Skip to content
Post Views: 7,426
பகுதி 20
கோவையின் முக்கியமான போக்குவரத்து சாலை என்றாலும்.. இரவு மணி பதினொன்றை நெருங்கிவிட்டதால் சாலை வெறிச்சோடி போயிருக்க.. கார் வெங்கடேஷ் கரங்களில் கொஞ்சம் வேகமெடுத்து தான் சென்று கொண்டிருந்தது.
Advertisement
பின்னால் அமர்ந்திருந்த சகோதரிகள் இருவரும் தந்தமது நிலையில்.. ஏதோ யோசனையில் இருக்க, கண்ணாடி வழியாக இனியாளை யோசனையோடு அவ்வப்போது தழுவி மீண்டது வெங்கடேஷின் பார்வை.
ரியானின் மீதான அவளின் வெறுப்பு மிகு பார்வையை.. அவனும் கண்டு கொண்டதால் வந்த யோசனை அது.
Advertisement
Advertisement
ஆனாலும் எதையும் கேட்க முடியாது.. ‘தனக்கு தெரியாமல் கூட அவர்களுக்குள் எதாவது தனிப்பட்ட விசயம் இருக்கலாமே..’ என்ற எண்ணத்தோடு அவனும் அமைதியாகவே காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
“சம்யூ ம்மா.. முகுந்துக்கு அடிக்கடி இப்படி ஆகுமா..?” என இதுவரை ஏதோ சிந்தனையில் லயித்திருந்த இனியாள் கேட்க,
Advertisement
“எனக்கு தெரிஞ்சு ஆரம்பத்துல அவன் அழுதப்போ வந்துச்சு.
அடுத்து இப்போ தான்னு நினைக்கிறேன் க்கா.
ஆனா.. அப்ப ஜஸ்ட் கொஞ்ச நேரத்துல நார்மல் ஆகிட்டான்.
இன்னைக்கு மாதிரி அன்கான்சியஸ் ஆகல..” என வருத்தத்தோடு சொல்ல,
“ஓ.. இன்னைக்கும் அப்போ அவன் அழுதானா..?” என்றாள் புருவம் சுருங்க.
“ம்ம்.. கொஞ்சம் அவன் பிடிவாதம் பிடிக்க பாஸ் கண்டிச்சாராம்.
அப்பவும் விடாம அழுது பிடிவாதம் பிடிக்க.. வேற வழியில்லாம அவரு லேசா அடிச்சிட்டாரு..” என சொன்னதும்,
எதார்த்தமாக இனியாளின் முகபாவனையை கண்ணாடி வழியே கண்ட வெங்கடேஷ் கரத்தில் ஒரு நிமிடம் கார் தடுமாறி சரியானது.
‘எப்பா.. என்ன கோபம் அந்த முகத்துல.. குழந்தைய பெத்தவங்களா இருந்தா கூட இப்படி ரியாக்ட் பண்ணியிருப்பாங்களா.. ன்னு தெரியாது..’ என நினைத்தவன்,
இன்னும் வேகத்தை கூட்டி அவர்களின் அப்பார்ட்மெண்ட் முன் இறக்கிவிட்டவன்.. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு,
முகுந்த், ரியானுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு திரும்பியிருந்தான்.
வீட்டுக்குள் நுழைந்தது முதல் கடுகடுவென இருக்கும் இனியாளை கண்டுவிட்டு, “என்ன ஆச்சு அக்கா..? எதுக்கு இப்படி இருக்கே..?” என்றிட,
“அவன் குழந்தைடீ.. அவனை எப்படி அந்த ஆள் அடிக்கலாம்..?” என்றாள் எடுத்த உடனே கோபமாக.
“அக்கா..! என்ன பேசற நீ..? அது அவரோட பையன். அவருக்கு அதுக்கு உரிமை இருக்கு.
அது மட்டுமல்ல, நீ அவன் இவன்னு பேசறது சரியில்ல..” என்றவளுக்கு,
‘இன்று இனியாளுக்கு என்ன ஆனது..?
யாராக இருந்தாலும்.. மரியாதையுடன் பேச வேண்டும்.. என அடிக்கடி சொல்பவளின் வாயிலிருந்து.. எப்படி இப்படியான வார்த்தைகள்..’ என்ற குழப்பமும் திகைப்பும்.
“ஆமா.. அந்தாளுக்கு மரியாதை ஒண்ணு தான் கேடு..” என வாயினுள் முணுமுணுத்தவள்,
“அத விடு. எதுக்கு அடிச்சாங்களாம் உன்னோட பாஸ் அந்த குழந்தையை..” என்றாள் முடிந்தவரை தனது கோபத்தை கட்டுப்படுத்தி,
“அது..” என ஆரம்பித்த சம்யுக்தா, ரியான் சொன்னவற்றை சொல்லிக்கொண்டே வர,
சட்டென.. இப்போது தான் மூளையில் மின்னலாய் தோன்றியது முகுந்த் தேடும் பெண் யாரென.
சம்யுக்தா சொல்லும் போதே.. சில வாரங்களாக தன்னை யாரோ தினமும் பார்க்கும் உணர்வை உணர்ந்திருந்த இனியாளுக்கு உறுதியாகவே தெரிந்திருந்தது.. அந்த குழந்தை ஏங்கி கேட்ட அந்த ஜோடி தானும் தன் மகளும் என்பது.
