Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 11

அத்தியாயம் 11:

வீட்டிற்கு வந்த மதுவிற்கு மனதே சரியில்லை. இவ்வளவு வயது வரை யாரிடமும் இவ்வாறு மனது நோக நடந்ததே இல்லை. அதுமாதிரி சூழ்நிலையும் இதுவரை அமைந்ததில்லை.

இன்று அவ்வாறு நடந்துகொண்டது, அதுவும் ஹேரியிடம் நடந்துகொண்டது மனதிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆடையை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள். எந்த வேலையும் ஓடவில்லை.

இன்று மீனாட்சி,செல்லத்துரையும் ஒரு உறவினரின் திருமணத்திற்கு சென்றிருப்பதால் அவர்களிடமும் பேச முடியாது. பேசும் மனநிலையிலும் மது இல்லை.



Advertisement

சிறிது நேரம் சென்று எழுந்தவள் ரெஸ்ட்ரூம் சென்று குளித்துவிட்டு வந்தாள். எதுவும் சமைக்கவும் தோன்றவில்லை, சாப்பிடவும் தோன்றவில்லை.

அப்படியே படுத்திருந்தாள். எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. முழிப்பு வந்தபோது இரவு 2 மணி. நன்றாக பசித்தது. ஒரு வாழைப்பழத்தையும், பாலையும் சாப்பிட்டுவிட்டு படுத்தவளுக்கு திரும்பவும் தூக்கம் வரவில்லை.

வடிவேலு காமெடியாவது பார்ப்போம் என்று பார்த்தவள் , திரும்பவும் எப்போது தூங்கினாள் என்று தெரியாது. திரும்பவும் எழுந்தபோது 7 மணி.

Advertisement

மெதுவாக எழுந்து கிளம்பியவள் ஏனோதானோவென்று இரண்டு தோசையை ஊற்றி பொடி வைத்து சாப்பிட்டவள் ஆஃபீஸிற்கு கிளம்பிவிட்டாள்.

Advertisement

அலுவலகத்திலும் சென்று அமைதியாக அமர்ந்து அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள். ஊர்வசி கொஞ்சம் லேட்டாக வந்தவள், அவள் சீட்டில் அமர்ந்து மதுவிற்கு குட் மார்னிங் சொன்னாள்.

மதுவும் திருப்பி விஷ் பண்ணிவிட்டு அமைதியாக வேலையை பார்த்து கொண்டிருந்தாள். ஊர்வசிக்குதான் ஆச்சரியமாகி விட்டது. மதுவிடம் “என்ன மது மேடம் , இன்னைக்கு இவ்வளவு அமைதியாக இருக்கீங்க”

“ஒண்ணுல்ல ஊர். கொஞம் மூட் சரியில்ல. நீ என்ன இன்னைக்கு லேட் . எப்பவும் நீதான முதல்ல வந்து ஆபீஸ்ல ஈயோட்டுவ”

Advertisement

“அத ஏன் கேக்குற மது. இந்த பூஜா தொல்ல வர வர தாங்கவே முடியல. அவ பாய் பிரண்ட காட்றன்னு அழைச்சிட்டு போய்ட்டா”

“அதனால என்ன போய் பாத்துட்டு வர வேண்டியதுதான”

“நீ வேற. இவதான் அவன பாய் பிரண்ட்னு சொல்லிட்டுருந்திருக்கா. அவளோட சேந்து போனா அவன், அவள விட்டுட்டு என்ன டேட்டிங் கூப்பிட்றான். அதுக்கு அவன்கிட்ட சண்ட போடாம என்னட்ட ஒரே சண்டை. அவள சமாளிச்சு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டு”

“ஹா ஹா சூப்பர் ஊர். மூடே சரியில்லாம இருந்தேன். இப்பதான் நல்ல சேதி சொல்லி என்ன ஹாப்பி ஆக்கிருக்க. அவளுக்கு நல்லா வேணும். பெரிய உலக அழகின்னு நினைப்பு . எப்ப பாத்தாலும் என்ன வேற டீஸ் பண்ணிகிட்டே இருக்கா. உனக்காகத்தான் பொறுத்து போய்ட்டுருக்கேன்”

