Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே 21.2

பெரிய வீடுதான் முன்னில் களம் வைத்துக் கட்டப்பட்ட அந்தக் கால வீடு,  நீண்டு விரிந்து கிடந்தது ஆடு மாடு கோழி என்று அனைத்தும் இருந்தது அனைத்தும் சுத்தமாக நேர்த்தியாக இருந்தது, களத்தில் தேங்காய்களை போட்டு உரித்துக்கொண்டிருந்தார்கள் சிலர், பின்னில் பச்சை பசேல் என்று வயல்வெளி கண்ணுக்குத் தெரிந்தது.

 

 

 முற்றத்தில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி மெல்ல எழுந்து “யாரு” என்று கேட்க, அவரை நெருங்கி இவன் செல்ல அவனைக் கூர்ந்து பார்த்தவர் “ஆத்தி” என்ற அலறலோடு அப்படியே பின்னில் சாயப்போனார்.



Advertisement

 

  

“பாட்டி” என்று  பிடித்து நிறுத்தியவன் “என்னாச்சு” என்க அவருக்குப் பேச்சே வரவில்லை, அவன் முகத்தைத் தன் சுருக்கம் விழுந்த கைகளால் மீண்டும் மீண்டும் தடவியவர் “யாரு சாமி” என்றார், பிறகு…. முன்னில் நிற்பவன் அப்படியே அவரின் கணவர் வீரய்யாவின் சிரியவயது தோற்றத்தில் இருந்தானே.

Advertisement

 

Advertisement

 

“உங்க பேரன்… உங்க மகன் வீரராகவன் பையன் தேவசேனாபதி” என்க அந்த வார்த்தைகளின்  தாக்கம் செவி வழி மூளையை சென்று அடைந்தாலும் அவன் சொன்ன செய்தி அவர் மூளையை செயலிழக்க செய்தது, சிலநொடிகளில் அவர் பெருங்குரலில் அழத்தொடங்கிவிட்டார்,  வேலை செய்துகொண்டிருந்தவர்கள் கூட மெல்ல மெல்ல கூட்டம் சேர்ந்தது.

 

Advertisement

 

வயலில் இருந்த பெரியவருக்குத் தகவல் போக நடக்கவே தடுமாறும் கிழவர் நாலுகால் பாய்ச்சலில் வந்து சேர்ந்தார், பார்த்ததுமே தெரிந்துவிட்டது தங்களின் ரத்தத்தை தட்டு தடுமாறி வந்தவர் அவனை முழுதாக ஆசையாகத் தழுகி தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டார், அந்த மனிதருக்குப் பேசவே மறந்துவிட்டது போல விழிகள் நிறைந்துகொண்டே இருக்க பார்வை மங்கிய அந்தக் கண்களில் இப்பொழுது புது ஒளி வந்திருந்தது.

 

 

சுற்றம் கூடிவிட்டது மெல்ல மெல்ல உறவுகள் கூடிவிட்டது திருவிழா கூட்டம்போல ஆட்களைப் பார்த்து மிரண்டுவிட்டாள் மயூரி அவனின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள் அனைவரையும் மிரட்சியாகப் பார்த்துநின்றாள்.

 

 

வீரய்யாவின் பேரன் உயிரோடு இருக்கானாம் வந்திருக்கிறான் என்றதோடு கூட வெள்ளக்கார பொண்ணு ஒன்னையும்  கூட்டி வந்திருக்கான் அந்தப் பிள்ளைக்குப் பச்சை கலருல கண்ணு  என்ற செய்தி  காட்டுத்தீயாகப் பரவியது.

 

 

வீரய்யாவின் மறு உருவமாக நின்றிருந்தவனை ஆச்சர்யமாகப் பார்த்தவர்கள், அவன் அருகில் நின்றவளை விழிவிரித்து பார்த்திருந்ததனார்,  மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் கடல்கடந்து இப்பொழுதுதான் இந்த மண்ணில்  கால் பதித்த வெள்ளைக்காரியாகத்தான் தெரிந்தாள் அவர்களுக்கு.

