அபர்ணா தேவேந்திரன் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் கடந்திருந்தன. ஓரளவிற்கு வீட்டினர், அவர்களுடைய பழக்க வழக்கம் அவளுக்குப் பிடிபட்டிருந்தது.
வீட்டில் மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும், சமையல் மட்டும் சண்முகம்தான் செய்தார்.
வாரத்தில் இரண்டு நாட்கள் வேலையாட்கள் வீட்டைத் துடைத்து சுத்தம் செய்தனர்.
சண்முகம் உள்பட பணியாட்கள் யாரும் அங்கே தங்குவதில்லை.
அவர்கள் தங்குவதற்கு என்று தோப்பில் வீடுகள் கொடுக்கப்பட்டிருந்தன.
ஒரு சிலர் குடும்பத்தோடு அங்கே தங்கியிருந்தனர்.
சண்முகத்திற்கும் ஒரு வீடு கொடுக்கப்பட்டிருந்தது.
இரவில் அனைவரும் உணவு உண்ணும் வரை காத்திருக்கும் சண்முகம், அதன்பிறகு தனது வீட்டிற்குச் சென்றுவிடுவார்.
பின் அதிகாலையில் வந்து தன் வேலையை ஆரம்பிப்பார்.
தேவேந்திரனும், சித்தரஞ்சனும் காலையில் தங்கள் கடைகளுக்குச் செல்வார்கள்.
மதியம் உணவு உண்ண வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பிறகு தேவேந்திரன் ஓய்வெடுத்துவிட்டு மாலைதான் செல்வார்.
சித்தரஞ்சன் உடனே கிளம்பிவிடுவான்.
பின் மாலை நேரத்தில் ஒருதரம் வீட்டிற்கு வந்துவிட்டு செல்பவன், பிறகு இரவு உணவிற்குத் தான் வருவான்.
முன்பெல்லாம் சித்தரஞ்சன் காலை உணவு முடித்துக்கொண்டு சென்றான் என்றால் இரவு வெகு நேரம் கழித்துத்தான் வீட்டிற்கு வருவானாம்.
சில நேரங்களில் காலை உணவு கூட உண்ணாமல் சீக்கிரமாகவே சென்றுவிடுவானாம்.
“தம்பி நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கிட்டேயிருக்கும்மா. சாப்பிடக்கூட முடியாமல் அப்படி என்ன வேலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி தம்பி ஓடி ஓடி பார்த்ததினால்தான் இன்னிக்கு இந்த வளர்ச்சி.” மிகவும் பெருமையாக சொல்வார் சண்முகம்.
அவளுக்கு என்னவோ தான் இங்கே வந்ததினால்தான் சித்தரஞ்சன் தன்னைக் கண்காணிக்க அடிக்கடி வீட்டிற்கு வருகை தருகிறான் என்று தோன்றியது.
அதற்கேற்றாற்போல்தான் அவனும் நடந்து கொண்டான்.
அவர் வாயைத் திறந்தாலே அதிகம் சித்தரஞ்சனைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும்.
அவருடைய மனைவி வனிதா அவருடன் பேசும்போது அபர்ணாவுடனும் பேசுவாள்.
அவரது இரண்டு பெண் குழந்தைகள் ராதாவும், கீதாவும் அவளிடம் ‘அக்கா. அக்கா.’ என்று மிகவும் பிரியமாகப் பேசுவார்கள்.
“ரஞ்சன் தம்பிதாம்மா இப்படி கேமராவுல பார்த்துப் பேசற மாதிரி எங்க இரண்டு பேருக்கும் போன் வாங்கித் தந்தது. அதனால் அடிக்கடி ஊருக்குப் போக முடியலைன்னாலும், பொண்டாட்டி புள்ளைங்களை நேரா பார்க்கிறோமே என்ற சந்தோசமாவது கிடைக்குது.”
அவர் ஏன் இத்தனை பெருமையாகப் பேசுகிறார் என்பதை அவளும் இப்போது நேரில் பார்க்கிறாள்.
இதோ அதோ என்று பயமுறுத்திய கொரோனா இங்கும் அதிவேகமாக பரவ ஆரம்பித்தேவிட்டது.
