மகளின்பரிட்சைமுடிந்தபின்னேதரகர்சொன்னவரனைப்பற்றிசொல்லலாம்எனநினைத்திருந்தரங்கசாமிஇன்றுவௌளிக்கிழமை. நல்லநாள். மகளிடம்திருமணம்பற்றி பேசும் எண்ணத்திலிருந்தார்.
இன்னைக்கு நேரம் சரியில்ல போல, பிரச்சனை வெடிக்கத்தான் போகுது என நினைத்து “ம்” என பெருமூச்சிழுத்தவர், “கல்யாணம்லாம் பிடிக்காம பண்ணக்கூடாதுக்கா. நிதீஷ்க்கு பிடிக்கல, உன் பிடிவாதத்துலதான் சம்மதிக்க வச்சேன்ற. இப்படி பையனுக்கு என் மகளை கொடுக்க எனக்கு விருப்பமில்ல” என்றார் பொறுமையாகவே.
“நீயும் ஜானகியும் முன்ன பின்ன பார்த்து பேசியா கல்யாணம் செய்திங்க? இல்ல நானும் நாராயணனும்தான் அப்படி செய்தோமோ? நம்ம குடும்பத்துல எல்லாருக்குமே பெரியவங்க பார்த்து செய்துவைக்கிற கல்யாணம்தானே?” என அதட்டி, “எல்லாம் போகப்போக பிடிச்சிடும். நீ நல்ல நாள் பார்க்க ஆரம்பி” என்றார்.
வனிதாவின் பேச்சு கோபத்தை கொடுக்க, “என் மகளுக்கு நிதீஷை பிடிக்க வேணாமா?” என்றார் பொறுக்கமாட்டாமல்.
கணவனருகேவந்தஜானகி “ஏங்ககொஞ்சம் யோசிச்சு” எனும்போதே, “இதுல யோசிக்க ஒன்னுமில்ல ஜானு. என் மகளை என் வீட்டுல இருக்கவே தகுதியில்லாதவனு நினைச்சவங்க வீட்டுக்கு எப்படி என் பொண்ணை கொடுப்பேன்? கூடப்பிறந்த பாசம் வேற. பெத்த பிள்ள பாசம் வேற.
இது இரண்டையும் விட பெருசு நம்மளை நம்பி நாமதான் உலகம் இருக்க பெறாத பிள்ளையை கரையேத்துறது. நம்ம வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவ முல்லை. நமக்காக இருக்க ஒரே ஜீவன். அதேபோல முல்லைக்கும் நம்மளை விட்டா யார் இருக்கா? நம்ம பொண்ணுக்கு இப்படி கல்யாணம் செய்து வைக்கிறதுக்கு பதிலா நம்மளோடவே வச்சிக்கலாம்” என்றார் இறுகிய முகத்தோடு.
“எழுந்திரி வனிதா போலாம். தத்தெடுத்த பிள்ளைக்காக கூடப்பிறந்தவளை உதாசினப்படுத்துறவன் வீட்டுல இனி ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது” என எழுந்தார் வனிதாவின் கணவன்.
நிதீஷ் “மகன் போலனு என்மேல வச்ச பாசம் அவ்வளோதானா மாமா?” என ஆற்றாமையோடு கேட்க, “நீ எனக்கு எப்போவும மகன் போலத்தான் நிதி. அதுக்காக முல்லையை பணையம் வச்சு அதை நிரூபிக்க முடியாது. இங்க பொண்ணு கேட்ட மாதிரி வேற எங்கையும் பொண்ணு கேட்டா கொடுப்பாங்களானு யோசி.
வீட்டுக்கு வர மருமக பெரியவங்களை பார்க்கனும்தான். அதுக்காக அடிமையா இருக்கனும்ன்ற அவசியம் எந்த பொண்ணுக்கும் கிடையாது. பொண்டாட்டியை நல்லபடியா வச்சி காப்பாத்துறவன்தான் ஆம்பள. அடிமை வேலை செய்யவும், பிள்ளை பெத்து கொடுக்கவும் கட்டிக்கிறவன் ஆம்பிளை கிடையாது. மகன் போல உன்னை நினைச்சதால சொல்றேன். ஆம்பிளையா இருக்கப் பாரு. அப்போதான் நிம்மதியா இருக்க முடியும்” என்றார் ரங்கசாமி.
