம் இருந்து விலக்கி தன்னுடைய கரங்களால் அவளுடைய கன்னம் தாங்கி அவள் இதழ்களில் தன்னுடைய இதழ்களை மென்மையாக பதித்தான். ஒரு நொடியில் விலகி விடுவான் என்று தான் அவள் நினைத்தாள்.
இன்னும் வேகம் கூட்டியவன் அவள் இதழ்களை தன்னுடைய இதழ்களுக்குள் உள் இழுத்துக் கொண்டான். கதகதப்பாய் தித்திப்பாய் அவன் தரும் முத்தம் அவளுக்குள் இறங்க தேகம் முழுவதும் சிலிர்ப்பில் துடித்தது. அவன் இதழ் முத்தத்தில் கரைந்து போனாள்.
அவனது கன்னத்தில் பதிந்திருந்த அவன் விரல்கள் அவளுடைய காது மடலைத் தீண்ட தானாகவே அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவன் இதழ் தேடலை இன்னும் முடிக்காமல் இருக்க அவள் கைகள் உயர்ந்து அவனது கழுத்தை வளைத்துக் கொண்டது.
அவன் தொடுகையில் தேகம் மொத்தமும் குழைய உருகிக் கொண்டிருந்தாள். மூச்சுக் காற்றுக்கு அவள் திணறிய பிறகு தான் அவளிடம் இருந்து விலகினான். அவள் சிவந்த முகத்துடன் அவனைப் பார்க்க அவன் ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான். அதற்கு மேல் அவன் அவளை நெருங்க வில்லை.
அவன் உணர்வுகள் புரிந்தவளுக்கு அவன் ஏன் விலகினான் என்று புரியவில்லை. அதனால் “ஏன்?”, என்று ஒற்றை வார்த்தையில் கேட்டாள் சுஜி. அவள் கேள்வி அவனுக்கும் புரிந்தது. “முழு மனசோட இந்த நிமிஷம் என்னை ஏத்துப்பியா சுஜி?”, என்று கேட்க இல்லை என்னும் விதமாக தலையசைத்தாள்.
“ஒரு ஒதுக்கம் உன் கிட்ட தெரிஞ்சது சுஜி. அதனால தான் நானும் விலகி இருக்கேன். மற்ற படி உன் மேல கடல் அளவுக்கு ஆசை இருக்கு. ஏதோ தீர்த்தம் காட்டுற மாதிரி ஒரு நாள் நடந்தது. அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னு நினைச்சு… ஆனா இப்ப நீ இல்லாம அவஸ்தையா இருக்கு டி”
“சீ”
“இப்ப என்னோட ஆசையை உன் கிட்ட சொல்றதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை டி. ஆனா…”
“ஆனா என்ன?”
“உனக்கு என்னைப் பிடிக்கலையா சுஜி? என்னோட நடவடிக்கைனால என்னை வெறுத்துட்டியா?”, என்று கேட்டதும் அவன் வாயை விரலால் மூடியவள் “ஏன் அப்படிச் சொல்றீங்க? என்னால எப்படி உங்களை வெறுக்க முடியும்? எனக்கும் ஆசை தான்”, என்றாள்.
“அப்புறம் ஏன் டி?”, என்று அவன் கேட்க “வெண்ணிலா”, என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் சுஜி.
“சுஜி”, என்று அவன் அதிர்வாக அழைக்க “ஆமாங்க அவ வாழ்க்கை நல்லா இல்லாம என்னால சந்தோஷமா இருக்க முடியலை. யாரும் இல்லாதப்ப எனக்காக நின்னவ அவ. அவ இப்படி எங்கயோ யாரும் இல்லாதவ மாதிரி இருக்குறது கஷ்டமா இருக்கு. நாம தான் ஏதாவது செய்யணும்”, என்றாள்.
“எனக்கு மட்டும் அவ நல்லா இருக்கணும்னு ஆசை இல்லையா சுஜி? ஆனா என்ன பேசினாலும் என்னை பேசவே விட மாட்டிக்கா. மனசுல இருக்குறதை வெளியவே சொல்ல மாட்டிக்கா”
“கல்யாண வாழ்க்கையை வெறுத்துட்டாளோ?”
“எனக்கு அப்படித் தெரியலை”
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“கட்டின புருஷனையே அவ இன்னும் வெறுக்கலை. அப்புறம் எப்படி கல்யாணத்தை வெறுப்பா?”
“என்னங்க சொல்றீங்க?”
“எனக்கும் இந்த விஷயத்தை யார்க் கிட்டயாவது சொல்லணும் போல இருக்கு. இப்பவும் வெண்ணிலா வெங்கட் கிட்ட பேசிட்டு தான் இருக்கா”, என்று குண்டைத் தூக்கிப் போட்டான்.
“என்ன சொல்றீங்க?”
“ஆமா, அவளோட சிம் போஸ்ட் பெயிட். நான் தான் பில் கட்டுவேன். அப்ப பாத்தேன். வாரத்துல ஒரு நாள் ஒண்ணு இவ அவனுக்கு பண்ணிருக்கா. இல்லைனா அவன் இவளுக்கு பண்ணிருக்கான்”
“அவருக்கு தான் வேற கல்யாணம் முடிஞ்சிருச்சே?”
“ஆமா, ஆனா வெங்கட் இவளை அடிச்சது எல்லாம் பொய்யோன்னு எனக்கு தோணுது”
“எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?”