 

 

 ப்பொழுதும் அவள் அணியும் பிராக் வகை உடுப்பே திருமணத்திற்கு பிறகு  அதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் அவளுக்கு வரவில்லை, அவள் அப்படி உடுத்துவதே அவனுக்கும் விருப்பம் சிறுவயதுமுதலே அவளை அப்படியே பார்த்துப் பழகிவிட்டவர்களுக்கு அது வேறாகவும் தெரியவில்லை விசேஷங்களுக்கு மட்டும் மாமியார் மருமகளுக்கு அழகாகப் பட்டுப் புடவை கட்டி விடுவார்.

 

 

கூட்டத்தை விலக்கிக்கொண்டு படப்படப்போடு உள்ளே நுழைந்தார் ராஜலக்ஷ்மி, சேனாவை நெருங்கியவர் “யாருன்னு சொன்னீங்க” என்றார் நடுங்கும் குரலில்.

 

 

“உங்க பையன்மா… இறந்துட்டதா நீங்க நினச்ச உங்க மகன்” என்றவன் அன்று நடந்ததை கூறி முடிக்க.

 

 

“ஏய்யா சாமி என் சாமி” என்று அவனைக் கட்டிக்கொண்டு கதறினார் ராஜலக்ஷ்மி “ஐயோ செத்து போய்டுச்சுன்னு வருஷா வருஷம் திதி குடுத்தேனே… அத்த மாமா என் பிள்ளை உசுரோடதான் இருக்கு உங்க வம்சம் அழியல மாமா என் பிள்ளை உசுரோட இருக்கு” கதறிக்கொண்டே இருந்தார்.

 

 

விவரம் என்னவென்று  தெரிந்துகொண்டு ஊர் சனம் மெல்ல கலைய சொந்தம் மட்டும், அதுவே சபையை நிறைத்தது “ராஜி” என்று அவரைப் பிடித்து எழுப்பி அமரவைத்தார் ஒருவர்.

 

 

சேனாவின் அருகில் வந்தவர் “என் பேரு  முத்துவேல்  உன் சித்தப்பாய்யா… ஒறவுமுறையிலயும் உன் அம்மாளை கட்டிகிட்ட மொறையிலயும்” என்றார் அவனிடம்.

 

 

கையில் நான்கு வயது பிள்ளையோடு தயங்கி தயங்கி வந்து நின்றாள் ஒரு பெண் “வாத்தா” என்ற முத்துவேல் “உன் தங்கச்சசி ராகவி  உன் அப்பாரு ஞாபகமா அவர் பேரை வெச்சிருக்கோம்” என்க.

 

 

 அவளைப் பார்த்துச் சிரித்தவன் குழந்தையை ஆசையாகத் தூக்கிக்கொண்டான் தாய்மாமனாயிற்றே “நீ உசுரோட இருக்கிறதே எங்களுக்குத் தெரியாது” என்றார் முத்துவேல் வருத்தமாக.

 

“அது உங்க தப்பில்லை” என்றவன் நடந்ததை கூற அதைத் தவறென்று அங்கே யாராலும் கூற முடியவில்லை “உண்மைதான் உன்னை அன்னைக்கு அப்படி மாத்தி வெச்சதுதான் சரி” என்றார் வீரய்யா.

 

 சேனாவின் விழிகள் ராஜலக்ஷ்மியின் மீது படிந்தது “உங்க அப்பாவைக் காதலிச்சுதான் கட்டிகிட்டேன், நீலகிரில காலேஜ் படிச்சேன் அப்போ பாத்து  பழக்கம், என் வீட்ல பிரச்சனை ஆயிடுச்சு வந்திடு பாத்துக்குறேன்னு சொன்னாரு நம்பி வந்துட்டேன் இங்க எல்லாருக்கும் சம்மதம்தான் நல்லபடியா கல்யாணம் முடிச்சு நல்லாத்தான் வாழ்ந்தோம்”.

  

 

“நீயும் என் வயித்துல இருந்த அந்த நேரம் கோயம்புத்தூருக்கு மாத்தலாச்சு,  ஏற்கனவே  எம்.எல்.எ வைப்பத்தி நிறைய விஷயம் சேகரிச்சு வெச்சிருந்தார்,  ரெண்டு மூணுதடவ மிரட்டால்கூட வந்துச்சு ஆனா அவர்  கேக்கல இவங்க எல்லார்க்கும் பயம் புள்ளதாச்சியை அங்க வெக்க வேண்டாம் நாங்க ஊருக்குக் கூட்டிட்டு போறோம் புள்ள பொறந்து அனுப்புறோம் சொன்னாங்க ஆனா எனக்கு அவரை விட்டுட்டு வர விருப்பமில்லை, அவருக்கும் எண்ணைவிட்டுட்டு இருக்க முடியல”.

