Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரும்பில் ஓர் இதயம்

இரும்பில் ஓர் இதயம்…..20

இரும்பில் ஓர் இதயம்……20

இரவு இரண்டு மணி மகேஸ்வரன் தலையில் கையை வைத்தபடி அமர்ந்திருந்தான்.அவனால் பரிதியின் வார்த்தைகளை நம்ப முடியாவில்லை அவனை பார்த்தபடி இருக்க அவனோ வந்திருந்த லாரி ஒன்றை பழுது பார்த்துக் கொண்டு இருந்தான்.

“எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு இவன் இப்படி எதுவுமே சொல்லாத மாதிரி இருக்கான்….”என்று தனக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே,

“டேய்….கனவு காணமா அந்த ஸ்பனரை எடு….”என்ற பரிதியின் வார்த்தைகளில் நிகழ்வுக்கு வந்தவன் அவனிடம் அவன் கேட்ட பொருளை கொடுத்துவிட்டு,



Advertisement

“டேய் நீ என்ன சொன்னனு….”என்றவன் பேச்சை பாதியில் நிறுத்தினான் பரிதி,

“எனக்கு நல்லா புரிஞ்சிது…..இதை விட்டா நமக்கு வேற வழியில்லை….உனக்கு வேற ஏதாவது வழியிருந்தா சொல்லு….”என்றுவிட்டு மீண்டும் தன் வேலையில் ஈடுபட,

“இல்லடா…இது சரி வராது….இது தப்பு….”என்று முடிவாக கூறியவன்,

Advertisement

“உன்னையும் இதை செய்ய விடமாட்டேன்….அதனால இதை பத்தி யோசிக்கிறத பத்தி நிறுத்திக்க….”என்று பரிதியிடமும் கூற,

Advertisement

“நீ இல்லாம இதை நான் செய்யறதா இல்லை……”என்றுவிட அதோட அந்த பேச்சு வார்த்தை முடிந்து போனது.

இரண்டு மாதங்கள் கடந்து,

ஒரு மதியவேளை பரிதி தனது வேலையில் கவனமாக இருக்க வேகமாக அவனிடம் வந்த மகேஸ்வரன்,

Advertisement

“டேய் நீ சொன்ன யோசனை தான் சரி….நான் அதுக்கு ஒத்துக்குறேன்….”என்று கூற,அவனை நிமிர்ந்து பார்த்தவன்,

“சரி….”என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட,

“டேய் ஏன் திடீர்னு ஒத்துக்கிட்டேன்னு கேட்கிறியா…..நீ பாட்டுக்கு உன் வேலையை பார்க்குற….”என்று கேட்க,

“நீயே சொல்லு….”என்றுவிட்டு மீண்டும் தன் வேலையில் கவனமாக,அவனின் கையில் இருந்தவற்றை பிடுங்கி எறிந்தவன்,

“கடுப்பாயிடுவேன் பார்த்துக்க….நானே டென்ஷனா வந்திருக்கேன்….கொஞ்சமாச்சும் என்னையும் விசாரிடா….”என்று சலித்துக்கொள்ள,

“அதான் சொல்லுனு சொல்லிட்டேனே….”என்றவன் அவனிடம் இருந்த டூல்ஸசை வாங்க முற்பட,

“நான் இப்ப பேசி முடிக்கிற வரைக்கும் நீ எதுவும் செய்யக்கூடாது…..”என்று கடுமையாக கூற,பரிதி அமைதியாக அமர்ந்தான் மகேஸ்வரனும் அவனுடன் அமர,

“இன்னைக்கு என் வீட்ல எனக்கு பொண்ணு பார்க்க போட்டோஸ் காட்டுறாங்க அம்மா….”என்றுவிட்டு அவனின் முகத்தை பார்க்க அவனோ நீ சொன்னதை கேட்டேன் என்பது போல் அமர்ந்திருந்தான்.

