Skip to content
Post Views: 1,290
நயம் 14 
மாமா அப்படி மயங்கி விழுந்த உடனே, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. தண்ணீர் தெளிச்சு, தட்டி தட்டி பார்த்தேன், மூச்சே இல்லை. ஸ்கூல் படிக்கும்போது CPR சொல்லி கொடுத்தது வச்சி, அவர் நெஞ்சில அழுத்தம் கொடுத்து , அப்புறம் நான் மூச்சு கொடுக்கவும் தான் கொஞ்சம் அசைவு தெரிஞ்சுது. திருப்பி இன்னொரு முறை பண்ணதுல கொஞ்சமா கண் விழித்து பார்த்தார். அப்படியே அவரை ஆட்டோவுல உட்கார வச்சி ஆஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போனேன். அங்கே இருந்து அப்பாட்ட சொல்லி அவரும் வந்துட்டார்.
டாக்டர் செக் பண்ணி பார்த்துட்டு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சுன்னு சொன்னாரு. இம்மிடியட்டா CPR பண்ணதால உயிர் பிழைச்சிட்டார். ஆனால் இரத்த அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்கு. டென்ஷன் இல்லாம இனிமே பார்த்துக்கோங்க. மாத்திரை கொடுக்கிறோம். நைட் வரை பாப்போம். எப்படி இருக்கார்னு அதுக்கப்புறம் மத்த விஷயம் சொல்றேன்னு சொல்லிட்டார்.
Advertisement
அப்பத்தான் மாமா வருத்தப்பட்டது எல்லாம் அப்பாட்ட சொன்னேன். இருக்கிற வேலை எல்லாம் இவனே ஒத்தையா இருந்து பார்த்து இப்படி இழுத்து வச்சிட்டானேன்னு அப்பா தான் ஒவ்வொரு கம்பெனி கிட்டயும் பேசி , ஒர்கிங் பார்ட்னர் ஷிப் முறையில எல்லாம் மாத்தினார். நானும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டு போய் பார்க்க ஆரம்பித்தேன். பைனல் இயர் முடிச்ச உடனே இங்கேயே வேலைக்கு வந்துட்டேன். அம்மா, அக்கா ரெண்டு பேரும் அப்பா பிசினெஸ்க்கு ஹெல்ப் பண்ணுவாங்க. அதே மாதிரி நானும் மாமாக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சேன்.
அப்போ தான் மாமா நம்ம கல்யாண பேச்சை எடுத்தார்.
அப்பா, அம்மா ஓகேன்னு சொல்லிட்டாங்க. நானும் சரி சொன்னவுடனே அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால் உங்கட்ட இப்போ கல்யாண பேச்சை எடுத்தா வேணாம்னு சொல்வீங்க, அவனே கல்யாணம் பண்ண கேட்டா தான் உண்டுன்னு சொல்லி நிச்சயம் மட்டும் இப்போ பண்ணாலாம்னு தான் முடிவு பண்ணாங்க.
Advertisement
எப்பவும் மாமா தான் ஒரு மாசம் இங்கே வந்து இருப்பாங்க, இந்த வருஷம் உங்களை அனுப்பி வைக்கிறேன்னு பிளான் பண்ணி தான் உங்களை அனுப்புனாரு. ஆனால் நாங்க நினைச்சது ஒன்னு. நீங்க பண்ணது ஒன்னு. ஆனால் ரெண்டும் ஒரே முடிவு தான். நாங்க ஆற அமர யோசிச்சோம், நீங்க ஜெட் ஸ்பீட்ல யோசிச்சு முடிச்சிடீங்க. பழம் நழுவி பாலுல விழுந்து அது நழுவி வாயில விழுந்தா யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா? . இது தான் கல்யாணம் பிளஸ் பிசினஸ் கதை எப்படி இருக்குது ? என கண் சிமிட்டி சிரித்தாள்.
Advertisement
அடிப்பாவி, ஒரு வார்த்தை என்கிட்டே என்ன எதேன்னு கேட்காம கல்யாணத்துக்கு ஓகேன்னு சொல்லி, மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு வேலை பார்த்தது இப்படித்தானா ? இவ்வளவுதான் இருக்கா , இல்லை இன்னும் எதாவது இருக்கா முழுசா சொல்லி முடி என்றான் மூச்சு வாங்க.