“அவளுக்கு உன்ன பாத்து பொறாமை மது. நானே என் அத்தையோட முகத்துக்காகத்தான் பொறுத்து போறேன். மது வீட்டுல போய் தங்கிக்கவானு  அம்மாட்ட கூட கேட்டு பாத்துட்டேன். அப்பா திட்டுவாங்கன்னு அம்மா கேக்கவே இல்ல”  

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அவர்கள் டீமில் இருக்கும் டோமிங் (daoming) என்ற சீன பையன் மதுவின் அருகில் வந்து “ஹாய் மது” என்றான்.

அவனை திரும்பி பார்த்த மது ஊர்வசியிடம் “இந்த பால் டப்பி என்ன, இன்னைக்கு தைரியமா பேச வந்துட்டான் ஊர்” என்றாள். 

ஊர்வசி சிரிப்பை அடக்கி கொண்டே “ஏய் பாவம்டி. அவன்கிட்ட பேசாம என்னட்ட பேசிட்ருக்க . நா போறேன். நீ பேசு அவன்கிட்ட” என்று சேரை நகர்த்திக்கொண்டு போய்விட்டாள்.

டோமிங் ரொம்ப நாளாக மதுவை சைட் அடித்து கொண்டிருப்பவன். பார்க்க சின்ன பையனாக பால் வடியும் முகத்துடன் இருப்பான். அவன்  பார்க்கும் போது மது திரும்பி பார்த்தால் சட்டென்று திரும்பி கொள்வான். மதுவே இரண்டு, மூன்று தடவை என்னையே ஏன் பாத்துட்ருக்க என்று கேட்டிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் பதட்டமாக , அதெல்லாம் ஒன்றுமில்லையே என்று கூறி விடுவான்.

அப்படி இருப்பவன் இன்று தைரியமாக பேச வந்திருக்கிறான். அவனிடம் “ஹாய் தம்பி , வாட்ஸ் தி மேட்டர்” என்று கேட்டாள்.

அதற்கு அவன் “தம்பின்னா என்னனு” கேட்டான்.

“ம் தம்பின்னா, என்னோட யங்கர் ப்ரதர்ன்னு அர்த்தம்”

“ஹே நா உன்னோட ப்ரதரும் கிடையாது. உன்னோட யங்கும் கிடையாது. எனக்கு 29 வயசு ஆகுது” என்று பதட்டமானான்.

“ஓகே ஓகே கூல். ஆனா பாக்க சின்ன பையனா இருக்கியே. அதான் தம்பின்னு சொன்னேன்”

“இல்ல . ப்ளீஸ் தம்பின்னு சொல்லாத” விட்டால் அழுது விடுபவனை போல் சொன்னான்.

“சரி சரி தம்பின்னு சொல்லல. இப்ப உனக்கு என்ன வேணும் பையா”

 “பைய்யான்னா என்ன அர்த்தம்”

“ஸ்ஸ்ஸப்பா முடியல பையா ” என்று தமிழில் கூறியவளை பாவமாக பார்த்தான்.

“பையான்னா நீ குட்டியா இருக்கன்னு அர்த்தம். தமிழ் டியூசன் படிக்கத்தான் இப்ப என்னட்ட பேச வந்தியா”

“இல்ல. உன்னட்ட ஒன்னு சொல்லணும்”

“அதைத்தான சொல்லுன்னு நானும் சொல்றேன் பையா”

“அது”

“ம் சொல்லு” என்று சிஸ்டம் பார்த்து திரும்பினாள் மது.

அந்த வேளையை சரியாக பயன்படுத்திக்கொண்ட டோமிங் “ஐ லவ் யு மதுமிதா” என்று கூறிவிட்டு அவசரமாக குனிந்து கொண்டான்.

