Skip to content
Post Views: 7,110
மறுநாள் காலையில் ஆண்கள் அனைவரும் உண்டுவிட்டு தொழிலுக்கு சென்றிருந்தனர். காஞ்சனா கிட்சனில் இருந்தாள். கீர்த்தி டைனிங் டேபிளில் உட்கார்ந்து மதிய சமையலுக்காக கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள்.
அறையைவிட்டு வெளியே வந்த அஞ்சனா, கீர்த்தியுடன் சேர்ந்து, அவளும் கீரையை ஆயத் துவங்கினாள்.
கீர்த்தி, “போரடிக்குதா…….?”
பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்துக் கொண்டாள் அஞ்சனா.
Advertisement
“எத்தனை நாள் லீவ்…?”
“மூனு நாள் க்கா. நாளைக்கு கிளம்பனும்”.
“ஹ்ம்ம்… உன் பாடு ஜாலி. என்னைப் பாரு படிச்சும் வேலைக்குப் போக முடியாம வீட்லே அடைபடவேண்டியதா… இருக்கு”.
Advertisement
“உங்களுக்கும் வேலைக்கு போகனும்னு ஆசையா..? ட்ரை பண்ணியிருக்கலாமே…? ஏன் போகலை….?”
Advertisement
“ம்ப்ச்… படிப்பு முடிச்சவுடனே அப்பா கல்யாணம் பண்ணி வச்சுட்டார். இங்க வந்ததும் குடும்ப இஸ்திரியா… மாறிட்டேன்” என்றாள் சிரித்துகொண்டே கீர்த்தி.
“ஹா…. ஹா…. அதனால என்ன….? இப்ப ட்ரை பண்ணுங்க…”
“ம்ப்ச்… டச் விட்டு போச்சு. படிச்சதெல்லாம் மறந்தே போயிருக்கும்”.
Advertisement
“என்ன படிச்சிருக்கீங்க…?”
“எம்.ஏ… இங்கிலிஷ்….”
“பி.ஜி. முடிச்சிருக்கீங்க…….. அப்புறமென்ன…..? இப்பகூட நீங்க ட்ரை பண்ணலாமே…. நீங்க”
“இப்பயா…… டிகிரி முடிச்சே ஆறு வருஷம் ஆகுது. எந்த எக்ஸ்பீரியன்சும் இல்ல. என்ன வேலைக்கு போறது. அப்படியே ட்ரை பண்ணாலும் இவங்க போக விடுவாங்களான்னு… சந்தேகம்தான்”.
“உன்னை இங்க யாரும் ஒன்னும் சொல்லாம ஒத்துகிட்டதே அதிசயந்தான்…”
“ஏன் அப்படி சொல்றீங்க….? நீங்க பேசியிருக்க மாட்டீங்க வீட்ல. பேசி புரிய வச்சிருந்தா… அவங்களும் சரின்னு சொல்லியிருப்பாங்க. பேசாம உங்க பையன் ஆசிஷ் படிக்கற ஸ்கூல்லயே, நீங்களும் வேலைக்கு ட்ரை பண்ணலாமில்ல…”
“அவன ஸ்கூல்ல சேர்க்கும்போது, எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. ஆனால் வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு… அப்படியே விட்டுட்டேன்”.
“ஆசிஷ் படிக்கிற ஸ்கூல் பத்தி கேள்விபட்டிருக்கேன். இப்பதான் ஆரம்பிச்சாங்க. அதுக்குள்ள நல்லா… பேர் வாங்கிட்டாங்க. ஸ்கூலும் நல்லா டெவலப் பண்ணிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். எங்க ஊர்ல இருந்துகூட நிறைய பசங்க இங்க வந்து படிக்கிறாங்க”.
“ஆமாம். இப்ப நல்லா டெவலப் ஆயிடுச்சு…”
“முயற்சி பண்ணி பாருங்கக்கா. நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். சும்மா பேசிட்டே இருக்கறதுக்கு, ஜஸ்ட் ட்ரை பண்ணி பார்க்கலாமில்ல. கிடைச்சா கிடைக்கட்டும். ஏன் மாமா ஏதாவது சொல்வார்ன்னு பயப்படறீங்களா….?”
“யார சொல்ற, பெரிய மாமாவையா…..? என் வீட்டுக்காரரையா….?”
“ஆசிஷ் அப்பாவதான் சொல்றேன்…..”
“அவர்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். அத்தைதான் ஏதாவது சொல்வாங்க. அவங்களுக்கு பொண்ணுங்க வேலைக்கு போறதுன்னா பிடிக்காது”.
