Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 15.2

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 15.2

          ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தெய்வ நிலையும், மிருக நிலையும் சம விகிதத்தில் நிலைப்பட்டு இருக்குமாம். சூழ்நிலை எதுவாகிலும் தெய்வீகத்தை காத்து நின்று மிருக நிலையை அடக்குவதே மனித மாண்பு. ஆனால், இங்கு தெய்வ சந்நிதியில் மனித மிருகம் கட்டவிழ்க்க பட்டு, தங்களது உக்கிர முகத்தை காட்டி கொண்டிருந்தது.

               “என் மனைவியை நான் அடிப்பேன்”… “ எங்கள் வீட்டு பொண்ணை நாங்கள் என்னவும் செய்வோம்”… “பெத்தவங்க எங்களுக்கு இல்லாத உரிமையா”… என்று தங்கள் வீட்டு பெண்களை துன்புறுத்தும் ஆண்கள் கூட, அடுத்த வீட்டு ஆண்கள் ஒரு சொல் சொல்ல விட மாட்டார்கள். பெண்கள் மீது கை வைப்பதும், அவர்கள் ஒழுக்க குணத்தை விமர்சிப்பதும். பெண்களின் நுண்ணிய உணர்வுகள் சார்ந்தவை என்பது போய், அவர்கள் சார்ந்த குடும்பத்தின் கௌரவ நிலையே பாதிக்கப்பட்டதாக எண்ணும் ஆண்களும், தன் வீட்டு பெண்கள் மீது கை வைக்க அமைதியாக போவதா, தான் என்ன ஆண் மகன்? என சமூகத்தின் ஆண்கள் வரையறைக்குள் நிற்கும் ஆண்களும். தங்கள் நிலை, கல்வி, தகுதி மறந்து அவர்களின் மூர்க்கத்தமான கோபத்தையே வெளிப்படுத்துவார்கள்.

               இங்கு, சூழலும் அவ்வாறே அமைந்து விட்டது. தாமரையின் குழப்ப மனநிலை புரிந்து கொண்டு, அவளுக்கான நேரத்தை கொடுத்து பிரச்சனையை பேச்சு வார்த்தையிலே சுமூகமாக முடிக்க எண்ணி மூன்று பேரும் வர,



Advertisement

               அரசியின் பேச்சில் நிதானத்தை இழந்த சிவம் உடன் பிறப்பே என்றாலும் அடிக்க பாய, குறுக்கே புகுந்து தடுத்தாள் வாணி. தன் தாய் மாமனே தடுத்து பேச வர, அவளுக்கும் கன்னத்தை சேர்த்து ஒரு அடி விழ, தடுமாறி விழ போனவளை பெரியாத்தா தாங்கி, மகளை அdi த்த கோபத்தில் நேருக்கு மாறாக வசை பாட, மற்றவர்கள் மூவர் மேலும் பாய்ந்து விட்டனர்.

                    கூச்சல் சத்தம் அதிகமாக என்னவோ என்று பதறி போய் வேகமாக வந்த மூவரும் பார்த்தது தங்கள் வீட்டு பெண்களை அடிக்கும் பூமணி வீட்டாரை தான். அதிர்ந்து நொடி நேர மாற்றத்தின் பின் மூவரும் பாய்ந்து விட்டனர் கூட்டத்திற்குள். யாருக்கு அடி விழுந்தது என்றால் அனைவருக்கும் தான், யார் அடித்தது என்றால் அனைவரும் தான்.

          ஐயனார் கோவிலை சுற்றி மரம் வெட்டி கிடக்க, அடுத்து என்ன கை கொண்டு அடித்து, தடுத்தது போக. விறகு கட்டை கொண்டு வெளுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Advertisement

                  கோபமும், ஆத்திரமும் குறைய அடித்து கொள்ளும் தங்கள் வீட்டு ஆண்களை பதற்றமாக பார்த்தார்கள் பெண்கள். சற்று நேரம் முன்பு அவர்களும் அடித்து கொண்டவர்கள் தான், தலை கலைந்து, சேலை ஒதுங்கி, வளையல் நொறுங்கி எதையும் கவனிக்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை. தன் குழந்தையோடு ஒரு மூலையில் ஒதுங்கி கொண்டாள் தாமரை. அவளுக்கும் நல்ல அடி தான், கையில் குழந்தை இருக்கு என்றெல்லாம் பார்க்க வில்லை, அரசி ஒரு பிடி பிடித்து தான் விட்டார். இவ்வளவு பிரச்சனையும் அவள் ஒருத்தியால் தானே!

