Skip to content
Post Views: 3,079
தென்றல் 3
மிதமான அலங்காரத்தில் மேடையில் அமர்ந்திருந்தாள் மலர்கொடி. விழிகள் நொடிக்கொரு முறை வாசலை காண தவிப்புடன் அமர்ந்திருந்தாள். தாய் தந்தை என யாரும் இல்லாமல் ஆசிரமம் ஒன்றில் வளர்ந்தவள். ஒரு டிரஸ்டின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது முதல் வருட மாணவியாக சேர்ந்தவள் இளந்தென்றல்
முதல் நாள் கல்லூரியில் சீனியர் மாணவர்களின் கலாட்டாக்களை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டு இருந்தவளுக்கு உதவி செய்து காப்பாற்றிய அந்த கணமே மலரை மிகவும் பிடித்துவிட்டது இளாவுக்கு. உடன் பிறந்தவர் யாருமின்றி இருந்தவளுக்கு மலர் சிறந்த தோழியாக மட்டுமில்லாது உடன்பிறவா சகோதரியானாள். இளாவுக்கு அவள் வகுப்பில் கூட மலரை போல நெருங்கிய தோழிகள் கிடையாது என்னும் அளவு இருவரும் நெருங்கியிருந்தனர்.
கல்லூரி விடுமுறையில் மலரை தன் வீட்டுக்கு அழைத்து சென்று தன் தாய் தந்தை யிடம் அறிமுகம் செய்ய அவர்களின் அன்பில் மலரும் இவர்களை தன் குடும்பமாக உணர்ந்தாள்.
Advertisement
தன் அத்தை வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வான் அருள்குமரன். அப்படி ஒரு முறை வந்த போது அங்கிருந்த மலரை பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது அவனுக்கு. அதுவும் அவளுக்கு தாய் தந்தை இல்லை என கேள்வி பட்டதும் மனம்உருகி அவளை மணந்து கொள்ள அவளிடம் கேட்க மறுத்து விட்டாள் மலர்.
விடாமல் போராடி தன் அத்தை மற்றும் இளாவின் உதவியுடன் மலரை சம்மதிக்க வைத்தான் அருள். ஆனால் பார்வதி ஒத்துக்கொள்ள மறுத்து விட்டார். அவரை தவிர வீட்டில் யாருக்கும் மலரை மறுக்க எந்த காரணமும் இல்லை. அதனால் ஆறுச்சாமி தாத்தா முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். ஆரம்பம் முதலே பூரணியுடன் நல்ல ஒட்டுதல் இல்லை அத்துடன் இதுவும் சேர்ந்து கொள்ள அவரை அறவே பிடிக்காது பார்வதிக்கு.
மலர் யாருமில்லாதவ என தன் அண்ணி கூறக்கூடாது என பூரணியும் விஸ்வநாதனும் சித்தி சித்தப்பா வாக இருந்து பாத பூஜை முதல் சீர் வரிசை வரை அனைத்தும் சிறப்பாக செய்திருந்தனர். தன்னை பெற்றெடுத்த தாய் தந்தை இருந்திருந்தால் கூட இவ்வளவு நிறைவாக தன் திருமணம் நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான் என் எண்ணி பூரித்தால் மலர்.
Advertisement
திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற குறை தவிர அந்த வீட்டில் வேறு எந்த குறையும் இல்லை.
Advertisement
பார்வதிக்கு தன்னை கண்டாலே பிடிக்காது போதாததுக்கு குழந்தை இல்லை என கூறியே தினமும் வறுத்தெடுத்துவிடுவார்.
குடும்பத்தில் தன்னால் எந்த சண்டையும் வரக்கூடாது என எதையும் வெளிக்காட்டமாட்டாள்.