“வீட்டை கவனிச்சுட்டு, பிள்ளைங்களை பார்த்துட்டு வீட்ல இருக்கனும். வெளியேயிருந்து ஆம்பிளைங்க களைச்சு வீட்டுக்கு வரும்போது…. நாம வீட்ல இருந்து சேவகம் பண்ணனும்னு சொல்வாங்க. வருமானத்துக்கு இங்க குறையில்ல. அதனால எதுக்கு நீங்களும் போய் கஷ்டப்படனும்றது…, அவங்க எண்ணம்”.
“ஆனால் உன்னோட கதையே வேற. உனக்கு மாமனாரோட புல் சப்போர்ட் இருக்கு. அதனால அத்தையால எதுவும் சொல்ல முடியலை”.
“நீங்க ஸ்ட்ரான்கா… இருந்தா, யாரும் உங்களை ஸ்டாப் பண்ண முடியாது. நான் வேலைக்கு போறதுல எங்கப்பாவுக்குமே இஷ்டமில்ல. அவருக்கும் அதே தாட்தான். நமக்கென்ன வசதிக்கு குறைச்சலா…? ஏன் வேலைக்கு போறன்னு, வேலையை விட சொல்லி, என்கிட்ட நிறைய தடவை சண்டை எல்லாம் போட்டிருக்காங்க. பிடிவாதம் பிடிச்சுதான் வேலைக்கு போனேன். உங்களுக்கு ஆசை இருந்தா பேசிப்பாருங்க. அவங்களுக்கு புரியற மாதிரி சொன்னீங்கனா…. நிச்சயம் புரிஞ்சுப்பாங்க”.
“என்னமோ சொல்றே…? பேசி பார்க்கறேன்…” என இழுத்தாள் சலிப்பாக கீர்த்தி.
“ஹா.. ஹா… இப்படி லேசியா சொன்னா…? உங்களுக்கு வேலைக்கு போகனும்னு ஆசையும் இருக்கு. அதுகூடவே அய்யோ… வெளிய போய் கஷ்டப் படனுமான்னு… லேசியாவும் இருக்குன்னு, பீல் பண்றேன். கரெக்டா…?” என்றாள் அஞ்சனா.
“ஹி… ஹி… ஆமாம். கொஞ்சம் அலுப்பும் இருக்கதான் செய்யுது. வீட்டயும் கவனிச்சுட்டு, வெளியிலயும் போகனுமான்னு சோம்பேறித்தனம் கொஞ்சம் இருக்கதான் செய்யுது”.
“ம்ம்… உங்க மேல குத்தம் வச்சுட்டு நீங்க அடுத்தவங்கள குறை சொல்றீங்க. நீங்க வேலைக்கு ட்ரை பண்ணாததுக்கு அவங்கள காரணம் சொல்றீங்க”.
“அப்படியில்ல அஞ்சனா. படிச்சு முடிச்சவுடனே வேலைக்கு போகனும்னு புல் இன்ட்ரஸ்ட் இருந்தது உண்மைதான். அந்த சூட்டோட போயிருக்கனும். எல்லோரையும் போல நாமளும் வேலைக்கு போகனும்னு ஒரு கனவு இருந்தது மனசுல”.
“ஆனால், அதுக்கெல்லாம் இடமேயில்லாம உடனே கல்யாணம் குழந்தைன்னு வாழ்க்கை திசைமாறிப் போயிடுச்சா… இப்ப அந்த இன்ட்ரஸ்ட் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு”.
“நிச்சயம் வீட்லயும் ஒத்துக்கறது கஷ்டம்தான். பேசிதான் இவங்கள சமாளிக்கனும்”.
“சோ… எல்லாம் சேர்ந்து மனசுல ச்சு… போடா… அப்படின்னு தானாவே ஒரு அலுப்பு வந்து உட்கார்ந்துடுச்சு”.
“ஹா… ஹா… அதனால என்ன…கா? இப்ப ட்ரை பண்ணுங்க? உங்களுக்கு பிடிச்சிருந்தா… போங்க…?”
“போய்தான்… பாருங்களேன். எப்படியிருக்குன்னு…? சும்மா மனசுலயே நினைச்சு ஏங்கறதவிட ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க”.
“இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா… நீங்க கண்டிப்பா போய்தான் ஆகனும்னு, இங்க கட்டாயம் கிடையாது. அது பெட்டர் இல்லையா…? பிடிச்சா போங்க. இல்லையா… வேணாம்னு விட்டுடுங்க. எல்லாம் உங்க விருப்பம்தான். காலத்துக்கும் நீங்க வருத்தப்பட வேணாமில்ல. அடிலீஸ்ட் போய் பார்த்தேன், எனக்கு பிடிக்கலன்னாவது… மனச தேத்திக்கலாம்…”.
