அன்று அலுவலகத்தில் வசீகரன், தனது அறையில் இருக்க, அவனின் எண்ணங்களோ உமையாள் வரவேற்பிற்கு, பிறகு நடந்தவைகளை அசைபோட்டு கொண்டிருந்தது.
உமையாள், கிருஷ்ணா வரவேற்பு முடிந்த, இரண்டு நாட்களில், உமையாளின் அப்பா மற்றும் பாட்டி அவர்களின் நாட்டிற்கு திரும்பினர்.
ஒரு வாரத்தில் எல்லாரும் இயல்பிற்கு திரும்பிய பிறகு, வசீகரன் அவனின் பெற்றோரிடம், அவனின் காதலை சொல்ல முடிவு செய்து, அவர்களை கூடத்திற்கு அழைத்தான்.
தன் பெற்றோர் வந்தவுடன், அவர்களுக்கு எதிரில் அமர்ந்தவன், அவனின் தந்தையை பார்த்து கொண்டே,
“அப்பா, எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சி இருக்கு” என்று எந்த முகவுரையும் இல்லாமல் சொல்ல, அவனின் தாய் அவனை ஆச்சர்யமாக பார்க்க, அவனின் தந்தையோ ஆராய்ச்சியாய் பார்த்தார்.
“யாரு கரன் அந்த பொண்ணு” என்று கேட்க, வசீகரன், கொஞ்சமே கொஞ்சம் தயக்கத்துடன்,
“பேரு நிலவழகி, அப்பா ஸ்கூல் ஹெட் மாஸ்டர் அஹ இருக்காரு, அம்மா இல்ல, அவங்க, என்னோட ஆபிஸ்ல தான் கியூ.சி மேனேஜர் அஹ இருக்காங்க அப்பா”
என்று அவளின் முழு குடும்ப விவரத்தையும் சொல்ல, அவரோ யோசனையுடன் தாடையை தடவியவர்,
“இது எல்லாம் சரி வராது கரன்” என்று முடித்து விட்டு, அவன் பேச கூட வாய்ப்பு கொடுக்காமல் எழுந்து செல்ல, வசீகரன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
ஜெயந்தி அம்மாவோ மெதுவாக அவனை நெருங்கி, அவனின் முகத்தை நிமிர்த்தி,
“டேய் பொண்ணு போட்டோ இருக்காடா” என்று ஆர்வமே உருவாய் கேட்க, அவரின் ஆர்வத்தில் சற்றே ஆசுவாசமானவன் ஒரு சிரிப்புடன்,
“இல்லையே மாதாஜி” என்று கை விரிக்க, அவர் அவனை நம்பாத பார்வை பார்த்து வைக்க, அவனோ,
“நம்புங்க மாதாஜி, உங்க மருமக இன்னும் என்னை ஓகே பண்ணவே இல்லை”, என்று சொல்ல, அவன் சொல்லியதை கேட்ட, அவரோ சற்றே கோவத்துடன்,
“என்னவாம் அவளுக்கு, என் பையனுக்கு என்ன குறைச்சலாம்” என்று ஒரு சராசரி தாயாக ஆதங்கபட, அவரின் கைகளை பிடித்து கொண்ட வசீகரனோ,
“எனக்கு எல்லாமே அதிகமா இருக்காம், அதான் பிரச்சனை”, என்று சொல்ல, அவனின் அம்மா அவனை புரியாமல் பார்க்க, அவனே மீண்டும்,
“நம்ப பணக்காரங்களாம், அவங்க மிடில் கிளாஸ் ஆம், அதுனால் இது எல்லாம் சரி வராதாம், உன்னோட புருஷன் என்ன நினைக்கிறாரோ அதையே தான் அவளும் சொன்னா”
என்று சொல்ல, அவன் வெளிக்காட்ட விழையவில்லை என்றாலும், அவள் நிராகரித்த வலி, அவனின் மனதை தைப்பது அவருக்கு புரிய, வேறு ஏதோ பேசி அவனை சமாதனப் படுத்தினார் ஜெயந்தி அம்மா.
ஏதோ எடுக்க வந்த வசீகரனின் அப்பா, அவன் சொல்லியவற்றை கேட்டவர், தான் வந்த வேலையை மறந்து, அவன் சொல்லியவற்றை பற்றி யோசித்து கொண்டே தனது அறைக்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு அவரும் அதை பற்றி கேட்க வில்லை, வசீகரனும் அவரிடம் அதைப்பற்றி பேசவில்லை.
வசீகரன் வெளியே இயல்பாக இருப்பது போல காட்டி கொண்டாலும், உண்மையில் அவன் அப்படி இருக்க வில்லை.
