சித்ராவுக்கு தனியறை, வேணி மற்றும் சமுத்திரத்துக்கு தனி அறை உண்டு. கயலுக்கும் தனி அறை உண்டு. ஆனால் அந்த அறைக்கு கதவு எல்லாம் கிடையாது. ஒரு ஸ்கிரீன் போட்டு மறைத்திருக்கும் அவ்வளவே. அவள் அறையில் குளிக்கும் அறை உண்டு. ஆனால் டாய்லெட் வசதி இல்லை. வெளியே இருப்பதை தான் அவள் பயன் படுத்த வேண்டும்.
அறைக்குள் சென்று அக்கடா என்று படுத்தவளின் மனதில் இன்று முழுவதும் நடந்த நிகழ்வுகள் எழுந்தது. கூடவே தமிழின் நினைவும் வந்தது. அவனுடைய அக்கறையான பேச்சு, ஆளுமையான பேச்சு என அனைத்தும் நினைவில் வந்து அவள் உதடுகள் மலர்ந்தது.
அவசரமாக எழுந்தவள் சமையல் அறைக்குச் சென்று ஒரு லெமனைப் பிழிந்து குடித்து விட்டு வந்து படுத்தாள். அதைச் செய்ய அவளுக்கு சோம்பேறித் தனம் தான். ஆனால் தனக்காக ஒருவன் அக்கறை எடுத்து சொல்லி அதை கேக்காமல் இருக்க அவளுக்கு மனது வர வில்லை.
அவளைப் பொறுத்த வரை அவன் யாரோ தான். அவன் பெயர் கூட அவளுக்கு தெரியாது. அவனுக்காவது அவள் எந்த ஊர் என்று தெரியும். அவளுக்கு அவன் எங்கு செல்கிறான் என்று கூட தெரியாது. ஆனாலும் ஏனோ அவனை சந்திக்க வைத்ததுக்கு அவள் மனது கடவுளுக்கு நன்றி சொன்னது. வெகு நாட்கள் கழித்து கயல் நிம்மதியாக தூங்கியது இன்று தான்.
அடுத்த நாள் காலை எப்போதும் போல தான் விடிந்தது. ஒரு ஒன்பது மணி போல தமிழை போனில் அழைத்த சிதம்பரம் “தேவிக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு டா. விசாரிச்சிட்டு பொண்ணு பாக்க வரச் சொல்லுவோமா?”, என்று கேட்டார்.
“சரி மாமா விசாரிக்கலாம். இதோ கிளம்பி வரேன்”, என்று சொல்லி போனை வைக்க “எங்க டா போற?”, என்று கேட்டாள் சரோஜா.
சுள்ளென்று கோபம் வந்தாலும் முகம் திருப்பிச் செல்ல மனதில்லாமல் “தேவிக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு. விசாரிக்க போறோம்”, என்று எங்கோ பாத்து சொன்னான்.
“உன் மாமா பாக்குற சம்பந்தம் எதுவும் வேண்டாம் தமிழு. நான் உனக்கும் தேவிக்கும் சம்பந்தம் பாத்துருக்கேன். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற மாதிரி. இன்னைக்கு சாயங்காலம் நாம அங்க போகலாம். இதை விடு”, என்ற சரோஜாவை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.,
வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த தேவியைப் பார்த்தவன் “இங்க பாரு தேவி, உன் கல்யாணத்தை நான் தான் நடத்துவேன். அதே மாதிரி நான் யாரைக் கல்யாணம் பண்ணணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். இதுல வேற யாரும் தலையிடக் கூடாது. சொல்ல வேண்டியவங்க கிட்ட தெளிவா சொல்லிரு”, என்று சொல்ல அவனை முறைத்த படி சரோஜா செல்ல தங்கையிடம் சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அவன் எண்ணியது போல அந்த சம்பந்தம் நல்ல படியாக அமைந்தது. சிதம்பரம் தான் மாப்பிள்ளை பற்றிச் சொன்னார். மாப்பிள்ளை பேர் செழியன் என்றும் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை செய்கிறான் என்றும் தெரிய வந்தது.