“ம்ம்… நீ சொல்றதும் நல்ல ஜடியாவாதான் இருக்கு. ட்ரை பண்றேன்”.
காஞ்சனா இவர்களது பேச்சில் எதிலும் தலையிடவில்லை. அவளது கவனம் முழுவதும் சமையலில்தான் இருந்தது. மீனா அறைக்குள் இருந்தார்.
அன்றைக்கு மறுநாளே அஞ்சனா சென்னைக்கு திரும்பியிருந்தாள். இன்னும் பத்து நாட்களில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் வைத்திருந்தனர்.
சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் என இரண்டு குடும்பமும் ஒத்து முடிவெடுத்திருந்தனர். சென்னைக்கு வருவதற்குகூட வேல்முருகன் ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளவில்லை.
லட்சுமிதான் அவரை பேசி பேசியே சரிகட்டியிருந்தார். தந்தைக்கும் மனதின் ஓரத்தில் மகளைப் பார்க்கும், ஆவல் இருந்ததுபோல. அதனால் சரி என்று விட்டார்.
எளிமையாக செய்ய எண்ணியதால், இரண்டு குடும்பம் மட்டும் போதும் என முடிவு செய்து கொண்டனர்.
வெளி மனிதர்களாக நாச்சியப்பன் குடும்பம் மட்டும் வருவதாக இருந்தது. திருமணத்தின்போது நிஷாவும் உமாபதியும் மட்டும் வந்து சென்றிருந்தனர். நாச்சியப்பனும், பிரேமாவும் வரவில்லை.
திருமணத்திற்கு பிறகு அஞ்சனாவைப் பார்க்கவேண்டி அவர்களது குடும்பம் வர இருந்தது.
நிகழ்ச்சிக்கு முந்தின தினமே செல்வதுரை எல்லோரையும் அழைத்து வந்திருந்தார். முன் மாலைப் பொழுதே வந்திருந்ததால், எல்லோருக்கும் இரவு உணவிற்கான வேலை நடந்து கொண்டிருந்தது.
கிட்சனில் அஞ்சனாவும் கீர்த்தியும் இருந்தனர். காஞ்சனா தலைவலி என்று படுத்துவிட்டாள். அவளுக்கு கார் பயணம் ஒத்துக் கொள்வதில்லை எப்போதும்.
வரும் வழியிலேயே தலையை சுற்றி மயக்கத்துடன், இரண்டு முறை காரை நிறுத்தி வாந்தியெடுத்து விட்டுதான் வந்திருந்தாள். ஆதலால் வந்ததும் மாத்திரையைப் போட்டு படுத்து விட்டாள்.
மற்றவர்கள் எல்லாரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். அது இரண்டு அறைகளைக் கொண்ட வீடு. பிள்ளைகளின் விளையாட்டு சத்தத்தால் வீடு இரண்டு பட்டுக் கொண்டிருந்தது.
தேவநானும் இவர்களுடன்தான் கிளம்பி வந்திருந்தான். அவனை இரண்டு நாள் முன்னமே வரச் சொல்லியிருந்தாள் அஞ்சனா. ஆனால் அவனால் வர இயலவில்லை. வேலையிருக்கிறது என்று இவர்களுடன்தான் வந்திருந்தான்.
ஏற்கனவே அவனுக்கு உடல்நிலை முடியாமல் போன சமயத்தில் தேங்கியிருந்த வேலைகளை முடித்துவிட பிரயத்தனபட்டுக் கொண்டிருந்தான்.
ஆதலால், அஞ்சனாவிடம் வந்து நின்று “ஏதாவது வேண்டுமா..? வாங்கி வரவா…?” என்றான்.
“இப்ப எதுவும் வேணாங்க. அக்கா, நீங்க பசங்களுக்கு சாப்பிட குடுங்க. நான் இங்க கவனிச்சுக்கறேன்”.
கீர்த்தியும் தட்டில் பிள்ளைகளுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அஞ்சனா கிட்சனில் தனியாக இருப்பதைப் பார்த்த தேவநாதன் அவளிடம் வந்தான். “ஏதாவது வாங்கனுன்னா…. சொல்லு அனு” என்றான் விடாமல் மனைவியிடம்.
அவனை திரும்பி முறைத்தாள்.
“ஹேய்… என்னமா…….?”
“நீங்களாவது முன்ன வந்திருக்கலாம் இல்ல….?