இரவில் உறக்கம் தொலைத்து, நெடுநேரம் தோட்டத்தில் நடை பயில்வது, அவ்வப்போது தன்னை மறந்து ஏதாவது யோசனையில் மூழ்குவது என இருந்தான்.
தன் அலைகழிப்புகளை எல்லாம் அவன், அவனின் தாயிடம் இருந்து இலாவகமாக மறைக்க, அவனின் தந்தையோ அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்தார்.
[the_ad id=”6605″]
வசீகரனின் நினைவு முழுக்க அவனின் நிலா பெண் தான். தன்னவளின் மீது எதனால், எப்படி காதல் மலர்ந்தது என்று எல்லாம் அவனுக்கு தெரியவில்லை.
ஆனால் அவள் இல்லாத வாழ்க்கை மிக கடினமாக இருக்கும் என்று மட்டும் புரிந்து அவனுக்கு.
அவனின் நிலா பெண் அவனை பிடிக்க வில்லை என்றிருந்தால் கூட, அவனால் முடியுமோ, முடியாதோ, ஆனால் நிச்சயம், அவன் தன் மனதை மாற்றி கொள்ள, முயற்சியேனும் செய்து இருப்பான்.
ஆனால் அவளோ, இவனின் சமூக அந்தஸ்தை காரணம் காட்டி மறுக்க, இதில் அவன் தவறு என்ன இருக்கு என்று தான், அவனுக்கு புரியவே இல்லை.
அவனா கடவுளிடம், பிறந்தால் இப்படி ஒரு பணக்கார குடும்பத்தில் தான் பிறக்க வேண்டும் என்று வரம் வாங்கி வந்து பிறந்தான்.
தன்னுடைய பிறப்பால் தனக்கு மறுக்கப்படும் இரண்டாவது விஷயம் அவனின் நிலா பெண். முதலில் அவனுக்கு பிடித்த தொழில், இப்போது அவனின் வாழ்க்கை.
தன் விருப்பத்தை தன்னவளிடம் சொல்லிய பிறகு, அவளின் தந்தையிடம் பேசிய அளவுக்கு கூட அவன் அவளிடம் பேசவில்லை.
ஒரே அலுவலகத்தில் இருந்தாலும் கூட, தினமும் பார்த்து கொண்டாலும் கூட, அவளை பார்வையால் கூட அவன் அசௌகர்யமாக உணரவைக்க வில்லை. தன் காதலை ஏற்று கொள்ள சொல்லி நிர்பந்திக்கவும் இல்லை.
என்னதான் காதல் இல்லை என்றால் பரவாயில்லை, கல்யாணம் செய்து காதலிக்கலாம் என்று சொன்னாலும் கூடP, சில சமயம் மனம் சோர்வதையும், அவனால் தவிர்க்க முடியவில்லை.
அவனும் சராசரி மனிதன் தானே. தன் காதல், தன்னவளிடம் ஒரு சிறு சலனத்தையோ, தாக்கத்தையோ கூட விதைக்கவில்லை என்று நினைக்கும் போது, எதிலோ மோசமாக தோற்ற உணர்வு அவனுக்கு.
அவனின் பணம், உயரம் எல்லாம் தடையாய் கண்ணுக்கு தெரியும் அவளுக்கு, காதல்
அதை எல்லாம் தகர்க்கும் என்று ஏன் புரியவில்லை என்று வருத்தமாகவும் இருக்கும்.
சில சமயம் தன்னை தவிர, யாருக்குமே விருப்பம் இல்லாத இந்த திருமணதிற்காக, தான் இத்தனை தூரம் போராட தான் வேண்டுமா என்று கூட தோன்றும்.
ஆனால் அடுத்த கணமே, அவனின் நிலா பெண் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்த்தால், விரியும் காட்சிகளின் வெறுமையில், மனம் சுணக்கம் கொண்டு விடும்.
கொண்ட சுணக்கத்திற்கு மருந்தாக , மற்றது எல்லாம் மறந்து, சுகமாக அவனவளின் எண்ணங்களிலே மூழ்கியும் விடும் அவனின் மனது.
அவ்வபோது தன் பாப்பு மற்றும் தன் நண்பர்களுடன் செலவிடும் நேரங்கள் மட்டுமே, அவனை சற்று உயிர்ப்போடு வைத்து இருந்தன என்றால் மிகையில்லை.