அதனால் இப்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
யாரும் தேவை இல்லாமல் வெளியில் சுற்றக்கூடாது.
அப்படியே தேவை என்று வெளியில் போனாலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
முகக் கவசம், சானிடைசர் இது எல்லாம் பாமர மக்களுக்கும் வந்து சேர்ந்தது.
முக்கியமான அரசு அலுவலகங்கள் தவிர அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து முடக்கப்பட்டது.
அப்படியே முக்கியமாக வெளியூர் பயணம் என்றால் அரசிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது.
காவலர்கள் இரவு, பகல் எனப் பாராமல் பணியில் இருந்தனர்.
பொருட்கள் என்னென்ன வேண்டும் என்று இவர்களுடைய சூப்பர் மார்க்கெட் எண்ணிற்கு முகவரியுடன் அனுப்பி வைத்துவிட்டால் பொருட்களை அவர்கள் வீட்டிற்கே சென்று ஒப்படைக்கும் வேலையைத் தன் வேலையாட்கள் மூலம் சித்தரஞ்சன் ஏற்பாடு செய்திருந்தான்.
பொருட்களுக்கான பணத்தை மட்டும் அவர்கள் செலுத்தினால் போதும்.
தங்கள் வசம் உள்ள வாகனங்களை இந்த சமயத்தில் பயன்படுத்திக்கொண்டான் சித்தரஞ்சன்.
இதுபோல் காய்கறிகளும் கிடைக்க ஏற்பாடு செய்தான்.
அதனால் அவனுக்கு எப்போதும் போல் வேலை இருந்த வண்ணம் தான் இருந்தது.
அவனிடம் பணி செய்யும் பணியாளர்கள் அனைவருமே அவனிடம் அன்பு கலந்த மரியாதை வைத்திருந்தனர்.
அவர்கள் வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கும் உதவி செய்கிறான். அவர்கள் வீட்டுத் தேவை என்றாலும் முன்னே நிற்கிறான்.
அதனால் அவனைத் தொழிலாளர்கள் கொண்டாடுகிறார்கள்.
அவர்களின் அத்தனை நிறுவனங்களையும் அவன் மட்டுமே நிர்வகிக்கிறான்.
தேவேந்திரன் அவனுக்குத் துணையாக இருக்கிறார்.
ஆரம்பத்தில் அவனைக் கண்காணித்தவர் அவனது திறமையை நேரிடையாகக் கண்ட பிறகு அவனுடைய செயல்களில் தலையிடுவதில்லை.
அவன் தனது சொந்த முயற்சியில் உருவாக்கியதுதான் ‘அபிஸ் டெக்ஸ்’.
அவன் தன்னுடைய படிப்பை வைத்து சுயதொழில் செய்வதற்கு வங்கியில் கடன் பெற்றே அந்த நிறுவனத்தை உருவாக்கியிருந்தான்.
சகுந்தலா கூட ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.
“நமக்கு உள்ள சொத்தையே பார்க்க முடியலை. நீ இதுல புதுசா ஆரம்பிக்க வேண்டாம். அதுவும் நமக்கு இருக்கிற வசதிக்கு நீ ஏன் போய் கடன் வாங்கனும்.”
ஆனால் தேவேந்திரன் மகனுக்கு ஆதரவாக நின்றார்.
“அவன் செய்ய நினைப்பதை செய்யட்டும்” என்றவர் வங்கியில் அவன் கடன் உதவி பெற உதவி செய்தாரே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
அவனே அந்த வங்கிக் கடனை அடைத்துவிட்டு அவன் ஆரம்பித்த அந்த ஜவுளிக்கடையை வளர்த்துவிட்டான்.
இன்று நகரத்தில் ஒரு பெயர் பெற்ற நிறுவனமாக அது மாறியுள்ளது.
தனியே அவன் ஆரம்பித்திருந்தாலும், அவர்கள் குடும்பப் பெயரினையும் இணைத்து ‘இது ஒரு கே.ஆர்.பி நிறுவனத்தின் கிளை நிறுவனம்’ என்று தான் அவன் மக்களிடம் அறிமுகம் செய்திருந்தான்.