“டேய் மகி இவன் கிட்ட சொல்லி முடிக்கிற வரை முகத்தை பார்க்காத….அப்ப தான் சொல்ல முடியும் இல்லை சொல்ல வந்ததையே மறந்துடுவ…”என்று தனக்குள் கூறிக் கொண்டு,

“நான் இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிருக்கேன்….ஆனா அவங்க கேட்ட மாதிரி தெரியலை….என்னால திவியை தவிர வேற யோசிக்கக் கூட முடியாது….அதனால நீ சொல்லுற யோசனைக்கு ஒத்துக்குறேன்….”என்று கூறிவிட்டு அவன் முகத்தை பார்க்க,

“சரி…அப்ப இன்னைக்கு ராத்திரி பிளான் பண்ணலாம்….இப்ப இதை நாம பேச வேண்டாம்….”என்று கூறிவிட்டு செல்ல பார்க்க அவனின் கையை பிடித்த மகேஸ்வரன்,

“டேய் இதை தவிர வேற வழியே இல்லையா…….”என்று கேட்க,

“நீ தான வேற வழியில முடிப்பேன்னு நின்ன என்ன ஆச்சு……”என்று மறுகேள்வி கேட்க,அதற்கு அவனால் பதில் தர இயலவில்லை.அவன் தான் முயன்று தோற்றுவிட்டானே பின் என்ன செய்ய அதனால் பரிதி கூறும் வழியிலேயே சென்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டான்.அதன்படி இரவு இருவரும் என்ன செய்ய வேண்டும் திட்டமிட்டனர்.மகேஸ்வரன் தான் சற்று பயத்துடன் இருக்க,

“நீ இப்படி பயந்தன்னா இது வேண்டவே வேண்டாம்….நீ உன் வேலையை பாரு நான் வேலையை பார்க்குறேன்….”என்று பரிதி கூறிவிட,

“இல்லடா எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு….என்ன இருந்தாலும்…..”என்றவனுக்கு தொண்டை அடைத்த உணர்வு,

“சரி இது வேணாம் விடு….உங்க அம்மாகிட்ட திவி பத்தி பேசு…..”என்றுவிட்டான் பரிதி.

“ம்ஹம் மாட்டேன்….ஒருவேளை அம்மா ஒத்துக்கலைனா….நான் வேற தான் முடிவெடுக்கனும்….”என்றவன்,

“நீ சொல்லுறது போல சில சமயம் நாம சுயநலமா தான் முடிவெடுக்கனும் போல….பார்த்துக்கலாம் விடு….நான் உன்கூட இருக்கேன்……இல்லை இருப்பேன் கண்டிப்பா…..”என்றுவிட்டான் தீர்மானமாக.

இரண்டு நாட்கள் கழித்து காலைவேளை தனது வீட்டில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தான் பரிதி.அவனின் முன் காபி டம்பளர் நீட்டப்பட,அதை வாங்கியவன் கண்கள் மனைவியை பார்க்க அவளோ ஏதோ வேலையாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.அவளின் கையில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்களின் சத்தம் மட்டும் அந்த இடத்தை நிரப்பியது.நேற்று தான் அவளிற்கு வளைகாப்பு நடந்து முடிந்திருந்தது.

இம்முறை மகேஸ்வரன் கூறியது போல கேரேஜில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்திருந்தான்.மாணிக்கத்தையும் முறையாக அழைத்திருக்க அவரும் அவரது குடும்பத்துடன் வந்திருந்தார்.மகேஸ்வரனிற்கு அத்தனை சந்தோஷம் தனது காதலியை இரு மாதங்களுக்கு பிறகு காண்கையில் ஆனாலும் தன் குடும்பத்துடன் இருப்பதால் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

திவ்யாவுக்கும் மகேஸ்வரனைக் கண்டு மகிழ்ச்சி தான் என்றாலும் அதை முகத்தில் காட்டாமல் வளைய வந்தாள்.அவள் தன்னை கண்டுகொள்ளாததில் கடுப்பான மகேஸ்வரன்,

