அவன் வியப்பாய், “எப்படிக் கண்டு பிடிச்சீங்க? நானு எங்க அம்மா ஜாடை, அவருதான் என்னோட அப்பானு சொன்னாக்கூட நம்ப மாட்டாங்க! அப்பா அவ்வளவு நிறம். எங்கம்மாவும் நானும் கருப்பு!”
இதழ்கள் மலர சிரித்தவன், “ஜாடைய வச்சு எல்லாம் இல்ல. நீயி கேட்ட கறியை வச்சுதான். அவரு கேட்கிறது மாதிரியே, அச்சுப் பிசகாம உன்கிட்ட சொல்லி விட்டிருக்காரு!”
மெலிதாய்ப் புன்னகைத்தவன், “போன வாரம் வேலைப் பார்க்கும் போது, அப்பா மேல பழைய சுவரு ஒண்ணு இடிஞ்சு விழுந்திடுச்சு அண்ணே..”
“என்னப்பா சொல்லுற?”
“பெரிசா ஒண்ணும் இல்ல. நேத்துதான் ஆஸ்பத்திரியில இருந்து வந்தோம். இப்ப நல்லா இருக்காரு!”
“சரிப்பா பார்த்துக்க!” என்று கறியைக் கொடுக்க, பணத்தை நீட்டினான் அவன்.
“இல்ல. இப்போதைக்கு மருந்து, மாத்திரை, ஊசினு நிறையச் செலவு இருக்கும். உங்கப்பா வர்றப்ப, நானு வாங்கிக்கிறேன்!”
“கொடுக்காம போனா, அம்மா சத்தம் போடுவாங்க!”
“நானு சொன்னேனு சொல்லு. எதுவும் பேச மாட்டாங்க!” என்றவன் அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்கத் துவங்கினான்.
* * *
தேநீர் கோப்பையுடன் வெளி வாயிலில் வந்தமர்ந்தாள் தமிழ். சுற்றிலும் எங்கும் ஈரம். மழையாகவும் இல்லாது சாரலாகவும் இல்லாது, துளித்துளியாய்ச் சொட்டிக் கொண்டிருந்தது, மேகம் பிழிந்த நீர்.
சமையலறையில் இருந்து வந்த மீன் குழம்பின் வாசம், அவளின் நாசியைத் துளைத்தது. காலை ஐந்து மணிக்கே சென்று, மீன் வாங்கி வந்து விட்டார் வேணுகோபாலன். நாராயணி தான், சமைத்தார்.
மருமகளிற்கு அசைவம் சமைப்பதில் பக்குவம் பத்தாது என்று உரைத்து, அவரே செய்து விடுவார். ஆனால், வெங்காயம் உரிப்பது முதல் மசாலா அரைத்துத் தருவது வரை, அனைத்தும் சவிதா தான். சிலநேரங்களில் மாமியாரின் இந்தச் செயல்களால் எரிச்சல் மேலிடும் தான். இருந்தும் எதற்காக வீண் வாக்குவாதம் என்றெண்ணி அமைதியாகவே இருந்து விடுவார்.
“என்னடி, டீயைக் குடிச்சிட்டியா.?”
“என்னமா.?”
“தலைக்கு எண்ணெய் வச்சு சீவலாம்னு தான்!”
“ஐயோ, இந்த மழையிலயா.? எண்ணெய் வச்சா, தலை கனக்கும் மா. வேணாம்!”
“அதுக்காகக் காய்ஞ்சுப் போன தலையோடவே சுத்துவியா.? முடிய எல்லாம் பாரு, செம்பட்டை கலரா மாறிடுச்சு!”
“இருந்தா இருந்திட்டுப் போகுது, விடு!”
“உனக்கு என்ன? நாளைக்குக் கல்யாணப் பேச்சு வர்றப்ப, பொண்ணுக்கு என்ன வியாதினு எங்கக்கிட்ட இல்ல கேட்பாங்க?”
“எண்ணெய் வைக்காத வியாதினு சொல்லு!”
“வாயைப் பாரு. கொஞ்ச நேரம் சும்மா உட்காரு!” என்றவர் மகளின் குழலிற்கு எண்ணெய் தேய்த்து, சிக்கலை விலக்கிப் பின்னலிட்டு முடித்தார்.
“டைட்டா போடாதமா, வலிக்குது!”
“இறுக்கமா போட்டாதான், முடி அங்கேயும் இங்கேயும் பறக்காம இருக்கும்.”