இப்படி பல எண்ணங்களில், அதன் அலைகழிப்பில் அவன் மூழ்கி திணறி கொண்டிருக்க, யாருடைய நிலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல், ஆறு மாதம் கடந்து இருந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் வசீகரன் அறியாமல், உமையாள், கிருஷ்ணா, பாலா என அவனின் நலம் விரும்பிகள், வசீகரனின் தந்தையிடம் அவனின் காதலுக்காக பேசி, பேசி அவரை கரைத்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை, வசீகரனை அழைத்த அவனின் தந்தை, ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டினார்.
அப்பெண்ணின் விவரங்களை சொன்னவர், அந்த பெண் தான், அவனுக்கு பார்த்து இருக்கும் பெண் என கூறி, அவனை கூர்மையாக அளவிட்டபடியே இருக்க, வசீகரனோ அவரை தீர்க்கமாக பார்த்து,
“நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லிட்டேன், நான் வேற ஒரு பெண்ணை விரும்புறேனு” என்று சொல்ல, அவரோ,
“நானும் அன்னைக்கே சொல்லிட்டேன், அது சரி வராதுன்னு”
என்று உனக்கு நான் தந்தை என நிரூபிக்க, வசீகரனோ இத்தனை நாள் மனதை அரித்த விஷயங்களால், தன் மௌனம் உடைத்து அவரிடம்,
“நீங்களும் இதையே சொல்லுங்க, அவளும் இதையே சொல்லுவா, ரெண்டு பேருக்குமே என்னோட மனசை பற்றி கவலை இல்லை, இல்ல”
என்று ஆதங்கமாக கேட்க, அவனின் அப்பா அவனை, அவனின் பாவத்தையே பார்த்து கொண்டிருக்க, அவனோ குரல் கரகரக்க,
“இந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்ததுக்கு, இன்னும் என்ன எல்லாம் நான் இழக்கனும்”
என்று கேட்க, அவனின் கேள்வியில், குரலில் என மொத்தமும் ஆடி தான் போய் விட்டார் மனிதர். அவனோ தொடர்ந்து,
“இப்படி தான், பேமிலி பிசினஸ் தான் பார்க்கணும்னு சொல்லி, என்னோட கனவுக்கு வெறும் ஐந்து வருஷம் டைம் கொடுத்திங்க, அது கூட பரவாயில்லை, ஒரு பைவ் இயர், எனக்கு பிடிச்ச துறையில், என்னால முடிஞ்சதை அச்சிவ் பண்ணனு ஒரு சின்ன சந்தோஷம் இருக்கும், ஆனா இ…ப்…போ……”
எப்பொழுதும் வாடா புன்னகையுடன் வலம் வரும் தன் மகனின் முகத்தில் இருந்த வலி அவரை என்னமோ செய்ய, அவனோ தொடர்ந்து,
“உங்களுக்கு என்ன, உங்க ஸ்டேட்டஸ்கு, வசதி கம்மியமான இடத்தில் பெண் எடுத்தா உங்களுக்கு கவுரவ குறைச்சல் ஆகிடும் அதானே, நான் அவளை கல்யாணம் பண்ணல போதுமா, ஆனா என்ன வேற யாரையும் கல்யாணம் பண்ண சொல்லி கேட்காதீங்க, இப்படியே விட்டுடுங்க”
என்று பொரிந்துவிட்டு அலுவலகம் வந்தவன் தான், இப்போது எல்லாவற்றையும் அசைபோட்டபடி அமர்ந்து இருந்தான்.
உள்ளே வர நீண்ட நேரம் அனுமதி கேட்டு கதவை தட்டியும், ஒரு பதிலும் வராமல் போக, தயங்கிய படி கதவை திறந்து, உள்ளே வந்த நிலவழகி, எங்கோ வெறித்தப்படி அமர்ந்திருந்த வசீகரனின் முக பாவத்தில், அதில் தெரிந்த வலியில் திகைத்து நின்று விட்டாள்.
[the_ad id=”6605″]
தன் எண்ணங்களில் இருந்து வெளியே வந்தவன், அப்போது தான் அழகியை பார்க்க, சடுதியில் முகத்தில் உணர்வுகளை துடைத்துவிட்டு, அவளிடம்,
“சொல்லுங்க அழகி” என்று கேட்க, அவள் ஒன்றுமே சொல்லாமல், ஒரு கோப்பை கொடுக்க, அதை வாங்கி சரி பார்த்தவன், திரும்பி அவளிடமே கொடுத்துவிட்டான்.
