சிறிதுநேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவள் ஹேமா வரவும் மரியாதைக்கு எழுந்து நிற்க அவர் சந்தியாவை அமருமாறு சைகை காட்டிவிட்டு தனக்கானச் சாய்வுநாற்காலியில் சென்று அமர்ந்தார்.
சந்தியா அவரிடம் “மேம் இந்த டிரஸ்ட் எவ்ளோ நாளா இருக்கு? நீங்க என்ன மாதிரியான சர்வீஸ் பண்ணுறிங்க?” என்று ஆர்வத்துடன் கேட்க
ஹேமா “இது என் அப்பா ஆரம்பிச்ச டிரஸ்ட்… சூரியாவுக்கு என்ன வயசோ அதே தான் இந்த டிரஸ்டோட வயசும்… அப்புறம் ஒரு விஷயம் டோண்ட் கால் மீ மேம்… என்னை ஆன்ட்டினு கூப்பிட பழகிக்கோ…” என்று அவரது ஆணையிடும் குரலில் கூறவே சந்தியா வெறுமெனே தலையாட்டிவைத்தாள்.
அதைப் பார்த்துவிட்டு “சர்வீஸ்னு பெரிய வார்த்தைலாம் சொல்ல முடியாது… நாங்க ஒரு குறிப்பிட்ட ஏரியாக்கள்ல பாவர்ட்டி லைனுக்குக் கீழே இருக்கிற குடும்பத்தில உள்ள குழந்தைகளைச் செலக்ட் பண்ணி அவங்களை நம்ம ஜே.கே.ஆர் இண்டர்நேசனல் ஸ்கூல்ல ஃப்ரீயா படிக்க வைக்கிறோம்… ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறமா அவங்களோட ஹையர் ஸ்டடீஸும் எங்கப் பொறுப்பு தான்…
மேக்சிமம் நாங்க செலக்ட் பண்ணுற குழந்தைங்க எல்லாருமே ஸ்லம் ஏரியாஸ்ல இருக்கிறவங்க தான்… அவங்கப் படிச்சு முன்னேறினா இன்னும் நாலு பேரை முன்னேத்துவாங்க… இது என் அப்பாவோட கனவு… ஆனா இதை ஆரம்பிச்சு சில வருசங்கள்ல அவர் தவறிட்டார்… அவருக்கு அப்புறம் சில டிரஸ்டிகள் இதை லாபநோக்கத்துக்காக நடத்த டிரை பண்ணுனாங்க… அதனால இதோட முழு மேனேஜ்மெண்டையும் நான் என் கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்துட்டேன்” என்று விலாவரியாக விளக்கினார் ஹேமா.
தாங்கள் சூரியாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போது நாராயணன் தனது மனைவி ஏதோ மாணவர்களுக்குக் கவுன்சலிங் கொடுக்கும் முகாமுக்குச் சென்றிருப்பதாகக் கூறியது உண்மை தான் போல என்று சந்தியா எண்ணமிடும் போதே கையில் காபி டிரேயுடன் நுழைந்தார் ஒரு பெண்.
ஹேமா சந்தியாவிடம் காபியை எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டார். அந்தக் காபி கொண்டு வந்த பெண் “மேம் இதோட இன்னைக்கு கோட்டா முடிஞ்சுது… இனிமே நோ மோர் காபி” என்று சொல்லிவிட்டுச் செல்ல ஹேமா ஒரு பெருமூச்சுடன் காபியை மிடறு மிடறாக ரசித்து அருந்தினார்.
அந்தப் பெண் சொல்லிவிட்டுச் சென்றதைக் கேட்டதும் சந்தியாவுக்குச் சூரியாவின் நினைவு வர “நீங்களும் அடிக்கடி காபி குடிப்பிங்களா ஆன்ட்டி? மார்ஸ்மாலோவும் இப்பிடித் தான்… அடிக்கடி காபி குடிப்பான்… பட் நான் சத்தம் போட்டு அந்தப் பழக்கத்தை கொஞ்சம் குறைச்சிருக்கான்… உங்கப் பையனும் உங்களை மாதிரியே தான்” என்று சொல்லிவிட்டு எங்கே தான் சொன்னதை இவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று பயந்தவளாய் நாக்கைக் கடித்துக் கொண்டாள் அவள்.