“என்ன வேணும் சொல்லு. நான் வாங்கிட்டு வரேன். நீ வீட்ல செஞ்சு கஷ்டப்படவேண்டாம்……”
“ம்ப்ச்… நான் இதை சொல்லல. அப்பத்தா போன் பண்ணி கடையில வாங்க சொல்லி, ஒரு லிஸ்ட கொடுத்தாங்க. எல்லாம் நானே தனியா போய் வாங்க வேண்டியதா… இருந்தது. நீங்க இருந்திருந்தா எனக்கு ஹெல்பா இருந்திருக்குமில்ல….?”
“ஒஹ்… என்ன வாங்க சொன்னாங்க…..?”
“சுமங்கலி பொருளுன்னு…. ஒரு லிஸ்ட் அனுப்பியிருந்தாங்க. அதுமட்டுமில்ல, தாலி பிரிச்சு கோர்க்கறதுக்கு செயின் எடுக்க வேண்டியிருந்தது”.
“நான் கேட்டதுக்கு, அத்தை முன்னமே எடுத்து வச்சிருக்காங்கன்னு சொன்னியே டா…..”
“ஆமாம். அம்மா எடுத்து வச்சிருக்காங்கதான். ஆனால் அது கொஞ்சம் பெருசா, வெயிட்டா இருக்கும்னு…, வேற கேட்டேன். டெய்லி போட முடியாது. எனக்கு ஆபிஸ்கெல்லாம் போடற மாதிரி மெலிசா எடுத்துகொடுங்கன்னு சொன்னேன்”.
“அப்ப நீயே உனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துருன்னு பணத்தை அனுப்பி விட்டுட்டாங்க, அக்கௌண்ட்ல”.
“என்கிட்ட நீ எதுவுமே சொல்லலயேமா…? சொன்னாதான தெரியும். எடுக்கனுமா….?”
“நானே எடுத்துட்டேன். நேத்துதான் போய் எடுத்துட்டு வந்தேன். அப்பத்தா, செயின் எடுக்க நல்ல நாள் நேரமெல்லாம் பார்த்து சொன்னாங்க. அப்பதான் எடுக்கனும்னு சொன்னாங்க…..”
“அத்தையாவது முன்னமே வந்திருக்காலமில்ல….?”
“அப்பா வராம, அம்மா மட்டும் எப்படி வருவாங்க…?”
“ஹ்ம்ம்…. எனக்கு இந்த வேலையெல்லாம் இருக்குன்னு, நீயாவது சொல்லியிருக்கலாம்”.
“எனக்குமே அம்மா கேட்கற வரைக்கும், எந்த ஐடியாவும் இல்ல. அம்மா செயின்பத்தி சொன்னப்பதான், அவ்வளவு பெருசா வேணாம்… லைட் வெயிட்டா இருந்தா பெட்டரா இருக்கும்னு பீல் ஆச்சு”.
“இன்னும்… வேற ஏதாவது வாங்கனுமா…?”
“இப்போதைக்கு எதுவும் இல்ல……”
அவனிடம் பேசிக்கொண்டே சப்பாத்திக்கு மாவு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துவிட்டு, தேய்க்க ஆரம்பித்திருந்தாள்.
“குடு நான் தேய்க்கறேன்…” என வாங்கி தேய்த்தான். உருண்டையாக உருட்டி வைத்த கோதுமை மாவை எடுத்து தானே தேய்க்க ஆரம்பித்தான். ஆனால் அவனுக்கு தேய்க்க வரவில்லை.
உருண்டை ஒரு பக்கம் தடிமனாகவும், மறுபக்கம் மெல்லியதாகவும், கோணாலாக வந்தது. முயன்று பார்த்தவன் திரும்பி மனைவியை பார்த்தான் பாவமாக முகத்தை வைத்துகொண்டு.
கொதித்த குருமாவை இறக்கி கிண்ணத்தில் மாற்றியவள், அவன் பார்ப்பதை உணர்ந்து, திரும்பி என்னவென்று பார்த்தாள். கண்களாலேயே தேய்த்து வைத்திருந்த சப்பாத்தியைக் காண்பித்தான்.
அதனைப் பார்த்தவளுக்கு சிரிப்புதான். தோசைக்கல்லை அடுப்பில் வைத்துவிட்டு… “நான் தேய்ச்சுக்கறேன் குடுங்க”, என அவனிடம் இருந்து வாங்கினாள்.
அவள் சப்பாத்தியைத் தேய்த்துதர… அவன் தோசைக்கல்லில் போட்டு எடுத்து வைத்தான்.