“கொஞ்சமாச்சும் என்னை பார்க்கிறாளா பாரு…இவ்வளவு நாள் கழிச்சு பார்க்குறோமேனு நினைப்பு இருக்கா….இவளை…..”என்று பல்லை கடிக்க,

“அவ பார்க்க மாட்டா….நீயும் பார்க்காத….”என்ற பரிதியின் குரலில் திரும்பி அவனை முறைத்தவன்,

“டேய்…..நீ எனக்கு நண்பனா இல்லை வில்லனானு தெரியலை….”

“இதுல என்ன சந்தேகம் உனக்கு…. தொழில்ல உனக்கு நண்பன் குட்டி பிசாசு விஷயத்துல உனக்கு வில்லன் தான்….”என்று அதிராமல் பரிதி கூற,

“அவளும் என்னை விரும்புறானு நீ தான் சொன்ன…நான் ஒருவார்த்தை பேசுறேன்னு சொன்னதுக்கு அதெல்லாம் வேண்டாம் பிரச்சனை வரும்னு சொன்ன….இப்ப இத்தனை நாள் கழிச்சு பார்க்குறோம்….பேசலைனாலும் பரவாயில்லை பார்க்கலாம்னா அதுக்கும் தடைபோடுற…. உன்னைஐஐஐஐ….”என்று பரிதியின் கழுத்தில் தனது கரத்தை கொண்டு போனான்.

“டேய் மறைக்குது தள்ளு….”என்று அவனை தள்ளிவிட்டு மேடிட்ட வயிற்றை பிடித்தபடி வரும் தன் மனைவியை ஆசையாக பார்க்க,

“இவன் மட்டும் இவன் ஆளை பார்ப்பான்…நம்மளை பார்க்க விடமாட்டான்….”என்று பல்லைக் கடித்துக் கொண்டு மகேஸ்வரன் கூற,

“நான் தாலிகட்டி அப்புறம் தான் பார்க்குறேன்….உன்னை போல இல்லை….”என்று மிருதுளாவை பார்த்தபடியே பரிதி கூற,

“இருடா இன்னைக்கு நான் என் ஆளோட பேசாம போகமாட்டேன்….”

“அதுக்கு முன்னாடி உன் பின்னாடி இருக்குற உன் அப்பா கிட்ட பேசு….”என்றுவிட்டு பரிதி நகர,மகேஸ்வரனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது.அவன் அதிர்ந்து திரும்ப அவனின் தந்தை அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“ஊப்ஸ்….இவனை….”என்றவன் தன் தந்தையுடன் பேசிக் கொண்டே அவர்களுடன் இணைந்து கொண்டான்.ஒருவழியாக மிருதுளாவின் வளைகாப்பு நல்லபடியாக முடிந்திருந்தது.

“என்னங்க….என்னங்க….”என்ற மனைவியின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன்,

“ஆங்….என்ன….”

“சாப்பாடு….”என்று அவனிற்கு ஊட்ட தொடங்கினாள்.பரிதி அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ தனது வேலையில் கவனமாக இருந்தாள்.முகத்தில் ஏதோ ஒன்று குறைவது போல் இருந்தது பரிதிக்கு. எப்போதும் இருவரும் தனித்து இருக்கும் பொழுதுகளில் அவளின் முகம் மகிழ்ச்சியில் விசிககிக்கும் ஆனால் இன்று அப்படி இல்லை.

“உடம்புக்கு ஏதாவது பண்ணுதாடீ….”என்றான் அவளை கண்களால் ஆராயந்தபடி,

“எனக்கென்ன நல்லா தான் இருக்கேன்….”என்றவள் முகம் அப்படி இல்லை என்று கூற பரிதி அமைதியாகி விட்டான் ஆனால் அவனின் கண்கள் மனைவியை ஆராய்ந்தபடி தான் இருந்தன,சாப்பாட்டை ஊட்டிவிட்டு எழுந்தவள் அவனிற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு மற்ற வேலைகளை செய்ய தொடங்கினாள்.

