மகேஷின் வீட்டிற்கு அழகன் வந்து ஒரு மாத காலம் நிறைவடைந்திருந்தது. இந்த ஒரு மாத காலமும் இருவரும் வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்தை ஒட்டி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் போல் இருக்கும் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள். இந்த அலுவலகத்தை வாங்கும் போது அருகில் இருந்த இதோடு தொடர்புடைய அந்த கெஸ்ட் ஹவுஸையும் சேர்த்து தான் வாங்கி இருந்தான் மகேஷ்.
ஆனால் வீட்டிற்கு வரவில்லை என்றால் ஒரு வழியாக்கி விடுவேன் என்று தாய் மிரட்டி இருந்ததால் இங்கே தங்குவதற்கு அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அழகன் வந்திருந்த காரணத்தினாலும், அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் மீண்டும் இது பற்றி தாயோ, தந்தையோ ஏதாவது கேட்டு விடுவார்களோ என்பதாலும் தான் இங்கேயே இருவரும் தங்குவது என்று முடிவெடுத்திருந்தார்கள்.
அழகன் அலுவலகம் வந்த நாளன்றே அங்கிருந்த வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தபடியால் அலுவலகம் முடிந்து இருவரும் அங்கே சென்று விட்டார்கள். தேவைக்கு அதிகமாக எந்த திங்க்ஸூம் அங்கே இருக்கவில்லை. ஆனால் இவர்களது தேவைக்கானவை இருந்தன. ஏற்கனவே அழகனுக்கு சமைக்க தெரியும், மகேஷுக்கும் தெரியும் தான் ஆனால் இருக்கும் வேலைப்பளு அவனை சமைக்க விட்டதில்லை. ஆகையால் இங்கேயும் அழகன் தான் சமைத்தான்..
இன்று மகேஷ் ஏதோ ஒரு வேலையாக மதியமே வெளியில் கிளம்பி சென்று இருந்ததால் மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்து அழகன், இருந்தை சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைந்த போது ரிசப்ஷனில் இருந்த பெண், “சார்..” என்று அழைத்திட,
“சொல்லுங்க ” என்று இவன் கேட்டதும்,
“இல்ல சார் இன்னைக்கு கொஞ்சம் பேரை இன்டர்வியூக்கு சார் வர சொல்லியிருந்தாரு. இப்ப சார் வெளியில போயிட்டாரு, உங்கக்கிட்ட வேணா அனுப்பட்டுமா?” என்று கேட்க,
“நான் இதுவரைக்கும் இன்டர்வியூ பண்ணுனதில்ல”
“பரவால்ல சார் இந்த பேப்பர்ல இருக்கிறதை கேட்டீங்கன்னா போதும்னு சார் போகும் போதே கொடுத்துட்டு போனாரு” என்றதும் சரி என்று சொல்லி அந்த பேப்பரை வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்று அமர்ந்து விட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் நான்கு இளைஞர்கள் வர தனக்கு தெரிந்த விதத்தில் அவர்களை இன்டர்வியூ செய்தான். அவர்கள் அளித்த பதிலிலும் சரி, அவர்கள் நடத்தையிலும் சரி எந்த ஒரு திருப்தியும் இல்லாததால் அவர்களை அனுப்பி வைத்த விட்டு ரிசப்ஷனில் இருந்த பெண்ணுக்கு அழைத்தவன், “வந்த நாலு பேருமே சரியா பர்பாஃமென்ஸ் பண்ணல. அவங்களை வேலைக்கு எடுத்தா கண்டிப்பா இங்க டெடிகேஷனா ஒர்க் பண்ணுவாங்கன்னு எனக்கு தோணல. வேற யாராவது வந்தா அனுப்புங்க” என்று சொல்லிவிட்டு ‘அப்பாடா’ என்று கண்முடி அமர்ந்து விட்டான்.
ஏனோ இந்த ஒரு மாத காலமாக அவன் வாழ்வில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் குடும்பம், குடும்பம் என்று இருந்தவனுக்கு இந்த தனிமை பெரிதும் கொடுமையாக இருந்தது. மகேஷ் அவ்வப்போது இவனுடன் உரையாடினாலும் கூட திருமணமாகப் போகிறவன் என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அலைபேசியில் தன் பியான்சியோடு பேசிக் கொண்டிருப்பான்.