அதை வாங்கி கொண்டு, திரும்பி திரும்பி அவனை பார்த்தவாறே, கதவு வரை சென்றவளை
“ஒரு நிமிஷம்” என்று அழைத்தான் வசீகரன், அவள் திரும்பி பார்க்க,
“இல்ல இத்தனை நாள்ல, நான் காதல் சொன்னதுக்கு அப்புறம் கூட, என் மேல உனக்கு ஒரு சின்ன ஈர்ப்பு கூட வந்தது இல்லையா”
என்று கேட்க, அவளோ இவனின் கேள்வியில் திகைக்க, இப்படி அவளிடம் கேட்டதுக்காக தன்னையே நொந்து கொண்ட வசீகரன்,
“சாரி, ஏதோ ஒரு மூட் அவுட், அதான், சாரி” என்று சொல்ல, அவனையே பார்த்த அழகி, அவனின் நிலா ஒரு பெருமூச்சுடன், மீண்டும் உள்ளே வந்தாள்.
அவனுக்கு எதிரில் நின்றவள், அவனை பார்த்து,
“என்ன தான் இந்த காலத்துல காதல் சகஜம் என்றாலும், எங்களை மாதிரி குடும்பத்தில் காதல் இன்னும் அசாதாரண விஷயம் தான்”
என்றவள் அவனை பார்த்தபடியே,
“நீங்க காதல் சொல்ற முன்னாடி வரைக்கும், எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருந்தது, ஆனா உங்களை நான் ரசிச்சது எல்லாம் இல்லை, அப்படி ஒரு எண்ணம் கூட வந்தது கிடையாது, ஏனா எப்பவுமே கிடைக்காத, தகுதிக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக்க கூடாது, அதுக்காக ஏங்க கூடாதுனு நினைக்கிற டிபிக்கல் ப்ரக்டிகல் பொண்ணு நான்”
என்ற அவள் சொல்ல, என்ன சொல்ல வருகிறாள் என வசீகரன் அவளை பார்க்க, இப்போது தன் தலையை குனிந்து கொண்டவள்,
“நீங்க உங்க காதலை சொல்லும் போது, இது நடக்கவே நடக்காது, நடக்க வாய்ப்பே இல்லைனு தான் தோணுச்சி, ஆனா நீங்க நேரா என்னோட அப்பா கிட்ட வந்து பேசுனதுக்கு அப்புறம், அப்புறம் எல்லாமே மாறிடுச்சு”
அவளின் முகம் லேசாக சிவக்கிறதோ, வசீகரன் அவளை ஊன்றி கவனிக்க, அவளோ,
[the_ad id=”6605″]
“இந்த ஆறு மாசத்துல, ஏன் வேற யாருமே என்ன பொண்ணு பார்க்க வரலைன்னு தெரியுமா, என் மனசு புரிஞ்சிக்கிட்டு, என்னோடு அப்பா உங்களுக்காக காத்திருக்கிறார்”
என்று சொல்ல, அவள் சொல்ல வருவதை கிரகித்து கொள்ள முயன்ற வண்ணம், வசீகரன் நிற்க அவளோ,
“நீங்க எனக்காக வந்து அப்பா கிட்ட பேசுனதா, இல்லை எந்த விதத்திலும் என்னை தொந்தரவு பண்ணாம இருந்த கண்ணியமா, இல்ல உங்க கிட்டா நான் உணர்ந்த பாதுகாப்பா, இல்ல இது எல்லாமேவானு எனக்கு தெரில, ஆனா ப்ரக்டிகல் பொண்ணுணு நினைச்சிகிட்டு இருந்த நான், இப்போ தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு, அது கிடைக்குமானு ஏங்கிக்கிட்டு இருக்கேன்”
என்று சொல்லி முடித்த, அடுத்த நிமிடம் அவள் வசீகரனின் அணைப்பில். அவனை விலக்காமல், அவனின் அணைப்பில் அடங்கியவளின், கண்கள் கண்ணீர் சொரிய, அதை துடைத்த வசீகரனோ,
“இந்த வசீகரன் எப்பவுமே இந்த நிலாக்கு தான், அதே மாதிரி இந்த நிலா வசீகரனுக்கு தான்” என்று சொல்லி, அணைப்பை இறுக்க, அங்கு ஒரு உன்னத மௌனம் ஆட்சி செய்ய, காதலர்கள் சுகமாய் அதில் மூழ்கி இருந்தனர்.
முதலில் தன்னிலை உணர்ந்த நிலா, அவனிடம் இருந்து விலக, அவள் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றி, வசீகரன் மனமே இல்லாமல், அவளை, அவளின் பிரிவிற்கு அனுப்பி வைத்தான்.
தன்னவளின் காதல் அவனுக்கு அளவில்லா பலத்தை தர, இதுவரை இருந்த வெறுமையான மனநிலை மாறி, எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று மனம், திடம் கொண்டது.