“தமிழ், வா சாப்பிடு!” என நாராயணி குரல் கொடுக்க, “இதோ வந்திட்டேன் ஆச்சி.” என்று எழுந்த மகளை நிறுத்திய சவிதா, “ஒழுங்கா, போய்க் குளிச்சிட்டு சாப்பிடு!”
“ம்மா..?”
“சொல்லுறதைக் கேளு.”
“ஞாயித்துக்கிழமை ஒரு நாளாவது, ஃபிரீயா விடுறியா நீயி.?”
“நீயும், ஒரு நாளாவது எனைய கத்த வைக்காம இருக்கிறியா.? தினமும் பாட்டுப் பாட வேண்டியதா இருக்கு.”
“இதைத்தவிர, உனக்கு வேற என்ன வேலையாம்.?”
“நல்ல பொண்ணைப் பெத்திருக்கேன் நானு. பொம்பளை பிள்ள பிறந்தா, பெத்தவளுக்கு வேலை பாதியா குறையும் சொல்லுவாங்க. ஆனா எனக்குனு வந்து சேர்ந்திருக்கப் பாரு. எல்லாம் உங்க அப்பாவைச் சொல்லணும். செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிட்டுப் போயிட்டாரு. இப்ப அனுபவிக்கிறது நானுதான?”
சிரித்த சவிதாவும், அவரிற்கு உதவிட.. விரைவிலேயே பணி முடிந்தது. சோர்வாய் வந்து அமர்ந்தவரிற்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தவள், “மாமா, நம்ம தமிழைப் பத்திக் கொஞ்சம் பேசணும்.”
“நானுமே பேசணும்னு நினைச்சேன் மா.”
“என்ன மாமா.?”
“வயசு இருபத்திரண்டு ஆகிடுச்சு. நாங்க இருக்கிறப்பவே, கல்யாணத்தைச் செஞ்சு முடிச்சிடலாம்னு தான்! இதுவே ஜெயராம் இருந்திருந்தா, நானு கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனா எனக்கு முன்னாடி போயி, பிள்ளையோட பாரத்தை என்மேல இல்ல ஏத்திட்டான்? உங்க ரெண்டு பேருக்குமே, ஒரு வழி செய்யணும்மா.”
அவர் கேள்வியாய்ப் பார்க்க, “தமிழை, நம்ம சேரலுக்குக் கட்டிக் கொடுத்தா என்ன.?”
கோபாலனின் முகம் யோசனையில் சுருங்க, “அவனுக்கும், நம்மளை விட்டா யாரு இருக்கா.? சின்ன மாமா குடும்பமும், கங்கா பிரச்சனையால அப்படியே ஒதுங்கிட்டாங்க. இந்தப் பக்கமும், சொந்தம்னு சொல்லிக்கப் பெருசா யாரும் இல்ல.” என மெல்ல எடுத்துரைத்து, “அவரு இருந்திருந்தாலும், இது எல்லாம் யோசனை செஞ்சிருப்பாருல மாமா.?” என்று மகனின் மீதான பெரியவரின் அன்பைத் தூண்டி விட்டார்.
உண்மையில் ஜெயராமின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. இளஞ்சேரலின் பழக்க வழக்கங்கள் நன்முறையில் இருந்தாலுமே, அவனது தொழிலை மட்டும் அவரால் ஏற்க இயலவில்லை. மகளைத் திருமணம் செய்து கொடுத்து, மெல்ல அவனை வீட்டோடு மாப்பிள்ளையாய் மாற்றி, வேறு ஒரு தொழிலில் ஈடுபடுத்தலாம் என எண்ணி இருந்தார்.
ஆனால் அதற்கான கால அவகாசத்தை நல்காது, காலன் மாரடைப்பின் மூலமாய் அவரது உயிரைப் பறித்துச் சென்றிட, விதி தன் போக்கில் மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
“ம்ம்..” என ஒரு பெருமூச்சை விட்ட கோபாலன், “நீயி சொல்லுறதும் சரிதான் மா. கட்டிக் கொடுத்தா, நல்லாதான் இருக்கும். அவனுக்கும், உன்மேல பிரியம் அதிகம். எங்களுக்குப் பின்னாடி கடைசி வரைக்கும் பார்த்துக்குவான். ஆனா நாராயணி தான்..” என்று இழுத்து நிறுத்திட,
“அத்தை.. நீங்க சொன்னா புரிஞ்சுக்குவாங்க மாமா.”
மெலிதாய்ப் புன்னகைத்தவர், “தமிழ் சம்மதிக்கணுமே.?”
சவிதா லேசாய்ச் சிரித்தாரே தவிர, பதில் உரைக்கவில்லை.