அவனை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அழகனே விலகி வந்து அறைக்குள் அமர்ந்து விடுவான். இல்லையேல் பக்கத்தில் இருக்கும் கார்டனில் புதிதாக இவன் வற்புறுத்ததால் நடப்பட்டு இருக்கும் அலங்காரச் செடிகளை பார்த்துக் கொண்டிருப்பான். அதிலும் செடியில் மலரோடு இருக்கும் செடிகளைத் தான் பார்த்து வாங்கி பதியமிட்டு இருந்ததால் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லையேல் ஏதேனும் பாடல் கேட்டுக் கொண்டிருப்பான் இப்படியே தான் நாட்கள் நகர்ந்தது.
ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவன் கதவு தட்டப்படும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தான். தனக்கு பி.ஏவாக, மகேஷ் வேலைக்கு சேர்த்து இருந்த சாகர் வந்திருப்பதை கண்டவன், ‘வாங்க’ என்பது போல் தலையசைத்திட,
உள்ளே வந்த சாகரோ, “சார்…” என்றிட ,
“ம். சொல்லுங்க சாகர்”
“உ.. உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்காங்க?”
“வாட்..என்னைப் பார்க்கவா, அதுவும் பொண்ணா? அதிசயமா இருக்கே” பொண்ணென்ற வார்த்தையை அதிசயமாய் கூறி சாகரையே வியக்க வைத்தவனும், தன் தாடி நிறைந்த தாடையை இரு விரல்களால் வருடியவாறு,
“வர சொல்லுங்க பாப்போம்” என்றாலும், விழிகளோ அவசரமாய் சிசிடிவி கேமராவின் மூலம் பதிவுகளை கடத்திக் கொண்டிருந்த லேப்டாப்பில் பதிய, அந்தோ பரிதாபம் வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணின் குனிந்த தலை மட்டுமே அவன் விழிகளுக்கு காட்சியளித்தது.
‘யார் இவள்? புறத்தோற்றத்தை வைத்து அறிய முடியாமல் அவஸ்தையாய் நெளிந்தான். அந்த அவஸ்தைக்குள் ஒருவித நெருடலும், ஒருவித எதிர்பார்ப்பும் ஒளிந்திருந்ததை அவனுமே அறிந்திருக்கவில்லை.
அவனது உதவியாளனான சாகர் வெளியில் சென்று அப்பெண்ணை அனுப்பி வைக்க, கதவை நாசுக்காக தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் அவள்.
தனக்கு முதுகு காண்பித்து இருக்கையில் அமர்ந்திருப்பவனின் முகம் தெரியாவிட்டாலும் வந்ததை கூறி விடும் எண்ணத்தோடு, “சார் என்னோட பேர் கவி..” என்று துவங்கியவள் முழுதாக பெயரை கூறி முடிக்கவில்லை, கையில் இருந்த பேப்பர் வெயிட்டை கதவை நோக்கி தூக்கி எறிந்தவன், “கெட் அவுட்” என்றான் உறுமலாய்.
அவன் முகம் தெரியா விடிலும் குரலில் இருந்த எரிச்சலும், கோபமும் அங்கு நின்ற அப்பெண்ணை விதிர்விதிர்க்க வைத்தது. அடித்து பிடித்து அவ்வறையில் இருந்து வெளியில் ஓடி வந்தவள், அந்த அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த பிறகே பெருமூச்செறிந்தாள்.
‘ஆத்தி விட்டா கொலை செஞ்சிருவாங்க போலையே. இதுக்கு மேல இந்த கம்பெனிக்கு வேலை கேட்டு வரக்கூடாது’ என்று புலம்பிக் கொண்டே சென்ற பெண்ணுக்கு தெரியவில்லை, கவி என்ற வார்த்தை மட்டுமல்ல, அப்பெயருக்கு சொந்தக்காரியையும் கூட மீண்டும் ஒருமுறை கண்டால் கொன்று விடும் கொலவெறி அவனுள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்று..