பிள்ளைகளை சாப்பிட வைத்துவிட்டு கிட்சனுக்கு வந்த கீர்த்திக்கு, தேவநாதன் அடுப்பில் நின்று சப்பாத்தி போட்டு எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சொல்ல முடியாத ஆச்சர்யம் முகத்தில்.
என்னடா இது நம்ம கொழுந்தனாரா இது…? அவர்கள் வீட்டு ஆண்கள் யாரும் கிட்சன் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். எல்லாம் பெண்கள்தான் அங்கே. இவன் இங்கு மனைவிக்கு உதவிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிசயமாக இருந்தது.
கீர்த்தியைத் திரும்பி பார்த்த அஞ்சனா, “வாங்க க்கா… ஏன் அங்கேயே நின்னுட்டீங்க……?” என்றாள்.
புருஷன் பொண்டாட்டி மட்டும் இருக்காங்க. நாம உள்ள போறதா… இல்ல இப்படியே திரும்பிடறதா… என யோசித்து நின்றவளைத் திரும்பி பார்த்த தேவநாதன், கீர்த்தியைப் பார்த்து சிரித்தான். அவனுக்கும் கூச்சமாக இருந்தது அண்ணியைப் பார்த்து.
அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த கீர்த்தி, ‘’உங்களுக்கு சமைக்க தெரியும்ன்றதே, எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சே கொழுந்தனாரே…’’ என்றாள் கிண்டலாக.
“அய்யோ… அண்ணி… நீங்க வேற. இதுக்கு பேர் சமைக்கறதா…? என் பொண்டாட்டி தனியா செஞ்சிட்டிருக்காளேன்னு, அவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டிருக்கேன்”.
“ஓஹ்… ஹெல்ப்பா… அதைதான் நானும் கேட்டேன். நம்ம வீட்ல கிட்சன் எங்க இருக்கான்னாவது உங்களுக்கு தெரியுமா…?”
“அது… அங்க அம்மாவே எல்லாம் பார்த்துப்பாங்க. அவங்களுக்கு அப்புறம் நீங்களலாம் வந்துட்டீங்க….”
“அதா…ன இல்லனா மட்டும் நம்ம வீட்டு ஆம்பளைங்க…” என ஏதோ சொல்ல வந்தவளை.
“ஹா… ஹா… புல் பார்ம்ல இருக்கீங்க போல. அண்ணன வேண்ணா ட்ரேயின் பண்ணுங்க…..”
“ம்க்கும். ட்ரெயின் பண்ணிட்டாளும். முதல்ல நான் சொல்றத செஞ்சுட்டுதான் அடுத்த வேலையே பார்ப்பார்… உங்கண்ணன்”.
“இருங்க. நான் வேணா அண்ணன கூட்டு விடறேன்…” என நகர முயன்றவனை, “ஏன் கொழுந்தனாரே உங்களுக்கு இந்த கொல வெறி. நான் ஏதோ கேட்கறீங்களேன்னு, என் ஆதங்கத்த கொட்டி தீர்த்தேன். அந்த மனுஷன் அவ்வளவுதான், உச்சானி கொம்புல ஏறிடுவார்” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“சும்மா அண்ணி. விளையாட்டுக்கு. பயந்துட்டீங்களா….?”
கீர்த்தி, “நீங்க வாங்க. நான் போட்டு எடுக்கறேன்…..”
“இருக்கட்டும் அண்ணி. நானே முடிச்சுடறேன். இன்னும் கொஞ்சம்தான இருக்கு”.
“சரி. அப்ப நான் எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு வைக்கவா….? நாலு பேர்தான டேபிள்ல உட்கார முடியும்?”
“சரி க்கா.. நீங்க பாருங்க…” என சமைத்ததை எல்லாம் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள் அஞ்சனா.
கீர்த்தி அறைக்குள் சென்று காஞ்சனாவை எட்டிப் பார்த்தாள். அவள் இன்னும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல், மற்றவர்களை அழைத்து சாப்பாடு வைக்க ஆரம்பித்தாள்.
செல்வதுரையும் மீனாவும்… இட்லி மட்டும் போதும் என்று அதனுடன் எழுந்துவிட்டனர். இரவு நேரம் என்பதால் செரிப்பதற்கு இலகுவாக அதோடு முடித்துக்கொண்டனர். கார்த்திக் விவேக் இட்லியுடன் சப்பாத்தியும் வைத்து சாப்பிட்டனர்.
செல்வதுரையும் மீனாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தவுடன், கீர்த்தியும் தனக்கு ஒரு தட்டு எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். அவள் பசி தாங்க மாட்டாள். அவளுடன் தேவநாதனும் உட்கார்ந்தான் சாப்பிடுவதற்கு.
