“ஓஹ், மீட்டீங்” என்று மெல்ல லாலா கேட்க, அவளும் தலையசைத்தாள்.
“டீ?” என்று அவன் கேட்க,
“வேலை” என்று லேப்டாப்பைக் காட்டியவள், லாலாவிடம் சைகையால் ‘நீயே போடு’ என்றாள். அவனோ ‘நீயே பாரு’ என்று நினைத்தவன், அறைக்குச் சென்று வேறு சட்டை மாற்றினான். அவன் வெளியே வர, உதயா அவனிடம்
“டீ” என்று சைகையால் கேட்க,
“நான் பார்த்துக்கிறேன் மா, நீ பாரு” என்றவன் வெளியே டீ குடிக்க கிளம்பினான். அப்படியே அகாடெமிக்கும் சென்றான். அவனை போல் அவளுக்கும் ஓய்வும் ஒரு இடைவேளையும் தேவை என்ற சிந்தனையே அவனிடமில்லை.
உதயாவுக்கு அவ்வளவு கோபம், வருத்தம். ஆர்டர் போட்டால் கூட டீ வர அரை மணி நேரமாகும் என்று யோசித்து, சில நிமிடங்கள் பொறுத்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை. கணவன் தன்னை நினைக்காத கோபம், விடுதியிலிருந்திருந்தால் உடனிருக்கும் பெண்கள் டீ குடிக்க போனால், அவளுக்கும் எடுத்து வருவர். அவளும் அப்படியே! இது அவள் வீடு, அவள் கணவனை தவிர வேறு யாரிடம் அக்கறையை எதிர்ப்பார்ப்பாள்? அவன் வீடு வராமல் இருந்திருந்தால் வேறு.
உதயா யாரையும் எதிர்ப்பார்க்காதே என்று தன்னைத் தானே திட்டி, டீயும் குட்டி சமோசாவும் வரும் காம்போ பேக் ஆர்டர் செய்தாள். இரண்டு பேருக்கான டீ, அதன் விலையே நூறு ரூபாய்த் தொட்டது, தேவையற்ற செலவு என்று தோன்றினாலும் அவளுக்கென தேனீர் வைக்க தெம்பெல்லாம் இல்லை. இரண்டு நிமிடத்தில் கண்ணில் பட்ட ஆர்டரைப் போட்டுவிட்டு, மீண்டும் கணினித் திரையில் மூழ்கிப்போனாள் உதயா.
அரை மணி நேரத்தில் அவள் அலைப்பேசிக்கு அழைப்பு வர, தன் குழுவினரிடம், “ஐ வில் பி பேக் இன் ஃபைவ் மினிட்ஸ்” என்று செய்தி அனுப்பிவிட்டு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தாள். மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் இருந்ததில் காலும், இடுப்பும் வலியெடுத்தது. கதவருகே வந்து அவளின் ஆர்டரை வாங்கியவள் கதவை சாற்றினாள். ஓய்வறை சென்று முகம் கழுவி வந்தவள், டீயை ஊற்றிக்கொண்டு இரண்டு வாய்ப் பருகவும்தான் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதற்குள் அவளின் அலுவலக அழைப்பு அலறியது.
எரிச்சலோடு அதனை எடுத்தவள், டீயை ஓரமாக வைத்தாள். பத்து நிமிடம் அவளின் உயரதிகாரி அவளையும் அவள் குழுவையும் வேகமாக வேலை செய்ய சொல்லி உத்தரவிட, ஆறிப்போன டீயைக் குடித்தவள் இரண்டு சமோசாவை வாய்க்குள் போட்டுவிட்டு ஓன்பது மணி வரை வேலை செய்தாள். ஏழு மணி வரை வேலையென்றாலும், இப்படி ப்ராஜக்ட்டின் கடைசி நாட்களில் இன்னும் கூட நேரமெடுக்கும். எப்படியோ முடித்து உட்கார்ந்த இடத்திலேயே சாய்ந்தாள் உதயா.
பத்து நிமிடங்களில் லாலா வீடு வர, கதவைத் திறந்துவிட்டவளுக்கு இரவு உணவின் நினைவு வந்தது. காலை வைத்த சட்னியை சூடு செய்து, அவனுக்கு மூன்று தோசைகள் சுட்டு வைத்தாள். அவளுக்கு மதியம் வைத்த சோறு இருக்க, தக்காளி தொக்கை சூடு செய்தாள். லாலா குளித்து டீஷர்ட்டும் லுங்கியும் மாற்றிக்கொண்டு வந்தவன் பார்வையில் ஹாலிலிருந்த சமோசா பட்டது.