“இது என்ன பெயர்? நம்ம குடும்பத்தில் யாருக்கும் இந்த பெயர் இல்லையே. சாமி பெயரா?” என்று சகுந்தலா கேட்டதற்கு
“ஆமாம்மா. அபிராமி தாயார் என் கனவில் வந்தாங்க. அதன் பிறகுதான் எனக்கும் இந்த மாதிரி ஒரு கடை ஆரம்பிக்கனும்னு தோணுச்சு. அதனால்தான அவங்க பெயரையே வச்சுட்டேன்.”
“அப்படியே முழு பெயராவே வச்சிருக்கலாம்.” என்று மனதில்லாமல் அப்போதும் சகுந்தலா மனத்தாங்கல் கொண்டார்.
“பெயரில் என்ன இருக்கிறது? அவன் மனசுப்படியே செய்யட்டும்.” என்று மனைவியை சமாதானம் செய்துவிட்டார் தேவேந்திரன்.
தான் ஆரம்பித்ததை மட்டும் பார்த்துவிட்டு மற்ற சொத்துக்களை கவனிக்காமல் விட்டுவிடுவானோ? என்ற கவலையும் அவர் மனதை ஆட்டுவித்தது.
ஆனால் சித்தரஞ்சன் அப்படி இல்லாமல் தந்தைக்குத் துணை நின்றான். ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்தான்.
ஒரு கட்டத்தில் தேவேந்திரனுக்கே மகன் இப்படி ஓய்வில்லாமல் சம்பாதித்து, அதை அனுபவிக்காமல் இருந்து என்ன பிரயோசனம் என்று தோன்ற ஆரம்பித்தது.
“சாப்பிடக்கூட இல்லாமல் அப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று மகனைக் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தார்.
இவை எல்லாம் சண்முகம், மற்றும் தேவேந்திரன் மூலம் அபர்ணா அறிந்தவை.
ஆனால் அவன் ஏன் திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறான் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை.
அதனால்தான் மனோரஞ்சனின் திருமணத்திற்கு தேவேந்திரன் சம்மதம் கூறினார்.
இப்போது இரண்டு மகன்களையும் நினைத்துக் கவலை கொள்கிறார்.
அவளால் இப்போதைக்கு எந்த ஆறுதலும் கூற முடியவில்லை.
அதற்கான உரிமையும் தனக்கு இல்லை என்று அமைதி காத்தாள்.
அண்ணனுக்கு சளைத்தவன் இல்லை மனோரஞ்சனும்.
அன்று லலிதா அவனுக்கு அழைத்த தினம் அவள் மனதில் வந்து நின்றது.
அவனுக்கு அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்ற பிறகுதான் லலிதா அவனை அழைத்திருக்கிறாள் என்று தெரியும்.
அவள் எதற்காக தன்னை அழைக்கிறாள் என்ற யோசனையில் அவன் இருக்கும்போதே மறுமுனையில் அவள் அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.
அதுவும் சாதாரணமாக இல்லை. அழுகைக் குரலில். அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று அவனுக்குப் புரிந்தது.
“சாரி மனோ. நான் உனக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்துட்டேன். மத்தவங்க சுயநலத்தால் நான் பாதிக்கப்பட்டபோது உன்மேல் கோபத்தைக் காட்டிட்டேன். நானும் ஒரு சுயநலக்காரியா மாறிட்டேன்.”
“ஏன் இப்படி எல்லாம் பேசறே? முதல்ல அழறதை நிறுத்து. உனக்கு என்ன பிரச்சினை? உன்னோட புருசன் எங்கே?”
“என்னால் அவனுக்கு எந்த பிரயோசனமும் இல்லைன்னு தெரிஞ்ச பிறகு அவன் என் கூட இருப்பானா? போயிட்டான்.”
“என்ன சொல்றே?”