ஆனால் ஹேமா அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே அவரது முகத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் புன்னகை துளிர்த்தது. காபி கோப்பையை வைத்துவிட்டுச் சந்தியாவிடம் திரும்பியவர் “நாட் பேட்! நான் கூட என்னடா இந்தப் பொண்ணு புரஃபசன் தான் முக்கியம்னு சொல்லுறாளே, என் பையனை எங்கே இருந்து அக்கறையா பார்த்துக்கப் போறானு யோசிச்சேன்… நீ இதுலயும் சரியா தான் இருக்கே” என்று சொல்லவும் சந்தியாவுக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாத நிலை.
[the_ad id=”6605″]
பேச்சை மாற்ற எண்ணியவளாய் “ஆன்ட்டி உங்க டிரஸ்டுக்கு ஜே.கே.ஆர்ரோட சி.எஸ்.ஆர் ஃபண்டை யூஸ் பண்ணிக்கலாமே…ஏதோ ஒரு டிரஸ்டுக்குப் போற பணம் உங்க டிரஸ்டுக்கு வருமே… அதை வச்சு இன்னும் நிறைய நல்ல காரியங்களைப் பண்ணலாம்” என்று கூற
ஹேமா “ம்ஹூம்! அது மட்டும் வேண்டவே வேண்டாம்… என்னோட அப்பா இதை முழுக்க முழுக்க அவரோட பணத்துல தான் நடத்தணும்னு ஆசைப்பட்டார்… இதுக்கு வருமானம் வர்றதுக்கு சில மூலதனத்தை வச்சிட்டுத் தான் போயிருக்கார்.. சோ சி.எஸ்.ஆர் ஃபண்ட்டுங்கிற பேச்சுக்கே இடமில்லை..
அதுவுமில்லாம சி.எஸ்.ஆர் ஃபண்டை கார்பரேட் கம்பெனிகள் சரியான வகையில செலவு செஞ்சிருந்தா இன்னைக்கு இந்தியாவுல வறுமையோ, கல்வியறிவின்மையோ முழுக்க இல்லாம போயிருக்கணும்… ஆனா அப்பிடி எதுவுமே நடக்கலையே.. சோ சி.எஸ்.ஆர் ஃபண்ட் மேலேயோ அதைக் குடுக்கிற கார்பரேட் மேலேயோ எனக்குச் சுத்தமா நம்பிக்கை இல்லம்மா…
இன்னைக்கு வரைக்கும் நான் கவர்மெண்ட் கிட்ட கூட ஃபண்ட் அப்ளை பண்ணது இல்லை… என் மூச்சு இருக்கிறவரைக்கும் இதை என்னோட பணத்துல தான் ரன் பண்ணுவேன்… நான் ஹேமா சூரியராஜனா தான் இந்தக் காரியத்தைப் பண்ணனும்னு நினைக்கிறேன்… ஜே.கே.ஆர் கூட இணைஞ்சுப் பண்ண ஆரம்பிச்சா அந்த அடையாளம் மாறிடும்கிறது என்னோட ஒபினியன்” என்று தன்னம்பிக்கை மின்னப் பேசிய ஹேமா சந்தியாவுக்கு முற்றிலும் புதியவர்.
இவ்வளவு நாட்கள் ஹேமா என்பவர் குடும்பத்தின் மீது அக்கறையின்றி பணத்திமிருடன் யாரையும் மதியாமல் இருக்கும் மேல்தட்டுப்பெண்மணியாக மட்டும் தெரிந்தவர், இன்று அவர் செய்யும் நல்ல விஷயங்கள் மற்றும் அந்தக் காரியங்களுக்கு யாரையும் எதிர்பாராமல், கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக சத்தமின்றி நடத்திக் காட்டியதன் மூலம் அவர் மீது நல்லெண்ணம் உருவாகுவதை அவளால் தடுக்க இயலவில்லை.
