Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் காதலாய்

காதலால் காதலாய் 35(2)

அத்தியாயம் 35 (2)

“ஆஆஆஆ!” என்று காதுக்குள் கேட்ட சத்தத்தில் அஞ்சலி பதறி எழ, எதிரில் சூர்யாவே தான்.



Advertisement

“நீயெல்லாம் என்ன மேட் டா? இப்ப எதுக்கு கத்தின? காரணம் மட்டும் அடுக்குவியே! உன்னை தேடி ஓடி வந்தேன் பாரு என்னை சொல்லணும்.. டார்ச்சர் பண்ற.. இருந்தாலும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம்.. என்ன விதியோ என் விதி” என அவள் புலம்ப புலம்ப, சூர்யா புன்னகைத்து நின்றவன் முகத்தில் பிரகாசமான வெளிச்சங்கள் அவள் பேச்சினில் புலம்பல்களில் என எதிரொலித்தது.

“ஓகே ஓகே கூல்! எதுக்கு இவ்வளோ டென்ஷன்?” என்றவன் அவள் அருகினில் வந்து தோள்களில் கைப்போட, தண்ணீரில் இட்ட தீயாய் காணாமல் போயிருந்தது அஞ்சலியின் கோபங்கள் எல்லாம்.

Advertisement

Advertisement

“என்னவோ சொல்லிட்டு இருந்தியே சொல்லு?” சூர்யா கேட்க, ஒரு பக்கமாய் அவன் அணைத்து நின்ற விதமும், அவன் முகத்தில் இதுவரை தனக்கு என்று பார்த்திராத புன்னகையும் என அஞ்சலியை உறைய வைத்திருந்தது.

“ஹே எலி! உன்னை தான்!” என்றவன் லேசாய் உலுக்க,

Advertisement

“என்ன கேட்ட?” என்றாள் தூக்கத்தில் விழிப்பவள் போல.

“அதான் சொன்னியே! தேடி வந்தேன்னு அதான் யாரை தேடி வந்தன்னு கேட்டேன்” என்றவன் பேச்சில்,

“நீ கையை எடு” என தட்டிவிட்டவள்,

“உங்க அம்மா, மல்லிம்மா, ஜனனி, உன் தங்கச்சி, உன் அண்ணா, உன் அப்பான்னு உன்னை தவிர எல்லாத்தையும் தேடி வந்தேன்.. ஆளைப் பாரு!” என்றவள் அவன் மனதை ஓரளவு கண்டுகொண்டு தன் இடத்திற்கு நகர, மீண்டுமாய் கைப்பிடித்து நிறுத்தி இருந்தான்.

“நம்பிட்டேன்! அதை விடு.. ஒரே ஒரு கேள்வி! அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று கூற,

“என்ன?” என்றவள் சந்தேகப்பார்வை ஏடாகூடமாய் தானே கேட்பாய் என்று இருந்தது.

“அது!… அது என்னன்னா!… கூடவே இருந்து நல்லா சண்டை போட்டே பழகிட்டேனா திடிர்னு நீ இல்லைனதும் கொஞ்சம் ஜெர்க்காகிட்டேன்..” என்றவனை முழுதாய் முடிக்க விடாமல்,

“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? உனக்கு போராடிச்சா என்னை அடிச்சுக்க தேடி இருக்க?” என்று முறைத்தாள்.

“என்னை பேச விடு டி.. நானே நல்லா பேசணும்னு நினைச்சாலும் நீ விடமாட்ட போல!” என்றவன் பேச்சில் அவள் அமைதியாய் பார்க்க,

“உன்னை அடிச்சுக்க தேடினேன்னா நான் சொன்னேன்? எனக்கே ஏன் தேடினேன்னு புரியல.. அப்புறம் தான் ஒரு வேளை அது அதுவா இருக்குமோன்னு சந்தேகம் வேற.. இப்ப கிளியர் ஆகிட்டுன்னு வச்சுக்கோயேன்..” என்றவனை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தவள்,

“ஓவரா பேசாதன்னு சொன்னா கேட்கணும் இல்ல.. நீ இப்ப என்ன பேசினனு உனக்கே புரியாது.. தூக்கத்துல உளர்ற தானே?” என்றவளுக்கு அவன் பேசுவதை வைத்து புரிவது போல இருந்தாலும் இனி எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க தயாராய் இல்லை அவள்.