“அடடா சமோசா” என்றவன் அந்த பெரிய பையை எடுத்துப் பார்த்தான். கடையின் பெயரையும் விலையையும் பார்த்தவன்,
“ம்ம், ஐடி’ல வேலை பார்த்தா டீயைக் கூட ஆர்டர் பண்ணி வாங்கிடலாம். ஆனாலும் இவன் டீ’க்கு நூறு ரூபா மேல ஓவர்” லாலா சும்மா இல்லாமல் பேசிக்கொண்டு போக, உதயா எரிச்சலானாள். அவளே அவ்வளவு செலவு செய்துவிட்டோமே என்று நொந்திருக்க, கணவனோடு சண்டை வேண்டாம் என்ற எண்ணம் காணாமல் போனது.
அவள் வேலையில் உழைப்புக்குத் தகுந்த ஊதியமுண்டு. அதற்காக அவள் வேலையில் சிரமங்களே இல்லை என்பது போல் அவன் பேச கோபம் வந்தது.
“நீங்க டீ குடிச்சீங்களா?”
“ம்ம், கடையில குடிச்சிட்டு அப்படியே க்ளாஸ் போய்ட்டேன்மா” லாலாவும் இயல்பாக பதில் சொல்லிவிட்டு குட்டி சமோசாவை வாயில் போட்டுக்கொண்டான்.
“அப்போ நான் டீ குடிச்சேனா இல்லையானு கேட்க மாட்டீங்க?”
“நீங்க வீட்டுக்கு வந்தப்போ நான் உங்களை டீ போட சொன்னேன். நீங்க உங்க இஷ்டப்படி வெளியே போய்ட்டீங்க, அப்போ நான் வேற என்ன செய்றது?”
“டீ போட சொன்னியா? நான் நீ என்னை பார்த்துக்கனு சொன்ன நினைச்ச. சரி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு கடையில குடிச்சேன்” லாலா பொறுமையாக சொல்ல,
“ஓஹ், என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்? நீங்க க்ளாஸ் எடுத்துட்டு டயர்டா வர மாதிரி தானே நானும் வீட்ல வேலை செஞ்சு டயர்டா இருப்பேன். நீங்க வீட்ல டீ இல்லைன்னா வெளியே கடைக்குப் போய்ட்டீங்க, எனக்கு என்ன வேணும்னு கேட்டீங்களா? எனக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்திருக்கலாம். இந்த வீட்ல தானே நானும் இருக்கேன். நமக்குக் கல்யாணமாகிடுச்சு, ச்ச. அதை சொன்னா வேற சாருக்குக் கோவம் வந்திடும். உங்ககிட்ட எதிர்ப்பார்த்தது என் தப்பு” என்று தலையில் அடித்துக்கொண்டவளுக்குக் கண்கள் கலங்க, அழுகை வரப்பார்க்க அறைக்குள் போக நினைத்தாள்.
லாலா அறைக்குள் போன உதயாவின் கையைப் பற்றி,
“எனக்கு நீ சொன்னது புரியலடி. அப்படியே புரிஞ்சாலும் எனக்கு டீ போட தெரியாது. எப்பவும் வீட்ல பால் இல்லைன்னா நாங்க எல்லாம் வெளியே போய் குடிச்சுப் பழகிட்டோம். நிஜமா வேணும்னு பண்ணல” என்று பாவமாக லாலா சொல்ல, உதயாவோ
“நான் சொன்னது புரியல, இவளும் நம்மை மாதிரி வேலை செய்றா. டயர்டா இருப்பான்னு ஏன் தோணல. நீங்க அட்லீஸ்ட் எனக்கும் கடையில இருந்து டீ வாங்கிட்டு வருவீங்க நினைச்சேன். தண்டத்துக்கு நூத்தம்பது ரூபா செலவு, அதை குடிக்க கூட விடாம அந்த ஆள் போன் பண்ணி இம்சை பண்றான். நான் நினைக்கிறதுக்கு நீங்க என்ன செய்வீங்க, என் தப்பு. விடுங்க” என்று அவன் கையைலிருந்து தன் கையை விடுவிக்க பார்க்க, அவன் விடவில்லை.
“சாரிம்மா” லாலா கேட்க உதயாவுக்கு இருந்த களைப்பில் இன்னும் பேச தெம்பில்லை. மன்னிப்புக் கேட்பவனை வேறென்ன செய்ய, தலையசைத்தவள்
“பசிக்குது! நான் சாப்பிடப்போறேன்” என்றவள் சோறே சாப்பிட,
“எனக்குத் தோசை ஊத்திட்டு நீ மட்டும் ஏன் மதியம் வச்சதே சாப்பிடுற?” என்றான்.