இன்னும் சிறிது நேரத்தில் அவளும் கடைக்கு கிளம்ப வேண்டும் முன்பு போல் எல்லாம் அவளாள் வேகமாக நடக்க முடிவதில்லை அதனால் சற்று நேரமாகவே கிளம்பிவிடுவாள்.அதனால் கிளம்பி மதிய சாப்பாட்டை கட்டிக் கொண்டிருந்த சமயம் அவளின் இடையை வளைத்தது ஒரு வலிய கரம்,வெகு நாட்களுக்கு பிறகான கணவனின் அணைப்பு.

ஆம் இப்போதெல்லாம் எப்போது வருகிறான் என்றே அவளிற்கு தெரியவில்லை காலையும் சீக்கிரம் கிளம்பிவிடுவான் அதனால் இருவரும் பார்த்துக் கொள்வதே அரிதாகி இருக்க இன்று திடீர் என்று அவன் அணைக்கவும் அப்படியே நின்றுவிட்டாள்.அவளின் கழுத்தில் முகம் புதைத்து,கன்னத்தோடு கன்னம் உரசி அவளின் வாசத்தை தன் நாசிக்குள் உள்ளிழுத்தவன்,

“ம்ம்ம்…சண்டகாரி….”என்று கிறக்கத்துடன் கூற,அவனின் பிரத்யேக அழைப்பில் உடைந்தே விட்டாள் மிருதுளா அவளின் கண்களில் இருந்து கரகரவென்று வழிந்த கண்ணீர் அவனின் கரத்தில் விழ,அதில் அவனின் மோகம் அடிபட அவளை மெல்ல திருப்பியவன் அவளின் கண்களை துடைத்துவிட்டு,

“ப்ச்….ஏன் அழற…ம்ம்….”என்று மென்மையாக கேட்க,மிருதுளா கண்களை விரித்து அவனை பார்த்தாள்.இத்தனை நாளாக அவள் ஏதாவது பேசினால் எரிந்து விழுபவன் இன்று மென்மையாக கேட்க அதிர்ந்துவிட்டாள்.

“ஒ…ஒண்ணுமில்ல…”

“ம்ம்ம்….ஏதோ இருக்கு….உன் முகம் அதை காட்டுது….”என்றவன் அவளின் குனிந்த முகத்தை நிமிர்த்தி நெற்றியில் அழுத்தமாக அதரம் பதிக்க,அவளிற்கு இத்தனை நாள் அடைத்திருத்த மனதை திறந்துவிட்டது போல் இருந்தது.அவன் முத்தம் கொடுத்து விலகிய பிறகும் அவனிடம் முகத்தை காட்டியபடி இருக்க,

“ம்ம்…இது போததுனு சொல்லுறியா….எனக்கு பிரச்சனை இல்லை உனக்கு தான் பிரச்சனை ஆகும் பரவாயில்லையா….”என்று அவளுடன் இழைந்தபடி கேட்க,அவனின் எல்லை மீறலலில் தன்னை ஒப்புக் கொடுத்து நின்றுவிட்டாள்.எதுவும் பேசவில்லை அவனை வேண்டாம் என்று விலக்கவில்லை.கணவனுடன் இருக்கும் இந்த நொடி பொழுதை இழக்க மனம் வரவில்லை.சற்று நேர மென்மை,வன்மையான இதழ் ஒற்றலுக்கு பின் அவளை தள்ளி நிறுத்திய பரிதி,

“அடியே நீ சரியில்லைடீ….இன்னைக்கு உனக்கு ஏதோ ஆச்சு……எப்போதும் கிட்ட வந்தா தள்ளுவ….இன்னைக்கு என்னடானா….”என்று அவளின் கன்னத்தை நிமிட்ட,அவளின் கன்னங்கள் செவ்வானமாக சிவந்திருந்தது.அதனை ரசித்தவன்,