 

 

 

“கடைசில இவங்கதான் வாரத்துக்கு ஒருத்தர்ன்னு வந்து வந்து போனாங்க அன்னைக்கு கடைக்குப் போயிட்டு வரும்போதுதான் ஜீப்பை வழிமறிச்சு…” என்றவர் முந்தியை வாயில்  வைத்து அழுத்தி அழுகையை அடக்கினார்.

 

  

“அவனுங்க வெட்டத்தான் வரானுங்கன்னு தெரிஞ்சுடுச்சு அந்தப் பக்கமா வந்த ஆட்டோவை வழிமறிச்சு கழுத்துல கிடந்த சங்கிலியை அந்த டிரைவருக்குக் குடுத்து எப்படியாவது காப்பாத்திடுன்னு சொல்லி அனுப்பி விட்டுட்டார், என் கண் முன்னாடியே… என்னால ஒன்னும் செய்யமுடியல நான் மயக்கம் போட்டுட்டேன் திரும்ப முழிச்சோப்போ இவங்க எல்லாரும்தான்   இருந்தாங்க”.

 

  

“புருஷனும் போயாச்சு பிள்ளையும் போயாச்சுன்னு சொன்னாங்க, சாக விடல என்னை இவங்க, மூணு வருஷத்தைக் கிறுக்கு பிடிச்சவமாதிரியே கடத்திட்டேன்” என்றவர் முத்துவேலை திரும்பிப் பார்த்தார் அவர் ஆறுதலாக அருகில் அமர்ந்துகொண்டார்.

  

 

சேனாவின் அருகில் வந்த வீரய்யா “எங்க மகனை  நம்பி வந்த பொண்ணு எப்படியோ போன்னு விட்டுட்டா  எங்க பிள்ள ஆத்மா எங்களை மன்னிக்குமா,  கெஞ்சி கூத்தாடி கடைசில செத்துருவோம்னு மிரட்டித் தான் முத்துவுக்கு கட்டிவெச்சோம் மவராசன் ஒரு கொறையும் இல்லாம நல்லா வெச்சுருக்கான்” என்றவர்.

 

  

“அப்பன் ஆத்தா உசுரோட இருக்கும்போது பிள்ளைகளை வாரிக்கொடுக்கக் கூடாது சாமி அது நரகம்,  எங்களுக்குக் கொள்ளிபோடவேண்டிய பிள்ளைக்கு நான் என் கையால…” என்று அந்தப் பெரியமனிதர் குழந்தையாக அழ “தாத்தா” என்றவன் அவரைச் சேர்த்துப்பிடித்தான்.

 

 

 மொத்தத்தில் உணர்ச்சிகளின் பெருவெள்ளமாக இருந்தது அங்கு, அழுது ஆறுதல் கொடுத்துச் சொந்தத்தை சொல்லி என்று அனைவருமே ஒரு வித சூழலில்  சிக்கி கிடந்தனர் அதிகப்படியான சந்தோஷம் அனைவரையும் கட்டிப்போட்டிருந்தது.

 

 

“அப்பா போட்டோ இருக்கா” என்றவனை ஒரு அறைக்கு அழைத்துச்சென்றார் வீரய்யா,  காக்கி உடையில் வீரராகவன் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டு மாலை போட்டிருந்தது அருகில் அவன் தாயும் தந்தையும் கல்யாண கோலத்தில்.

 

 

“உங்க அம்மா இந்த ரூமுக்கு வரமாட்டா வரக்கூடாதுன்னு நான் தான் விளக்கிட்டேன்,  இது உங்க அப்பா அம்மா ரூம்” என்றார் வீரய்யா மெல்ல அந்தப் புகைப்படத்தைத் தடவி பார்த்தவன் திரும்பி மனைவியைப் பார்த்தான்.

