Skip to content
Post Views: 11,328
பகுதி 2
கோவை சர்வதேச விமான நிலையம், அந்த அதிகாலை வேளையிலும் மிகுந்த பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
Advertisement
விமானத்தில் செல்பவரை வழி அனுப்பவும், வெளிநாட்டிலிருந்து வருபவரை வரவேற்கவும் வந்த உறவுகள், நட்புகள் என ஒரு பக்கம் கூட்டம் அந்த நேரத்திலும் நிறைந்து வழிந்தது.
அந்த பரபரப்புக்கு மத்தியில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த விமானங்களில் இருந்து இறங்கிய பயணிகள், தங்களின் உடைமைகளை சேகரித்துக் கொண்டு அவர்களுக்கான நடைமுறையை முடித்து வெளியேறிக் கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
அப்படி வெளிவந்த கூட்டத்தில் ஒருவனாக, தனது பயணப் பொதிகளை தள்ளு வண்டியில் வைத்து ஒரு கையிலும், மற்றொரு கையில் வாக்கர் வடிவிலான வீல் சேர் ஒன்றை பிடித்தபடி, தான் எதிர்பார்த்த நபரை தேடியபடியே வந்து கொண்டிருந்தான் ரியான்.
இளநீல வர்ண டீசர்ட், கருப்பு ஜீன்ஸ், கண்ணில் விலையுயர்ந்த கூலர் என வந்தவன் முப்பதை கடந்து சில வருடங்கள் ஆகிவிட்ட போதும்.. வெளிநாட்டு வாசமும், அவனின் வேலை கொடுத்த செழுமையும் அவன் முகத்தில் தெரிந்தாலும்,
Advertisement
அவன் கடந்து வந்த பாதை மிக கடினமானது.. என்பதை அவனின் தலைமுடியில் அங்காங்கே வெள்ளி கம்பியாய் வெளிப்பட்ட வெள்ளை முடி காட்டி கொண்டிருந்தது.
அதுவும் ஒரு வித கம்பீரத்தையே அவனுக்கு கொடுத்தது.. என்பதே உண்மை.
அவனின் உடலின் நிறத்தை வைத்தே, அவன் வட இந்தியாவை சேர்ந்தவன்.. என்பதை சொல்லி விடலாம்.
ஆனால் அவனின் உடல் மொழியும், முகவெட்டும், முறுக்கு மீசையும், அவனை அப்பட்டமான, ‘தமிழ் பையன்..’ என்று சொல்ல வைக்கும்.
தாயின் நிறத்தையும், தந்தையின் உருவத்தையும் பிரதிபலிப்பவன், அவன்.
அவன் தந்தை அன்பரசு.. தமிழ்நாட்டில், இதே கொங்கு மண்டலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
நடுத்தர குடும்ப சூழலிலும் நன்றாக படித்து மத்திய அரசு பணியில் இணைந்தவர்.. தனது வேலை நிமிர்த்தமாக வட இந்தியாவிற்கு சென்ற போது, அங்கே உடன் பணி புரிந்த பூஜிதாவின் மீது காதல் கொண்டார்.
அன்பரசு வீட்டில், ‘படித்த பக்குவமானவன்; அவனுக்கு தெரியாதது இல்லை..’ எனும் எண்ணம் கொண்ட அரசுவின் பெற்றோர், சொந்தங்களின் எதிர்ப்பையும் மீறி.. இந்த திருமண விசயத்திலும் அவருடைய காதலுக்கு ஆதரவாகவே நின்றனர்.
அன்பரசு வீட்டை காட்டிலும் வசதி வாய்ப்புகள் குறைவான குடும்பத்தில் பிறந்திருந்த பூஜிதா ஒற்றை பெண் என்பதால், தனது பெற்றோரை கடைசி வரை பாக்க மட்டும் அன்பரசுவிடம் கோரிக்கை வைக்க, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதும்.. அவர்கள் புறமும் எவ்வித மறுப்பும் எழவில்லை.
இரு வீட்டிலும் அவர்கள் ஒற்றை பிள்ளைகள் வேறு என்பதால், அவர்களின் சந்தோஷத்தையும், விருப்பத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அந்த காலத்திலேயே வேற்று இனம் என்ற பாகுபாடு இல்லாமல், இரு தரப்பாலும் முறையாக செய்து வைக்கப்பட்ட திருமணம் ரியானின் பெற்றோருடையது.
இதனால் வட இந்தியாவில் பிறந்த போதும், ரியானுக்கு தமிழ்நாடும், தமிழும் புதிது இல்லை.
ரியானின் தாய் தந்தை இருவரும் ஒரே துறையில் வேலை பார்க்க, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பணி இட மாற்றம் கட்டாயம் என்பதால், ஆரம்ப கல்வி முதல், பள்ளி இறுதி வரை.. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் ஹாஸ்டலில் தங்கியே பயின்றான்.
