பள்ளியில் விபுதன், ஆரவ், யோகிதாவை சேர்க்க அனைத்து விவரங்களையும் ரசிகா செய்ய, தூரத்தில் காரில் இருந்து ஆதிரேயன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
இடைவேளை நேரத்தில் மாணவ, மாணவியர் வெளிய வர, தன்னுடைய லிது, நிது வாராங்களா? என ஆதி பார்த்துக் கொண்டிருக்க, அவனை கடந்து சென்ற காரிலிருந்து பருவதி இறங்கினாள்.
நேராக லிது, நிது வகுப்பிற்கு பருவதி செல்ல, ஆதி யோசனையுடன் காரிலிருந்து இறங்கினான். ரசிகாவும் அவள் அண்ணன் பசங்களும் அவனிடம் வந்தனர்.
சார், எல்லாமே முடிஞ்சது. திங்கட்கிழமை தான் பசங்களை பள்ளிக்கு ரெகுலரா வரச் சொல்லி இருக்காங்க என்று அவள் சொல்ல, ஆதியின் கவனம் குழந்தைகளின் வகுப்பின் பக்கம் சென்றது. அவர்களின் ஆசிரியை வெளியே வர, ஆதி வேகமாக வகுப்பை நோக்கி நடந்தான்.
சார், என்னாச்சு? என்று ரசிகா, விபுதன், ஆரவ், யோகிதா ஆதி பின் வந்தனர். பருவதியும் வெளியே வருவதை கண்ட ரசிகா அப்படியே நின்றாள்.
அத்தை, மாம்ஸ் சொன்னாரு. இவங்க என்ன பண்றாங்க? விபுதன் கேட்க, “தெரியலையேடா!” என்று ரசிகா தயக்கத்துடன் நின்றாள்.
அத்தை, வா பார்க்கலாம் விபுதன் அழைக்க, ரசிகா அசையவேயில்லை. ஆதியுடன் பசங்களும் வந்தனர்.
ஆதி பருவதியிடம் செல்ல, லிதுவும் நிதுவும் வெளியே ஓடி வந்தனர். அவர்களை பார்த்து ஆதி நின்றான்.
இந்தா, “உன்னோட சாக்லெட்டை நீயே வச்சுக்கோ” என்று பருவதியிடம் தூக்கி போட்டனர் இருவரும். பிள்ளைகள் பருவதியிடம் நிற்பதை பார்த்து ரசிகாவிற்கு பயம் வந்தது. அவளால் நகர முடியவில்லை. ஆனாலும் மெதுவாக அவர்களை நோக்கி வந்தாள்.
பசங்க செய்கையில் ஆதி அவர்களிடம் வந்தான். லிதும்மா அவன் அழைக்க, சார் இவங்க திடீர்ன்னு வகுப்பிற்குள் வந்து உங்களை பொண்ணுங்களை அவங்களுடன் வரச் சொல்லி அழைத்து சாக்லெட் கொடுத்தாங்க என்றார் லிது, நிதுவின் ஆசிரியை.
எதுக்கு என்னோட பொண்ணுங்கள கூப்பிட்ட? என்று ஆதியின் டோன் கோபமாக மாறியது. பருவதி பற்றி அகரன், திரிவேஷ் சொல்லவும் அவளையும் விசாரித்து இருந்தான் ஆதி. அவள் ரசிகாவிற்கு பிரச்சனையாக இருப்பாள் என்று தான் தோன்றியது தவிர தன் பிள்ளைகளிடம் பேசுவாள் என்று அவன் நினைக்கவேயில்லை.
சார், சும்மா தான். வெளிய கூட்டிட்டி போகலாம்ன்னு தான் அழைத்தேன்.
நீ எதுக்கு என்னோட பிள்ளைகளை அழைச்சிட்டு போகணும்? என்று முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு ஆதி கேட்க, பருவதியும் கோபமானாள்.
ரசிகா தானே இவங்களை பார்த்துக்கிறா. அவளிடம் சொல்லி தான் என்று பருவதி விபுதனை பார்த்தாள்.
விபு நீ இங்கே என்ன செய்ற? பருவதி கேட்க, என்னோட அத்தை லிது, நிதுவை பார்த்துக்க உங்களை சொன்னாங்களா? அவன் கோபமாக கேட்டான்.
ஆமா, “அவள் தான் சொன்னாள்” என்று பருவதி சொல்ல, ரசிகா அவள் முன் வந்து நின்றாள்.
ரசி, இவள் என்ன சொல்றா? இவளிடம் போய் பிள்ளைகளை பார்த்துக்க சொன்னாயா? ஆதி கேட்க, பருவதி ரசிகாவை பார்த்து “ஆமா சொல்லு” என்று கண்ணால் முறைத்து சைகை செய்தாள்.
அவளை பார்த்து விட்டு, இல்லை சார். “பள்ளி நேரத்தில் எதுக்கு பசங்கள நான் அழைத்து சொல்ல போகிறேன்” என்று ரசிகா சொன்னாள்.
சார், இவள் தான் சொன்னாள். அதான் வந்தேன் என்று பிடிவாதமாக பருவதி சொல்ல, எனக்கு உன்னை பற்றியும் தெரியும். ரசி பற்றியும் தெரியும். உண்மையை சொல்லு என்னோட பசங்களை எதுக்கு நீ கூப்பிட்ட? ஆதி கேட்க,
சார், ஓவரா கத்தாதீங்க. அன்று பார்த்த போது உங்க பிள்ளைகளை எனக்கு பிடித்து விட்டது. அதனால் தான் அவர்களுடன் நேரம் செலவழிக்க அழைத்தேன்.