அன்று இரவே கோபாலன் மனைவியிடம் இதைப் பற்றிப் பேச, “நானு, கங்காவையே வீட்டுக்குள்ள சேர்க்கல. நீங்க என்னனா, என்னோட பேத்திய அவ பெத்தப் பிள்ளைக்கு ஜோடி சேர்க்கப் பார்க்கிறீங்க.?” என வெடித்தார் நாராயணி.
“அந்தப் பைய மேல, ஏன் உனக்கு இவ்வளவு ஆத்திரம்?”
அவர் அமைதிக் காக்க, “சொல்லுமா.?”
“பெத்தவ வேணும்னா, உங்க தம்பி மகளா இருக்கலாம். ஆனா உசுரைக் கொடுத்தவன், என்ன ஆளோ?”
“நீயி பேசுறது, உனக்கே சரினு படுதா நாராயணி.? அறிஞ்சவங்களைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசலாம். அறியாதவங்களைப் பத்தி பேசுறது நாகரீகம் இல்ல. கங்கா மாப்பிள்ளய, நேருல பார்த்திருக்கியா நீயி? அவரோட பேராவது தெரியுமா உனக்கு.? எதுவுமே தெரியாம, அதுவும் உசுரோடவே இல்லாத ஒரு மனுசனைப் பேசுறது பாவம்மா.”
“அது பாவமாவே இருந்தாலும், என்னைத் தான சேரும்? நானே அதைச் சுமந்துட்டுப் போறேன்.”
“அப்ப நம்ம பிள்ளைய பத்தி யாரும் பேசுனா, அந்தப் பாவத்தை அவங்களே சுமக்கட்டும்னு நினைச்சுப் பேசாம இருப்பியா நீயி.?”
திகைப்புடன் பார்த்த நாராயணி, “என்னங்க இப்படிப் பேசுறீங்க.? நம்ம பிள்ள, யாருக்கு என்ன கெடுதல் செஞ்சான்? அவனை யாராவது தப்பா பேசுனா, அவங்க நாக்கு அழுகிப் போயிடும்!”
“கங்காவும், அவ மாப்பிள்ளையும் மட்டும் என்ன கெடுதல் செஞ்சாங்க உனக்கு? நீயி மட்டும் பேசுலாமா.? ஒண்ணு ஞாபகம் வச்சிக்க நாராயணி.. நாம செய்யிற பாவம், நம்மளை மட்டும் இல்ல, நம்ம பிள்ளைகளையும் பாதிக்கும். ஏற்கனவே அவன் போயிட்டான். தமிழ் மேல அந்தப் பாவத்தை இறக்கிடாத!”
அவரின் முகத்தில் வேதனையின் ரேகை படர, “என்ன ஆனாலும் சரி, நம்ம தமிழை அவனுக்குக் கட்டிக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டேன் நானு!”
“இது என்னோட முடிவு இல்ல. நம்ம மகனோட கடைசி ஆசை. ராமுக்குக் கங்கா மேலயும் அவளோட மகன் மேலயும் எவ்வளவு பிரியம்னு, நானு சொல்லித்தான் உனக்குத் தெரியணும்னு இல்ல. சித்தப்பா மகளுக்காக, பெத்தவங்களையே எதிர்த்து நின்னான். சேரலோட படிப்புக்காக, தன்னோட வாழ்க்கையையே அடமானம் வச்சான். இதுக்கு மேலயும்..?”
“அதுனால தாங்க, சம்மதிக்க மாட்டேன்னு சொல்லுறேன். அவனோட படிப்புக்காகத்தான்.. தனக்கு வைத்தியம் பார்க்காம, காசைச் சேர்த்தான் என்னோட பிள்ள. கடைசியில என்னாச்சு, நெஞ்சு வலி வந்து போயி சேர்ந்திட்டானே.? வளர்த்தவனையே கொன்னுட்டுப் போனவன், அந்தக் கங்கா மகன். அவனுக்குப் போயி, நம்ம குழந்தையைக் கொடுக்க நினைக்கிறீங்களே.?
பெத்த மனம் பித்து, பிள்ள மனம் கல்லுனு சொல்லுவாங்களே.? இங்க.. பெத்த உங்களுக்குத்தான் மனசு கல்லாப் போச்சுங்க. பாசம் விட்டுப் போச்சு. ஆனா என்னால முடியலயே..?” என அழுத மனையாளைத் தேற்றும் வழியறியாது கோபாலன் கலங்கி நிற்க, பக்கத்து அறையில் இமையோரம் நீர் வெளியேற படுத்திருந்தார் சவிதா.