Skip to content
Post Views: 1,322
அத்தியாயம் 7
ஹாலில் ஃபேன் ஓடும் சத்தத்தோடு ஆடவனின் முனகல் சத்ததமும் மெல்லியதாக கேட்டுக் கொண்டிருந்தது.
Advertisement
“சாரி நிலவே தப்பா நினைக்காத ஏதோ ஒரு ஆர்வத்தில் இப்படி பண்ணிட்டேன்…’ என முனகி கொண்டே அலைப்பேசியில் டைப் செய்தவன்
“இல்லை இல்லை வேண்டாம்…ம்ம்…” என்று அதனை அழித்தான் மீண்டும்.
Advertisement
Advertisement
‘சாரி இதயா, நான் தெரியாம இப்படி பண்ணிட்டேன்…’ என்று எழுதியவன்
“ஹுக்கும்.. எனக்கு வேணும்டினு ஒரு பார்வை பார்த்துட்டு இப்ப தெரியாம பண்ணேன் சொன்னா குழந்தை கூட நம்பாதுடா…” என தனக்கு தானே காரித்துப்பியப்படி பட்டென பேக் பட்டனை அழுத்தி அவன் எழுதியதை மீண்டும் டெலீட் செய்தான் .
Advertisement
‘சாரிடி பொண்டாட்டி.. இனிமே உன் பக்கத்துல கூட வர மாட்டேன்…’ என டைப் செய்தவன் மனம் அவளின் இதழ்களை நினைவு படுத்தியது.
‘ஐயோ அப்ப அது வேண்டாம் வேற, வேற என்ன சொல்லி சமாளிக்கலாம்…’ என நினைத்தவன் மீண்டும் ‘இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்…’ என எழுத எழுதவே
“என்ன மகனே, முப்பது நொடிகளில் மனைவியின் காலில் விழுவது எப்படின்னு ஆன்லைன் கோர்ஸ் ஏதாவது தேடிட்டு இருக்கியா?…” என்றபடி அவனின் அருகில் அமந்தார் ஈஸ்வர்.
தந்தையின் குரலில் அலைபேசியில் டைப் செய்து கொண்டிருந்தவன் கைகள் அப்படியே நின்றது. நிமிர்ந்து பக்கவாட்டில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்தான். அவரோ புருவத்தை உயர்த்தி கேலியாக பார்த்தார்.
“என்ன நைனா…” என்றான் நைசாக அலைபேசியை பாக்கெட்டில் வைத்தபடி.
அவனது செயலை புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்த்தவர்
“என்ன டா, ஏதோ திருட்டுத்தனம் பண்ணிட்டு முழிக்கர மாதிரி இருக்கு… என்ன பண்ண…” எனக் கேட்க, உண்மையாகவே ஐயோ என்றிருந்தது சுதனுக்கு.
சட்டென சோபாவை விட்டு எழுந்து நின்றவன் “யோவ் தகப்பா, எனக்கு கல்யாணமாகி ஒரு வாரம் முடிஞ்சுருச்சியா, இப்ப நானும் குடும்பஸ்தன். இன்னும் ஏதோ சின்ன பிள்ளையை விசாரிக்கற மாதிரி விசாரிக்கறீங்க. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்…” வெகுண்டெழுந்து கூறினான்.
அவனை ஏறயிறங்க பார்த்தவர் “அடச்சீ உட்காரு…” என்க
முகத்தை தொங்க போட்டபடி தந்தையின் அருகில் அமர்ந்தவன் அவரின் தோளில் வாகாக சாய்ந்தான்.
“உங்கம்மாவை ஏதாவது சமாதானம் பண்ண வேணும்னா கால்ல தான் விழுவேன் மகனே. மருமககிட்ட இது வொர்க்கவுட் ஆகுதான்னு பாரு…” என்றதும் தந்தையை பார்த்து சிரித்தான் சுதன்.
“என்னடா சிரிக்கிற வேணும்னா ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லு அடுத்த ஐடியா ஏதாவது சொல்றேன்…” என்றார் சீரியஸ் டோனில்.
அவரது பேச்சில் “அப்பா…” என்று சத்தமாக சிரித்தான். மகனின் சிரிப்பை இமைக்காது பார்த்தவர் அவனது தோளில் கைப்போட்டு
“எதுவா இருந்தாலும் பேசி புரிய வைக்க ட்ரை பண்ணு. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசினாலே பாதி பிரச்சனை முடிஞ்சுரும்…” என்றார் பெரியவராக.