இன்டர்வியூவிற்காக வந்த பெண்ணைத் தான், ‘உங்களை பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறாள்’ என்று மாற்றி சொல்லி, சட்டென்று கோபப்படுத்தி, நொடியில் அவனை டென்ஷன் ஏற்றி, என்னவென்று சொல்ல முடியாத உணர்வில் தவிக்க வைத்திருந்தான் சாகர்.
மதிய உணவு உண்பதற்காக ரிசப்ஷனில் இருந்த பெண் சாகரை அமர வைத்து விட்டு சென்றிருந்தாள். அந்த இடைவெளியில் தான் இந்த காரியத்தை பண்ணி வைத்திருந்தான் அவன்.
அந்த பெண் சென்ற பின்பும் அடக்கமாட்டாத கோபத்தோடு அமர்ந்திருந்தவனுக்கு ‘கவி..கவி’ என்ற பெயரை யாராவது சொன்னால் கூட பிபி அதிகரிக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தான். ‘அவள் மீது உயிரையே வைத்திருந்தேன். ஆனால் முன்னேற வேண்டும், நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த ஒரு பெண்ணும் சொல்ல முடியாத பொய்யை சொல்ல துணிந்து விட்டாளே, பாதகத்தி’ என்று பழைய நினைவுகளில் முகம் கடுகடுக்க அமர்ந்திருந்தவனை,
அப்போது தான் அறைக்குள் நுழைந்த மகேஷ் கண்டுவிட்டு, “என்னடா ஆச்சு?” என்று கேட்க.
“ஒன்னும் இல்லடா சும்மா ஏதோ நினைப்பு. ஆமா நீ போன விஷயம் என்ன ஆச்சு”
“சக்சஸ் தான். நாம நைட் இங்கிருந்து கிளம்புறோம்” என்றான்.
“என்னடா திடீர்னு இப்படி சொல்ற. உங்க வீட்டுல அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்களா? திரும்பி வர்றதுக்கு எவ்வளவு நாள் ஆகும்னு தெரியாது. இன்னும் டூ மந்த்ஸ்ல உனக்கு மேரேஜ் வேற இருக்கு இல்லையா.”
“அதெல்லாம் வந்துடலாம்டா. சப்போஸ் அப்படி என்னால வர முடியலன்னா மீதி இருக்கிற வேலையை நீ பார்த்துக்க, நான் வந்து மேரேஜ் அட்டென்ட் பண்ணிட்டு திரும்பி அங்க வந்துடறேன். ஆனா என்ன ஆனாலும் சரி நம்ம பிசினஸ்ல பின்னடைய கூடாது. இதுல நினைச்ச மாதிரி எல்லாத்தையும் செய்யணும், நம்ம கம்பெனியோட பேர் மட்டும் இல்ல, பொருட்கள் கூட தரமானதுன்னு ரீச் ஆகணும்னா கொஞ்சம் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த தாண்டா ஆகணும். நான் எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கேன் நீ எப்படி?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
அவனை முறைத்த அழகன், “உனக்காவது சொந்த பந்தம் இருக்காங்க, ஆனா எனக்கு யாருமே இல்லடா. நான் தனிக்கட்டையா இருக்கேன், அதனால எங்க வேணா போலாம், வரலாம். அங்க எனக்கு எதுவும் நடந்தா கூட என்ன ஏதுன்னு கேட்க யாரும் இல்லடா. அதனால நீ தைரியமா இரு கண்டிப்பா நான் வருவேன்..”
“உடனே எனக்கு யாரும் இல்ல, உனக்கு சொந்த பந்தம் இருக்காங்கன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவியே. இங்க பாரு யார் இருந்தா என்ன இல்லாம இருந்தா என்ன உன்னை நீ நம்பு. அப்படியே உன் லைஃப்ல எல்லாமே முடிஞ்சு போன மாதிரி எல்லாம் பேசக்கூடாது. சில சுயநலவாதிகளோட முகம் தெரிஞ்சிருச்சுன்னு நெனச்சுக்க. கூடவே எல்லாரும் அதே மாதிரி இருப்பாங்கன்னு நினைக்க கூடாது. ஏன் உனக்காக நான் இல்லையா? அப்ப அவங்களை மாதிரி தான் என்னையும் நினைக்கிறியா?”