“இன்னைக்கு ரொம்ப மயக்குறியே….”என்று அவளின் நெற்றி முட்டி கூற,

“நீங்களும் இன்னைக்கு ரொம்ப மயக்குறீங்க….”என்று திருவாய் மலர்ந்து கூற,அதில் வாய்விட்டு சிரிதான் பரிதி.அரிதான ஒன்று கணவனின் விரிந்த புன்னகை அதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.அத்தனை எளிதில் எல்லாம் சிரித்துவிடமாட்டான் சிறிதாக அவனது இதழ்கள் விரியும் அதுவே அவனின் புன்னகை.இதுபோல் எல்லாம் சிரித்த பொழுதுகள் என்றால் அவளுடன் இருக்கும் தனிமையில் தான் ஆனாலும் இன்றளவுக்கு என்றும் மனம்விட்டு சிரித்ததில்லை.

அத்தனை அழகாக தெரிந்தான் அவள் கண்களிற்கு,சிரித்து முடித்து அவளை காண அவளோ பொம்மை போல கண்களை உருட்டிக் கொண்டிருக்க,

“என்னடீ கண்ணை இப்படி உருட்டுற….ம்ம்….”என்றவன்,இப்போது அவளை தன் தோளுடன் அணைத்து,

“இன்னைக்கு என்னவோ ஆச்சு உனக்கு….ம்ம்ம்…சரி எனக்கு வேலைக்கு நேரமாச்சு….அப்புறம் இன்னொரு விஷயம் இன்னைக்கு நைட் வரமாட்டேன்….அதனால அந்த குட்டி பிசாசு கிட்ட சொல்லிட்டு போறேன் கவனமா இரு….புரியுதா….”

“ஏன் வரமாட்டீங்க….எங்க போறீங்க….”என்று அவள் நடுக்கத்துடன் கேட்க,

“ஏய் எதுக்கு பயப்படுற….நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை….வேலையா தான் போறேன்….என்கூட மகேஸ்வரனும் வரான்….நாளைக்கு நைட்குள்ள வந்திடுவேன்…புரியுதா….கவனமா இரு….”என்று கூற மிருதுளாவிற்கு மனம் இல்லை தான் இருந்தாலும் வேலை என்று கூறுகிறான் வேறு என்ன செய்வது அதனால் தலையை ஆட்டினாள்.ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்று அடுத்த நாளே தெரிந்து கொண்டாள்.

காலை பத்து மணியளவில் அவள் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவளுடன் வேலை பார்க்கும் பெண் ஓடி வந்து,

“மிருது…உன்னை தேடி போலீஸ் வந்திருக்கு….”என்று கூற மிருதுளாவிற்கு நெஞ்சமே நின்றுவிட்டது.கணவனுக்கு தான் ஏதோ ஆகிவிட்டதோ என்று பயந்து அவள் நடுங்க அவளின் அருகில் இருந்த திவ்யா அவளை பிடித்துக் கொண்டு,

“ஏய் பயப்படாத…வா போய் என்னனு கேட்கலாம்…..”என்றுவிட்டு அவளை பொறுமையாக அழைத்துவர,அவர்கள் முதலாளியின் அறையில் காவலர் ஒருவர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.இவளை கண்டவுடன் வரவேற்ற முதலாளியின் முகத்தில் ஒருவித ஒவ்வாமையை கண்டாள்.என்னவாக இருக்கும் என்று அவள் பயப்பட,

“என்னம்மா….நீ தான் இளம்பரிதியோட பொண்டாட்டியா….உன் புருஷன் பணத்தை திருடிட்டு ஓடிட்டான்….”என்று கூற அதைக் கேட்ட மிருதுளா அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தாள்.