“அவன் என்னை நம்பலை. கல்யாணத்துக்குப் பிறகும் உன்னைக் கன்னிப் பெண்ணா விட உன் முன்னாள் புருசன் என்ன என்னை மாதிரி முட்டாளா? என்கிறான். அதுவும் நமக்கு விவாகரத்து கிடைச்சன்னைக்கு நீ என்கிட்ட வந்து பேசினது, அதன் பிறகு உனக்கு ஆக்சிடெண்ட் ஆனது எல்லாம் சேர்த்து அவன் சந்தேகம் அதிகமா ஆயிடுச்சு.”
“என்னோட வீட்டில்தான் இருக்கேன். சாகப்போறதுக்கு முன்னாடி உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு நினைச்சேன். இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. என்னோட தப்புக்கு தண்டனையை எனக்கு மட்டும் கொடுக்காமல் என்னோட குழந்தைக்கும் ஆண்டவன் கொடுத்துட்டான். அதுவும் என்னோட சேர்ந்து சாகப்போகுது.” அவள் பேசும்போதே மூச்சிரைத்தது.
“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. நீ ஏதாவது செஞ்சுக்கிட்டியா? சொல்லு.”
“இல்லை. என் குழந்தைக்காகவாவது உயிர் வாழனும்னு நினைச்சேன். அதனால் எதுவும் செய்துக்கலை. ஆனால் என்னால் என் குழந்தையை காப்பாத்த முடியாது போல. என..” அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.
“லலிதா. உனக்கு நான் இருக்கேன்.” என்று பதறினான்.
ஆனால் மறுமுனையில் எந்த பதிலும் இல்லை.
“ப்ளீஸ் அண்ணி. எனக்கு ஒரு உதவி செய்யனும்.” என்றவன் உடனே சித்தரஞ்சனுக்கு அழைத்தான்.
“சொல்லு மனோ. என்ன விசயம்?”
“அண்ணா. நீ இப்ப எங்கே இருக்கே?”
“இதோ. இப்பதான் வீட்டுக்குள் நுழையறேன்.”
“உடனே என்னோட ரூமுக்கு வாண்ணா. அவசரம்.”
சித்தரஞ்சனும் என்னவோ ஏதோவென்று பதறியவன் உடனே அவனது அறைக்கு வந்துவிட்டான்.
“என்னாச்சு மனோ? ஏன் இப்படி பதட்டமா இருக்கே?”
“அண்ணா. லலிதாவுக்கு ஏதோ பிராப்ளம்னு நினைக்கிறேன். எனக்கு போன் பண்ணினாள்.”
“அவ புருசன் எங்கேன்னு தெரியலை. மாமா அவகிட்ட பேசாமல் போனை கட் பண்ணிட்டாராம். குழந்தையை சுமந்துக்கிட்டிருக்கிற பொண்ணுண்ணா. நீ அவ செஞ்சனை நினைச்சுப் பார்க்காதே. ப்ளீஸ் நம்ம கூட சின்ன வயசுல விளையாடிய தோழியா நினைச்சுப் பாருண்ணா. பாவம்னா அவள். சாகப் போறேன்னு ஏதேதோ உளர்றா. அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா எனக்கு மனசாட்சி உறுத்தும். ப்ளீஸ்ணா.”
“சரி சரி போறேன். அவ எங்கே இருக்கா?”
அவனிடம் முகவரியைக் கூறியவன், அபர்ணாவிடமும் உதவி கேட்டான்.
“நீங்க அண்ணா கூட போனால் அவளுக்கு உதவியா இருக்கும். அவள் எந்த நிலைமையில் இருக்கிறாள் என்று தெரியவில்லை.”
இருவரும் காரில் போகும்போதே அபர்ணா கிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்து ஆம்புலன்சிற்கு சொன்னாள்.
நிச்சயம் அந்த லலிதா ஏதோ பிரச்சினையில் இருக்கிறாள் என்று தெரிந்தது.
அதுவும் அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோதே பேச்சை நிறுத்திக்கொண்டாள். சாகப்போவதாக வேறு கூறியிருக்கிறாள்.
அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது வீடு வெளியில் பூட்டியிருந்தது. அவர்கள் திகைத்தனர்.
அதற்குள் லலிதா வெளியில் சென்றிருக்க வாய்ப்பில்லை. அவள் பேசியபோது கணவன் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான் என்று கூறியிருந்தாள்.