அவரின் பேச்சிற்கு பதில் சொல்லாமல் சரியென்று தலையாட்டியவன் “கிடைச்ச கேப்ல எல்லாம் கோல் போட ட்ரை பண்ற மை டியர் டாடி. இது நல்லதுக்கே இல்லை…” எனக் கேலியாக கூறிவிட்டு அறையை நோக்கி நடந்தான்.
தந்தையின் சொல்லை இப்போதே காது கொடுத்து கேட்டிருந்தால் பின் வரும் விளைவுகளையும் பிரிவினையும் தடுத்து இருப்பானோ என்னவோ…
தந்தையின் பேச்சை அசைப்போட்டப்படி தங்களின் அறைக்குள் நுழைந்தவன் பார்வை படுக்கையில் குப்புற படுத்திருந்த மனைவியின் மீது விழுந்தது. தன் செய்கையால் பழைய நினைவுகளின் தடங்கள் நினைவு வந்து விட்டதோ என பதறியவனாய் மனைவியின் அருகில் சென்றான்.
தைரியமாக உள்ளே வந்து விட்டான் என்றாலும் இப்போது எப்படி மனைவியை அழைப்பது என்று கூட தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட அது அவனுக்கு வரவில்லை.
“நிலா திரும்பி படு…” முயன்று வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில் கூறினான்.
ஆனால் அது அவளுக்கு ஒருவித பயத்தை கொடுத்திருக்க வேண்டும் லேசாக உடல் நடுங்கியது.
அவளின் நடுக்கம் அப்பட்டமாய் அப்படியே தெரிய “நிலாடா…” என்று மங்கையின் தோள் தொட்டான். அடுத்த நிமிடம் பட்டென தட்டி விட்டு எழுந்து அமர்ந்தவளின் கண்கள் எதிரில் இருந்தவனை கண்டதும் ஆசுவாசமடைந்தது.
“நிலாடா… என்னடா ஆச்சு, நிலா…” என்றவனுக்கு குரலே வரவில்லை. தன் தொடுகையால் தன் செய்கையால் தான் இப்படி நடந்து கொள்கிறாள் என நினைத்தவனுக்கு மனதின் ஓரத்தில் இனம் புரியா வலி ஏற்பட்டது.
பாவம் அவனுக்கு தெரியவில்லை அவளின் தற்போதைய நிலைக்கு காரணமே தன் விலகல் தான் என்று. அதை அவன் அறிந்து கொள்ளும் நாளில் அவனின் மனைவி அவனிடத்தில் இருக்க மாட்டாள் என்பது இன்று அவன் அறிந்திருக்கவில்லை.
******
அங்கே வாசுவின் இல்லத்தில்…
தன்னை கண்டும் காணாமல் சென்ற பெண்ணை அழுத்தமாக பார்த்தான். மங்கையின் தவிர்ப்பு எப்பொழுதும் போல இவனுக்கு ஒருவித சுவாரஸ்யத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது… அதுவும் சற்று முன்னர் அவளின் திகைத்த தோற்றம் இவனுக்கு சிரிப்பை கொடுத்தது.
மெல்லிய புன்னகையுடன் பெட்சீட்டை மடித்து அதற்கான இடத்தில் வைத்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
இங்கு வாசுவின் ஸ்டடி ரூமிற்குள் நுழைந்த பாவையின் கண்கள் ஆச்சரியத்தில் அப்படியே விரிந்து கொண்டது.
உண்மையாகவே இத்தனை நேர்த்தியாய் இருக்குமென யோசிக்கவே இல்லை அவள். சோறு சோறு சோறு என்பதை போல் புத்தகம், புத்தகம் புத்தகமென்று அந்த அறை முழுவதும் புத்தகமாக இருக்கும் என நினைத்தாள். ஆனால் இங்கோ அப்படியே மாறியிருந்தது ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பெரிய புத்தக அலமாரி இருந்தது.
மற்ற அனைத்திலும் ஓவியங்கள் மட்டுமே அதன் ஆட்சியை செய்தது. ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதைகளை கூறியது.
தூரத்திலிருந்து பார்த்தால் ஓவியங்கள் மட்டுமே கண்களுக்கு புலப்படும். அதுவே அதன் அருகில் சென்றால் ஓவியத்தில் இருக்கும் சில வாக்கியங்கள் தெரியும். ஓவியத்தின் அர்த்தம் ஒன்றை கூறுகிறது என்றால் அந்த ஓவியத்தில் இருந்த வாக்கியங்கள் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை கூறியது.
அவ்வறையிலிருந்த ஓவியங்களையும் வாக்கியங்களியும் நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மொத்தமாக அந்த ஓவியங்களிலும் அதில் எழுதியிருந்த வாக்கியங்களிலும் மூழ்கி விட்டாள்.