அதற்கு இதுவா மேம் நேரம்? ஆசிரியை கேட்க, ஏன் இவள் அழைத்தால் விடுவீங்க தான? என்று ரசிகாவை வைத்து பருவதி கேட்க, ஆதி கோபமாக படிக்கிற நேரத்துல பிள்ளைகளை அழைக்க உன்னை போல் ரசி பைத்தியம் இல்லை என்றான்.
இவளுக்கு நீங்க இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க? பார்த்து. உங்களோட முதல் மனைவி போல் ஆகி விடாமல் என்றாள். ஆதி கோபமுடன் அவளை நெருங்கி அடிக்க கையை ஓங்கினான்.
சார், விடுங்க என்று ரசிகா அவனை தடுத்தாள். அவன் அமைதியாக பசங்களை பார்த்தான்.
பருவதி இருவரையும் பார்த்து முறைத்து விட்டு, லிது நிதுவிடம், உன்னோட அப்பா தான் உனக்கு அம்மா இல்லாமல் செஞ்சுட்டாங்க. “உன்னோட அம்மாவை கொன்றது உன் அப்பா தான்” என்று குழந்தைகளிடம் சொன்னாள்.
ரசிகா சினத்தில் பருவதியை அடித்து விட்டாள்.
ஹே யூ, நீ என் மேலேயே கையை வச்சுட்டேல்ல. நான் யாருன்னு காட்டுறேன் என்று பருவதி சொல்ல, ச்சீ வாய மூடு. இத்தனை வருசமா உன்னை ப்ரெண்டா நினைத்தோம் பாரு. எங்களுக்கு தான் அசிங்கமா இருக்கு.
த்ரீ, உன்னை பார்த்து பேசி, அவன் தொழிலை பற்றி பேச தான வந்தான். அவனை இப்படி கஷ்டப்படுத்த உனக்கு எப்படிடி மனசு வந்துச்சு? எத்தனை வருசமா நண்பர்களாக இருக்கோம்.
சின்ன பிள்ளைகளிடம் பேசுற பேச்சாடி இது? எதுவுமே தெரியாம சாரோட குடும்ப விசயத்தை நீ எப்படி பேசலாம்?
அட அட அட, ரசிகா உனக்கு இவ்வளவு கோபம் வருமா? இத்தனை வருடத்தில் இன்று தான் உன் கோபத்தை பார்க்கிறேன். கோபம் யாருக்காக? உன்னோட நண்பர்களுக்காகவா? இல்லை ஆதி சார் பசங்களுக்காகவா? இல்லை ஆதி சாருக்காகவா? என்று அவள் சீற்றமுடனும் எகத்தாளமாக வார்த்தை வந்து விழுந்தது.
என்னோட அத்தையை பற்றி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை. உன்னை பற்றி எல்லாமே எனக்கு தெரியும். நான் பேச ஆரம்பித்தேன். உனக்கு அசிங்கமாகிடும் என்று விபுதன் சத்தமிட்டான்.
சின்னபையனெல்லாம் இப்படி பேசலாமா? உன்னை அம்மா வளர்த்திருந்தால் இப்படி பேசி இருப்பாயா? பருவதி கேட்க ரசிகா கண்கள் கலங்கியது.
ஆமா, நீ உன்னோட அம்மா வளர்ப்பு தான? அப்புறம் என்ன கேவலமாக கம்பெனிக்காக எவனுடன் சுத்துற? சுத்த மட்டும் தான் செய்வாயா? இல்லை எல்லாமே செய்வாயோ? விபுதன் கேட்க, பருவதிக்கு அசிங்கமானது.
விபு, என்ன பேசுற? ரசிகா சத்தமிட்டாள்.
அத்தை, நீ அமைதியா இரு. திரிவேஷ் அண்ணாவை வெளியே அனுப்பினாளே? இவள் கம்பெனி ஷேருக்காக எல்லாமே செய்வா. நீ அவளிடமே கேளு என்று விபுதன் சொல்ல, திகைத்து ரசிகா, ஆதி மற்றவர்கள் அவனை பார்த்தனர்.
“உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்று கோபமாக விபுதன் கழுத்தை பருவதி பிடிக்க, ஆதி அவளை தள்ளி விட்டு “செக்யூரிட்டி” என்று கத்தினான்.
“வெளிய போம்மா” என்று அவர் பருவதியை வெளியே தள்ளினார்.
ஏய், “ரசி உங்க யார் வாழ்க்கையிலும் இனி சந்தோசமே இருக்காது” என்று அவள் கத்திக் கொண்டே சென்றாள்.
செக்யூரிட்டி எதுக்கு போட்டிருக்கோம் மேம்? என்று பிரின்சிபில் மேம்மிடம் கத்தினான் ஆதிரேயன்.
சாரி சார், அவங்க பெரிய இடத்து பொண்ணு. அதனால் பயத்தில் விட்டுருப்பார் என்று பிரின்சிபில் மேம் சொல்ல, ஆமா சார், என்னை மன்னிச்சிருங்க. வேலைய விட்டு தூக்கிறாதீங்க என்று அவர் அழுதார்.
சரி, “இந்த மாதிரி இடையிலே யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது” என்று ஆதி சொல்லி விட்டு தன் குழந்தைகளை பார்த்தான்.
லிதுவும் நிதுவும் ரசிகாவிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டனர். ஆதி கண்ணீருடன் நிதுவை அழைத்தான். அவர்கள் ரசிகா பின் நின்று ஆதியை எட்டிப் பார்த்தாள். ஆதி மனம் உடைந்து அவர்களை பார்த்தான்.
சார், கொஞ்ச இருங்க என்று லிது நிதுவை தனியே அழைத்து சென்று, “அம்மா இல்லாமல் அப்பாவும் கஷ்டப்படுவார். அவர் கொலையெல்லாம் செய்ய மாட்டார். உங்க அப்பா எப்படி இளவரசிகளின் அம்மாவை கொலை செய்வார்?” ரசிகா கேட்டாள்.