மாப்பிள்ளை குணம் எப்படி என்று மருத்தவமனையில் மட்டும் அல்லாமல் அவனுடைய ஊரிலும் சென்று விசாரித்த தமிழ் உடனே சரி என்று சொல்லி விட்டான்.
பெண் பார்க்க வரும் போது அண்ணனாக முன்னே நின்ற தமிழ் எல்லாம் பேசி முடித்து விட்டு அவர்கள் சென்றதும் அப்பாடி என்று அமர்ந்தான். சரோஜாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டாள். சரோஜாவின் அமைதி தமிழுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது மட்டும் நிஜம். எப்போது என்ன செய்வாளோ என்ற பயமும் ஒரு வேளை இத்தனை நாள் பிரிந்து இருந்ததில் மாறிவிட்டாளோ என்ற குழப்பமும் இருந்தது. அடுத்த ஒரு மாதத்தில் தேவி செழியன் திருமணம் நல்ல படியாக முடிந்தது. நல்ல படியாக நடத்தி வைத்தான் தமிழ். அப்படியும் மூன்று தங்கைகளுக்கு உடை, அவர்களுடைய மாப்பிள்ளைகளுக்கு உடை, ஜெயா மற்றும் அமுதாவின் பிள்ளைகளுக்கு உடை என அனைவருக்கும் தமிழை தான் உடை எடுக்க வைத்தாள் சரோஜா.
தங்கைகளுக்கு தானே செய்கிறோம் என்ற எண்ணம் வந்தாலும் செலவை நினைத்து கொஞ்சம் பயமாக தான் இருந்தது தமிழுக்கு. வைஷ்ணவியின் குழந்தைக்கு மட்டும் அவன் உடை எடுத்துக் கொடுக்க அதற்கு முகத்தை தூக்கிக் கொண்டு இருந்தாள் சரோஜா.
தங்கை திருமணம் முடிந்ததும் அவளை புகுந்த வீட்டுக்கு நல்ல படியாக அனுப்பி வைத்தான். இரவு ஊர் பந்தி நடந்து கொண்டிருக்க எல்லா வேலையும் முடித்தவன் இரவு உணவையும் முடித்து விட்டு பந்தலின் கீழே அமர்ந்தான். ஆங்காங்கே அமர்ந்து சொந்தக்காரர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தமிழின் அருகில் மற்ற அனைவரும் வந்து அமர்ந்தார்கள்.
அமுதா மற்றும் ஜெயா குடும்பமும் அங்கே தான் இருந்தது. வைஷ்ணவி மட்டும் சேகருடன் அவளுடைய வீட்டுக்கு கிளம்பி விட்டாள். அப்போது தமிழ் அருகே வந்து அமர்ந்த சிதம்பரம் “எல்லா கடமையையும் முடிச்சிட்ட. இனி உன் வாழ்க்கையைப் பாரு தமிழ். நான் உனக்கு பொண்ணு பாக்கட்டுமா டா?”, என்று தயக்கத்துடன் கேட்டார்.
“என் மகனுக்கு யாரும் பாக்க வேண்டாம். நான் தான் பாப்பேன்”, என்றாள் சரோஜா.
அதில் சிதம்பரம் முகம் ஒரு மாதிரி போக “நீ யாரு எனக்கு பொண்ணு பாக்க? நான் உனக்கு அந்த உரிமையை எப்பவும் கொடுக்க மாட்டேன். உன்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்க நான் தயாரா இல்லை மா”, என்று அன்னையிடம் சொன்ன தமிழ் “மாமா நீயே எனக்கு பொண்ணு பாரு. ஏழைப் பொண்ணா இருந்தா போதும். வேற எதுவும் நான் எதிர் பாக்கலை. ஒரு குண்டு மணித் தங்கம் கூட அந்த பொண்ணு போட்டுட்டு வர வேண்டாம்”, என்றான்.