ஏன் பாஸ் டென்ஷன் ஆகுறீங்க, ரிலாக்ச்சா இருங்க என்றபடி கை கோர்த்து கொண்டாள்.
ஒரு வார்த்தை நீயாவது சொன்னியா, பவி, கோகுல் அண்ணன், ஏன் இந்த அத்தை கூட என்கிட்டே சொல்லல.
Advertisement
அவங்க யாருக்கும் நாங்க சொல்லவில்லை, உங்க அம்மாக்கு மட்டும்தான் தெரியும், மாமா உடல்நிலை பத்தி அந்த கடத்தல் பிரச்சனை ஆரம்பிச்ச அப்போ தான் அம்மாக்கு சொன்னோம். அதனால் தான் மாமாக்கு பிரஷர் ஏத்தாம நாங்களே எல்லாம் பண்ண ஆரம்பிச்சோம். இனி என்ன பண்ணனும்னு நீங்க தான் முடிவு எடுக்கணும், கொஞ்சம் ஆற அமர யோசிங்க, அப்போ தான் கரெக்டா முடிவு எடுப்பிங்க என பேசி கொண்டே வந்ததில் மலை உச்சிக்கு வந்து விட்டனர்.
அவன் கைகளை பிடித்து கொண்டு , தோளில் சாய்ந்து, சிரித்த படி, அவள் கூறிய மற்றவை பின்னுக்கு தள்ளி மனையாளே முன் நின்றாள். தான் நேசிக்க நினைத்த பெண்ணை, தான் அடைய முயற்சிக்க, தனக்கு நிகராய் அவர்களும் யோசிக்க முடிவு ஒன்றாய் அமைந்ததில் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை. நடந்ததை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
நல்லா கண்ணாமூச்சி விளையாண்டு இருக்கோம், இல்ல எல்லாரும் தெரிஞ்சிகிட்டே ஆனா தெரியாத மாதிரி , சிரிப்பா தான் இருக்குது என்றான் கலகலவென சிரித்தபடி புன்னைகையுடன் .
தங்களை சுற்றி நோக்கினால் மலைத்தொடர்கள், சற்றே பனியில் குளிக்கும் சிகரங்கள் , தூரத்தே தெரியும் நீர்விழ்ச்சி, வைகை அணை என கண்ணுக்கு விருந்தாய் அமைந்தன. இயற்கையின் அழகில் தங்களை மறந்து விழி விரித்து பார்த்து நின்றனர். ஆள் அரவமற்ற தனிமை, அவனும் அவளும் மட்டுமே அங்கே தனியாய். சொல்ல முடியா இதம் மனம் எங்கிலும், தன்னவனை காதல் கொண்டு கை சேர்ந்த பூரிப்பு எல்லாம் சேர்த்து அவள் தன்னை மறந்து சிறிது நேரத்தில் பாடி கொண்டே ஆட ஆரம்பித்து விட்டாள்.
“கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா….
வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…”
ஆடியபடியே எப்போது அவள் அவன் கையிருப்பில் சென்றால் என்பதே இருவரும் அறியார். அவள் நடனத்தை இன்று தான் முதன் முதலாக நேரில் பார்க்கின்றான். விழிகளில் ஆயிரம் நவரசம் சொட்ட, தன் காதலை நேரில் பாடலாய், நடனமாய் உணர்த்தி விட்டாள். இந்த நிமிடம் உலகில் மிக பாக்கியசாலி யார் என கேட்டால் தன்னை மட்டுமே கூறுவான். அத்தனை சந்தோஷத்தில் மொழி மறந்த நிலையில் நின்றான். சற்று நேரம் மோன நிலையில் தான் இருவரும் இருந்தனர்.
அவர்களை கலைத்தது அருகில் கேட்ட பறவையின் ஒலி தான். கூடு சேர்ந்த பறவை தன் இணையை அழைக்கும் குரலில் தான் முகம் பார்த்தனர். இவர்களின் நிலையை போலவே வானத்திலும் மோன நிலை. அதோ வானில் பகலவன் தன் ஆட்டத்தை முடித்து கொண்டு இளைப்பாற ஆரம்பித்து விட்டான். பச்சை மலைக்கு நடுவே நீல வானில், ஆரஞ்சு வர்ணத்தில் செஞ்சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்க, நிலவு மகள் மேலேற தொடங்கினாள்.