ஆனால் அம்மாவை அப்பாவுக்கு பிடிக்காதுல்ல. அதனால தான் அம்மாவை பற்றி பேசினாலே கோபப்படுவார் என்று லிது கேட்க, அப்படியில்லைடா. தப்பு செய்றவங்க மேல கோபம் இருக்கும்ல்ல. அந்த கோபம் தான்டா உன் அம்மா மேலே அப்பாவுக்கு.
அம்மா, தப்பு செஞ்சாங்களா? நிது கேட்க, ம்ம்..ஆனால் உன் அம்மா அவங்க செய்த தப்பை திருத்திக்கலை. அப்பாவும் எவ்வளவு தான் பொறுமையா இருப்பார். அதான் அம்மா மேல கோபம்.
கோபப்படும் அனைவரையும் எல்லாரும் கொல்ல மாட்டாங்க செல்லங்களா?
“அப்பாகிட்ட பேசுங்க” ரசிகா சொல்ல, லிதுவும் நிதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வகுப்பறைக்கு சென்றனர்.
மேம், “நீங்க பார்த்துக்கோங்க” என்ற ரசிகா ஆதியை அழைத்தாள். அவன் கண்ணீருடன் நின்றான். பள்ளியில் அனைவரும் நடந்ததை பார்த்தனர்.
“லிது, நிது அப்பா அம்மாவை ஏதும் செய்யலை. அடுத்தவங்க சொல்றதை நம்பாதீங்க. உங்களுக்காக அப்பா இங்கே தான் இருப்பாங்க. நீங்க வந்து பேசிய பின் தான் அவர் வேலைக்கு கிளம்புவார்” என்று ரசிகா கத்தினாள். இருவரும் அவளை திரும்பி பார்த்து விட்டு அழுது கொண்டே உள்ளே சென்றனர்.
“சாரி சார்” என்று பிரின்சிபில் சொல்ல, மேம்..மேல பசங்க சண்டை போட்டுகிட்டு இருக்காங்க என்று ஆசிரியை ஒருவர் கூற, பீ.டீ சார் வேகமாக ஓடினார். கண்ணை துடைத்துக் கொண்டு ஆதி, “வாங்க மேம் என்னன்னு பார்க்கலாம்” என்று ஆதி பிரின்சிபிலை அழைத்தான்.
சார், இதை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கிளம்புங்க. பசங்களை வீட்டில் வைத்து சமாதானப்படுத்துங்க. கவனமா பேசுங்க சார் என்று பிரின்சிபில் மேம் சொல்ல, இருக்கட்டும் மேம். வாங்க பார்க்கலாம் என்று ஆதி செல்ல,
பிரின்சி மேம் ரசிகா அருகே வந்து, அந்த பொண்ணு கிளாஸ்ல தான் ஆதி சார் தங்கையும் படிக்கிறா? பசங்க ஏதாவது அவரை சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நீயும் கூட வர்றீயாம்மா? அவர் கேட்க, “விபு நீ ஆரவ், யோகியை பார்த்துக்கோ” என்று ரசிகா சொல்ல. “அத்தை நாங்களும் வாரோம்” என்று விபுதனும் தன் தம்பி, தங்கையுடன் சென்றான்.
சொன்னால் கேட்க மாட்டானே? என விபுதனை திட்டிக் கொண்டு ரசிகாவும் பிரின்சி மேம்முடன் சென்றாள்.
ஆதி வகுப்பை அடையவும் மெல்லினாவை பார்த்து திகைத்து நின்றான். அவள் தலை கலைந்து கோபமாக நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்த ஒருவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். மெல்லினா அருகே மித்திரனின் பக்கத்து வகுப்பு தோழர்களும் நின்றிருந்தனர். பசங்களும் சட்டை களைந்து வாய், நெற்றியில் காயத்துடன் இருந்தனர்.
மெல்லி..ஆதி அழைக்க, ஓடி வந்து மெல்லினா அவனை அணைத்துக் கொண்டு, “அண்ணா, நீ கொலை பண்ணலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க” என்று அழுதாள்.
ஆமா சார், இவனுக மெல்லினாவை கேலி பண்ணாங்க. சத்தம் கேட்டு தான் இங்கே வந்தோம் என்று மித்திரனின் பக்கத்து வகுப்பு தோழன் சொன்னான்.
சார், நீங்க தான் முன்னாடியே வந்தீங்க? என்னன்னு பார்க்கலையா? ஆதி பீ.டீ சாரை பார்த்து கேட்டான்.
நான் முன்னமே வந்துட்டேன். நான் வரும் போது உங்களுடைய தங்கை தான் அந்த பையனை அடித்துக் கொண்டிருந்தார். மெல்லினா அவளுடைய மேம் சுரேகாவை பார்த்தாள்.
ஆதி சார், வருண் தான் முதலில் நீங்க கொலைகார அண்ணன்னு பிரச்சனையை ஆரம்பித்தான். அதனால் கோபத்தில் அவள் அடிக்க, இவனும் என்று ஆதியை பார்த்து தயங்கிய சுரேகா, ரசிகாவை பார்த்து, “ரசி வருணும் மெல்லினா முடியை பிடித்து இழுத்து அடித்தான். அதனால் தான் பசங்களுக்குள் சண்டை வந்தது. தடுக்க சென்ற என்னையும் தள்ளி விட்டுட்டாங்க” என்று சுரேகா சொன்னாள்.
விபுதனும் அங்கே வந்தான். அவனை பார்த்த மெல்லினா மெதுவாக ஆதியிடமிருந்து ரசிகா பின் வந்து மறைந்து நின்றாள்.