Advertisement

             பூமணி அங்கும், இங்குமாக ஓடி கொண்டிருந்தார். மனம் தவிப்பாக, இருக்கும் உறவுகளுக்கு மத்தியில் கண்கள் மகனை தேடியது, இருவது வயது சின்ன பையன். தாயை, உடன் பிறந்தவளை பேசிய கோபத்தில் ரோசம் கொண்டு சண்டைக்கு சென்றவன்.

             விறகு கட்டை உள் வந்ததும் இரத்த கறை படிய ஆரம்பித்தது. சட்டை கிழிந்து, வேட்டி அவிழ்ந்து, நிலை தடுமாறி, உடல் வலியோடு இருந்தும் மூர்க்கம் குறைய வில்லை. தங்கள் வீட்டு பெண்களின் ஒழுக்கத்தை விமர்சித்தவர்களை அடித்து விழ்த்துவதே கௌரவம் என்றும், தங்கள் வீட்டு பெண்கள் மீது கை வைத்தவர்களை அடித்து நொறுக்குவதே ஆண் மகன் என்றும் மோதி கொள்பவர்கள் எவ்வாறு தணிவார்கள்.

            இடமே புழுதி மண்டலமாக காட்சியளித்தது. சிவத்திற்கு நல்ல அடி தலையில், வேலுக்கு ஒரு பக்க தோள் பட்டையே கழண்டு விடும் போல் இருந்தது. கலைவாணனுக்கும் வலது காலில் இரத்தம் உறைய நல்ல அடி தான். ஆனால், இன்னமும் சத்தமும், சண்டையும் குறையவில்லை.

Advertisement

               கண்ணனின் சட்டையை வேலு பிடித்து அடிக்க, இவன் தானே வயது வித்தியாசமின்றி பெரியாத்தாவை எட்டி உதைத்தவன். அதே போல் அவனை எட்டி ஒரு உதை விட, வேரோடிந்த மரம் போல் மகன் விழுந்ததை பார்த்த சிவம். ஆத்திரத்தில் விறகு கட்டை கொண்டு வேலுவின் இடது கையில் ஓங்கி ஒரு அடி கொடுக்க, அலறி துடித்து மண்ணில் விழ்ந்தான் வேலு.

            தாய் மனம் பதறி துடிக்க உள்ளே வந்தார் அரசி. ஆண்கள் கூட்டம் என்றெல்லாம் கவனத்தில் இல்லை, மகனின் அலறல் மட்டுமே கண்ணில் நிலையாக நின்றது. மேலும் அடிக்க வந்த சிவத்தை தடுத்து, குறுக்கே பாய்ந்து வேலுவை மறைத்தார் போல் அவன் மீது சாய, அடுத்த அடி அரசியின் காலில் தான். “ஆத்தே”என்று ஒரு ஓங்கிய சத்தத்தோடு பேச்சு, மூச்சு இல்லாமல் சரிந்து விழுந்தவர் தான் வேற அசைவு இல்லை.

               வேலு தான் கை வலியையும் பொருட்படுத்தாது, தன் தாயை தூக்கி தட்டி எழுப்ப ஒரு அசைவும் இல்லை. பயந்து போனவன் “அம்மா” என்று ஒரு பெரும் அரட்டலில் தான் ஏணையோர் கவனம் அங்கு சென்றது. அய்யோ என்று பதறி மற்றவர்கள் நெருங்கும் முன், ஊர் ஜனக்கட்டு உள்ளே இறங்கியது.

                பிறகு என்ன மேலும் ஒரு கலவரம் வந்து தான் அடங்கியது. தனி ஒருவனுக்கு துணை நிற்காமல் பழி சொல்லிய ஊர்சனம், பெண்கள் மீது கை வைத்து விட்டார்கள் என்ற அளவிலே உள்ளே இறங்கியது.

                இளசுகள் துள்ளி கொண்டு அடிக்க பாய, பெருசுகள் தான் குடும்ப சண்டை என்று கணித்தாலும், எந்த தைரியத்தில்! தங்கள் ஊரில், தங்களின் எல்லைக்குள், தங்கள் ஊர் பெண்கள் மீது கை வைத்த அசலூர் ஆட்களுக்கு பயம் காட்டவே, இளவாட்டங்களை கொஞ்சம் துள்ள விட்டு. பிற்பாடு அவர்களை அடக்கி, சமரச பேச்சு வார்த்தையை தொடங்கினர். இல்லையென்றால் பூமணி வீட்டாரை நார் நாரக கிழித்து தொங்க விட்டிருப்பார்கள் ஊர் இளந்தாரிகள்.