“எனக்கு இன்னும் அஞ்சு நிமிசம் நின்னு தோசை ஊத்த எல்லாம் தெம்பில்லை” என்றவள் சாப்பிட ஆரம்பிக்க, லாலா அவன் தட்டிலிருந்து ஒரு தோசை அவளுக்கு வைத்தான்.
“ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்” என்று சொல்ல, உதயாவும் அமைதியாக உண்டாள்.
‘வாழ்க்கை எப்பவும் வாழையில வடை பாயாசம் வைக்கிற மாதிரி இருக்காது’ என்பது மட்டும் புரிந்தது. கல்யாணம் என்பது இருவர் சேர்ந்து இருப்பது என்று நினைத்திருக்க, அது இரு உலகம் சேருவது என்ற பாடத்தின் முதல்படி அவனுக்கு தெள்ளத்தெளிவாகப் புரிந்தது.
அவன் வீட்டில் அப்பாவோ, தாத்தாவோ டீ இல்லையென்றால் வெளியே குடித்துவிடுவார்கள். அதைத்தான் அவனும் செய்தான், வரும்போது பால் வாங்கி வருவார்கள். அம்மா அதற்கெல்லாம் சண்டை பிடித்ததில்லை. அப்பா டீ போட்டு பார்த்ததில்லை.‘பெருசுங்க மாதிரிதானே இருந்தேன். சரி சிறுசு கிட்ட கேட்போம்’ என்று முடிவெடுத்தான்.
உண்டு முடித்து அவனறைக்குச் சென்றவன் சக்திவேலுக்கு அழைத்தான்.
“டேய் சக்தி! உனக்கு டீ போட தெரியுமா?” என்று லாலா எடுத்துவுடனே கேட்க,
“டீயா? போடுவேனே” என்று சக்தி சொல்ல, லாலா வசை பொழிந்தான்.
“துரோகம், துரோகம்” என்று அவன் புலம்ப
“என்னடா துரோகம்?” என்றான் சக்தி.
“என் கூட தானே டா சுத்துவ, எப்போடா டீ போட கத்துகிட்ட?” என்று சக்தியிடம் பொறுமலாகக் கேட்டான் லாலா.
“ஏண்டா டீ போட கூட தெரியாத தீவட்டியா நீ இருப்பன்னு எனக்கெங்க தெரியும்? சரோ அப்பவே சொன்னா ஆம்பிளைங்க பத்த வச்சா சுதந்திர விலாசத்து அடுப்பெரியாதுனு” நக்கலடித்தான் சக்திவேல்.
“எங்கம்மாவுக்கு முடியலன்னா நானும் எங்கப்பாவும் தான் டா பார்க்கணும்” என்று சக்திவேல் சொல்ல, அவன் வீட்டில் ஆத்தாவும், சரோஜினியும் இருப்பதால் ஆண்கள் அதையெல்லாம் பார்த்ததில்லை என்று புரிய, அடுத்த நாள் காலையில் விடியோ காலில் தேனீர் போடுவது எப்படி என்று சக்திவேலிடம் பாடம் படித்தான் லாலா.
உதயாவுக்கு முன்பே எழுந்தவன், போனை நன்றாக ஒரு இடத்தில் வைத்தவன், சக்தி சொல்வதை அப்படியே செய்தான்.
“மவனே! டீ மட்டும் நல்லா வரல. உன்னை தொலைச்சிடுவேன்” என்று லாலா மிரட்ட,
“சொல்றதை செய்டா வென்று” என்றான் சக்தி.
“சக்கரை இப்போ போடாத, தேவையான அளவு அப்புறம் போட்டுக்கோங்க. நல்லா கொதிக்கட்டும், கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு”
“டேய்! உதயா வரதுகுள்ள போடணும்டா” சொல்லும்போதே உதயா முகம் கழுவி வெளியே வந்தவளுக்கு தேனீர் தயாராகும் வாசம் தெரிந்தது.
அந்த நறுமணம் காலை வேளையில் புன்னகைக் கொடுத்தது. அதுவும் லாலா அவளுக்காக செய்கிறான் என்பதே தேனீரை சுவைக்கும் முன் இனித்தது. தேனீரின் வாசம் பிடித்தவள் கணவனை பின்னிருந்து கட்டிக்கொள்ள, லாலா அந்த திடீர் அணைப்பில் திகைத்தான்.
“மச்சான் நான் போறேன்” என்ற குரலில் திரும்பினால் விடியோ காலை சக்தி துண்டித்தான்.
லாலாவின் முகம் புன்னகையில் பூத்திருக்க, மனைவியின் அணைப்பில் லாலாவின் காலை லாளிதமாக தொடங்கியது. அந்த லாளிதம் தாலி பிரித்துக் கோர்க்க ஊருக்குச் செல்லும்வரை தொடர்ந்தது.