மகேஸ்ரவனும்,பரிதியும் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.மகேஸ்வரன் முகத்தில் எதையோ சாதித்த உணர்வு.எத்தனை நாட்கள் இதற்காக கஷ்டப்பட்டேன் இன்று கையில் கிடைத்துவிட்டது என்று நினைத்தவன் சற்று ஆசுவாசம் அடைந்தான்.சற்று தான் அடைய முடிந்தது மனது தாங்கள் செய்த செயலின் வீரயம் எதுவரை சென்றிருக்கும் என்று பயமும் இருக்க பக்கத்தில் இருந்தவனை பார்த்தான் சீட்டில் நன்கு சாய்ந்து ஒற்றை கையால் முகத்தை மூடியபடி படுத்திருந்தான் பரிதி.அவன் உறங்கவில்லை என்பது அவனின் அசைவுகளில் தெரிந்தது.

“டேய்….அடேய் நல்லவனே….”என்று அவனின் தோள்களை சுரண்டிய மகேஸ்வரனை பார்த்த பரிதி என்ன என்று கண்களால் வினவ,

“அடேய்….வீட்ல யார்கிட்டயாவது பேசுனியா….”என்று கேட்க,அவன் இல்லை என்று தலையாட்ட,

“டேய் நாம பணத்தை திருடிட்டு வந்திருக்கோம்….”

“எனக்கு இது புதுசில்ல….”என்றுவிட்டு கண்களை மூட,

“டேய் எனக்கு இது புதுசு….எனக்கு ஒரு பக்கம் சந்தோஷம் தான் ஆனா….நாம இப்படி பண்ணது தப்பு தான….”என்று சிறு பிள்ளை போல கேட்க,பரிதி ஆமாம் என்று தலையாட்டினான்.

“என்னால முடியல நானும் எத்தனை தடவை தான் அப்பா கிட்ட பொறுமையா பேசுறது…அப்பா நான் சொல்லுறதையே புரிஞ்சிக்கல நான் அப்புறம் என்ன செய்ய…அதோட என் லவ்வும் போயிடும்னு பயம் வந்தோனே மத்தது எல்லாம் பின்னுக்கு போயிடுச்சு…..”என்று மகேஸ்ரவன் புலம்பியவாரே பக்கத்தில் இருந்த பரிதியை பார்க்க அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.

“அடப்பாவி….தூங்கிட்டான்….”என்றவனும் தூங்க முற்பட்டான் ஆனால் முடியவில்லை மனது தன் போல் பின்னோக்கி சென்றது.

பரிதியும்,மகேஸ்வரனும் தான் எப்போதும் இரவு இரண்டு மணி வரை கேரேஜ் பார்ப்பது.இதில் சில நேரங்களில் பரிதி முழுஇரவு பார்ப்பான்.காலை தான் வீட்டிற்கு செல்வான்.அவர்களின் யோசனைக்கு மாணிக்கம் மறுத்த பின் அவர்கள் இருவருமே பலமுறை பல வழிகளில் முயன்று பார்த்து தோற்று தான் போயினர்.பரிதியால் இந்த தோல்வியை ஏற்க முடியவில்லை அதனால் அவன் மகேஸ்வரனிடம் ஒருவழி கூறினான் அதாவது தங்களிடம் இருக்கும் பணத்தை சேர்த்தால் மொத்தமாக ஆறு லட்சம் இருந்தது மேற்கொண்டு பணத்தை கேரேஜிலிருந்து எடுத்து நாமே அந்த கம்பெனிகளிடம் சர்வீஸ் செய்ய உரிமம் வாங்கலாம்,அதன் பின் மாணிக்கத்திடம் இதனை கூறலாம் என்று கூற மகேஸ்வரன் முதலில் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.அதோடு பரிதியிடமும் சற்று பொறுமையுடன் இரு நான் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றான் அதனால் பரிதியும் விட்டுவிட்டான்.