“நீயும் உட்காரு அஞ்சனா சேர்ந்து சாபிடலாம்…” என்றாள் கீர்த்தி.
“இன்னும் காஞ்சனா அக்கா சாப்பிடலையே. அவங்க வரட்டும் அவங்களோட சேர்ந்து சாப்பிடறேன். நீங்க சாப்பிடுங்க”.
“அவங்க நல்லா தூங்கறாங்க. எழுந்தா சாப்பிடுவாங்க. நீ சாப்பிடு அனு”.
“இருக்கட்டுங்க. நீங்க சாப்பிடுங்க. கொஞ்ச நேரம் அவங்களுக்காக வெயிட் பண்ணி பார்க்கறேன்”.
அவளுக்கு தன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களை விட்டு சாப்பிட்டால் மரியாதையாக இருக்காது என எண்ணி காத்திருந்தாள் காஞ்சனாவுக்காக.
அடுத்து அரைமணி நேரத்தில் காஞ்சனாவும் எழுந்து வந்தாள். அவளும் அசதியுடன் கூடிய பசியில் இருந்ததால், ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு பிள்ளைகளுடனேயே படுத்துவிட்டாள்.
ஆண்கள் எல்லோரும் வெளியே ஹாலில் படுத்துக் கொண்டனர். காஞ்சனாவும், கீர்த்தியும் பிள்ளைகளுடன் ஒரு அறையில் படுத்துக் கொண்டனர்.
அஞ்சனாவின் அறையில் இருந்த கட்டிலில் மீனா படுத்திருந்தார். அஞ்சனா கட்டிலின் கீழேயே போர்வையை விரித்து படுத்துக் கொண்டாள்.
மறுநாள் அதிகாலையிலேயே அலாரம் வைத்து அஞ்சனா எழுந்துவிட்டாள். குளித்து முடித்து வெளியே வந்தவள், ஹாலில் படுத்திருந்த ஆண்களைப் பார்த்து நின்றாள். எல்லோரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல், மெல்ல சத்தமிடாமல் பையையும், பர்சையும் எடுத்துக் கொண்டு வெளிக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். அதற்குள் அந்த சத்தத்தில் செல்வதுரை முழித்துவிட்டார்.
இவள் வெளியே பையுடன் வெளியே செல்வதைப் பார்த்தவர், எழுந்து வந்து ‘’எங்கம்மா போறே…..? இந்நேரத்துக்கு’’ என்றார் இவளிடம். விடிந்தும் விடியாத காலைப் பொழுது.
“பால் வாங்கிட்டு வந்துடறேன், மாமா…”
“குடு. நான் வாங்கிட்டு வரேன். இன்னும் வெளிச்சம்கூட வரல. நீ தனியா போகவேண்டாம்”.
“இருக்கட்டும் மாமா. உங்களுக்கு கடை எங்க இருக்குன்னு தெரியாதுல்ல. இங்க பக்கத்துலதான் மாமா. நான் வாங்கிட்டு வந்துடறேன்”.
“சரி. வா….., நானும் வரேன்” என அவளுடன் சேர்ந்து நடந்தார்.
“அப்பா, அம்மாலாம் எப்ப வரேன்னாங்க…….?”
“காலையில வந்துருவாங்க….”
பேசிக்கொண்டே அந்த தெருவின் இறுதிக்கு நடந்து வந்திருந்தனர். அங்கு ஒரு சின்ன மளிகைக்கடை இருந்தது. அப்பொழுதுதான், அவர் கடையை திறந்து கொண்டிருந்தார். இவர்கள் அங்கு வந்து நின்றதைப் கண்டதும், என்ன எனப் பார்த்தார், எதுவும் பேசாமல்.
“அண்ணே, பால் பாக்கெட் வேணும்…”
இரண்டு நிமிடம் இவர்களை காத்திருக்க சொன்னவர், சாமி படத்தின் முன் இருந்த தீபத்தை ஏற்றி, ஊதுபத்தி காட்டிவிட்டு வந்து, கடைக்கு வெளியில் வந்து இறங்கியிருந்த இன்றைய பாலிலிருந்து, இவளுக்கு பால் பாக்கெட் எடுத்துக் கொடுத்தார்.
பாலுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பி செல்வதுரையுடன் வீட்டிற்கு நடந்தாள்.
“இன்னும் வேற ஏதாவது வாங்கனுமா ம்மா…?”