தன் இடைவிடாத பிரார்த்தனையாலும் கடவுளின் கருணையாலும் இதோ இன்று ஒன்பது மாத கருவை சுமந்து கொண்டு தன்னை ஈன்றெடுக்காத தாய் தந்தைக்காகவும் யாருமின்றி இருந்த தனக்கு இன்று ஒரு குடும்பம் அமைய காரணமான தன் செல்ல தங்கைக்காவும் வழி மீது விழி வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
Advertisement
“ என்ன பார்வதி நல்ல நேரம் ஆச்சு தான ஏன் இன்னும் சடங்கு ஆரம்பிக்கல?” விஷேசத்திற்கு வந்த உறவு பெண்மணி கேட்க
“இதோ இப்ப ஆரம்பிச்சிடலாம் நங்கையா , சின்னவன் தாயம்மாவ கூப்பிட்டு வர போயிருக்கான் வந்ததும் ஆரம்பிச்சிடலாம் ,ஆமா அண்ணண் எங்க நீ மட்டும் வந்திருக்க”
“ஆமா கறவை கட்டுதரையில கட்டிகெடக்குது தண்ணி காட்ட ஆளு வேணும்மல்ல”
“அதுவும் செரிதான்”
“சரி நங்க நீ உக்காரு நான் ஆரம்பிக்க வேற என்ன வேணும் னு பார்க்குறேன்” என்றபடியே மேடைக்கு செல்ல
“வா அம்மிணி , வாங்க மாப்பிள்ளை, வாடா ராசாத்தி யாரோ மாதிரி கடசி நேரத்தில வர்றீங்க உள்ள வாங்க” செந்தில்நாதன் தன் தங்கை பூரணி குடும்பத்தை வரவேற்க
பார்வதி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, உறவுகளுக்கு மத்தியில் அதை காட்ட முடியாமல் நிற்க,
“வந்தவீகளே வா னு கூப்பிட வாய் கசக்குதோ” செந்தில்நாதன் கடிய,
இவர் அழைத்தா நாம வந்தோம் இவிய வா னு கூப்பிட்டா என்ன இல்லனா என்ன என்ற எண்ணம் பூரணியினுள்
“அண்ணே அம்மா எங்க”
“அதோ மொத வரிசையில இருக்கு பாரு வா நான் வரேன்”
“வேணாம் நான் பாத்துக்கிறேன் நீ வாரயவியல பாரு” என்றபடியே உள்ள வர
“அண்ணே வா வா ஏன் இம்புட்டு நேரம் வா நங்கையா உள்ளாற வாங்க” என்றபடி இவர்களை தாண்டி சென்று தன் அண்ணன் அண்ணியை அழைத்தார் பார்வதி
“அதானே இவங்களாவது மார்றதாவது” என்றபடி வாங்க நாம உள்ள போலாம் நகர பார்க்க
“அழைக்காத விருந்தாளிகளே நேரத்தோட வந்தாச்சு இவத்தைக்கு இருந்துட்டு நீ ஏன் இன்னேரம்?” பார்வதி இவர்களை வைத்துக் கொண்டே வினவ
“நீ தான அம்மிணி சொன்ன வந்தா பொழுதாயிடும் முக்கியமான சோலி இருக்குன்னு நானு முந்தானா நாத்து நடவுக்கு ஆள் வரச்சொல்லியிருந்தேன் அவன் இன்னிக்கு தான் ஆள் கூப்டாந்தான். அதான் கோழிகூப்ட வேலைய முடிச்சிபோட்டு இம்புட்டு வெரசா ஓடியார்றோம் நீ என்ன கண்ணு இப்பிடி சொல்ற” என பார்வதியின் அண்ணன் பரமசிவம் கூற
“செரி செரி ஆமா என்ற மருமவ எங்க”
“அவளுக்கு இன்னிக்கு ஏதோ பரிட்சையாம் காலேஜ் போயிட்டா” பார்வதியின் அண்ணி சாந்தி கூற
“ஆமா ஆமா அவளுக்கு வேற வேலவெட்டி இல்லியா என்ன மத்தவியலாட்டம் எங்க போனாலும் வயசுபிள்ள கூட்டிட்டு போனா நல்லாவா இருக்கும் சரி சரி உள்றா வாங்க” என அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல
“இதுக்கு தான் சொல்லறது இங்கெல்லாம் வரவேண்டாம்னு” இளா எரிச்சலில் கத்த
“இளா மா நம்மள உதாசீனப்படுத்திற இவங்க ஒருத்தரை விட நம்மள எதிர்பார்த்து காத்திட்டிருக்க நம்ம உறவுகளுக்குகாக தான் நாம வந்தது” பூரணி சமாதானப்படுத்தினார்.