“நான் அப்படி சொல்ல வரலடா”
“பின்ன எப்படி சொல்ல வந்த? போதும் இதோடு இந்த பேச்சை நிறுத்திக்க, இதுக்கு மேல இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வந்துச்சுன்னு வைய்யேன் ஃபிரண்டுன்னு கூட பார்க்க மாட்டேன் அப்படியே பேசுற வாயில ஒரு குத்து குத்துனேன் வைய்யேன் பல் எல்லாம் புட்டுக்கும்.” கோபத்தில் அவனை முறைத்தவாறு கத்தினான் மகேஷ்.
“இனிமே பேசல போதுமா. யார் யாரு போறது “
“நீ, நான், சாகர் மூணு பேரும் தான் போறோம் ”
“என்னது சாகரும் வர்றானா?”
“இரண்டு பேரா போறதுக்கு மூணு பேரா போனா நமக்கு கொஞ்சம் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். அது மட்டும் இல்ல சாகரும் கூட ஒரு மலை கிராமத்துல இருந்து வந்ததா அவனோட ப்ரோபைல்ல மென்ஷன் பண்ணி இருக்கான். அவனுக்கு காடு, மலையைப் பத்தி எல்லாம் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும். அவனைக் கூட்டிட்டு போறது நமக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்”
“அப்படிங்கிற?”
“அப்படித்தான். அவன்கிட்ட இன்னும் நான் எதுவும் சொல்லல. அவன்கிட்ட சொல்லி வீட்டுல இன்பார்ம் பண்றதுன்னா இன்பாஃர்ம் பண்ண சொல்லிட்டு வர்றேன். நீ ரூமுக்கு போய் தேவையானதை எல்லாம் பேக் பண்ணு ஓடு ஓடு” என்று அழகனை அனுப்பி வைத்து விட்டு சாகரை பார்த்து மகேஷ் விஷயத்தை சொல்ல,
அவனோ, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது சார். நானுமே என்னோட நேட்டிவ் பிளேஸை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். மறுபடியும் அங்க போறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறதுல சந்தோஷம் தான். எங்க இடம்னு மட்டும் இல்ல, அதே மாதிரியான வேற இடத்துக்கு போனாலும் ஹாப்பியா தான் இருப்பேன். இயற்கையில இருக்கிற சந்தோஷம், புத்துணர்ச்சி இந்த மாதிரி கட்டிடங்கள் இருக்கிற இடத்துல கிடைக்கிறது கிடையாது சார்” என்றான்.
”போதும் போதும் ஒரேடியா சந்தோஷப்படக் கூடாது. வீட்டுல இன்பாஃர்ம் பண்றதுன்னா பண்ணிட்டு திங்க்ஸோட நம்ம வீட்டுக்கு வந்துரு. அங்க இருந்துட்டு நைட் நாம கிளம்பலாம்” என்றதும் குதுகலத்தோடு கிளம்பி விட்டான் சாகர்.
தேவையானதை எல்லாம் எடுத்து வைத்த அழகன் இரவு செல்லும் போது ஏதேனும் தேவைப்பட்டால் என்ன செய்வது என்று சப்பாத்தியும், தொட்டுக்கொள்ள எளிதில் கெட்டுப் போகாத தக்காளி தொக்கும் செய்து அனைத்தும் பேக் செய்து முடிக்கையில் அலுவலகம் முடிந்து வந்தனர் சாகர், மகேஷ் இருவரும்.
“அதைப் பத்தி நீ பீல் பண்ண வேண்டாம் பூங்குன்றன் பார்த்துக்குவாரு. ஏதாவது டவுட்னா கால் பண்ணி நம்மக்கிட்ட கேட்டுக்குவாரு. அது மட்டும் இல்லாம நான் இல்லன்னா கூட கம்பெனியை பொறுப்பா பார்த்துக்கும் ஒரே ஆள் அவர் தான். அவரை நம்பி என்ன வேணா செய்யலாம், இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றேன் அவர் நல்லா பார்த்துக்குவாரு” என்றதும் சரி என்று தலையாட்டி வைத்தான் அழகன்.