வருண், “இங்க வா” என்று பிரின்சிபில் அழைக்க, மேம் நான் எதுவும் செய்யலை. என் அப்பாவை உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன் என்று அவன் சொல்ல, ஆதி கோபமாக அவனை முறைத்தான்.
ஆதியை பார்த்த ரசிகா, “சார் அமைதியா இருங்க” என்று சுரேகாவையும் பிரின்சிபில் மேம்மையும் அழைத்து தனியாக பேசினாள்.
ஆனால் அந்த வருண் மீண்டும் ஆதியை பார்த்து, உங்க வொய்ப்பையே நீங்க கொலைபண்ணி இருக்கீங்க? உங்களை பணத்துக்காக ஏதும் செய்யாமல் விட்டுட்டாங்களா? என்று கேட்டான்.
“வாய மூடிக்கிட்டு இருடா” மெல்லினா சத்தமிட, விபுதன் வகுப்பறைக்குள் வந்தான். யோகி வருணிடம் வந்து, நீ மெல்லியை அடிச்சேல்ல. இரு என்று யோகி எதையோ தேட, யோகி என்ற சத்தமிட்ட விபுதன், ஆதியிடம் வந்து, இவர் கொலை செய்திருந்தால் ரிப்போர்ட்டில் தெரிந்திருக்குமே? ஆனால் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
யாரோ ஒருவர் சொன்னதால் நீ இப்படி பேசுன? உனக்குன்னு சொந்தமா மூளையே இல்லையா? விபுதன் கேட்க, ஏய் “என் அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன்னு பாரு” வருண் சொல்ல,
ஆதியிடம் மாமா, இவன் என்ன சின்னப்பிள்ளைத் தனமா அவன் அப்பாவையே அழைத்துக் கொண்டிருக்கிறான் என்ற விபுதன்..சரி நானும் சொல்கிறேன்.
எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. இவன் யார் என்ன சொன்னாலும் நம்புவானாம். சோ..என்று விபுதன் மெல்லினாவிற்கு உதவிய பசங்களை பார்த்தான்.
வருணுக்கும் நிஷாவிற்கும் எல்லாம் முடிந்தது. வருண் நிஷாவை ஏமாற்றிக் கொண்டிருக்கான். ஏன்னா வருண் அவன் அப்பாவோட பார்ட்னர் பொண்ணுடன் நிஷாவை ஏமாற்றி பார்ட்டிக்கு போனான். அந்த பொண்ணிடம் நிஷாவை கழற்றி விடுவதாக சொன்னான் என்று மித்திரனின் நண்பன் உரைக்க, அப்பொழுது வருணை தடுக்க வந்த நிஷா இதை கேட்டு விட்டு அழுது கொண்டே ஓடினாள்.
நிஷா..நில்லு என்று செல்ல இருந்த வருண் கையை பிடித்து, இப்ப எப்படிப்பா இருக்கு? விபுதன் கேட்க,
என்ன விபு, அவனே நிஷாவை ஓ.கே பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டான். இப்பொழுது இனி வருண் அவளை நினைத்து கூட பார்க்க முடியாதே? என்று கிண்டலாக மெல்லினா கூறினாள்.
மெல்லி, இவனை பழி வாங்குவது இருக்கட்டும். அந்த பொண்ணு? என்று விபுதன் கூற, “அய்யோ ஆமா” என்று மெல்லினாவும் அவளது வகுப்பில் படிக்கும் பொண்ணுங்களும் வெளியே சென்று பார்த்து, “அண்ணா, நிஷாவை காணோம்” என்று ஆதியிடம் வந்தனர்.
அதே நேரம் நிஷா பிரின்சி மேமுடன் பேசிக் கொண்டிருந்த ரசிகா, சுரேகாவை கடந்து அழுது கொண்டே ஓடினாள்.
நிஷா, எங்க ஓடுற? என்று சுரேகா அவள் பின் செல்ல, மற்றவர்களும் அவள் பின் சென்றனர். ஆதியை ரசிகா சத்தமிட்டு அழைக்க, எல்லாரும் நிஷா பின் சென்றனர். அவள் பள்ளியின் உச்சியில் வந்து நின்றாள். ஆறடுக்கு மாடியின் உச்சியில் நிஷா நிற்க, ஏய் என்ன பண்ற? சுரேகா பதட்டமாக கேட்டாள்.
மேம் என்று பயத்துடனும் அழுகையுடன் நிஷா விளிம்பில் நிற்க, ஆதி பசங்க எல்லாரும் வந்தனர். வருணை பார்த்து, நீ எல்லாரிடமும் திமிறா நடந்துக்கிறன்னு மட்டும் தான் நினைச்சேன். நீ என்னை ஏமாத்துறேல்ல..என்று கண்ணீருடன் அவள் அழுதாள்.
இல்ல நிஷா, “நான் உன்னை ஏமாத்தலை” என்று விபுவை பார்த்து “சொல்லுடா” என்று சத்தமிட்டான் வருண். விபுதன் அமைதியாக இருந்தான்.
ஏம்மா, “உன்னோட பெற்றோரை நினைச்சு பாரும்மா” ஆதி சொல்ல, நிஷா பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
நம்பு நிஷா, நான் உன்னை இப்ப இல்ல எப்போதுமே ஏமாற்ற மாட்டேன். கீழ இறங்கி வந்துரு. சொல்லுடா என்று விபுதன் சட்டையை பிடித்து உலுக்கி வருண் அழுதான்
நிஷா கால்கள் தடுமாற அவள் கீழே விழாமல் ரசிகாவும் சுரேகாவும் பிடித்தனர். பசங்க எல்லாரும் ஓடி வர, இருவர் கையையும் பிரண்டி விட்டாள் நிஷா. இருவரும் கையை விட, நிஷா கீழே விழ, வருணும் மேலிருந்து குதித்து, அவள் கையை பிடித்தான். அவன் காலை பிடித்து ஆதி இழுக்க, விபுதன் உச்சியில் ஏறி ரசிகாவை பார்த்தான்.