காபியை அருந்தியபடியே “ஆன்ட்டி உங்கப் பசங்க கிட்ட, நாராயணன் அங்கிள் கிட்டல்லாம் ஏன் நீங்க இதைச் சொல்லாம மறைச்சிருங்கிங்க? தெரிஞ்சா அவங்க எவ்ளோ சந்தோசப்படுவாங்க தானே…” என்று கூற
ஹேமா பெருமூச்சுடன் “சந்தோசமா?… நான் மனசால எப்போவோ அவங்களை விட்டுத் தூரமா போயிட்டேன்.. நான் செஞ்ச, செய்யப் போற எந்தக் காரியமும் அவங்களுக்குப் புரியவும் வேண்டாம்… என்னை அவங்களுக்குப் பிடிக்கவும் வேண்டாம்.. அந்த எதிர்பார்ப்பை நான் இழந்து ரொம்ப நாளாச்சு…
ஒரு மனைவியா, அம்மாவா நான் தோத்துட்டேன்… ஆனா என் அப்பாவுக்கு மகளா அவரோட கனவை நிறைவேத்தின சந்தோசம் எனக்கு மனசு ஃபுல்லா இருக்கு… அதோட எங்கப்பா சொல்லுவாரு ‘இடது கை குடுக்கிறது வலது கைக்குத் தெரியக் கூடாதுனு’… அதைத் தான் நானும் ஃபாலோ பண்ணுறேன்..
சூரியாவோட அப்பாவுக்கு இந்த விஷயம் ஸ்கூல் பிரின்சிபல் மூலமா எப்பிடியோ தெரிஞ்சுடுச்சு… அவர் என் கிட்ட கேட்டப்போ பசங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு சொல்லிட்டேன்… தெரிஞ்சா எங்களுக்கு ஒரு அம்மாவா எதுவுமே செய்யாம ஊருக்குலாம் சேவை பண்ணுறிங்களானு அவங்க தேவையில்லாம கோவப்படுவாங்க” என்று சொல்லிவிட்டு தன் முன்னே இருந்த கோப்பில் பென்சிலால் ஏதோ குறிக்க ஆரம்பித்தார்.
சந்தியாவுக்கு இதைக் கேட்டதும் மனதுக்கு நெருடலாக இருந்தது. ஒரு மகளாகத் தனது தந்தையின் கனவை நிஜமாக்க உழைத்ததில் அவர் தனது மகன்களின் அன்பை இழந்துவிட்டது அவளுக்கு மனதில் வருத்தத்தை உண்டாக்கியது.
அதேநேரம் வெளியே மழையும் நின்றுவிட, சந்தியா ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டவள் “அப்போ நான் கிளம்புறேன் ஆன்ட்டி… ஆல்ரெடி ரொம்ப நேரமாச்சு” என்று கூறிவிட்டுக் கிளம்ப எத்தனித்தாள்.
[the_ad id=”6605″]
ஹேமா “சூரியா உன்னை கல்யாணம் பண்ணுறதுல பிடிவாதமா இருக்கான்.. நீயோ உன் புரஃபசன் தான் முக்கியம்னு நினைக்கிற… உன் கிட்ட நான் கேக்கப் போறது ஒன்னே ஒன்னு தான்.. வாழ்க்கையில எப்போவும் உங்களுக்கு ஏன்டா கல்யாணம் பண்ணிகிட்டோம்னு தோணிடாத அளவுக்கு எல்லா விஷயத்தையும் பேசி முடிச்சுட்டுக் கல்யாணத்துக்கு ரெடியாகுங்க… இல்லைனா வருங்காலத்துல உங்களால உங்கப் பசங்க தான் கஷ்டப்படணும்” என்று கூறிவிட்டுத் தனது வேலைகளில் மூழ்க ஆரம்பித்தார் அவர்.
அவரது வார்த்தைகளை அசைப்போட்டபடி அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தாள் சந்தியா… வெளியே வானம் இவ்வளவு நேரம் கொட்டித் தீர்த்துவிட்டு நிர்மலமாக இருக்க, சந்தியாவின் மனதும் கிட்டத்தட்ட ஒரு தெளிவுக்கு வந்தது. மரத்தடியில் நின்ற ஸ்கூட்டரை எடுத்தவள் அவளது அலுவலகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.
**************