வீட்டுக்கு சொந்தக்காரர் கீழேயே இருந்ததினால் அவரிடம் மாற்றுச்சாவி கொண்டு திறக்கச் சொன்னார்கள்.
திறந்து உள்ளே பார்த்த போது அவர்கள் சந்தேகப்பட்டது மாதிரியே லலிதா உள்ளேயேதான் இருந்தாள்.
மயக்கத்தில் இருந்தாள். அபர்ணா வீட்டைப் பார்த்த அளவில் வீட்டில் சமைத்த அடையாளமே தெரியவில்லை.
எத்தனை நாட்கள் இப்படி பூட்டிய வீட்டிற்குள் அடைபட்டிருந்தாளோ?
அவள் கூறியிருந்தபடி ஆம்புலன்ஸ் வந்து நிற்க உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அபர்ணாவும் கூடவே சென்றாள்.
சித்தரஞ்சன் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
உடனே தன் மாமா சந்தானத்திற்கு அழைத்தான்.
அவர்கள் வீட்டிற்குப் போய் சந்தானத்தையும், அவர் மனைவி சாரதாவையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
அங்கே தன் மகளை அந்தக் கோலத்தில் பார்த்த சாரதா மனம் பதைக்க கதறிவிட்டார்.
“புள்ளைத்தாச்சிப் பெண்ணை பார்த்துக்கிற லட்சணம் இதுதானா? அவங்க சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?” என்று கோபமாகக் கடிந்த மருத்துவர் அவளுக்கான சிகிச்சையை மேற்கொண்டார்.
சந்தானத்தில் அருகில் வந்த சாரதா அவருடைய சட்டையைப் பிடித்து உலுக்கினார்.
“இப்ப உனக்கு திருப்திதானேய்யா. நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேனே. கேட்டியா? நமக்கு ஒரே பொண்ணு. அவ வாழ்க்கையை அவளோட விருப்பப்படி விட்டுருவோம்னு சொன்னேனே கேட்டியாய்யா. இப்ப என் மக சாகக் கிடக்கிறாளே? நம்ம பேரனோ பேத்தியோ. அது பொறக்காமலேயே சாகப் போகுதா? என் பொண்ணு இல்லன்னா அந்த சொத்தை வச்சு இனி என்ன செய்யப்போறே? சொல்லுய்யா. சொல்லு.”
சந்தானத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கிவாறே கதறி அழுத மனைவியைக் கண்டு சந்தானமும் கண் கலங்கினார்.
அவர் இப்படி எதிர்பார்க்கலையே. கோபம் கண்களை மறைத்துவிட்டது.
தான் அத்தனை கூறியும் தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டாளே என்று மகளின் மீது அத்தனை கோபம்.
அன்றைய இரவு வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். பெண் குழந்தை. உடனே இன்குபேட்டரில் குழந்தை வைக்கப்பட்டது.
லலிதாவிற்கு நினைவு வந்த பிறகும் அவள் யாரிடமும் எதுவும் பேச முயற்சிக்கவில்லை.
குழந்தை குழந்தை என்றவள் குழந்தையைப் பற்றிக்கூட கேட்கவில்லை. எங்கோ வெறித்துப்பார்த்தவாறே இருந்தாள்.
“அவங்களுக்கு உடல் பாதிப்பை விட மனபாதிப்புதான் அதிகமா இருக்கு.” என்று மருத்துவர் கூறினார்.
லலிதா பணக்கார வீட்டுப்பெண். அவளைத் திருமணம் செய்துகொண்டால் தான் நல்ல வசதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் அவளை வளைத்துப் போட திட்டம் போட்டான் தினகர்.
ஆனால் அவளோட அப்பா காதலை ஏத்துக்கலை.
வீட்டை விட்டு ஓடிப்போகலாம் என்று திட்டம் போட்டுக்கொடுத்தான்.
ஆனால் அதற்குள் அவர் மனோரஞ்சனுக்கு வலுக்காட்டாயமாய் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
அவளோட கல்யாணத்துக்குப் பிறகும் தேவதாஸ் வேசம் போட்டான்.