அதன் அழகை பார்த்து கொண்டே இருந்தவர்கள் அப்போது தான் தங்கள் நிலையை கண்டனர். அவனது தோளில் அவள் சாய்ந்து நிற்க, அவன் கைகள் அவள் இடை கோர்த்து நிற்க , அவன் நாடியில் தலை பதித்து அவள் முகம் காண இங்கும் மறைந்தும் மறையா நிலை தான். முகம் பார்த்து அமைதியாக இருந்தவன் , அவள் வதனத்தை கரங்களில் தாங்கினான். யாருமற்ற தனிமை, மலையின் உச்சியில் தங்களை மறந்த ஜோடி புறா, நீண்ட நெடிய முத்தத்திற்கு பின் தான் அவளை விடுவித்தான்.
அவளோ நாணம் கொண்டு ஓடினாள். விரட்டி பிடித்த படி சென்றவன் , அவளை இழுத்து, ஓய், நேத்து வடை சுட கத்து கொடுத்தேன், இன்னைக்கு பூரி சுடலாம்னு நினைச்சா ஓடி போறே.
ஐயோ, வாயை மூடுங்க, நீங்க பேசுறது ..,,
ஹான், அப்புறம், நீ தானே வாங்க பழகலாம் பாஸ்னு சொன்னே. உங்க மூச்சை பார்த்தே என்ன நினைக்கிறிங்கன்னு சொல்லுவேன், அது எல்லாம் கப்சாவா, என்னை ஏமாத்துனதுக்கு சேர்த்து வச்சி உன்கிட்ட பழகாம விட மாட்டேன்.
உங்கள நான் ஒன்னும் பழக வேணாம்னு சொல்லல, ரோட்டில் நிற்கின்றோம் பாஸ், வீட்டுக்கு போகலாம் , இருட்ட ஆரம்பிச்சிருச்சு, வேகமா ஓடுவோம், இல்லைனா எங்க போறோம்னே தெரியாது. வேகமா வாங்க என்றபடியே அவனை இழுத்து கொண்டு ஓடினாள்.
வீட்டின் வாசலிலேயே அங்கு குடியிருக்கும் பாட்டி காத்துக்கொண்டு இருந்தார் அவர்களின் வருகையை எதிர்பார்த்து.
ஏன்டாமா இவ்ளோ லேட்டு. இருட்ட ஆரம்பிச்சா இங்க பாதையே தெரியாது. எப்படி வருவீங்கன்னு தான் யோசனை. மதியமும் ஒழுங்கா சாப்பிடலை, முகம் அலம்பிட்டு வாங்க சாப்பிட்டு அப்புறம் பேசலாம் என்றார்.
முதுமையில் தனிமையில் தவிக்கும் பாட்டிக்கு அவர்களின் வருகை இதமாய் இருந்தது. தங்கள் அறைக்கு சென்று அசுவாசப்படுத்திக் கொண்டு வந்தவன் கையோடு பாயினை எடுத்து வந்தான். தோட்டத்தில் நடுவில் அதனை விரித்து, சமைத்த உணவு பாத்திரங்களை அங்கேயே கொண்டு வந்தவன்.
பாட்டி, இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து உருண்டை சோறு சாப்பிடலாம். உங்க கையாலே நீங்களே உருட்டி கொடுங்க என்றதுதான் தாமதம் அவரின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.
பாட்டி தரேன்பா வாங்க என்றபடியே பழங்கதைகளை சொல்லி ஊட்டி விட ஆரம்பித்தார். அவர் பேசும்போது கணேஷ், அச்சுவின் இளமை பருவ கதைகளே அதிகம் இருந்தது. தன் தந்தை அன்புக்கு ஏங்குபவர். சூழ்நிலை காரணமாக தான் ஊரை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டது என்பதை அறிந்தான் .
ஆம், சொத்து தகராறில் அக்காக்கள் அனைத்தையும் பிடிங்கி கொண்டு தந்தையற்ற அச்சுவை வெளியில் அனுப்பி விட்டனர். அன்று முதல் சொத்துக்களை வாங்கி குவிப்பவர். தன் சொந்தங்களை அருகில் சேர்ப்பதில்லை. வேறு பிள்ளையும் இல்லாததால் ஒற்றை பையனான அரவிந்த் மீது உயிரை வைத்திருந்த கதையெல்லாம் கேட்டவன் தன் தந்தையின் இன்னோரு அன்பு முகத்தை இன்று தான் கேட்டறிந்தான்.