அவனை அதிசயமாக திரும்பி பார்த்த மது, பார்றா பால் டப்பிக்கு தைரியத்தை என்று நினைத்து கொண்டே “சரி அதுக்கு நா என்ன பண்ணனும் பையா ” என்று கேட்டாள்.

“உனக்கு என்ன பிடிக்குமான்னு சொல்லணும்”

“உன்ன எனக்கு பிடிக்கும். பிடிக்கும்ன்னா நீ சொன்ன மீனிங்க்ல இல்ல. நீ நல்ல பையன் அதான் பிடிக்கும். ஆனா இந்த லவ்வெல்லாம் எனக்கு பிடிக்காது பையா”

“ஏன் மதுமிதா. நா உன்ன நல்லா பாத்துப்பேன்” 

“அதுக்கு இல்ல பையா. நா எங்க அம்மா அப்பா சொல்ற எங்க ஊரு பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீ தப்பா  எடுத்துக்காத. நம்ம ஒரே டீம்ல இருக்கோம். எப்போதும் எனக்கு நல்ல பிரண்டா இருக்கணும் நீ”

சிறிது நேரம் அமைதியாக இருந்த டோமிங் “ஓகே மதுமிதா. சாரி” என்று வருத்தமாக கிளம்பினான்.

மதுவும் “சாரி பையா” என்றாள்.

டோமிங்கும் அவளை பார்த்து சிறிதாக சிரித்து விட்டு அவன்  இடத்திற்கு சென்றான்.

மது எழுந்தவள் ஊர்வசியிடம் போய் “நா சாப்பாடு எடுத்துட்டு வரல ஊர். வெளில சாப்பிட போறேன்”

“ஹே நில்லு. நானும் வரேன் . இன்னைக்கு சாப்பாடு எடுத்துட்டு வரல. “

“ஏன் என்னாச்சு”

“அத்தைக்கு உடம்பு முடியலையாம். வெளில சாப்டுக்கன்னு கால் பண்ணிருந்தாங்க”

ஊர்வசியின் அப்பா மிகவும் கண்டிப்பானவர். அவரின் தங்கைதான் இங்கு இருப்பது. அவர்கள் தனி வீட்டில்தான் இருக்கிறார்கள். அத்தைக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். வயது பையன் இருக்கும் வீட்டில் தங்க கூடாது என்று ஊர்வசியின் அப்பா கூறிவிட்டதால் அவர்கள் வீட்டில் தங்க வைக்காமல்  பக்கத்திலேயே ஒரு ஸ்டுடியோ ரூம் வாடகை எடுத்து தங்க வைத்துள்ளார் ஊர்வசியின் அத்தை. 

சாப்பிட மட்டும் சென்று வருவாள் அத்தையின் வீட்டிற்கு. அத்தையின் மகள்தான் பூஜா. இவர்கள் வயதுதான் ஆகிறது. ஒரு பேச்சிலர் டிகிரி மட்டும் முடித்தவள் வேலை எதற்கும் செல்லாமல் வெட்டியாக சுற்றி கொண்டிருக்கிறாள். நல்ல பணக்காரனாக பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் அவளின் லட்சியம். இதில் அவள் அப்பா, அண்ணன் இருவருமே டாக்டர்ஸ். அவர்களால்  அவளை ஒன்றும் பண்ண முடியாமல் விட்டு விட்டார்கள். அவள் அம்மாவிற்குதான் மகளை பற்றின கவலை.

மது ஊர்வசியிடம் “ஏன் அந்த கூஜா சமைக்க வேண்டியதுதான”

“நீ வேற டி. அவளுக்கு கிட்சன் எந்த பக்கம் இருக்கும்னே தெரியாது”

“பூஜாதான் இப்படி. உன் அத்தை பையன் எப்படிடி”

“அவர் ரொம்ப நல்ல மாதிரி டி. என்னட்டையே அளவாத்தான் பேசுவார்” என்று ஒரு பெருமூச்சு விட்டாள் ஊர்வசி.

மது “உனக்கு அதுல ரொம்ப வருத்தம் மாதிரி தெரியாதே” என்றாள்.