அதே கணம் வாசுவின் அறையில் குளித்து முடித்து வெளிவந்திருந்தான். ஈரக் கேசத்தைத் துடைக்க கூட இல்லாமல் தன் அறைக்கு அருகிலிருந்த ஸ்டடி ரூமுக்கு சென்றான். உள்ளே சென்றவனின் கண்கள் தான் வரைந்த ஓவியங்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்தது.
அவளின் அந்த ரசனையை பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்தவன் “ஸ்டடி மெட்ரியல் எடுக்க வந்ததா தான் அம்மா சொன்னாங்க…” என்று கூற, தீடிரென கேட்ட குரலில் தன்னிலைக்கு வந்தவள் குரல் வந்த திசையைப் பார்த்தாள்.
குளித்து முடித்துவிட்டு தலையைக் கூடத் துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட, முகத்தை உர்ரென்று வைத்திருந்த ஆடவனை தான் கண்டாள்.
உண்மையாகவே கண்களை அவனிடமிருந்து அகற்ற முடியவில்லை பெண்ணாள்… ஓவியமாக தெரிந்தான்! சுவரிலிருந்த ஓவியங்கள் எல்லாம் அவனிடம் பிச்சை கேட்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
பாவையின் எண்ணத்திற்கு ஏற்ப அவன் இருக்கிறானா என்ன? அத்தனை அழகா இந்த வாசுதேவன்… என கேட்டால் பாவையின் பதில் ஆமேன்று தான் வரும்.
இங்கு அழகு என்பது மற்றவர்களின் பார்வையை பொறுத்து மாறும். பெண்ணின் பார்வையில் வாசுதேவன் தான் அழகு. அத்தனை அழகு, ஓவியத்தை மிஞ்சும் அழகு… நிலைக்கதவில் சாய்ந்து நின்ற ஆடவனின் முகத்தை இமைக்காது பார்த்திருந்தாள்.
அவளின் பார்வையில் இவனுக்கு தான் வெட்கம் வந்து தொலைத்தது. சிவக்க துடித்த கன்னங்களை மறைக்க முயன்றபடி மங்கையை முறைத்துப் பார்த்தான்.
நல்ல களையான முகம், சிறிய நெற்றி, கூர்மையான நாசி அதில் பளபளக்கும் ஒற்றைக் கல் மூக்குத்தி, குழி விழும் கன்னம், செப்பு இதழ்கள் என்று பார்க்கவே அத்தனை அழகாய் இருந்தாள். அவளின் உயர்த்திற்கு பந்தமாய் பொருந்தியிருந்த அந்த வெள்ளை நிற உடை அவளை ஓர் தேவதையாய் காட்டியது.
பாவையின் பார்வையை தவிர்த்தப்படி அவளை நெருங்கியவன் “இன்னும் கேட்ட கேள்விக்கு பதில் வரல நவினா…” என்று முயன்று வரவழைக்கப்பட்ட கடுமையான குரலில் கேட்டான்.
ஆடவனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் கண்கள் இரண்டும் தன்னிச்சையாக விரிந்து கொள்ள தன்னை நெருங்கி நின்றவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
“என்ன பதில் சொல்லு” என இறுகிய முகத்துடன் அவன் கேட்க.
“அது தேவ்., நான்…” ம்ஹும் வார்த்தையே வரவில்லை. அவனின் அருகாமையில் படபடவென இதயம் துடித்தது. சண்டைப் பிடிப்பாள் இல்லை அன்று போல இன்றும் ஏதாவது கிறுக்குதனம் செய்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ அதற்கு நேர் மாறாக நின்றிருந்தாள். அது அவனுக்கு மென்மேலும் சுவாரஸ்யத்தை கொடுக்க, அவர்கள் இருவருக்குமான இடைவெளியை சிறிதேனும் குறைத்தான்.
“என்ன சொல்லு…” என கடுமையாக அவனது குரல் ஒலிக்க, “ஹான்… என்ன… என்..ன… சொல்லணும்…” எனக் கேட்டவளின் இமைகள் இரண்டும் படபடவென அடித்துக் கொண்டது.
“கேட்கலை…” என்றபடி அவளின் இதழ்களுக்கு அருகில் செவியை கொண்டு செல்ல “ப்பா…” என்றவள் சுவரோடு சுவராக ஒட்டி நின்றபடி “தேவ்… கொஞ்சம் தள்ளி நில்லு…” என நடுங்கும் இதழ்களோடு கூறினாள்.