அதை உண்மை என்று நம்பிய லலிதா மனோரஞ்சனுடன் வாழ விரும்பாமல் தான் அவனுக்குத் தொந்தரவு கொடுத்தால் அவன் தன்னுடன் வாழ விரும்பாமல் வீட்டை விட்டு அனுப்பி விடுவான்.
அப்பாவும் வேறு வழியில்லாமல் தன்னை தன் காதலனுடன் சேர்த்து வைப்பார் என்று முட்டாள்தனமாக நினைத்துவிட்டாள்.
ஆனால் மனோரஞ்சன் அவள் என்ன செய்தாலும் பொறுத்துப்போனான். அதை அவள் எதிர்பார்க்கவில்லை.
அதற் பிறகுதான் லலிதா வீட்டை விட்டுக் கிளம்பியது. ஆனால் சந்தானம் அவளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்க, அவள் தினகருடன் சென்றாள்.
சொத்தோடு வருவாள் என்று எதிர்பார்த்த தினகருக்கு பெரும் ஏமாற்றம். அவள் அழகு வேறு அவனைப் படுத்த திருமணம் செய்துகொண்டான்.
எப்படியும் அவளது தந்தை தன்னை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நம்பினான்.
அதனாலேயே அவளுக்குத் தாலி கட்டிக் குடும்பம் நடத்த ஆரம்பித்தான். கஷ்ட ஜீவனம்தான்.
லலிதா கர்ப்பமானாள். அவனுக்கு அதை சாக்கிட்டு எப்படியாவது மாமனார் வீட்டோடு போய் சேர்ந்துவிடலாம் என்ற எண்ணம்.
ஆனாலும் சந்தானம் அதை அனுமதிக்கவில்லை என்றதும் அவன் தன் உண்மையான ரூபத்தைக் காட்ட ஆரம்பித்தான்.
அவள் மனோரஞ்சனுடன் வாழ்ந்துவிட்டு அவன் சலித்துப் போன பிறகு தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டாள் என்று குற்றம் சாட்டினான்.
அவளை விட்டுப் போக ஏதாவது சாக்கு வேண்டுமே.
லலிதா அவனுடைய சுயரூபம் தெரிந்து அதிர்ந்து போனாள்.
அவனைக் காரணம் காட்டி தான் மனோரஞ்சனுக்கு இழைத்த கொடுமைகளை எல்லாம் நினைத்துப் பார்த்தாள்.
இந்த நேரத்தில் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்து மனோரஞ்சனும் விபத்தில் சிக்கிக்கொள்ள அவன் மேலும் இருவரையும் இணைத்துப் பேசினான்.
இப்போது அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது.
வெளியில் செல்லும்போது சந்தேகத்தில் வீட்டைப் பூட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்தான்.
அப்படி போனவன்தான், ஆனால் இந்த முறை இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
அவள் தன்னுடைய தந்தைக்கு அழைத்தாள்.
அவரோ, “என் மகள் இறந்துவிட்டாள்.” என்று அவள் என்ன கூற வருகிறாள் என்று கேட்காமலே அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
அதன் பிறகுதான் அவள் மனோரஞ்சனிடம் பேசியது.
அன்று வீடு திரும்பும் வழியில் அபர்ணா கடைக்குச் செல்ல வேண்டும் என்றாள்.
“நம்ம கடை இருக்கும்போது நீ வேறு கடைக்குச் சென்றால் நன்றாக இராது.” என்றவன் அவளை தங்களுடைய சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அவள் மதன்ராஜிற்குத் தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டாள். மேலும் தங்களுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டாள்.
அவள் பணம் கொடுக்க முன்வரும்போது அவன் தடுத்தான்.
“நீங்க நான் வேலை பார்க்கிறதுக்கு சம்பளம் கொடுக்கப் போறீங்க. அப்படி இருக்கும்போது எனக்குத் தேவையான பொருட்களை நான்தானே வாங்கிக்கொள்ள வேண்டும்.” என்றாள்.
“சரிதான். இந்த பில்லுக்கான பணத்தைக் கழித்துக்கொண்டு உனக்கு மீதி பணத்தை சம்பளமாகத் தருகிறேன்.” எனவும், அவள் வாங்கிக்கொண்டாள்.