“சரி மாப்பிள்ளை”, என்று சிதம்பரம் சொல்ல “எப்படி உங்க விருப்பப் படி கல்யாணம் பண்ணுறீங்கன்னு பாக்குறேன். ஒண்ணும் இல்லாத அன்னக்காவடியை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர நினைச்சா நான் விட்டுருவேனா”, என்று சரோஜா சொல்லிச் செல்ல அனைவரும் ஒரு நொடி அமைதியானார்கள்.
“சரிப்பா, நான் கிளம்புறேன்”, என்று சொன்ன அவர் எழுந்து கொண்டார். மற்றவர்களும் உறங்கச் சென்று விட்டார்கள்.
அடுத்த நாள் தேவிக்கு அனுப்பிய பலகாரங்களில் மீதமிருந்த சிலவற்றையும், மற்ற பொருள்களையும் இரண்டு தங்கைகளுக்கும் கொடுத்து அனுப்பியவன் அதே போல ஒரு பங்கை எடுத்துக் கொண்டு வைஷ்ணவி வீட்டுக்கு சென்றான்.
“வாப்பா தமிழு”, என்று வரவேற்றார் தேவகி.
“எதுக்கு டா இதெல்லாம்? வா வந்து உக்காரு”, என்று வரவேற்றாள் வைஷ்ணவி.
“ஐ சித்தப்பா”, என்ற படி நிரஞ்சனா ஓடி வர அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான் தமிழ். அப்போது அங்கே வந்த சேகரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
“நீ எப்ப டா கல்யாணம் பண்ணப் போற?”, என்று வைஷ்ணவி கேட்க “மாமா கிட்ட சொல்லிருக்கேன். பாப்போம்னு சொல்லிருக்காங்க”, என்றான். சேகருக்கு கயலை தமிழுக்கு கட்டி வைத்தால் என்ன என்ற எண்ணம் வந்தது.
“எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா தமிழ். ரொம்ப நல்ல பொண்ணு. என் ஆபீஸ்ல தான் வேலை பாக்குறா. இப்போதைக்கு கரண்ட் ரீடிங்க் எடுக்குற வேலை பாக்குறா. என்னை அண்ணா அண்ணான்னு பாசமாக இருப்பா. அவளைப் பாக்கலாமா?”, என்று கேட்டான் சேகர்.
“கயல்ன்னு சொல்லுவீங்களே அந்த பொண்ணா?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
“ஆமா வைஷு, எனக்கு என்னமோ தமிழுக்கும் அவளுக்கும் பொருத்தமா இருக்கும்னு தோணுது”, என்றான்.
“நீங்க பேசிப் பாருங்க அண்ணா. அமைஞ்சா பாக்கலாம். எனக்கு வரதட்சணை எல்லாம் வேண்டாம். அப்படி கொடுக்காத பொண்ணா பாருங்க”, என்றான் தமிழ்.
“அவங்க வீட்ல ரொம்ப எல்லாம் போட மாட்டாங்க தமிழ். நான் அவ கிட்ட பேசிட்டு சிதம்பரம் மாமாவை வச்சு அவங்க வீட்ல பேசச் சொல்றேன்”, என்றான் சேகர்.
“சரிண்ணா. அப்புறம் எனக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்க”.
“கேட்டுப் பாக்குறேன். எதுக்கும் உன்னோட ரெசியும் மத்த செர்டிபிகேட்ஸ் எல்லாம் எனக்கு அனுப்பி விடு தமிழ். ஆனா பாரின் சம்பளம் இங்க கிடைக்காதே?”