“எல்லாம் இருக்கு மாமா. பால் மட்டுந்தான்…. நைட்டே வாங்கியிருப்பேன். நேத்தைய பால் குழந்தைகளுக்கு ஒத்துக்குமோன்னு பயமா இருந்தது. அங்கனா பசும்பால் சாப்பிடுவாங்க. இங்க பாக்கெட் பால்தான். அதான் பிரஷா வாங்கறேன்”.
“சரிடா…. சாப்பாடுகூட, நாம கடையிலிருந்து வாங்கிக்கலாம். நேத்து மாதிரி நீ வீட்டுல செஞ்சு கஷ்டப்பட வேணாம்”.
“நானே ஆர்டர் பண்ணிட்டேன் மாமா. இங்க பக்கத்துல ஒரு அம்மா வீட்லயே செஞ்சு கொடுக்கறாங்க. நல்லாயிருக்கும். சுத்தமாவும் செய்வாங்க. முன்னமே சொல்லிட்டோம்னா….. வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துடுவாங்க”.
“அம்மாகிட்ட முன்னமே என்ன ஐட்டம்றத கேட்டு ஆர்டர் பண்ணிட்டேன்”.
“சரி ம்மா. வேற ஏதாவது வாங்கனும்னாகூட சொல்லுடா…., பசங்க இருக்காங்க இல்ல. நீ போக வேணாம்”.
சரி என தலையசைத்து கொண்டாள். வீட்டிற்குள் வந்து பாலை பிரிட்ஜில் வைத்தவள், அடுப்பை ஆன் செய்து, டிகாஷன் இறக்கி, பாலை காய்ச்சி தனக்கும் செல்வதுரைக்கும் காப்பி சேர்த்தவள் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
அதற்குள் செல்வதுரையும், பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்திருந்தார். அவர் கையில் காப்பியை கொடுத்தவள், தனக்கான காப்பியுடன் கிட்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.
பெரிய சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து நன்றாக கொதிக்க வைத்தவள், அதிலேயே சிறிது சீரகத்தையும் சேர்த்து இறக்கி வைத்தாள் குழந்தைகள் குடிப்பதற்காக.
வீட்டின் வாசற்படிக்கு வெளியில் இருந்த இடத்தை பெருக்கிவிட்டு, ஈரத்துணியால் அந்த இடத்தை துடைத்து, சின்னதாக மாக்கோலம் போட்டாள்.
பிரிட்ஜிலிருந்து கதம்பமாக கட்டியிருந்த பூவை எடுத்து வந்து நீளமாக கட் செய்தவள், வாசற்படியின் இருபக்கமும் மாலையாக தொங்கும்படி மாட்டி விட்டாள். மார்கெட்டிலிருந்து வாங்கி வந்திருந்த மாவிலை தோரணங்களையும், இரண்டு பக்கமும் கட்டி விட்டாள்..
ஹாலின் ஒரு பக்கத்திலேயே இருந்த பூஜை மாடத்தில், இருந்த சாமி படங்களுக்கும் பூவை கட் செய்து போட்டவள், விளக்கில் எண்ணெய்விட்டு, தீபமேற்றி, இரண்டு ஊதுபத்தியையும் ஏற்றி வைத்து விழுந்து வணங்கினாள்.
செல்வதுரை இவள் செய்வதை எல்லாம் பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தார். அதற்குள் கீர்த்தியும் காஞ்சனாவும் எழுந்து வந்திருந்தனர். அவர்களுக்கும் காப்பி சேர்த்து குடிக்க கொடுத்தாள்.
அஞ்சனாவின் போன் ஒலிக்கவே, அதனை சென்று எடுத்துவந்து பார்த்தாள். நிஷாதான் அழைத்திருந்தாள். எடுத்து பேசினாள். வீட்டின் அட்ரஸ் கேட்டு அழைத்திருந்தாள்.
‘’நான் மெசேஜ் பண்றேன் நிஷா’’
‘’லொக்கேஷனும், ஷேர் பண்ணுடி….”
“சரி பண்றேன்…”
நிஷாவுக்கு பேசியதுபோல மெசேஜ் செய்து, லோகேஷனையும் ஷேர் செய்தாள். பெங்களூரிலிருந்து டிரெயின் மூலமாக வந்திருந்தனர். ஆதலால் இரயில் நிலையத்தில் இறங்கியதுமே, அட்ரஸை கேட்டு போன் செய்திருந்தாள்.
போன் சத்தத்திலேயே எல்லோரும் விழித்திருந்தனர். பிள்ளைகள்கூட முழித்துவிட்டனர். அவர்கள் எல்லாம் எழுந்ததும் வரிசையாக ஒருத்தர் ஒருத்தராக குளித்து ரெடியாக ஆரம்பித்தனர்.