“அது சரி! உனக்கு தெளிவா பேசினாலே புரிஞ்சி தொலையாது.. எனக்கு இதை எப்படி தெளிவா பேசன்னே தெரியலயே” என்று தலைக்கோதி அவன் தனக்கு தானே பேச,

“ஒரு வாரத்துல என்னவோ ஆகிடுச்சு உனக்கு…” என்று அவள் கூற வர,

“நான் ஸ்ட்ராயிட்டாவே கேட்டுறேன்.. சூர்யாவை உனக்கு புடிக்குமா அஞ்சலி?” என்றான் சட்டென்று.

அத்தனை அத்தனை நிம்மதி அவள் மனதினுள் நொடியினுள் கொண்டு வந்திருந்தான் ஒரு கேள்வியினில்.

எப்போதுமே தன் இடம் இது தானோ? தானும் இப்படி தானோ என நினைத்து மருகி இருந்தவளுக்கு அவன் கேள்வியே அவள் மீதான அவன் பிடித்ததை கூறி இருக்க, பெரும் ஆசுவாசம் ஒன்று ஊடுருவி இருந்தது அஞ்சலி மனதில்.

குறும் புன்னகை இதழ்களில் தொடங்கி முகம் முழுதும் படர தலையை இடவலமாய் அசைத்தவள், “இல்லையே! பிடிக்காது.. பிடிக்கவே பிடிக்காது” என்ற கூற்று போதுமானதாய் இருந்தது சூர்யாவிற்கும்.

“பார்த்தியா பார்த்தியா! நீ பேசுறது எனக்கு தான் புரியுது… நான் பேசுறது உனக்கு தான் புரியுது!” என்றவன் பிடித்திருந்த கைகளை விட்டு இடையினைப் பற்றி கொள்ள, அஞ்சலி முற்றும் முழுதாய் தொலைந்து போயிருந்தாள் சூர்யாவிடம்.

காதலாலும் காதலாயும் நிகழும் சில மாற்றங்களை மாற்றிட எவராலும் முடியாதே!

                       ******************

“முடியுமா முடியாதா? அதை மட்டும் சொல்லு!” என்று கோபமாய் அஞ்சலி கேட்க, ஜெய், ஜனனி இருவரும் வேடிக்கைப் பார்த்தனர் அங்கே நடப்பதை.

“ஒரு வாட்டி சொன்னது தான்..இந்த சூர்யாக்கு மாத்தி மாத்தி பேசி எல்லாம் பழக்கம் இல்ல” என்றவன் வேறு எதையாவது மறந்து விட்டோமா என பார்த்தபடி இருக்க,

“சூர்யா! இது நல்லாவே இல்லை.. எல்லாரும் என்ன சொல்லுவாங்க? இப்ப கூப்பிட்டா கூட அப்பா வந்திருவாங்க.. பாவம் அப்பா..” என்று அஞ்சலி கேட்க,

“டேய்! நீயும் ஏன் டா வம்பு பண்ற? அஞ்சலி சொல்றதும் சரி தானே?” என்றான் ஜெய்.

“நல்லா கேளுங்க மாமா! ஊரையே கூப்பிடுவானாம்.. என் அப்பாவை கூப்பிட மாட்டானாம்..” – அஞ்சலி.

“ஊரை கூட்டுற அளவுக்கு எல்லாம் என்கிட்ட வசதி இல்ல.. ஆனா அப்படியே ஊரை கூட்டினாலும் உன் அப்பாவை மட்டும் கூப்பிட மாட்டேன்..” என்றான் சூர்யாவும் விடாமல்.

ஜெய் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் சூர்யாவின் சட்ட ஆலோசனை மையத்தோடு ஆவணப்பதிவகம் திறப்பு விழா இன்று நடைபெற நெருங்கிய உறவினர்கள் என அழைத்தவன் ஜனனி வீட்டினரையும் அழைத்திருக்க, விடுபட்ட ஒருவர் குணசீலனே..