“பரவால்ல அண்ணா,. எனக்கு பத்தாயிரம் சம்பளம் இருந்தா கூட போதும். பணம் பணம்னு எனக்கு அது மேல வெறுப்பு தான் வருது. தங்கைகளுக்கு எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. ஏதாவது சீர் செய்ய இதுக்கு அப்புறம் சம்பாதிச்சிக்கலாம்”, என்று தமிழ் விரக்தியாகச் சொல்ல “எனக்கு புரியுது டா. விடு. இனி நீ நல்லா இருப்ப. நாங்க எல்லாம் இருக்கோம்ல?”, என்று சொன்ன சேகர் அவன் தோளில் ஆறுதலாக கை வைத்தான்.
அதே நேரம் தன்னுடைய அறையில் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் கயல்விழி. தனிமை எவ்வளவு கொடுமையானது என்று அவளுக்கு தெரியும். இல்லாத உறவுகளை நினைத்து வெறுமை சூழ்ந்து இருந்தவளை தமிழ் என்ற ஆலமரம் அணைத்துக் கொள்ளுமா? அவர்கள் திருமணத்தை சரோஜா நடத்த விடுவாளா?
அடுத்த இரண்டு நாட்களில் சிப்காட்டில் இருந்த ஒரு பிஸ்கட் கம்பெனியில் தமிழை வேலைக்கு சேர்த்து விட்டான் சேகர். அந்த பதவிக்கு மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் என்றும் போக போக கூடும் என்று தான் முதலில் சொன்னார்கள்.
ஆனால் அவன் பாரினில் பத்து வருடம் வேலை செய்திருப்பதால் இருபத்தி மூன்றாயிரம் சம்பளம் என்றார்கள். அவன் அங்கே படிப்புக்கு ஏத்த வேலை செய்ய வில்லை தான். ஆனால் அவர்களிடம் படிப்புக்கு ஏத்த வேலை செய்ததாக தான் சொன்னான். கத்தார் சென்று யார் விசாரிக்கப் போகிறார்களாம்? அவன் சென்று வந்ததற்கான விவரம் பாஸ்போர்ட்டில் இருப்பதே போதுமானது தானே? எக்ஸ்பீரியன்ஸ் செர்ட்டிபிகேட் கேட்பார்களோ என்று பயமாக தான் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் அவர்கள் கேட்க வில்லை. நிம்மதியாக வேலையில் சேர்ந்து விட்டான்.
சிதம்பரமோ யாருக்கும் தெரியாமல் மற்றொரு வீட்டை தமிழ் பெயருக்கு மாற்றம் செய்தார். அது மட்டுமல்லாமல் அவன் பெயரில் ஒரு வயலை வாங்கிப் போட்டு தன்னுடைய வயல் வேலையோடு அவனதையும் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். அவனை பொருளாதாரத்தில் எப்படி எல்லாம் உயர்த்த வேண்டுமோ அதை எல்லாம் செய்ய தயாராக இருந்தார் சிதம்பரம்.
சேகரோ எப்படி கயலிடம் திருமண விவரம் பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவள் ஒரு வாரமாகவே அலுவலகத்துக்கு வர வில்லை. மெடிக்கல் லீவ் கேட்டிருப்பதாக தகவல் வந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரிய வில்லை. அவளுடைய மொபைல் எண் இருந்தாலும் அவனுக்கு அழைத்து பேச தைரியம் இல்லை.
கயல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருந்தால் பேசி இருப்பான். ஆனால் இப்போது தான் அவளை அழைத்து அவளுக்கு ஏதாவது கெட்ட பெயர் வரக் கூடாது என்று கவனம் எடுத்தான். ஒரு வாரம் கழித்து வேலைக்கு வந்தாள். வெளியே சாதாரணமாக இருந்தாலும் அவள் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது. அதை விசாரித்து விட்டு அவளிடம் திருமண விஷயம் பேச வேண்டும் என்று எண்ணினான் சேகர். பெரியவர்களிடம் பேச வேண்டிய விஷயத்தை ஒரு சிறு பெண்ணிடம் பேச அவனுக்கு தயக்கமாக இருந்தது.
ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவளுடைய வீட்டில் சென்று பேச முடியாதே? அதனால் பேசித் தான் ஆக வேண்டும் என்று எண்ணி “கயல் இங்க வா மா”, என்று அழைத்தான்.
“சொல்லுங்க சார்”, என்றாள். அவன் சீட்டில் இருந்தால் சார் என்று அழைப்பவள் மற்ற நேரம் அண்ணா என்பாள்.
“பெர்ஸ்னல் விஷயம் தான் பேசப் போறேன். அண்ணானு சொல்லு மா”
“சரிண்ணா சொல்லுங்க, என்ன விஷயம்?”
“எதுக்கு இத்தனை நாள் வேலைக்கு வரலை? உடம்புக்கு என்ன மா?”
“அது… அது வந்துண்ணா…?”
“அண்ணன் கிட்ட சொல்லலாம் மா”, என்று அவன் சொல்ல மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
நடந்த விஷயம் இது தான். சித்ராவை ஒரு வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்திருந்தார்கள். ஆனால் வந்தவர்கள் கயலை பிடித்திருப்பதாகவும் அவள் தானே மூத்தவள் என்றும் சொல்ல அவர்களை எப்படியோ பேசி அனுப்பி வைத்த வேணி “என் பொண்ணு வாழ்க்கைக்கே குறுக்க வரியா? சாவு டி”, என்று சொல்லி அவள் தொடையில் சூடு வைத்தாள். இவை அனைத்தும் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்த சமுத்திரம் முன்னால் தான் நடந்தது.
காலை அசைக்க கூட முடியாத நிலையில் அவள் எப்படி வேலைக்கு வருவாளம்? அதனால் தான் விடுப்பு எடுத்திருந்தாள். அவளுக்கு லீவும் இருந்தது. ஆனால் லீவ் எடுக்காமல் வைத்திருந்தால் அதற்கு சம்பளம் வரும் என்று தான் எடுக்காமல் இருந்தாள். லீவ் எடுத்து வீட்டில் அவதி படுவதை விட ஆபீஸ் அலைச்சல் பெரிதல்லவா? ஆனால் இருந்த வலியால் லீவ் எடுத்திருந்தாள். இன்னும் லேசாக காயம் ஆறாமல் தான் இருந்தது.
அனைத்தையும் அவள் சொல்லி முடிக்க சேகர் மனதிலோ “கூடிய சீக்கிரம் இவளை இந்த கொடுமையில் இருந்து காக்க வேண்டும்”, என்று உறுதி பிறந்தது.
“கயல் நீ அந்த வீட்ல இருக்குற வரைக்கும் உன்னால நிம்மதின்னு ஒண்ணைப் பாக்க முடியாது மா”
“என்னண்ணா பண்ணுறது? என் விதி அப்படி”
“கல்யாணம் உன் தலையெழுத்தை மாத்தி எழுதும். நீ கல்யாணம் பண்ணிக்கோ கயல்”
“அதைப் பண்ணி வைக்க எனக்கு அம்மாவா இருக்காங்க? இல்லை அப்பா தான் எடுத்து கட்டி செய்வாரா?”
“நான் உனக்கு மாப்பிள்ளை பாக்கவா மா?”
“உங்களுக்கு அந்த உரிமை இருக்குண்ணா. ஆனா என் குடும்பத்தை மீறி உங்களால எதுவும் எனக்கு செய்ய முடியாது”
“எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். ரொம்ப நல்ல பையன். ஆனா ஐ.டி.ஐ தான் படிச்சிருக்கான். உன்னை மாதிரி கவர்ன்மெண்ட் வேலை எல்லாம் இல்லை. பிரைவேட்ல தான் வேலை பாக்குறான். ஆனா உன்னை நல்லா பாத்துக்குவான்னு மட்டும் நான் உறுதி தர முடியும். நீ என்ன மா சொல்ற?”, என்று கேட்டான் சேகர்.
“எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைண்ணா. எனக்கு அம்மாவா இருக்குற ஒருத்தர் கிடைச்சா போதும். நானும் டிகிரி தானே படிச்சிருக்கேன். அதனால பரவால்ல. படிப்பு வேலை எல்லா முக்கியம் இல்லை. ஆனா எங்க வீட்ல தான் எல்லாம் பேசணும். அப்பாவும் சித்தியும் என்ன சொல்லுவாங்களோ தெரியாது. அது மட்டுமில்லாம சித்ராவுக்கு தான் முதல்ல கல்யாணம் முடிக்க இருக்காங்க. எனக்கு கல்யாணம் பண்ணுவாங்களான்னே தெரியாது”, என்றாள்.
“பேசுற விதத்தில் பேசலாம் மா. அதை நான் பாத்துக்குறேன். உனக்கு சம்மதமா?”
“சம்மதம் அண்ணா”
“மாப்பிள்ளை போட்டோ பாக்குறியா?”
“எல்லாம் பேசி முடிங்க, நேர்லே பாத்துக்குறேன் அண்ணா. சரி நான் வேலையைப் பாக்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
தமிழைப் பற்றி அவன் குடும்பத்தைப் பற்றி எதுவுமே அவள் கேட்க வில்லை. கேட்டிருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் வாழ சம்மதம் என்று தான் சொல்லியிருப்பாள். வாயில்லா பூச்சியான கயல் சரோஜாவின் உண்மையான குணம் தெரிந்தால் என்ன செய்வாளோ?
கயல்விழி திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் சேகர் அடுத்து பார்க்கப் போனது சிதம்பரத்தை தான். தமிழுக்கு மட்டுமில்லாமல் சேகருக்கும் கூட அவர் தானே வழிகாட்டி. மாமனாராக இருந்தாலும் அவனுக்கும் அவர் தந்தை போல தான். அதனால் தயங்காமல் வீட்டுக்கே சென்று விட்டான்.
“வாங்க மாப்பிள்ளை, வைஷுவும் நிரஞ்சனா குட்டியும் வரலையா?”,. என்று கேட்டாள் மீனாட்சி.
“இல்லைங்க அத்தை, நான் மாமாவைப் பாக்க ஆஃபிஸ்ல இருந்தே வந்துட்டேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“இதோ கூப்பிடுறேன், இப்ப தான் வயல்ல இருந்து வந்து குளிக்கப் போனார்”, என்று சொன்ன மீனாட்சி “என்னங்க, மாப்பிள்ளை வந்துருக்கார். வாங்க”, என்று அழைத்தாள்.
தலையை துவட்டிய படியே வந்தவர் “வாங்க மாப்பிள்ளை”, என்று வரவேற்றார். இருவருக்கும் டீ கொடுத்த மீனாட்சி கோவிலுக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“என்ன மாப்பிள்ளை இந்நேரம் வந்துருக்கீங்க?”
“தமிழ் கல்யாணம் விஷயம் பேசணும் மாமா”
“அது தான் என் மனசுலயும் ஓடுது. உள்ளூர்ல நிறைய பொண்ணு இருக்கு. ஆனா சரோஜாவை பாத்து வேண்டாம்னு சொல்றாங்க”
“எனக்கு தெரிஞ்ச பொண்ணு இருக்கு மாமா. நம்ம தமிழ் மாதிரி அவளும் கஷ்டப் பட்டுட்டு தான் இருக்கா. கட்டி வச்சா ஒருத்தொருக்கொருத்தர் ஆறுதலா இருப்பாங்க”, என்று சொன்னவன் கயல் குடும்பத்தைப் பற்றிச் சொன்னான்.