சரியாக இரவு 11 மணி அளவில் மூவரும் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டார்கள். செல்லும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று ஏற்கனவே மகேஷ் வாங்கி வைத்திருந்த லைசென்ஸூடு கன்னையும் எடுத்துக்கொண்டு தான் வந்தான்.
மகேஷ் காரை ஓட்ட அழகன், சாகர் இருவரும் பின்னே அமர்ந்து கொண்டார்கள். புது இடத்திற்கு போகப் போகிறோம் அங்கு என்னவெல்லாம் சந்திக்க வேண்டி வருமோ என்று நினைத்து அழகன் தூக்கத்தை தொலைத்திருக்க,
இயற்கையை ரசிக்கப் போகிறோம், மீண்டும் இயற்கையோடு சில நாட்களை கழிக்க போகிறோம் என்ற குதூகாலத்தில் சாகருக்கும் உறக்கம் வரவில்லை. ஏதேனும் பேச்சு கொடுக்க வேண்டும் என்று நினைத்த சாகர்,
“உங்க முழு பேருமே அழகன் தானா சார்” என்று ஆரம்பித்து வைக்க, அந்த வார்த்தைகளைக் கேட்டு காரை ஓட்டிக் கொண்டிருந்த மகேஷ் நிமிர்ந்து கண்ணாடி வழியாக அழகனை பார்த்தான்.
அழகனோ, ”கவியழகன்” என்றான்.
“ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இந்த வார்த்தை உன் வாயில இருந்து வருது போல” என்ற மகேஷின் வார்த்தைகளுக்கு,
“இதையே நீ கேட்டிருந்தா வேற பதில் வந்திருக்கும். சின்ன பையன் கேட்கிறான் அவன்கிட்ட மூஞ்சியில அடிச்ச மாதிரி பதில் சொல்லக்கூடாதுன்னு தான் பேரை சொன்னேன். இதில் என்ன இருக்குது, என் பேர் அது தானே அதை சொல்றதுக்கு எனக்கு என்ன தயக்கம்”
“இல்லை உனக்கு அது பிடிக்காது..”
“போது மகேஷ்” என்று கண்களை உருட்டினான் அழகன், அதில் சட்டென்று வாயை மூடிக்கொண்டான் மகேஷ்.
சாகரோ, “சூப்பரா இருக்கு சார் உங்க பேரு. ஆனா எனக்கு தான் என்னோட இந்த பெயர் பிடிக்கல” என்றான் சலிப்போடு.
“ஏன் இதுக்கு என்ன, சாகர் நல்லா தானே இருக்குது”
“நீங்க வேற சார் என்னோட முழு பெயர் அறிகதன்..
“ஓஓ.. இதுக்கு என்ன அர்த்தம்?”
“நடுநிலை தவறாமல் நடப்பவன்னு அர்த்தம்..”
“அப்புறம் எப்படி சாகர்னு பேர் வந்துச்சு”
“சர்டிபிகேட்ஸ்ல எல்லாம் இந்த பேர் தான் இருக்குது. உண்மையான பேரை ஸ்கூல் படிக்கும் போது கொடுக்கிறதுக்கு அப்பா அம்மா ரொம்ப தயங்கினாங்க சார். ஏன்னா அட்மிஷன் போட்டுக்க மாட்டேன்னு சொன்னாங்களாம். அதான் என்ன பேர் வைக்கிறதுன்னு தெரியாம அவங்க குழப்பமா நின்னப்ப, அந்த சாரே சாகர்னு பேர் வச்சதா சொன்னாங்க. சர்டிபிகேட்ல மட்டும் தான் சார் அந்த பேர் இருக்குது, என்னோட சொந்தக்காரங்க, அம்மா, அப்பா எல்லாருமே என்ன அறின்னு தான் கூப்பிடுவாங்க..”
“ஓஓஓஓ.. அப்படியா அறி.. சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் ஒவ்வொரு ரகசியங்கள் இருக்கத்தான் செய்யுது இல்லையா” என்ற மகேஷின் பார்வை அழகனைத் தான் கூர்ந்து விழித்தது.