“சூர்யா! பிரியா க்கா கதிர் மாமா எல்லாம் வரும் போது அஞ்சலி அப்பா இல்லைனா எப்படி? யாரா இருந்தாலும் பேச்சு வரும்.. அதான் அவர்கிட்ட வாங்கின கடனை அடைக்க லோன் ட்ரை பண்ணிட்டு இருக்கோம் இல்ல? சொந்தம் வேற பிசினஸ் வேற சூர்யா!” என்று ஜனனியும் கூறிப் பார்த்தாள்.

“அந்த ஆளு அப்படி பார்த்தாரா?” என்று கேட்ட சூர்யா யார் பேச்சையும் கேட்காமல் இருக்க,

“சரி நீங்க போய்ட்டு வாங்க! நான் வர்ல!” என்ற அஞ்சலி அமர்ந்துவிட்டாள். அவள் அலைபேசி சத்தம் எழுப்ப அழைத்தது தந்தை என்றதும் அதை எடுக்கவே இல்லை அவள்.

“ப்ச்! சூர்யா டைம் ஆச்சு டா.. எல்லாரையும் முன்னாடி அனுப்பிட்டு நீ தான் பிரச்சனை பண்ணிட்டு இருக்க!” என்றான் ஜெய்.

“நீ ஜனனியை கூட்டிட்டு போ ண்ணா.. நான் அஞ்சலியோட வர்றேன்!” என்றான் சூர்யா.

இருவரையும் மாறி மாறி பார்த்தவர்கள் எதுவும் சொல்லாமல் கிளம்ப,

“மூணு நாளா சண்டை போட்டுட்டு இருக்க.. சண்டை நமக்குள்ள தான் எப்பவும் இருக்கனும்.. சொல்லி இருக்கேன் தானே?” என்று சூர்யா கேட்க,

“அப்படி எல்லாம் இருக்க முடியாது.. என் அப்பா வரலைனா நானும் வரலை” என்றவளை இரு நொடி பார்த்தவன் அவள் உதற உதற காருக்குள் தூக்கி வந்து போட, அவனை முறைத்தவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அலட்டிக் கொள்ளவில்லை சூர்யா.

மீண்டும் மீண்டும் அழைத்த தந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் எடுக்காமலே இருக்க, காரை நிறுத்தும் முன்பே அந்த கட்டிடத்தின் முன் பால நாதன் அருகே கண்டு கொண்டாள் தன் தந்தையை.

தந்தையையும் சூர்யாவையும் மாறி மாறி அஞ்சலி பார்க்க, கார் கதவை திறந்தவன்,

“என்ன இருந்தாலும் மிஸ்டர் குணசீலன் இல்லைனா எலி வேற பக்கம் ஓடி இருக்கும் தானே?” என்று கூறி இறங்க,

“அராஜகம் பண்ற நீ! என்னை டென்ஷன் பண்ணலைனா உனக்கு நாள் விடியாது இல்ல?” என்று அஞ்சலியும் இறங்க,

“எக்ஸக்ட்லி!” என்று கண்ணடித்தவன் நகர,

“எவ்வளவு நேரமா கூப்பிடுறது? நேரமாகுதுல்ல?” என்ற தந்தை அருகே அஞ்சலி சென்றாள்.

“சேட்டை அதிகமாகி போச்சு டா உனக்கு.. எப்ப பாரு அவளோட மல்லுக்கு நிக்குறது” என்று சூர்யாவிடம் வந்திருந்தார் பிரேமா ஜெய் அனைத்தையும் கூறி இருந்தான் அவரிடம்.

“ம்ம் ஓகே! கட் பண்ணி ஓபன் பண்ணுங்க பார்க்கலாம்!” என்று மல்லிகா, பிரேமா அருகே சென்று சூர்யா நிற்க, ஏற்கனவே பேசி இருந்தது தான் என்பதால் மீறாமல் செய்திருந்தனர் இருவரும்.

அனைவரின் வாழ்த்துக்களோடு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணம் உதயமானது சூர்யாவிற்கு.

                          சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!