சாப்பிட்டு முடித்தவன் யோசனையாக நடக்க ஆரம்பித்து விட்டான். அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு தங்கள் இல்லத்திற்கு வந்த அபி கண்டது சிந்தனை வயப்பட்ட கணவனை தான்.
என்ன பாஸ், பயங்கர யோசனையா இருக்கீங்க .எந்த கோட்டையை பிடிக்க போறீங்க?.
இருக்குற கோட்டையிலேயே நானில்லைனு இப்போ தான் புரியுது. இப்போ புதுசா ஒண்ணா. போடா என்றான்.
மாமா பத்தி யோசிக்கிறீங்களா? என அவன் பிரச்சனையின் ஆணி வேரை அழகாய் பிடித்தால் அவன் மனையாள்.
ஆமாம்டா. அவங்க ரெண்டு பேரும் பிசினஸ்னு சுத்துவாங்க. இங்கே இருந்தவரை அத்தை, அங்கே போய் எனக்குன்னு யாருமே இல்லை. நீயும் இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? அனாதை மாதிரி தனியா இருந்தேன் . ஸ்கூல் முடிச்சு வந்தா வரிசையா டியூசன் , ரோபோ மாதிரி இருப்பேன். நைட் ஒன்பது மணிக்கு நான் தூங்கின அப்புறம் தான் வருவாங்க.
தனியா ரூமில் படுக்க அவ்ளோ பயமா இருக்கும். அதனால் தான் டென்த் முடிச்சுட்டு புல்லா ஹாஸ்டெல்லயே இருந்துட்டேன். லீவுல மட்டும் தான் வருவேன். நான் வரப்பவும் அவங்க வீட்டுக்கு சீக்கிரம் வர மாட்டாங்க. பணத்து பின்னாடி ஏன் இப்படி சுத்துறாங்கனு தான் தோணும். அவங்க சின்ன வயசு கஷ்டம், சொந்தம் பத்தி எல்லாம் ஒன்னும் சொன்னது இல்லை. அதனாலதான் அப்பா பிஸ்னஸ் பாத்துக்க சொன்னப்ப கூட கோபத்துல மாட்டேன்னு சொல்லிட்டேன்.
உன்கிட்ட சொல்லி வருத்தப்பட்டவர் என்கிட்ட ஒரு தடவையாவது சொல்லி இருக்கலாமே. நான் புரிஞ்சுக்க மாட்டேனா?.
அப்படியில்லை. நீங்க விட்டு போனப்புறம் தான் அவர் உங்களை பத்தி யோசனை பண்ணி இருக்கிறார். தன் மேல் தப்பை வச்சுட்டு உங்களை ஒன்னும் சொல்ல முடியல. என்னை அவர் தன்னோடு மருமகளா தான் ரொம்ப வருசமா நினைச்சுட்டு இருக்கிறார். நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு பார்க்கலை. அதான் ஏதோ கஷ்டத்தில் என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு.
நீங்க ஏதாவது பேசி இருந்தா அவரும் உங்ககிட்ட சொல்லி இருப்பார். ரெண்டு பேரும் இரு துருவமா இருந்ததுல அத்தை தான் பாவம். இனியாவது அவங்க கஷ்டப்படாம பார்த்துக்கணும். யோசனை செய்வோம். இப்ப வந்து தூங்குங்க என அவனை மடியில் படுக்க வைத்துக் கொண்டு தலை கோத ஆரம்பித்தாள்.
தேங்க்ஸ்டா அபி. அப்பாவை நீயாவது புரிஞ்சி நடந்துக்கிட்டயே. இனி நானும் என்ன மாத்திக்கிறேன் என கூறியவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டே, காலையிலேயே சீக்கிரம் எந்திரிச்சி போகணும், இப்போ சீக்கிரம் படுப்போம் என இமை மூடினான். அவன் மனதிலிருந்த பல சந்தேங்கள் தீர்ந்ததால் நிம்மதியாய் உறங்கினான்.



“காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,
அதனாலே மரணம் பொய்யாம்…, “
error: Content is protected !!