“நீ சும்மா இருடி. என்ன கோத்து விட பாக்காத”

“பார்றா நான்தான் கோத்து விடறன்னா. இருக்கட்டும், இருக்கட்டும். என்னைக்கு இருந்தாலும் வெளில வந்துதானே ஆகும்” என்று அவளிடம் வம்பிழுத்து கொண்டே அங்கு இருக்கும் ஸ்ரீலங்கன் ரெஸ்டாரண்டிற்கு சாப்பிட சென்றனர்.

ஹேரி அன்று காலையே மதுவின் ஆஃபிஸ் ஹெட்டிற்கு கால் செய்து சத்யனை அவனின் வீட்டிற்கு அனுப்புமாறு கூறியிருந்தான்.

சத்யன் அலுவலகம் வந்தவுடன் அவனிடம் செய்தியை தெரிவித்தார் அவனின் ஆஃபீஸ் ஹெட் மைக்கேல்.

சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கு ஆன்சைட் வந்து இத்தனை வருடத்தில் இது போல் ஒரு அழைப்பு வந்ததில்லை. ஹேரியை ஆபீஸ் வரும்போது  நிறையமுறை சந்தித்திருக்கிறான்.

நல்ல மனிதன்.மிகுந்த திறமையானவன் கணினி துறையில், என்ற அளவில் தெரியும். முதல் முறை பார்த்த போது ஆச்சரிய பட்டிருக்கிறான். இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு சாதித்திருக்கிறானே என்று. இன்று அவனை தனியாக சந்திக்க போகிறான் அதுவும் அவன் வீட்டிலேயே என்ற போது மிகுந்த உற்சாகமாகி விட்டான் சத்யன்.

அவனின் காரிலேயே கிளம்பி ஹேரியின் வீட்டிற்கு சென்றான் சத்யன்.

வாசலில் இருந்த செக்யூரிட்டி இன்டெர்க்காமில் வீட்டிற்குள் இருந்த கேர் டேக்கரிடம் தொடர்பு கொண்டு பேசிவிட்டு சத்யனை உள்ளே அனுப்பினான்.

வாசலிலேயே சத்யனை எதிகொண்ட அந்த வீட்டின் கேர் டேக்கர் பெண்மணி, அவனிடம் “வெல்கம், ஐயம் மியா” என்று அறிமுகப்படுத்தி கொண்டார். மியாவிற்க்கு 50 வயதிருக்கும். சத்யனை கார்டெனிற்கு அழைத்து சென்று அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் உட்காருமாறு சொல்லிவிட்டு குடிக்க எதுவும் வேண்டுமா என்று கேட்டார்.

இங்கு என்ன குடிக்க சரக்கு தான் கிடைக்கும் என்று மனதில் நினைத்த சத்யன், வெளியில் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் , பாஸ் எப்பொழுது என்னை சந்திப்பார் என்று கேட்டான்.

அதற்கு அங்கு சைடாக தெரிந்த நீச்சல் குளத்தை கை காட்டினார். அங்கு  ஹேரி நீந்தி கொண்டிருந்தான்.

அங்கிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உங்களை பார்க்க வருவார் என்று சொல்லிவிட்டு போனார் அந்த பெண்மணி.

சத்யனும் நல்ல பிள்ளையாக உட்கார்ந்து மொபைல் பார்த்து கொண்டே, அவ்வப்பொழுது  ஹேரியை திரும்பி பார்த்து கொண்டிருந்தான். என்ன உடம்புடா சாமி, மனுஷன் 8 பேக் வச்சிருக்கார் போலவே என்று மனதினுள் பேசி கொண்டிருந்தான்.

ஹேரியும் அவனை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் , நீச்சலை முடித்து கொண்டு மேலே ஏறி ஒரு பாத் ரோபை அணிந்து கொண்டு தலை முடியை மேலே ஏற்றி விட்டுக்கொண்டே வந்து கொண்டிருந்தான்.