               பேச்சு வார்த்தையை கவனிக்கும் மனநிலை வேலுக்கு இல்லை. தற்போது அவன் கவனம் எல்லாம் தாய் மீது தான். நினைவின்றி விழுந்து கிடக்கும் தாயை மாறன் உதவியோடு மருத்துவமனை தூக்கி செல்ல, பின்னோடு கலைவாணனும், பெரியாத்தாவும் உடன் சென்றார்கள்.

               வேலு விட்ட உதையில் கண்ணனுக்கு பின் மண்டையில் நல்ல அடி, இரத்தமும் நிற்காமல் ஓட. அவனை தூக்கி கொண்டு சொந்தங்கள் ஒரு புறம் மருத்துவமனை செல்ல. நடக்க கூட முடியாமல் காலை இழுத்து இழுத்து சிவமும் பின்னாடியே சென்றார்.

    நிலைகுலைந்து போய் தாமரை ஒரு மூலையில் முடங்கி விட்டாள். ஆரம்பம் அவளில் ஆரம்பித்தாலும் பிரச்சனை எங்கோ போய் முடிந்தது. தாமரை கழுத்தில் கிடந்த தாலியை கூட காணவில்லை. எங்கு போனது என்று கூட அறியும் நிலையில் அவள் இல்லை.

  என்னதான் வேலுவை வேண்டாம் என்று சொல்லிக் கொண்டாலும் வெறும் கழுத்தாக நிற்கும் பொழுது அவ்வளவு வலித்தது அவளுக்கு… வேலுக்கு ஒரு பக்க கை முழுசாக முடங்கிப் போனது. கண்ணனும் உயிர் போய் தான் மீண்டு வந்தான்.

   மகனின் நிலை பார்த்தபின் பூமணி உறுதியாகிவிட்டார் திரும்ப வேலுவோடு தாமரை வாழ்க்கை இல்லை என்று… அரசிக்கு கால் இழுத்துக் கொண்டது. எத்தனை மாவு கட்டு போட்டும் முழுதாக நடமாட்டம் இல்லை.

  அடுத்த நாப்பது நாளில் திரும்ப பஞ்சாயத்து தொடங்க.. சேர்ந்து வாழும் எண்ணம் இருவருக்கும் இல்லை. தாமரை வீட்டு ஆட்கள் உறுதியாக சொல்லிவிட்டார்கள் அத்து விடுமாறு… வாணிக்கு மனம் வலித்தது. சொந்தமாக உடன் வளர்ந்த உறவு இன்று முழுதாக முடிந்து போனது.

  தாமரையும் தனக்கு வேலுவோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று சொன்னபின் வேலு அந்த உறவை பிடித்து வைக்கவில்லை அவள் விருப்பத்திற்கே விட்டு விட்டான். அப்போது பிள்ளை தாயிடம் தான் இருந்தது. தாமரையின் இரண்டாம் திருமணத்திற்கு பின் தான் பிள்ளையை வேலு அழைத்துக் கொண்டது.

   சொந்த குடும்ப பிரச்சனையில் ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூர் காரர்களை கொண்டு கலவரம் செய்த சிவன் குடும்பத்தை ஐந்து வருடங்கள் ஊர் தள்ளி வைத்தது. இவ்வளவு நடந்த பின் சிவமும் மகளோடு இங்கு இருக்க விருப்பமில்லாமல் மனைவி ஊரான தேனிக்கு சென்று விட்டார்.

ஒற்றை மகன் என்று அருமை பெருமையாக வளர்த்த மகன் தனிமரமாக நிற்கவும் தாங்க முடியவில்லை அரசிக்கு… அடுத்து என்ன தான் வைத்தியம் பார்த்தும் மீண்டு வர முடியாமல் முழுதாக முடங்கிப் போனார் அரசி. ஏதோ நடமாட்டம் என்ற அளவில் இருந்த அவருக்கு தாமரையின் இரண்டாம் திருமணம் அறிந்தபோது மகனின் வாழ்க்கை நினைத்து இவர் போய் சேர்ந்து விட்டார்.

  இத்தனை வருடமும் மகள் மட்டுமே என்று வாழ்வை கடந்து விட்டான். இன்று மீண்டும் வந்த தாமரை ஒரு மாதிரி அழுத்தத்தை கொடுத்தாள். பழைய நினைவு அதிகமாக வாட்டியது. அதை நினைத்து இரவு முழுக்க பொட்டு தூக்கம் இல்லாமல் படுத்து கிடந்தான் வேலு.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!