பள்ளி படிப்பை பெற்றவரின் விருப்பத்துக்கு விட்டவன், அவனின் கல்லூரி வாழ்க்கையை, அவனின் முடிவு படி தமிழ்நாட்டில் தான் முடித்திருந்தான்.
படிப்பு, வேலை என இருந்தாலும், விடுமுறை நாட்கள் அனைத்தும்.. தவறாமல் தந்தை வழி தாத்தா வீட்டில் தான் ரியானுக்கு கழியும்.
ரியான் பிறந்த மறுமாதமே.. பூஜிதாவின் தாயார் வழுக்கி விழுந்து.. கால் முறிவு ஏற்பட்டு, பூஜிதாவின் பிரசவகால விடுப்பு அவரை கவனிப்பதில் செல்ல, தனது பேரனின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டவர் அரசுவின் தாயார் தான்.
பிரசவ விடுப்பு முடிந்து பூஜிதா மீண்டும் பணியில் சேர, அப்போதும்.. அவன் அவர் வசமே.
அவனுக்காகவே தங்களின் இருப்பை இரு வருடங்கள் அங்கே மாற்றிக்கொண்டனர் அந்த தம்பதிகள்.
குத்தகைக்கு விட்ட தங்கள் காட்டினை ஒரு முறை வந்து பார்த்தவருக்கு, காட்டின் நிலை வருத்தத்தை தர, அரசு மீண்டும் அவர்களை கோவைக்கு அனுப்பி விட, பெரியவர்களின் பிரிவால் தவித்து போனது ரியான் தான்.
குழந்தை பருவத்திலேயே.. அவன் முகம் பார்த்து.. சிரித்து பேசியது அவரிடம் தான் என்பதாலோ என்னவோ.. அவனின் ஒட்டுதல் அதிகம் அரசுவின் பெற்றோரிடமே..
விடுமுறையில் தாய், தந்தையிடம் சென்றாலும்.. அவர்கள் வேலைக்கு சென்று வந்த பின் வரும் நேரம் மட்டுமே அவனுக்காக ஒதுக்க முடிந்தது.
அதனால் அவனுக்கு அங்கு செல்வதை விட, தான் வந்தால் தனக்காக ஆசையாய் சமைத்து ஊட்டும் அப்பத்தாவையும், கூடவே கூட்டிக்கொண்டு காடு.. கரை.. என சுத்தும் தன் அப்பாரையும் மிகவும் பிடிக்கும்.
படிப்பு முடியும் முன், வெளிநாட்டு வேலை, அடுத்து திருமணமென அவனின் காலம் ஓட..
அவன் வாழ்வில் ஏற்பட்ட பல இழப்புகளை கடந்து, சில வருடம் கழித்து இந்தியா வருகிறான்.
அப்படி இங்கு வருவது என முடிவு செய்ததும்.. அவன் செய்த முதல் வேலை,
தனது தந்தை தனக்காக விட்டு சென்ற டெல்லியில் இருந்த அவர்களின் வீடு மற்றும் இடத்தை விற்றும், தாத்தாவின் பூர்வீக சொத்துக்களை வைத்தும் பணம் திரட்டி,
தனது ஒன்று விட்ட சகோதரனான சந்தீப் உதவியுடன் கோவையிலேயே ‘நியூ டெக் பார்க்’ என்ற கம்பெனியை வெளிநாட்டிலிருந்தபடியே துவங்கியிருந்தான்.
அந்த நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்தையும்.. அங்கிருந்தே சந்தீப் மூலமாக முடித்துவிட்டு, இந்த முறை முழுவதுமாக இங்கேயே தங்கி விடும் எண்ணத்தோடு வந்திறங்கி இருக்கிறான்.
****
“டேய் ரியான்.. நா இங்க இருக்கேன்..” என்ற குரலில், சத்தம் வந்த திசை பார்த்து திரும்பியவன்,
தனது வலது கையை உயர்த்தி ‘ஹாய்..’ என்பதாக சைகை காட்டிவிட்டு, தனது நடையை அவனை நோக்கி திருப்பினான்.
“ஹாய் சந்தீப், ஹவ் ஆர் யூ மேன்..?” என நட்பாக அணைத்து விடுவித்து கேட்க,
“நான் நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க..?. பார்த்து பல வருஷம் ஆயிடுச்சு.. இல்ல..?!” என்றதும்,
“ஹொய், டூ டேஸ் க்கு பிஃபோர் கூட வீ ஆர் டாக் இன் வீடியோ கால். ஆர் யூ ஃபர்காட் இட்..?!” என்றான் ஆச்சர்யமாக.