 

 

பல மாதங்களாக யாருக்கும் காட்டாமல் வரைந்துகொண்டிருந்த பெயிண்டிங்கை அவனின் பிறந்தநாளுக்கு அவனிடம் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் மயூரி, அவனை அப்படியே காக்கி உடையில் முழுநீள படமாக வரைந்திருந்தாள் அத்தனை நுட்பமாக, வலக்கையில்  லத்தி சுழல இடக்கையால் மீசையை முறுக்கி நிற்கும் படம் உண்மையில் போட்டோ எடுத்ததை போல அத்தனை தத்ரூபமாக இருந்தது அவர்களுடைய படுக்கை அறையில் மாட்டி வைத்திருக்கிறான்.

 

 

அப்பொழுதுதான் நினைவே வந்தது பெரியவருக்கு “ஏலே பொண்ணுங்களா என் பேரனுக்குக் குடிக்க ஒருவாய் தண்ணிகூட குடுக்காம ஆளுக்கு ஒருபக்கம் கிடக்குறீங்க” என்க பெண்கள் அவசரமாக எழுந்தனர்.

 

 

“என்னய்யா பிடிக்கும் உனக்குச் சொல்லுய்யா என் பேரனுக்கு  ஒருவாய் சோறு குடுக்குற பாக்கியத்தை அந்தச் சாமி எனக்கு இப்போவாது கொடுத்ததே” என்று அதற்கும் அழுதார் அந்தப் பெண்மணி.

 

 

“அப்பாக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்ங்க பாட்டி நான் சாப்பிடுறேன்” என்க அனைவருக்குமே விழிகள் உடைப்பெடுத்தது.

 

“ஏய்யா கேக்குறேன்னு தப்பா நினைக்காத இது யாருன்னு சொல்லலையே”  என்றார் வீரய்யா மயூரியை பார்த்து, அவளைத் தன்னோடு சேர்த்து நிறுத்தியவன் “உங்க பேரனோட பொண்டாட்டி ஐரிஸ் மயூரி” என்க, ஆச்சர்யமாகப் பார்த்தனர் அனைவரும்.

 

 

“வெள்ளக்கார பிள்ளை போலவே நம்ம பாஷா புரியுமா” என்றார் முதியவர்.

 

 

“நல்லா புரியும் பாட்டி நானும் தமிழ்நாட்டு பொண்ணுதான்” என்றாள் தெளிவாக.

 

“அடி ஆத்தி” என்று ஆச்சர்யமானர்கள் அனைவரும்.

 

“வெளிநாட்டுல வேலை பாக்குறிகளோ அங்க பழக்கமா” என்றார் ராஜலக்ஷ்மி, அவரைப் பார்த்துச் சிரித்தவன் “இல்லம்மா” என்று மயூரியை பற்றிச் சில விவரங்கள் சுருக்கமாகக் கூறினான்.

 

 

 “உன்னைக் கொண்டுபோனவங்களை பாக்கனும்ய்யா எங்க பிள்ளையை இப்படி தங்கமா வளத்திருக்காங்களே” என்றார் வீரய்யா.

 

  

அவனும் போலீசில் இருப்பதாகக் கூற மீண்டும் ராஜலக்ஷ்மி அழத்தொடங்கினர் “வயித்துல இருக்குற கொழந்த பையன்தான் அதுவும் என்னைமாதிரி போலீஸ் தான் அப்படின்னு மூச்சுக்கு மூச்சு சொல்லுவாரு” என்றார், அவரின் கவனத்தை சமையலில் திரும்பிவிட்டனர் ஆண்கள்.

 

 

  

மாமியாரும் மருமகளும் வீரராகவனுக்கு பிடித்த அனைத்தையும் செய்துவைத்து பெரிய விருந்தே வைத்துவிட்டனர் இரு தினங்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள் இருவரும்,  கோசலை  கந்தசாமி பவுனை இவர்களுடன் பேசவைத்தனர்.

 

  

ராகவி மிகவும் வெகுளி பெண்ணாக இருந்தாள் அவள் கணவனும் சொந்தமே விவசாயமே அவர்களுக்கும், சட்டென்று மயூரியிடம் ஒட்டிக்கொண்டாள்.

 

 

 பளபளவென்று இருக்கும் அண்ணனின் மனைவி தன்னுடன் பேசுவார்களா என்று அவள் தள்ளி நிற்கத் துறுதுறுவென்ற அவள் குணத்தில் அனைவரையும் அவள் பக்கம் இழுத்துவிட்டாள் மயூரி,  சில வார்த்தைகள் அவர்கள் பேசுவது புரியாதபோது சேனாவை பிடித்து இழுத்துவருவாள் விளக்கம் சொல்ல,  எந்த முகசுழிப்பும் இல்லாமல் அந்தக் கிராமத்து வீட்டில் அத்தனை பாந்தமாகத் தன்னை பொருத்திக்கொண்டாள்.