விபு, வேண்டாம் என்று ரசி கண்ணீருடன் தலையசைத்தாள். மெல்லினா கண்ணில் நீர் கோர்த்தது. அண்ணா என்று ஆரவ்வும் யோகியும் அழுதனர்.
கீழிருந்து பீ.டீ சார் ஆதியிடம்,” சார் பசங்களை விடுங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்று சொல்ல, மாமா வேண்டாம் விட்றாதீங்க. அவங்களுக்கு நேராக இரும்புக் கம்பி இருக்கு. விட்றாதீங்க என்ற விபுதன்,..
சார், உங்க கையிலிருக்கும் கயிற்றை என்னிடம் தூக்கிப் போடுங்க. அவங்களை என் பக்கம் நான் மாற்றி விடுறேன். பின் நீங்க காப்பாற்றுங்க என்று பீ.டீ சாரை பார்த்து விபுதன் கூறினான்.
ஆதியால் பிடிக்க முடியவில்லை. நிஷாவாலும் முடியவில்லை. சார் சீக்கிரம் போடுங்க என்று அவர்களை பார்த்துக் கொண்டே விபுதன் கத்தினான்.
அவர் தூக்கிப் போட, இதை அந்த கம்பியில் கட்டுங்க என்று விபுதன் அந்த கயிற்றை இறுக்கமாக பிடிக்க, பசங்க கட்டியவுடன் விபுதன் கீழே குதித்தான். அனைவரும் எட்டிப் பார்த்தனர்.
வருண், நிஷாவுடன் சேர்த்து கயிற்றை பிடிடா..என்று வகுப்பறையின் பின் பக்க ஸ்லாப் மேலே நின்று கொண்டு விபுதன் கயிற்றை வருணிடம் போட அவனால் பிடிக்க முடியவில்லை.
நிஷா, நீ வருணை விட்டு கயிற்றை பிடி. அவனை மாமா காப்பாற்றி விடுவார் என்றான் விபுதன்.
ஆமாம்மா, “அவனை விட்டு கயிற்றை பிடி” பீட்டீ சாரும் சொல்ல, அவளும் வருணை விட்டு கயிற்றை பிடித்தாள். வருணை ஆதி மேலே தூக்கினான்.
நிஷா கயிறு அவிழ, பசங்க எல்லாரும் அக்கயிற்றை பிடித்தனர். பசங்களையும், நிஷாவையும் பார்த்த விபுதன், “சார் தயாரா இருங்க” என்று கத்திக் கொண்டே “கயிற்றை விடுங்கடா” என்றான். அவர்களும் விட, நிஷா கீழே விழுந்தாள். சார்..சீக்கிரம் விபுதன் கத்த, அவர்களின் பள்ளிப் பேருந்தின் மேலே அனைத்து ஆசிரியர்களும் நின்றனர்.
எல்லாரும் சேர்ந்து விரிப்பு ஒன்றை திறக்க, அது விரிந்தது. ஆசிரியர்கள் அதை இறுக்கமாக கைகளுக்கு வலு கொடுத்து பிடித்தனர். நிஷா பாதுகாப்பாக அதனுள் விழுந்தாள். அவளை பாதுகாப்பாக இறக்கினர்.
கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் லிதுவும் நிதுவும் இருப்பதை கண்ட விபுதன், லிது நிது…என்று கையை ஆட்டிக் கொண்டு, உங்க அப்பா உதவியதை பார்த்தீங்களா? அவர் எப்படி உங்க அம்மாவை கொன்றிருப்பார்? கொலைசெய்வன் யாருக்கும் உதவ மாட்டான் என்று கத்தினான் விபுதன்.
குழந்தைகள் அழ, ஆதியும் மற்றவர்களும் கீழே ஓடி வந்தனர். ஆதியை பார்த்து லிது, நிது அணைத்து அழுதனர்.
எல்லாரும் ஆதியையும் பசங்களையும் பார்க்க, மெல்லினா மட்டும் விபுதனை எட்டி பார்த்துக் கொண்டே நின்றாள்.
ஏய், என்ன வேடிக்கை பாக்குற? “அந்த கயிற்றை பிடித்து இழு” என்றான்.
நானா? அப்புறம் அதுக்கு ஆளா போட முடியும்? விபுதன் கேட்க, “நண்பா நாங்கள் வந்துட்டோம்” என்று மித்திரன் நண்பர்கள் விபுதனுக்கு உதவ அவன் மேலே வந்தான்.
வருண் நிஷாவை பார்த்து அழுது கொண்டே நின்றான்.
“சாரிடா” என்று நிஷா அவனிடம் வர, அவள் பெற்றோர் அங்கு வந்து அவளை அழைத்து சென்றனர்.
வருண் பாவமாக நிற்க, விபுதன் அவனிடம் வந்து காதலிக்கிறியா? இல்லையாடா? அவ போறதை பார்த்துக்கிட்டே நிக்கிற? அவளோட குடும்பத்தை கரெக்ட் பண்ண வேண்டாமா? ஓடு என்றான்.
ஆதியை பார்த்து, சாரி சொல்லி விட்டு, விபுதனை அணைத்து “தேங்க்ஸ்” சொல்லி விட்டு அவன் ஓடினான்.