“வீடியோ கால்ல பேசினாலும், நேர்ல பார்த்து பேசற மாதிரி வருமா..?” என்றவன்,
குனிந்து வாக்கரில் அமர்ந்திருந்த குட்டி உருவத்திடம், “ஹாய் சேம்ப், வெல்க்கம் டூ கோவை. எப்படி இருக்க முகுந்த்..?” என்றவாரே.. அவனுக்காகவே கொண்டு வந்திருந்த சிறு பொக்கேவைக் கொடுக்க,
சோபையாய் ஒரு புன்னகையை பரிசாக்கிய குழந்தையோ, “ம் ஃபைன் அங்கிள். தேங்க்ஸ் ஃபார் யூவர் ஹெர்ட்டீ வெல்கம் அங்கிள்.
வாட் அபவுட் யூ அண்ட் யூவர் ஃபேமிலி..?” என்றான் பெரிய மனிதன் போல தெளிவான ஆங்கிலத்தில்.
“என்னடா சேம்ப்பையும் உன்ன மாதிரி ஆக்கி வச்சிருக்கே..? சின்ன வயசுல நீ பேசற மாதிரி அப்படியே பேசறான். அவனுக்கும் தமிழ் தகறாரா..?” என்றான் நக்கலாக.
அதில் அப்பா, மகன் இருவரும் முறைத்து பார்க்க, ரியான் அணிந்திருந்த கூலர் அவனின் முறைப்பை மறைத்திட, குழந்தையின் முறைப்பு மட்டும் தெளிவாக தெரிந்து கொண்ட சந்தீப்,
“என்ன சேம்ப் முறைக்கற மாதிரி இருக்கு..? நீ பேசுனதுல தமிழே வரலையே..!
அப்போ தெரியாதுன்னு தானே அர்த்தம்..?” என்றான் தீவிரமாக, ‘தான் சொன்னது உண்மை..’ என நிரூபித்து விடும் நோக்கத்தில்.
“அதெல்லா பேச்சுவேனே.. மை டாட் டீச் அல்வேஸ் டமில் டூ…” என்றான் குழந்தை ரோசமாக.
“எதே..! டமிலா..? உங்க அப்பாவே தமிழ்ல அரைகுறை. இதுல அவன் டீச் பண்ணி, நீ கத்துக்கிட்ட தமிழ், டமிலா.. தான் வரும்..” என சிரிக்க,
அவனின் கழுத்தோடு தனது கரத்தை போட்டு அணைப்பது போல இறுக்கிய ரியான், “வாட் டிட் யூ சோ மேன்..?” என்றிட,
“எப்பா ராசா, அதான் தமிழே வரலையே..! அதை சொன்னா ஏன்டா உசுருக்கு உலை வைக்கற..?
அப்பா, மகன் ரெண்டு பேரும் தமிழ்ல டாக்டரேட் வாங்குவங்க தான்னு ஒத்துக்கறேன் போதுமா…? கொஞ்சம் கைய லூஸ் விடுடா..
என்ன கொன்னுட்டா, அப்புறம் என் பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு நீ தான் பதில் சொல்லனும் பாத்துக்கோ..” என்றான் பதறிப் போய்.
“தட்ஸ் த ரீஷன், ஐ’ம் ரிலீசிங் யூ..” என்றுவிட்டு கையை எடுக்க,
“அப்பா.. என்னா பிடி.! ஏன்டா, நீ பாரின்ல ஐடில தானே வொர்க் பண்ணே..?
இல்ல எங்களுக்கு தெரியாம எதாவது ஆர்மில சேர்ந்து இருந்தீயா..?
எப்பா…! என்னா வலி..” என்றான் தனது கழுத்தை நீவியபடி.
“இப்ப அதுவா மேன் முக்கியம். முகுந்த் ஈஸ் ஆல்ரெடி டயர்ட். நீ பேசறத கேட்டு இன்னும் டயர்ட் ஆகிடுவான் போல..” என்றிட,
அவன் சொல்வதும் உண்மை என்பதாய் இருந்தது.. குழந்தையின் சோர்ந்த முகம்.
உடனே தனது பேச்சை முடித்து கொண்ட சந்தீப், ரியானிடமிருந்து பெட்டிகள் அடங்கிய ட்ராலியை அவன் வசப்படுத்திக்கொண்டு எக்ஸிட்டை நோக்கி நடக்க துவங்க, அவனை பின் தொடர்ந்தனர் தந்தையும் மகனும்.
தனது காரில்.. அவங்களின் பெட்டிகளை சந்தீப் அடுக்கி முடிக்க, ரியான் முகுந்த்தை தூக்கி பின் இருக்கையில் அமர வைத்து,
வாக்கர் சேரை மடக்கி.. டிக்கியினுள் போட்டு விட்டு குழந்தையின் அருகே அமர்ந்தான்.
error: Content is protected !!