 

  

முதன்முதலாக அவனின் சொந்த தங்கையைப் பார்க்கிறான் அனால் இப்படி ஒருத்தி இருப்பதே தெரியாதே சோனாவுக்கு “ராகவிக்கும் மாப்பிள்ளைக்கும் குழந்தைக்கும் ஏதாவது வாங்கி குடுக்கணும் குட்டிமா, அவளுக்கு நான் ஒண்ணுமே செய்யல” என்றவனை மார்போடு சேர்த்தனைத்தவள் “இனிமே செய்யலாம் நிறைய செய்யலாம் நாளைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வரலாம்” என்று அவனை ஆறுதல் படுத்தினாள்.

 

 

 அதன்படி கணவனும் மனைவியும் மறுநாள் காலையே சென்றுவிட்டனர் தாத்தா பாட்டிக்கு அம்மாவிற்கு அப்பாவுக்கு (முத்துவேலை அப்பா என்றே அழைத்தான்) அனைவருக்கும் துணிகள், தங்கைக்கு வளையல் மற்றும் நெக்லஸ் மாப்பிளைக்கு செயின் தங்கை மகனுக்குச் செயின் கைக்குக் காப்பு அனைவருக்கும் துணி குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் என்று குவித்துவிட்டான்.

 

  

ராகவியின் கணவனும் கிராமத்து இளைஞனாக வெள்ளந்தியாக இருந்தான் பழக இனிமையாக… சேனாவுடன் அவனுக்கு உறவு வலுப்பட்டது பிரபுவிடம் தோன்றாத உரிமை இவனிடம் தோன்றியது சோனாவுக்கு.

 

  

கணவனைப் பற்றிப் பேசத்தொடங்கினாலே அழுது கரைந்தார் ராஜலக்ஷ்மி என்றாலும் தந்தையின் மரணத்தின் பின் உள்ள ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பினான் “அம்மா நான் கேக்குறதுக்கு அழுகாம பதில் சொல்லணும், அப்பாவைக் கொன்னவங்கள பத்தி உங்களுக்கு எதுவும் தெரியுமா” என்க.

 

 

 

“தெரிஞ்சு என்னப்பா செய்ய… அப்போவே அவங்களுக்கு அரசியல் பலம் இருந்தது இப்போ சொல்லவே வேண்டாம்” என்றார் சுவற்றில் சாய்ந்தமர்ந்துகொண்டு.

 

  

“அத்தை நீங்கச் சொல்லுங்க மாமா மட்டுமில்ல உங்க பையனும் போலீஸ்தானே” என்றாள் மயூரி நாத்தனாரின் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு.

 

  

“அவங்க பெரிய இடம் தம்பி வேண்டாம் உன்னையே நம்பி வந்திருக்கு, இந்தப் பிள்ளைகூட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழனும் முடிஞ்சுபோனதை விட்டுடுப்பா” என்றார் அவர்.

 

  

“அம்மா ப்ளீஸ் சொல்லுங்க” என்றான் அழுத்தி.

  

 

“கொல்லணும்னு நினைச்சது எம்.எல்.எ தான் ஆனா அதைப் பயன்டுத்திக்கிட்டது என்னோட அண்ணன்” என்றார் அவர்.

 

 

“அண்ணனா?”.

 

 

“ஹ்ம்ம் வேற ஜாதி பையன்கூட ஓடிபோய்ட்டேனே அதுக்காக, அன்னைக்கு அரசியல்ல சின்ன சின்ன வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார் அப்போவே அவ்ளோ ரவுடிசம், இப்போ இன்னும் சொல்லவே வேண்டாம் மத்திய மந்திரி வேற” என்க.

 

 

“மத்திய மந்திரியா!” என்றவனை பார்த்தவர் “ஆமா ராஜப்பன்” என்க, மயூரியும் சேனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

 

“ராஜப்பன்!… நீலகிரி மந்திர ராஜப்பனா” என்றான் சேனா.

 

 

“ஆமாம், என்னோட சொந்த அண்ணன்” என்றார் அவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!