அதை உணர்ந்த அழகனும், ”சரி எப்படியும் நம்ம போறதுக்கு ஒரு எட்டு மணி நேரத்துக்கு மேல ஆகும்னு இந்த ரூட் மேப்ல இருக்குது. நீ கொஞ்சம் தூங்கு சாகர். ஏன்னா அங்க உனக்கு தான் வேலை அதிகமா இருக்கும். ஏன்னா காடு, மலை எல்லாம் எங்களுக்கு புதுசு, ஆனா நீ அதை சார்ந்து வாழ்ந்திருக்க ஏதாவது தேவைன்னா நீ தான் மெனக்கெடுற மாதிரி இருக்கும்” என்றதும் சரி என்று தலையாட்டி விட்டு அழகன் மீதே சாய்ந்து உறங்க ஆரம்பித்தான் சாகர்.
இப்போது தெளிவாகவே மகேஷை முறைத்த அழகன், “என்னடா என்ன, குத்தி காட்டுறியோ?” என்றிட,
“அதுதானே உண்மை. நீ ஏதோ ஒரு விஷயத்தை எனக்கே தெரியாம மறைக்கிற, அதை உனக்குள்ளையே வச்சுக்கிட்டு கஷ்டப்படுறன்னு எனக்கு நல்லா தெரியுது. ஆனா அது என்னன்னு தான் தெரியல.”
“அது என்னவா வேணா இருந்துட்டு போட்டுமே. சொல்ல வேண்டிய விஷயமா இருந்தா சொல்லியிருப்பேன்ல” என்று அழகனின் முகத்தில் வலிக்கான சாயல்.
“சரி விடு அதைப் பத்தி கேட்கல. நேத்து மதன் போன் பண்ணி இருந்தான்” என்றதும் அழகனின் முகம் மாறியது.
“பாருடா அன்னைக்கு தான் அவளை பார்த்தானோ? ஒரு ஆஃபீஸ்ல எப்பவும் பார்த்துட்டு தானே இருக்கான்.”
“இல்ல நீ ஆபீஸை விட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்துலையே அவனும் அந்த வேலை வேண்டாம்னு வெளியில வந்துருக்கான் ”என்று சொல்ல, இந்த விஷயம் அழகனுக்கு புதிது என்பதால் விழிவிரித்து அவனைப் பார்க்க, அவனும் ஆமாம் என்று தலையாட்டினான்.
“ஏன் எங்கிட்ட எதுவும் சொல்லலை. ஒருவேளை நான் அவனுக்கு கால் பண்ணி பேசியிருக்கணுமோ? ரொம்ப கோபமா இருந்துட்டனோ?”
“அப்படி தான் நினைக்கிறேன். வேற எதுவும் கேட்கணுமா?” என்றவனது விழிகள் அழகனை ஆழ நோட்டமிட்டது.
சிலையென அசையாது இருந்தவனது மனமோ ஓலமிட்டது. ‘ஆமா அ..அவள் எப்படி இருக்கான்னு தெரியலையே? ஒருவேளை அவள் விஷியத்துலையும் நான் ரொம்ப அவசரப்பட்டுட்டனோ? இடையில வேற எதாவது நடந்துருக்குமோ?’ என்று ஏதேதோ நினைத்து குழம்பியவனுக்கு, அவளைப் பற்றி கேட்க காதல் கொண்ட மனது துடித்தது. வார்த்தைகளும் கூட இதழை விட்டு வெளி வர தவியாய் தவித்தது. ஆனால் காயம்பட்ட மனது அனைத்தையும் உள்ளுக்குள் அமுத்தி வைத்து அவனை இன்னும் காயப்படுத்த, விழிகள் மூடி இருக்கையில் தலை சாய்த்துக் கொண்டான். அதைக் கண்ட மகேஷூம் அவனது மனநிலை புரிந்ததால் வேறு எதுவும் கேட்கவில்லை…
நடந்தவையில் ஏதேனும்
பிழையோ?
காலம் கடந்து புதிதாய்
ஓர் யோசனை எழ
அதற்கே உள்ளம் வலியை
இரட்டிப்பாக்கியது.
மீண்டும் காயம்பட துணிவின்றி அவன் துவண்டு போகையில் எங்கோ அழைத்தது அவள் குரல் வலியை சுமந்த வண்ணம்..