வாவ் மனுஷன் நடந்து வராரா, இல்ல மிதந்து வராறானே தெரியலையே என்று வாயை பிளந்து அவனை பார்த்து கொண்டிருந்தான் சத்யன்.

ஹேரி அருகில் வந்து “ஹாய் சத்யன், எப்படி இருக்கிறீர்கள்” என்று  கேட்டுக்கொண்டே கை  குலுக்குவதற்காக கையை நீட்டியதும்தான்,  அவசரமாக எழுந்து அவனின் நீட்டிய கையை பற்றி குலுக்கினான்.

“ஹலோ பாஸ், நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்டான்.

“உட்கார்ந்து பேசுங்கள்” என்று இருக்கையை காட்டினான் ஹேரி அவனும் அமர்ந்து கொண்டே.

இன்டெர்க்காமை எடுத்து கேர் டேக்கர் பெண்மணியை  அழைத்தான்.

அந்த மியாவும் ஒரு டிரேயில் மது பாட்டில்கள் , கண்ணாடி க்ளாஸ்கள் ஆகியவற்றை அடுக்கி கொண்டு வந்து டீப்பாயில் வைத்து விட்டு சென்றார்.

ஹேரியும் இரு கிளாசில் மதுவை ஊற்றி , ஒன்றை அவன் எடுத்துக்கொண்டு, இன்னொரு கிளாஸை சத்யனிடம் கொடுத்தான்.

சத்யனுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. எவ்வளவு பெரிய ஆள் நமக்கு சரக்கு ஊத்தி தர்றார், எப்படி வேண்டாமென்று மறுப்பது என்று தயங்கி கொண்டே கிளாசை வாங்கினான்.

அவன் தயக்கத்தை பார்த்த ஹேரி “என்ன சத்யன், எனி ப்ராப்லம்” என்றான்.

“நத்திங் பாஸ். ட்ரிங்க் எனக்கு வேண்டாம்”

“ஏன் சத்யன்”

“இல்ல பாஸ். ஈவினிங் டைம்னா ஓகே. இந்த டைம் சரியா வராது”

ஆச்சரியமான ஹேரி  “அது ஏன்” என்று கேட்டான்.

“இல்ல பாஸ் . ஈவினிங்னா சரக்கு அடிச்சிட்டு கவுந்து அடிச்சு தூங்கிடுவோம். இப்ப நா திரும்பவும் ஆஃபீஸ் போகணும். அங்க தங்கச்சின்ற பேர்ல ஒரு குட்டி பிசாசு இருக்கு. நம்ம ஆபீஸ்ல தான் வேல செய்யுது. நா குடிச்சிருக்கேன்னு அதுக்கு தெரிஞ்சது அவ்ளோதான். நார்மலா நா பார்ட்டில பீர் சாப்பிட்டாலே மூணு நாளைக்கு பேசாது. இதுல  காலைல டைம்ல குடிச்சிருக்கேனு  தெரிஞ்சது என்ன செய்யும்னே தெரியாது. எங்க வீட்டுக்கே போன் போட்டு நா இங்க ஆஸ்திரேலியால தண்ணி அடிச்சிட்டு ரோட்ல உருண்டுட்டு இருக்க ரேன்ச்ல பேசி வைக்கும்”

ஹேரியும் அவன் கிளாஸை ஓரமாக தள்ளி வைத்துவிட்டான். அதை பார்த்த சத்யன் “ஐயோ பாஸ். எனக்காக பாக்காதீங்க. நீங்க சாப்பிடுங்க” என்றான்.

“அது பரவாயில்லை சத்யன். தங்கைன்னா உங்க ஒன் சிஸ்டரா. அதான் பயப்படறீங்களா”

சத்யனுக்கு உருகிவிட்டது. நாம் குடிக்கவில்லை என்று பாஸு ம் குடிக்கவில்லையே என்று.