மகேஸ்வரனும் பல்வேறு முயற்சிகள் செய்தான் லோன் வாங்கி பணம் வாங்கலாம் என்றால் அதற்கும் அவனின் தந்தை முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.தனது தோழர்களிடம் பணம் வாங்கலாம் என்று நினைத்து கேட்க அவர்களோ பணம் என்று வந்தவுடன் ஒதுங்க முற்றிலுமாக தளர்ந்து தான் போனான்.அந்த சமயத்தில் அவனின் அன்னை திடீர் என்று திருமணம் என்று வந்து நிற்கவும் அனைத்தும் மறந்து பரிதியின் யோசனைக்கு சரி என்றுவிட்டான்.

அதன்படி மிருதுளாவின் வளைகாப்பிற்கு அடுத்த நாள் இரவு பணத்தை எடுத்து வந்து வேலையையும் நல்ல முறையில் முடித்தும் விட்டனர்.ஆனால் தங்கள் கனவு நிறைவேறிய நாளை அவர்களால் கொண்டாட தான் முடியவில்லை.இப்படி சிந்தனையின் பிடியிலேயே இருவரும் சென்னை வந்திறங்க மகேஸ்வரன் பரிதியிடம்,

“அடேய்….நாம பணத்தை எடுத்ததை சிசிடிவில அப்பா பார்த்திருப்பார்….அதோட நான் பேசினதையும் கேட்டிருப்பார்ல….என்னை கொஞ்சமாச்சும் புரிஞ்சிருப்பாராடா….”என்று மகேஸ்வரன் நம்பிக்கையுடன் கேட்க,பரிதியோ இல்லை என்று தலையாட்ட,

“டேய் என்னடா சொல்லுற….”

“இந்த நேரம் போலீஸோட வெயிட் பண்ணுவாரு…..என்னை கைது பண்ண….”என்று பரிதி கூற,மகேஸ்வரன் அதிர்ந்துவிட்டான்.

“என்னடா….நானும் தான தப்பு பண்ணேன் என்னையும் தான அரஸ்ட் பண்ணணும்….உன்னை மட்டும் ஏன்….”என்றவன் பரிதியின் முகத்தை பார்க்க,அவனோ மகேஸ்வரனை விரக்தியாக பார்த்து,

“ஏன்னா நீ அவர் பிள்ளை…..”என்றுவிட்டு முன்னே நடக்க,மகேஸ்வரனிற்கு திக் என்றிருந்தது அதோடு பரிதியின் முகமும் ஏதோ போல இருக்க,

“டேய் எதையோ மறைக்கிற….என்ன நடந்துச்சு….”

“ம்ம்….கேரேஜ் போவோம் தெரிஞ்சிடும்….என் பொண்டாட்டி என் தோளை உரிக்க போறா….அதோட உன் குமரன் மாமா ஊர்லேந்து வந்துட்டார்…..”என்று சேர்த்து  கூற,

மகேஸ்ரவன் அதிர்ந்துவிட்டான் அவரை அவன் தான் ஊருக்கு அனுப்பி வைத்திருந்தான் இப்போது எப்படி வந்தார்.அய்யோ அங்கு என்ன நடக்கிறதோ என்று நினைத்து கலங்கியவன்  துளியும் தாமதிக்கவில்லை பரிதியை இழுத்துக் கொண்டு கேரேஜிற்கு விரைந்தான்.அங்கு பரிதி கூறியது போல் தான் அனைத்தும் நடந்திருந்தது.

மிருதுளாவை கேரேஜில் பிடித்து வைத்திருந்தனர்.திவ்யாவோ கொத்தித்து போய் கத்திக் கொண்டிருந்தாள்.சில நேரங்களில் நமக்கு சரி என்று தோன்றும் விஷயங்கள் நம்மை சார்ந்தவர்களை பலமாக தாக்கிவிடும் அது தான் நடந்தது இங்கு பரிதியின் கண்களுக்கு சரி என்று தோன்றியது மிருதுளாவை பலமாக தாக்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!