“கோர்ட்ல வச்சு இவ அவன் மேல கோபமே படலை. அவன் இவளைப் பாத்து கை எடுத்து கும்பிட்டான்”
“செஞ்ச பாவம் உருத்திருக்கலாம்”
“அவனுக்கு உறுத்தினாலும் இவளுக்கு எப்படி மன்னிக்க முடியும்? ஆனா வெண்ணிலா அதை தான் செஞ்சா. அவனைப் பாத்து சிரிச்சா. அது மட்டுமில்லாம அவனைப் பார்த்து பெரு விரலை மட்டும் உயர்த்தி காட்டி எதுக்கோ வாழ்த்தினது மாதிரி தோணுச்சு”
“இவ்வளவு விஷயம் நடந்துச்சா? நீங்க அவ கிட்ட கேக்க வேண்டியது தானே?”
“கேக்கணும்னு நினைக்கிறப்ப எல்லாம் முதல்ல உன்னோட வாழ்க்கையை சரி பண்ணிட்டு வந்து பேசுன்னு சொல்லிட்டா”
“இப்ப தான் நம்ம வாழ்க்கை சரியாகிருச்சே? இப்ப பேசுங்க”
“அவ தான் இப்ப இங்க வரதே இல்லையே? இங்க வந்தா எல்லாரும் கல்யாணம் பத்தி பேசுறோம்னு சொல்லி வர மாட்டேன்னு சொல்றா”
“அவ கல்யாணம் பத்தி பேசினா தானே வர மாட்டா. பரணி அண்ணனுக்கு கல்யாணம்னு பேசுங்க. இல்லைன்னா பரணி அண்ணா தான் அவளுக்கு பாத்திருக்குற மாப்பிள்ளைன்னு பேசுங்க. கண்டிப்பா வருவா. அப்புறம் கடை திறப்பு விழாவும் இருக்கே? அதுக்கு கூப்பிடுங்க”
“என்ன சொல்ற நீ? மாமாவுக்கு வெண்ணிலாவை கட்டி வைக்கலாம்னு யோசிச்சியா? நம்ம வீட்ல வளந்த மாமாவுக்கு நம்ம வெண்ணிலாவை ரெண்டாந்தாரமா எப்படி கட்டி வைக்க? மாமா என்ன நினைப்பான்? அவனோட அம்மா அப்பா இருந்திருந்தா இப்படி பண்ணிருப்பாங்களான்னு நினைக்க மாட்டான்”
“அதெல்லாம் மாமாவுக்கு வரன் வந்துட்டு தான் இருக்கு. ஆனா மாமா தான் முடியாதுன்னு சாதிக்கிறான்”
“அதுக்கு தான் வெண்ணிலாவை வரச் சொல்றேன். பரணி அண்ணன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டிக்கார், அதனால நீ வந்து பேசுன்னு சொல்லி வெண்ணிலாவைக் கூப்பிடுங்க”
“அப்படியா?”
“ஆமா”
“உன் மனசுல வேற எதுவோ இருக்கா சுஜி?”
“ஒரே ஒரு சந்தேகம் இருக்கு”
“என்ன?”
“வெண்ணிலா கல்யாணம் முடிஞ்ச அப்ப பரணி அண்ணா கொஞ்சம் அப்நார்மலா தான் இருந்தாங்க. ஆனா கொஞ்ச நாள்ல தேறிட்டாங்க. ஆனா வெண்ணிலா டைவர்ஸ் ஆகி வீட்டுக்கு வந்தப்ப நத்தை ஓட்டுக்குள் போற மாதிரி இறுகிப் போயிட்டாங்க. யார் கிட்டயும் கலகலப்பா பேசுறது இல்லை. அவங்க பேசுற ஒரே ஆள் நம்ம பவித்ரா மட்டும் தான். அதுக்காக நான் வெண்ணிலாவையும் பரணி அண்ணனையும் சம்பந்த படுத்தி பேச வரலை. ஒரு வேளை அவங்க அவளை விரும்பி அதை மறைச்சிருந்தா? அது வெண்ணிலாவுக்கு தெரியாம இருந்துருக்கலாம். வெங்கட் வேற ஒரு பொண்ணை விரும்பினதுனால அவ டைவர்ஸ் வாங்கி இருக்கலாம். அவ மனசுலயும் பரணி அண்ணா இல்லாம இருக்கலாம். ஆனா ரெண்டு பேருமே ஒருத்தர் சொல்றதை இன்னொருத்தர் கேப்பாங்கன்னு தோணுது. என்னன்னு கேட்டுப் பாருங்களேன். அவளை வரச் சொல்லுங்க”
“இப்பவே சொல்றேன். அதுக்கு முன்னாடி உன் கிட்ட ஒரு விஷயம் மறைச்சிட்டேன்”, என்று ஆரம்பித்து பரணி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதைச் சொன்னான். அதைக் கேட்டவள் என்னவோ அவனுக்கு இப்போது தான் அடி பட்டது போல அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“அடி பட்டது மாமாவுக்கு தான் டி. மாமா இல்லைன்னா இந்த நிமிஷம் நான் இருந்துருக்க மாட்டேன்”, என்று சொல்ல அவன் உதடுகளை தன்னுடைய விரலால் மூடினாள். அவளை அணைத்துக் கொண்டே வெண்ணிலாவை அழைத்தான்.