“ம்ப்ச் , சலிப்புடன் போ மா நீ” என்றவள் தந்தையை காண
“விடுடா கண்ணா அவாய்ட் தீஸ் சில்லி திங்ஸ் வா மலரும் உங்க அம்மாச்சியும் வெயிட்டிங் வா போலாம்”
மூவரும் மேடை அருகில் செல்ல
“இளாகுட்டி”
“அம்முச்சி எப்படி இருக்கீங்க”
“இந்த கிழவிய இன்னும் நினைப்புல இருக்குதாத்தா உனக்கு”
“என் அம்முச்சிய நான் எப்படி மறப்பேன்”
“பொறவு என்னிய ஒருவாட்டி கூட வந்து பார்க்கலயே ஆத்தா”
“வர்றமாதிரியா மா சூழ்நிலை இருந்திது” பூரணி கேட்க
“பூரணிம்மா நல்லா இருக்கியாடா, மாப்பிள்ளை சௌக்கியங்களா”
“அதெல்லாம் சௌக்கியந்தானுங்க நீங்க”
“இருக்கேனுங்க என்ற பேத்தியாளுக்கு அந்த சாமி ஒரு நல்ல வழி காட்டிபோட்டா போதும் நானு அக்கடானு போயிடுவேன்”.
“ஏம்மா உன் கொள்ளு பேரன் பேத்திய கொஞ்ச உனக்கு ஆசயில்லயா”
“அடி எவடி இவ கூறுகெட்டவ என்ற கொல தெய்வத்த கொஞ்ச எனக்கு கசக்குதா ஆனா உடமபட்டவீக ஒத்துக்கனுமே” பேத்தியை பார்த்துக்கொண்டே கோமதி கூற
இதுக்கு தான் நீ என்னையும் கூட்டிட்டு வந்தியா என்ற இளாவின் பார்வைக்கு
“அது இளா மா அங்க பாரு மலரு கூப்பிடுறா நீ போ நான் பின்னாடியே வர்றேன்” பூரணி இளாவை துரத்த
தாயை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே மலரிடம் சென்றாள்.
“மலரக்கா எப்பிடி இருக்கீங்க குட்டி எப்படி இருக்கான் என்ன சொல்றான் என் தங்க பட்டு” என கேட்ட இளாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை காணவே அவளையும் கண்டிப்பாக அழைத்து வரும்படி பூரணியிடம் கூறியிருந்தாள் மலர்.
“என்னக்கா அப்பிடி பாக்குறீங்க”
“என் பழைய இளாவ இப்ப பாத்தேன்”
சட்டென இளாவின் முகம் கசங்க
“இளாம்மா” மலரின் அழைப்பில்
முயன்று தன் முகத்தை சாதாரணமாக் வைத்துக் கொண்டாள் இளா.
“மாமா எங்க அக்கா ஆளே காணோம்”
“யாரோ தாயம்மா னு ஒரு பாட்டி தான் முதல்ல வளையல் அடுக்கணுமாம். அவங்களை கூப்பிட்டு வர தமிழ் தம்பி போய் ரொம்ப நேரமாச்சு இன்னும் காணோம்னு மாமா பாக்க போயிருக்காரு”
“ம்க்கும் ஒரு வேலை உருப்படியா செய்யறது இல்லை எல்லாத்தையும் சொதப்புறது. ஆனா பேரு மட்டும் தமிழ் குமரனாம்”
“ம்ச்ப் இளா” என மலர் கடியும்போதே
“அண்ணி இந்த பேர் கூட என் அப்பாரு வெச்சதுதான் நான் வெக்கல” என்ற குரலில் தூக்கி வாரி போட நிமிர்ந்தாள் இளா
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு நடக்கும் சந்திப்பு இருவரின் கண்களும் ஒன்றையொன்று சந்திக்க ஒன்றில் கோபம்! மற்றொன்றில் ஆதங்கத்துடன் குற்றச்சாட்டும் பாவம்!!
ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு எண்ணங்கள் யாருடையது நடக்கும்?….
யார் தடுப்பவர்?
யார் நடத்துவார்?
இருவரின் கண்களை சந்திக்க வைப்பது இறைவனின் நாடக லீலை!!!
இடையினில் வருகின்ற நன்மையும் தீமையும் மனிதர்கள் செய்கின்ற வேலை!!!!!
error: Content is protected !!