ஏய், பள்ளி இன்னும் முடியல? எங்க போற? என்று பீட்டி சார் கத்த, விபுதன் கேசுவலாக, சார் அவன் முடிச்சிட்டு வந்திருவான் என்றான்.
எங்கிருந்துடா வந்த? அவர் கேட்க, “சிங்கார சென்னை தான் என் ஊரு..விபுதன் தான் என் பேரு” என்று அவன் சொல்ல, லிதுவும் நிதுவும் அவனிடம் ஓடி வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டனர்.
ஆஹா, அத்தை இதுக்காகவே ரிஸ்க் எடுக்கலாம் போல? விபுதன் சொல்ல, ரசிகா அவனை அடிக்க வந்தாள். ஆதி அவளை தடுத்து விபுதனை கட்டிக் கொண்டான் கண்ணீருடன்.
அப்பாடா, “பிரச்சனை முடிந்தது” என்று மெல்லினா வந்து நின்றாள்.
எல்லாத்தையும் ஆரம்பித்து விட்டு, என்ன சொல்றா பாரு? என்று ரசிகா சொல்ல, ரசி அண்ணாவை எப்படி பேசினான்? சும்மா விடுவேனா? என்றாள் அவள். அனைவரும் சிரித்தனர்.
அனைவரும் வகுப்பிற்கு செல்ல, ஆதி, ரசிகா, விபு பசங்களுடன் வீட்டிற்கு சென்றனர்.
அன்றிரவு எல்லாரும் தூங்க சென்ற பின் மெல்லினா மெதுவாக அகரனை சந்திக்க வந்தாள். கதவு திறந்து இருந்தது. தமிழரசன் தூங்குவதை பார்த்துக் கொண்டு அகரனிடம் வந்தாள். அவனும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
அகரா..என்று அவனை மெதுவாக தட்டி எழுப்பினாள். ஏய், இப்ப இங்க என்ன பண்ற? அவன் சத்தமிட தமிழரசன் விழித்தார். ஆனால் ஏதும் தெரியாதது போல் கவனிக்க ஆரம்பித்தார்.
ஷ்..என்று அவன் வாயை அடைத்து, என்ன பிளான் வச்சிருக்க? என்று மெல்லினா கேட்டாள்.
பிளானா? என்ன பிளான்? அகரன் கேட்க, டேய், நான் சொல்லிட்டு தான போனேன். விபுவை காதலிக்க வைக்க என்ன செய்யணும்? சொல்லு? எனக் கேட்டாள்.
சொல்லவா? “அவனை பார்த்து நேராகவே சொல்லிடு” என்றான் அகரன்.
இது எனக்கு தெரியாதா? “எனக்கு அவனை பார்த்து காதலை சொல்ல முடியாமல் தான உன்னிடம் நிற்கிறேன்” என்றவுடன் அகரன் முகம் சுருங்கியது.
“மனசுல இருக்குறத கடிதமா எழுதி கொடுத்திரு” என்றான் அகரன்.
அய்யோ, என்னால முடியாது. வேற ஏதாவது சொல்லு.
இப்ப முடியாது. நாளைக்கு பார்க்கலாம் என்று அவன் கையில் மெல்லினா பணத்தை திணிக்க, ஏய் நில்லு, என்ன இது? அகரன் கோபமானான்.
பணம், உனக்கு தேவைப்படுமே? என்றாள்.
“எனக்கு இது தேவையில்லை” என்று அவளை அழைத்து அவள் கையில் திணித்தான்.
அப்ப, உனக்கு என்ன வேணும்? மெல்லினா கேட்க, எனக்கு தேவையானதை உன்னால் செய்ய முடியாது. நீ கிளம்பு. நாளை மாலை பேசலாம். இரவு என் அறைக்கு வராதே என்றான்.
அகரா, என் மேல கோபமா இருக்கியா? ப்ளீஸ் டா…கோவிச்சுக்காத. விபுவிடம் நீ என்னை சேர்த்து வச்சிட்ட. இப்ப சொன்னீயே? என்னால முடியாதுன்னு அதையே உனக்கு செய்கிறேன் என்றாள்.
விரக்தி புன்னகையுடன், “போ..கிளம்பு” என்று அகரன் படுத்துக் கொண்டான்.
அவள் செல்லவும் தமிழரசன் எழுந்து அமர்ந்தார். அகரா..நீ மெல்லியிடம் சொல்லலாம்ல்ல. இது உனக்கு கஷ்டமா இல்லையா? தமிழரசன் கேட்டார்.
எல்லார் காதலையும் சேர்த்து வைத்த என்னால என் காதலை சொல்லும் வாய்ப்பு கூட கிடைக்காது. கிடைத்தாலும் சொல்ல முடியாது என்று கண்ணீருடன் படுத்தான். தமிழரசனும் அவனை நினைத்து கவலை கொண்டார்.
ஆதி அறைக்கு சென்ற ரசிகா, ஆதி என்று அவனை பெயர் சொல்லி அழைத்தாள்.
ரசி, என்னை பெயர் சொல்லியா அழைத்த? என்று எழுந்து அமர்ந்தான்.
ஏன் அழைக்கக்கூடாதா? ரசிகா கேட்க, நீ அழைக்கலாம் “மை ப்ளாக் மூன்” என்றான் ஆதி.
நீங்க ஓ.கே தான? ரசிகா கேட்க, இல்ல ரசி, பசங்க என்னை வெறுத்துடுவாங்களோன்னு ரொம்ப பயந்துட்டேன் என்று ஆதி அழுது கொண்டே ரசிகாவை அணைத்தான்.
ரசி, அவளை பற்றி நல்லது எதுவுமே தெரியாதே? ஆதி சொல்ல, இருக்கு ஆதி என்றாள் ரசிகா.