“இல்ல பாஸ். எனக்கு ஒரு அக்காதான். நா சொல்றது எங்க ஊர் பொண்ணு. இங்க நம்ம ஆபீஸ்க்கு வந்து ஆறு மாசம் இருக்கும்”

“அவங்களுக்கெல்லாம் நீங்க ஏன் பயப்படணும்”

“அது அப்படித்தான் பாஸ். தங்கச்சின்னு முடிவு பண்ணிட்டாலே அப்படித்தான்”

“ஏன் இந்த ட்ரின்க்ஸ்லாம் குடிச்சா கோவப்படறாங்க?”

“அது எங்க ஊர் கல்ச்சர்ல போதை தர்ற பானம் குடிக்கிறதெல்லாம் ஒழுக்கமில்லாத செயல்”

“அப்ப உங்க ஊர் பொண்ணுங்களுக்கு எல்லாம் ஆல்கஹால் எடுக்கிறவங்கள பிடிக்காதா? “

“இப்ப அப்படியெல்லாம் சொல்ல முடியாது பாஸ் . எங்க கண்ட்ரிலயே பெரிய சிட்டில எல்லாம் பொண்ணுங்களே பப்க்கு போய் குடிக்கிறாங்க. ஆனா என்னோட குட்டி சாத்தானுக்கு சுத்தமா பிடிக்காது ” 

“சரி. அப்ப வேற என்னதான் குடிப்பீங்க இந்த டைம்ல”

“டி, காபி சாப்பிடுவோம் பாஸ்”

ஹேரி இன்டெர்க்காமில்  காபி எடுத்து  வர கூறினான்.

மியாவிடம் மது பாட்டில் அடங்கிய ட்ரேயை எடுத்து போக சொல்லிவிட்டு அவனும் காபியே எடுத்து கொண்டான்.

சத்யன் காபியை குடித்து முடித்தவுடன் ஹேரி “இன்னும் உங்க ஊர் ட்ரடிஷன் பத்தி எனக்கு தெரிஞ்சிக்கணும் சத்யன். அதுக்காகத்தான் உங்கள வர சொன்னேன்”

சத்யனுக்கு தலையில் பல்ப் எரிந்து விட்டது.

“பாஸ். எங்க ஊர் பொண்ணுகிட்ட  ஏதும்  சிக்கிட்டிங்களா”

ஹேரி ஒரு புன் சிரிப்புடன் அவனை பார்த்தான்.

“உங்க சிரிப்புக்கு எங்க ஊர் பொண்ணுதான் உங்கட்ட சிக்கிருக்கும் போல”

“இல்ல சத்யன். உங்க ஊர் பொண்ண எனக்குதான் பிடிச்சிருக்கு. அவளுக்கு என்ன பிடிக்கல”

“என்ன பாஸ். உங்கள போய் எந்த பொண்ணுக்காவது பிடிக்காம போகுமா? நீங்க டேட்டிங்னு கேட்ருப்பிங்க. அதான் பொண்ணு மிரண்டிருக்கும். மேரேஜ்ன்னு கேட்டு பாருங்க. கண்டிப்பா யோசிக்கும். ஆல்கஹால் விட்டுட்டு காபி குடிக்கிற அளவுக்கு அந்த பொண்ண பிடிக்குதுனா நீங்க மேரேஜ் பத்தி யோசிக்கலாமே”

“அப்ப உங்க ஊர் பொண்ணுக்கு நா ஓகே தானு நீங்க நினைக்கிறீங்களா”

“பாதில விட்டுட்டு போகாம கடைசி வரை அந்த பெண்ணுக்காக யோசிப்பிங்கன்னா ஓகே தான் பாஸ்”

“கண்டிப்பா சத்யன். அந்த உறுதிய உங்களுக்கு  என்னால கொடுக்க முடியும். நா இந்த பூமியில இருக்க வரை அவள மட்டும்தான் நேசிப்பேன். அவளுக்காக மட்டும்தான் யோசிப்பேன்”

“சூப்பர் பாஸ். அப்ப நானும்  உங்களுக்கு எந்த உதவின்னாலும் செய்றேன்”

“ரொம்ப தேங்க்ஸ் சத்யன்”

                                                                                                                           (வருவாள்…)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!