காரிகையின் இதழ் நடுக்கத்தை இமைக்காது பார்த்தவன் பட்டென நடுங்கும் இதழ் மீது தன் இதழை வைத்து அழுத்தினான். இரு இதழ்களின் மோதலில் சின்ன சத்தம் கூட வெளிவந்தது. ஆடவனின் நெருகத்திலேயே இதழ்கள் நடுங்க செய்தது. தற்போது சொல்லவா வேண்டும்? உடல் மொத்தமும் நடுக்கம் கொண்டது பெண்ணிற்கு… உடலின் நடுக்கமும், இதழ்களின் நடுக்கமும் அவன் மெய் தீண்டலில் இன்னும் இன்னும் அதிகரிக்க விழிகளை இறுக மூடிக் கொண்டவள்
“தேவ்…” என்றாள் மெல்லிய குரலில்
“என்ன பதில் சொல்லு…” என்றவனது குரல் முன் போல் நெருக்கத்தில் தான் கேட்டது. ஆனால் இதழ்கள் அணைக்கவில்லை, உடல்கள் உரசிக் கொள்ளவில்லை.இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. அதை அவள் உணர்ந்ததும்
சட்டென விழிகளை திறந்தாள்.
அவன் நெருங்கியது மட்டுமே உண்மை… மற்ற அனைத்தும் கனவு என்பது புரியவே நிமிடங்கள் தேவைப்பட்டது… திருத்திருவென விழித்து நின்றவளின் காதல் மனமோ ‘ஆத்தி கனவா…’ என்று பதறியது.
அதே நேரம் மங்கையின் ரோசக்கார மனமோ ‘ச்சீ ச்சீ கனவா இருந்தாலும் இப்படியா?…’ என்று நவியின் காதல் மனதை கடித்து குதறியது.
“காதலுன்னு வந்துட்டா இப்படியான கில்மா சீன்ஸ் எல்லாம் இருக்க தான் செய்யும். உனக்கு வெட்கம், மானம் சூடு, சொரனை இருந்தா கொஞ்சம் தள்ளி நில்லு…” எனக் கேலியாக கூறிய மனதை முறைத்த மற்றொரு மனமோ “கொஞ்சம் கூட அறிவே இல்லையாடி உனக்கு, அத்தனை பேர் முன்னாடி கைநீட்டி அடிச்சதும் இல்லாம ஏதோ சாக்கடையை பார்க்கிற மாதிரி பார்த்திட்டு போனவனை மறுபடியும் மறுபடியும் வெட்கமே இல்லாம பார்த்து வைக்கற, அட எனக்கு இருக்கிற ரோசமாவது உனக்கு வேண்டாம்…” எனக் கத்தியது.
இரு மனங்களில் போராட்டத்தில்
மற்ற அனைத்தும் பின் சென்றுவிட அன்றைய நாளின் தாக்கம் இப்போதும் உணர்ந்தாள். கண்களை இறுக மூடித் திறந்தவள் தன் அருகில் நின்றவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
அவனோ தன் பார்வையை துளியும் மாற்றாமல் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வைக்கு பதில் பார்வைக் கூட பார்க்காது அங்கிருந்து வேகமாக நடந்தாள். அவள் தன்னை விட்டு விலகி வேகமாக செல்வதை புருவங்கள் சுருங்க பார்த்தவன் “என்ன…” என்று அதட்டினான்.
அவனின் அதட்டல் எல்லாம் அவளிடம் செல்லுமா என்ன? கொஞ்சம் கூட மதிக்காமல் வெளியில் சென்றாள். அவளின் இந்த செய்கை அவனுக்கு எரிச்சலை கொடுக்க “ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத, உன்னை எனக்கு பிடிக்கலன்னு சொல்லியும் இப்படி வீடு தேடி வரதெல்லாம் ரொம்ப சீப்ப்பா இருக்கு…” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு
“உங்ககிட்ட என்னோட காதலை சொன்னதுக்காக என் கேரக்டரை நீங்க ஜட்ஜ் பண்ண வேணும்னு ஒரு அவசியமும் இல்லை மிஸ்டர் வாசுதேவன். அண்ட் உங்களை வீடு தேடி வந்து பார்க்கற அளவுக்கு நீங்க பெரிய ஆணழகன் கிடையாது…”
” உங்க மைண்ட்ல எங்காவது நீங்க ஒரு பேரழகன்னு ரேஜிஸ்டர் ஆயிருந்தா தயவு செஞ்சு அதை டெலீட் பண்ணிடுங்க… நீங்க அந்ளவுக்கு வொர்த் இல்லை…” என்றவள் சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்து செய்த காரியம் அவன் விழிகளை விரிய செய்தது.
error: Content is protected !!