இப்போது லலிதாவை அவள் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்
சென்றுவிட்டார்கள்.
குழந்தையையும் சாரதா தான் பொறுப்பாக பார்த்துக்கொள்கிறார்.
இப்போதும் லலிதாவிடம் எந்த மாற்றமுமில்லை. இதை எல்லாம் கேட்டு மனோரஞ்சன் மிகவும் வருந்தினான்.
லலிதாவுடைய கணவன் வேலை தேடிப் போனதாக வந்து கண்ணீர் வடித்திருக்கிறான்.
அவன் உண்மையைச் சொல்கிறானா? இல்லை சந்தானம் மகளை சேர்த்துக்கொண்டதால் சொத்தை அனுபவிக்கலாம் என்ற எண்ணத்தில் வந்தானா? என்று தெரியவில்லை.
ஆனால் இந்த முறை சந்தானம் கோபப்பட்டு எதையும் செய்யவில்லை.
ஒரு முறை மகளின் வாழ்க்கையில் அவசரப்பட்டு எடுத்த முடிவு போதும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
“இதுவே நான் முன்பிருந்த சந்தானமாக இருந்தால் நீ என் கண் முன்னாடியே வந்திருக்க முடியாது. என் பொண்ணு உன்னை நம்பித்தானே வந்தாள். அவளை ஒழுங்கா வாழ வச்சியா நீ? உன் மேல் கேஸ் போட்டு உள்ளே தள்ளத்தான் என்னோட ஆசை. ஆனால் என் மகள் உன்னை விரும்பித் தொலைச்சிட்டாளே. அவ இப்ப சுயநினைவோட இல்லை. அவளுக்கு சுயநினைவு வந்து என்ன முடிவு எடுக்கிறாளோ அப்ப நான் அவளுக்குத் துணையா நிற்பேன். இப்ப நீ என் கண் முன்னாடி நிற்காதே. போயிடு.” என்று அவனை அனுப்பிவிட்டார்.
சண்முகம் சமையலில் ஈடுபட்டிருந்தார்.
அன்று நாட்டுக்கோழி சமைக்கச் சொல்லி சகுந்தலா கூறியிருந்தார்.
அபர்ணா வந்த இத்தனை நாட்களில் அவள் சைவம் என்று அறிந்து கொண்டவர் அவளுக்காக வத்தக்குழம்பு செய்தார்.
பெரும்பாலும் சாதம் வடிக்க அவர் விறகடுப்பைத்தான் பயன்படுத்துவார்.
அதே போல் அசைவச் சமையலையும் அவர் விறகடுப்பில்தான் சமைப்பார். சகுந்தலாவிற்கு அதுதான் பிடிக்கும்.
“அபர்ணாம்மா. வத்தக்குழம்பு வச்சிருக்கேன். என்ன காய் ஆக்கம்மா?” என்று அவளிடம் கேட்டார்.
“எனக்காக ஏண்ணா இப்பத் தனியா குழம்பு வச்சீங்க? மோர் இருந்தால் கூட நான் சாப்பிட்டுக்குவேனே?”
“நீங்க சாப்பிடுவீங்கம்மா. ஆனால் எனக்கு மனசு கேட்காதேம்மா.”
“சரிண்ணா. அப்பளம் இருக்கா?”
“இருக்கும்மா. நான் பொரித்துத்தர்றேன்.”
“இல்லண்ணா. நான் சுட்டுக்கறேன்.”
“ஏம்மா.”
“அப்பளம் சுட்டால் நல்லாருக்கும்ணா.”
“ஆமாம்மா. எனக்கும் வத்தக்குழம்புக்கு சுட்ட அப்பளம் ரொம்பப் பிடிக்கும்மா.” என்றார்.
அவள் சாப்பிடும்போது அங்கே வந்த சித்தரஞ்சனும் அங்கேயே சாப்பிட அமர்ந்தான்.
அத்தோடல்லாமல் அவள் தட்டில் இருந்த அப்பளத்தை அவன் எடுத்துக்கொள்ள அவள் திகைத்து அவனை நோக்கினாள்.