வனிதா “என் மகனுக்கு புத்தி சொல்ல நாங்க இருக்கோம்” என ரங்கசாமியிடம் பொறுமி, மகனிடம் “நீ என்னடா கெஞ்சிட்டிருக்க? எந்த முகத்தை வச்சிகிட்டு மக கல்யாணத்துக்கு அழைக்க வருவானு பார்க்கலாம். நல்லது கெட்டதுக்கு நாம வந்து நிற்கலைனா அப்போ தெரியும் நம்ம அருமை” என சபதம் போல் சொல்லி கிளம்பினார் குடும்பத்தோடு.
திருமணமான நாளிலிருந்து வனிதா தனக்கு பக்கபலமாய் இருந்தவர் ஆதலாலும், முல்லையை தத்தெடுக்கும் முன்பாக நாத்தனார் மற்றும் கொழுந்தனார் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பார்த்தவர் ஆதலாலும் “ஏங்க, கொஞ்சம் தன்மையா பேசியிருக்கலாமில்ல?” என வருந்தினார் ஜானகி.
“நிதீஷ் நல்லவன்தான் ஜானு. ஆனா அவனுக்கும் முல்லை மேல விருப்பம் இல்ல, வனிதா சொன்னதுக்காக சம்மதிச்சிருக்கான். எந்தெந்த விசயத்துல அம்மாம பேச்சு கேட்கனும்னு வரைமுறையிருக்கு. வனிதா பொண்ணு கேட்ட விதத்தை பாரத்தியா? இப்படி கேக்குறவங்க குடும்பத்துல முல்லையால சந்தோசமா இருக்க முடியுமா? சந்தோசத்தை விடு, முதல்ல நிம்மதியா இருக்க முடியுமா?”
“இனி உறவே வச்சிக்கமாட்டாங்க போல” என ஜானகி வருந்த, தன்னால்தான் தந்தையின் உடன்பிறப்பு உறவு விட்டுப்போச்சு என நினைத்தவளுக்கு கண்கள் கலங்கியது.
“உறவு வச்சிக்கலனா போகட்டும்” என மனைவியை அதட்டி, “நீ ஏன்டா கலங்குற? வனிதானு இல்ல, இப்படி யார் பொண்ணு கேட்டாலும் கட்டிக்கொடுக்கமாட்டேன். நீ தேவதைடா. உன் அருமை புரியறவங்களுக்குத்தான் உன்னை கட்டிக்கொடுப்பேன்” என தேற்றினார் மகளை.
அனைவரும் வருத்தத்தில் இருக்க, அரைமணி நேரம் கழித்து நாராயணன் வந்தார். “வாடா” என வரவேற்றார் அமர்த்தலாக. வனிதா விசயத்தை சொல்லித்தான் நாராயணன் வருகிறான் என ரங்கசாமிக்கு புரிந்தது.
ஜானகியிடம் “முல்லையை தத்தெடுக்கும் முன்ன எவ்வளோ உதவி செய்திருக்கு அக்கா” எனும்போதே, “அதுக்கு?” என முறைத்தார் ரங்கசாமி.
“எப்படியும் கல்யாணம் செய்துதானே ஆகனும்? யாருக்கோ கொடுக்கிறதுக்கு நம்ம நிதீஷ்க்கு கொடுக்கலாமே? அவனுக்கென்ன குறை? நல்ல வேலைல இருக்கான். எந்த கெட்ட பழக்கமும் இல்ல”
“இதெல்லாம் எனக்கு தெரியாதா?” என முறைத்து, “எனக்கு இவ்வளோ சொல்ற நீ… ஏன் அபர்ணாவை கொடுக்கல? முல்லையை விட மூனு வயசு பெரியவ அபர்ணா. முப்பத்திரண்டு வயசு நிதீஷ்க்கு சரியான மேட்சாவும் இருந்துருக்கும். உன் அக்கா குடும்பத்தை கட்டி காப்பாத்தின மாதிரியும் இருந்திருக்கும்ல?” என்றார் அமர்த்தலாக.