ரசி, என்ன சொன்ன? ஆதி கேட்டான்.
ஆதி எனக்கு உங்க மனைவி இலக்கியாவை தெரியும். நாங்க ஒரே காலேஜ் தான். அவங்களிடம் பேசி இருக்கேன். என்னோட ஜூனியர் தான் என்றாள் ரசிகா.
ரசி, இலக்கியாவிடம் பேசி இருக்கிறாயா? உன்னை ஏதும் கஷ்டப்படுத்தினாலா? ஆதி கேட்க, எங்களது சந்திப்பு நல்ல விதமாக தான் ஆரம்பித்தது. ஆனால் போக போக அவள் சரியில்லைன்னு எனக்கு தெரிய வரவும் பேச்சையே நிறுத்திட்டேன் என்றாள் ரசிகா.
நல்ல விதமான சந்திப்பா? ஆதி கேட்க, ஆமா ஆதி, நான் தினமும் பேருந்தில் தான் அகரன், திரிவேஷூடன் செல்வேன். ஆனால் இருவரும் சினிமாவுக்கு போறோம்ன்னு விட்டு கிளம்பிட்டானுக. பேருந்தில் இருந்த ஒருவன் என்னை உரசிக் கொண்டும், பசங்க டீஸ் பண்ணிக் கொண்டும் வந்தனர். பேருந்து டிராபிக்கில் நிற்க, இவர்கள் செய்த அலும்பை பார்த்து, காரை விட்டு பேருந்தில் ஏறி எல்லாரையும் ஒருவழி செய்து, என்னையும் திட்டி விட்டு சென்று விட்டாள்.
மறுநாள் தான் இலக்கியா என்னோட ஜூனியர் பொண்ணுன்னு தெரிந்தது. அவளாகவே என்னிடம் வந்து பேசினாள். அகரன், திரிவேஷூடனும் பேசி இருக்காள்.
ஒரு நாள் பசங்களுடன் சேர்ந்து கிளப்பிற்குள் செல்வதை பார்த்தேன். அவளின் நடத்தை கொஞ்ச கொஞ்சமாக வேறுபட்டு தெரிந்தது. அவள் மது அருந்தினாள். பசங்களுடன் எல்லை மீறியது போல் நடந்து கொள்வால் என பேச்சு அடிபட்டது. ஆனால் என்று தயங்கி அவனை பார்த்து, நான் நேரிலே அவளை ஹோட்டலில் ஒருவனுடன் பார்த்தேன். அவன் யாரென சரியாக தெரியவில்லை.
அன்று ஹோட்டலுக்கு குடும்பமாக தான் போனோம். இவளை பார்த்ததும் பேசலாம் என நினைத்து அவள் பின் வந்தேன். ஆனால் அவள்..அதை பார்த்ததிலிருந்து அவள் பேசினாலும் சரியாக பேசவில்லை. திரிவேஷ் அவளிடம் பேச சென்றான். நான் அவனை தடுத்து, நானே பேசினேன். என் குடும்ப நிலையை சொல்லி, இனி பேச வேண்டாம்ன்னு சொன்னேன். அவள் பேசலை. ஆனால் அவ்வப்போது எங்கள் நால்வரையும் கவனித்துக் கொண்டே இருப்பது போல் தான் தெரிந்தது என்றாள்.
ரசிகா பேசியதை லிது, நிதுவும் இரு அறைக்குள்ளும் இருக்கும் கதவின் வழி கேட்டனர்.
நீயும் பார்த்தாயா ரசி? நானும் என் கண்ணால் நேரிலே பார்த்தேன் என்று ரசிகாவை அணைத்து தேம்பி தேம்பி அழுதான் ஆதிரேயன்.
சார், இதுக்கெல்லாமா அழுவது? விடுங்க ரசிகா சொல்ல, இப்ப தான ஆதின்னு பெயர் சொல்லி அழைத்த..அதுக்குள்ள சாரா? ஆதிரேயன் வினவ, ஆமா இப்படி அழுதால் எப்படி? அதுக்காக? என்று ஆதி அவளை பார்த்தான்.
எல்லாம் போகட்டும். பசங்களுக்காக அவளுடைய விசயத்தை மறந்திடுங்க. அவளுக்கு நல்ல குணம் இல்லாமல் இல்லை. தமிழப்பா அவளை கவனிக்காமல் விட்டதால் தான் பணம், அப்படி இப்படின்னு நடந்திருக்கா. வருத்தப்படாதீங்க.
அவள் அறையை சுத்தம் செய்து அவளது புகைப்படத்தை வைத்து சாமி கும்பிடுங்கள் என்று ரசிகா சொல்ல, ஆதி அவளை முறைத்தான்.
சொன்னா கேட்க மாட்டியா ஆதி? ரசிகா புன்னகையுடன் கேட்க, சரி உனக்காக செய்றேன்.
எனக்காக வேண்டாம். பசங்களுக்காக பண்ணனும். ஓ.கே வா? ரசிகா கேட்க, ஆதி புன்னகைத்துக் கொண்டே அவளை அணைத்தான்.
இவர்களை பார்த்த நிது, லிதுவிடம் அம்மா நல்லவங்களா? கெட்டவங்களா? எனக் கேட்டாள்.
தெரியல நிது. ஆனால் ரசி நமக்கு அம்மாவாக வந்தால் நல்லா இருக்கும்ல்ல? என்று கேட்டாள் லிது. ஆமா நம்ம பக்கத்துலவே இருப்பால்ல. ஜாலியா இருக்கும். ஆனால் பள்ளிக்கு போக சொல்வாளே? நிது கேட்க, பள்ளிக்கு போய் படித்தால் தான் அப்பா மாதிரி பெரிய ஆளாக வர முடியும் என்று லிது கூற, தலையசைத்தாள் நிது.