காலை நேரமென்பதால் டிராபிக் இல்லை. அடுத்த இருபது நிமிடத்தில் நிஷா அவளது குடும்பத்துடன் வந்து சேர்ந்திருந்தாள்.
வந்தவர்களை, அந்த பிளோரில் இருந்த லிப்ட் திறந்து வெளியே வரும்போதே சென்று, இன்முகத்துடன் வரவேற்றவள், நீண்ட நாள் சென்று தோழியைக் கண்டதும் பாய்ந்து இறுக்கமாக கட்டிக் கொண்டாள் அங்கேயே அஞ்சனா சந்தோஷமாக.
“போடி, நீ என்ன பண்ணாலும், நான் உன்கூட பேசமாட்டேன். உன்மேல எனக்கு கோவம். கோச்சுட்டிருக்கேன். நீ ஒன்னும் என்னை சமாதானப்படுத்தாத…” என அவளை விட்டு விலக முயன்றாள் நிஷா. அஞ்சனாவும் சிரித்துக்கொண்டே அவளது கையை இறுக்கமாக பிடித்தவள், “வாடி வாலு…., உள்ள வரதுக்கு முன்னயே சண்டை போடனுமா…? உள்ள வந்துதான் போடேன். உள்ள வா…” எனக் கைப்பிடித்து வீட்டினுள் இழுத்து வந்தாள்.
திருமணத்திலேயே நிஷாவையும் உமாபதியையும் எல்லோரும் பார்த்திருந்தனர். ஆதலால் நிஷா உமாபதியைப் பற்றி தெரியும். ஆனால் நாச்சியப்பன் பிரேமா இப்பொழுதுதான் வருகிறார்கள். அவர்களுக்கு இங்கே யாரையும் தெரியவில்லை.
அஞ்சனா நாச்சியப்பனையும் பிரேமாவையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களுக்கு குடிப்பதற்காக வெந்நீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
பிரேமா, “இருக்கட்டும் அஞ்சு.. பிரஷ் பண்ணனும். இன்னும் அம்மா அப்பா வரலையா….. மா…..?” என்றார்
“வந்துருவாங்க ஆன்ட்டி. காலையில கிளம்பியிருப்பாங்க….”
நாச்சியப்பன் பிரேமாவை அழைத்துக்கொண்டு போய் பாத்ரூமை காட்டியவள், அவர்களுக்கு காபி சேர்ப்பதற்காக கிட்சனுக்குள் சென்றாள்.
இப்படியே அனைவரும் ரெடியாகவும், ஆர்டர் செய்திருந்த இடத்திலிருந்து டிபனும் வந்தது.
கீர்த்தி, “எல்லாரையும் கீழயே உட்கார வைச்சி பரிமாறிடலாம் அஞ்சு… உட்கார முடியாதவங்க மேல உட்காரட்டும்”.
சரி என தலையசைத்துக் கொண்டாள் அஞ்சனா. பெரியவர்களுடன் சேர்த்து பிள்ளைகளையும் வரிசையாக உட்காரவைத்து, பரிமாறினார்கள்.
நாச்சியப்பன், பிரேமா, மீனா மட்டும் மேலே டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டனர் உண்பதற்காக. முட்டிவலி இருப்பதால் அவர்களால் தரையில் சம்மணமிட்டு அமருவது கடினம்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன், காஞ்சனா, கீர்த்தி, அஞ்சனா, நிஷா எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கொண்டனர்.
அவர்களே எடுத்து வைத்து சாப்பிடுகிறேன் என்று சொல்லியும் தேவநாதன் வந்து நின்று பரிமாற துவங்கினான். அவனைப் பார்த்து பிரேமா வந்து நின்றார்.
“நீங்க போங்க ஆன்ட்டி. நாங்களே எடுத்துப்போம்”.
“இருக்கட்டும் டா…. சாப்பிடுங்க. நான் இருக்கேன்…” என அவர்கள் சாப்பிட்டு எழும்வரை கூடவே நின்றிருந்தார்.
பிரேமா, “அம்மாக்கு போன் போடுடா… டைமாகுதே…”
“இப்பதான் பேசினாங்க, ஆன்ட்டி, கிட்ட வந்துட்டாங்களாம். பூ மாலை எல்லாம் வாங்கறதுக்காக, மார்கெட்ல நின்னுட்டிருக்கோம். வந்துடறோம்னு சொன்னாங்க”.
சரி எனத் தலையசைத்து கொண்டார் பிரேமா.
தொடரும்.
error: Content is protected !!