வா..தூங்கலாம். அப்பாவும் ரசியும் கண்டிப்பா நம்மை வந்து பார்க்க வருவாங்க. விழித்திருந்தால் அவங்க பேசியதை நாம கேட்டுட்டோம்ன்னு வருத்தப்படுவாங்க என்று லிதுவும் நிதுவும் கட்டிக் கொண்டு தூங்கினர்.
மறுநாள் விடுமுறையானதால் அனைவரும் வெளியே செல்ல வேண்டுமென மெல்லினா ஆதியிடம் கேட்டாள். எல்லாரும் ஆர்வமுடன் ஆதியை பார்த்தனர்.
“எனக்கு மீட்டிங் இருக்கு. என்னால அழைத்து செல்ல முடியாது” என்றான்.
அப்பா, ப்ளீஸ் என்றாள் நிது.
போகலாம். நான் பதினொரு மணிக்கு வாரேன். நாம போகலாம். ஆனால் தூரமாக கிடையாது. “உல்லாச உலகம்” நம்ம உதகையில புதுசா ஆரம்பிச்சி இருக்காங்க. தயாரா இருங்க போகலாம்.
நீங்க தராளமா போங்க பாஸ். ஆனால் மீட்டிங்கிற்கு ரசியையும் அழைச்சிட்டு போங்க என்று அகரன் சொன்னான்.
புரிஞ்சு தான் பேசுறியா அகரா? அவளை அங்கெல்லாம் அழைச்சிட்டு போக முடியாது.
நான் அருகே இருந்தாவாது நிம்மதியா இருப்பேன். நீங்க அந்த ரௌடி பயல பார்க்க போறீங்க. நீங்க தனியா போறது சரியா இல்லை அகரன் சொல்ல, அத்தை போக வேண்டாம் மாம்ஸ். நான் ஆதி மாமாவோட போறேன் என்றான் விபுதன்.
நோ, என்று ரசிகா விபுதனை முறைத்தாள்.
அத்தை, மாமா போனால் ஓ.கே வா? விபுதன் கேட்க, அவர் மாதிரி அமைதியா பேசுவார். நீ பேச மாட்ட. ரௌடி பயலுகன்னு அகரன் சொல்றான். நீ போனால் பிரச்சனையாகிடும் என்றாள் ரசிகா.
அத்த பிராபிஸ், நான் எதுவுமே பேச கூட மாட்டேன். சும்மா மாமாவுடன் போயிட்டு வந்திடுறேன் விபுதன் சொல்ல, நான் அவருடன் போயிட்டு வாரேன் ரசிகா சொல்ல, அத்த, நீ போகக்கூடாது. அது பாதுகாப்பு இல்லை விபுதன் சொல்ல, அதை அவரு பார்த்துப்பார். நீ வாயை மூடு ரசிகா சொன்னாள்.
முடியாது, நான் தான் போவேன் என்று விபுதன் எழுந்தான்.
நீ போகக்கூடாது. நான் தான் போவேன் இருவரும் சண்டை போட, ருச்சி நீ விபுவுடன் சண்டை போட்டுகிட்டு இருக்க அகரன் சொல்ல, எனக்கு தெரியும். வர வர சொல்ற பேச்சை கேட்கவே மாட்டேங்கிறான் ரசிகா சொல்ல, நீ சொல்றத கேட்க நான் என்ன சின்னப்பையனா? விபுதன் கேட்டான்.
அண்ணா, எதுக்கு ஆர்.கே ஓட சண்டை போடுற? ஆரவ் கேட்க, டேய் சும்மா இருடா என்று விபுதன், எழுந்து வாங்க மாமா கிளம்பலாம் என்று ஆதியிடம் வந்து நின்றான் விபுதன்.
ஆதி, வாங்க நாம கிளம்பலாம் என்று ரசிகா அவனிடம் வந்தனர்.
ஆதி இருவரையும் பார்த்து, யாருமே வர வேண்டாம். நானே போயிட்டு வந்துருவேன் என்று சொல்ல, அகரன் எழுந்து, வாங்க போகலாம் என்றான்.
இந்த நிலைமையில உனக்கு இது தேவையாடா? மெல்லினா அகரனை கேட்க, அவளை முறைத்து விட்டு, பாஸ் உங்களுக்கு யாராவது துணைக்கு வரணும். அப்ப தான் நான் வீட்ல இருப்பேன். இல்லை நானே வாரேன் என்றான்.
ஆதி சிந்தனையுடன், ரசிகா விபுவை பார்த்தான். விபு வா, நாம கிளம்பலாம் என்று ஆதி விபுதனை அழைத்தான்.
ஆதி, நான் வாரேனே? ரசிகா கேட்க, இல்லை..இல்லை..வாங்க மாமா. அத்தைக்கு வேற வேலையே இல்லை என்று ஆதியை நிற்க விடாமல் இழுத்து சென்றான் விபுதன். ரசிகா கோபமாக அமர்ந்தாள்.
ருச்சி, சும்மா கோபப்படாத. அங்க நிறைய ரௌடி பசங்க இருப்பாங்க. நீ போறது பாதுகாப்பு இல்லை. முதலில் திரிவேஷை தான் அழைத்தேன். பாஸ் தான் வேலை அவனுக்கு கொடுத்துருக்காரு. அவனால் வர முடியாததால் நம்பிக்கையான உன்னை அழைத்தேன். ஆனால் விபுவும் பிரச்சனை இல்லை. அவங்க பார்த்துப்பாங்க என்று அகரன் அறைக்கு சென்றான்.
மெல்லினா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அனைவரும் கலைந்து சென்ற பின் அகரன் அறைக்கு ஓடினாள் மெல்லினா.