“அக்கா..! தினமும் நீயும் வெண்பாவும் தானே அங்கே நிற்பீங்க.
அப்போ முகுந்த் மிஸ் பண்ணறது உங்களையா..?” என்றாள் சம்யுக்தா ஆர்வமாக.
“இருக்க வாய்ப்பு இருக்கு சம்யூ.
ஏன்னா.. நானும் யாரோ என்னை பார்க்கற மாதிரி ஃபீல் பண்ணிட்டு தான் இருந்தேன்.
பட், அது தப்பான பார்வையா தோனல. அதனால அதை பெருசாவும் எடுத்துக்கல..” என்றவளுக்கும் மனதில் ஒரு இதம்.
‘தன்னை அந்த பிஞ்சு எந்த அளவு பாசத்தோடு பார்த்திருக்கும். அவனின் ஆசையை இன்று கடவுள் சித்தமாய் நிறைவேற்றி விட்டேனே..’ என்ற ஆசுவாசம் அவளின் கண்ணில்.
“ச்சே.. இது முதல்லையே தெரிஞ்சிருந்தா.. வெண்பாவோட சேர்த்து முகுந்துக்கும் நீயே கொடுத்திருக்கலாம்.. இல்லக்கா..” என எதார்த்தமாக சம்யுக்தா சொல்ல,
“இதுவரை முடியலன்னா என்ன..? அதான் இங்கே இருக்காங்கன்னு தெரிஞ்சிடுச்சே.
இனி டெய்லியும் முகுந்தை கொண்டு வந்து விடச்சொல்லு.
பாப்பாக்கு ஊட்டும் போது அவனுக்கும் நானே கொடுத்திடறேன்..” என்று இயல்பாக சொல்வது போல இருந்தாலும், மனமெங்கும் ஒரு வித உல்லாச ஆர்ப்பரிப்பு.
சம்யுக்தாவிற்கும் இது நல்ல யோசனையாய் பட, “சரிக்கா.. நான் நாளைக்கே பாஸை பார்த்து.. இனி டெய்லி அவனை பார்க் கூட்டிட்டு வரச்சொல்லிடுறேன்..” என்று உறுதி கொடுத்தவள் கொஞ்சம் யோசனை செய்திருக்கலாம்.
இதில் முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய நபர்.. அந்த பிள்ளையின் தந்தை.. என்பதும் அவர்களுக்கு மறந்துவிட்டது போல.
******
மறுநாள் காலை தான் சந்தீப்புக்கு விசயம் சொல்லப்பட,
அவசரமாக ஓடி வந்தவன், “ஏன்டா.. என்கிட்ட நைட்டே சொல்லல..” என சண்டை போட..
என்ன சொல்வது என்றே புரியவில்லை ரியானுக்கு.
‘ஆமா.. சொல்லியிருக்கனும் இல்ல..?’ என இப்போது தான் தோன்றவே செய்தது ரியானுக்கு.
நேற்று வெங்கடேஷூம்.. சம்யுக்தாவும் இங்கு வந்தது கூட தற்செயலாக நடந்தது தானே அன்றி.. இவன் யாருக்கும் சொல்லவில்லையே..!
இத்தனை வருட பழக்கமாக, தனியாகவே எல்லாம் பார்த்த பழக்கத்தில் வந்தவனுக்கு வெங்கடேஷூம் உதவ, சந்தீப்பிடம் சொல்ல வேண்டும்.. என்ற எண்ணம் எழவில்லை என்பதே உண்மை.
இப்போதும் டாக்டர் வந்து சொன்ன பிறகு தான்.. ‘என்ன செய்வது..?’ என முடிவெடுக்க முடியும்.
அதுவரை ஆஃபிஸுக்கு வரமுடியாது.. என சொல்லவே சந்தீபிடம் தகவல் சொல்ல அழைத்திருந்தான்.
“சாரிடா.. நிஜமா தோனல..” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“என்ன தோனலையா..? நீங்க இங்கே இருக்கீங்கன்னு தான் இங்கே வந்தேன்னு.. அப்போ அன்னைக்கு சொன்னது எல்லாம் வாய் வார்த்தைக்கு தானா..?” என்றான் இன்னும் கோபமாக.
“டேய் சந்தீப்.. தனியா வந்திருந்தா ஒருவேள சொல்லியிருப்பேனோ என்னவோ..?
அதான் வெங்கடேஷ் நைட் ஃபுல்லா கூடவே இருந்தானே..!
அதுமட்டுமில்ல.. முகுந்துக்கும் பெருசா எந்த பிரச்சினையும் இல்லை.
அதனால ஏன் வீணா..” என சொல்லிக்கொண்டிருந்தவனை இடைமறித்து,
“யார் இருந்தா என்னடா.. ஒரு வார்த்தை சொல்ல உனக்கு என்ன கேடு..?
முகுந்த் ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டுன்னு.. அதும் நைட்ல இருந்துன்னு.. கூலா சொல்லிட்டே.
இங்கே வந்து பார்க்கற வரை பட்ட பாடு.. ஏன்டா இப்படி இருக்கே..?” என்றான் ஆற்றாமையோடு.
“அட.. நிஜமாவே ஒண்ணுமில்லடா அவனுக்கு.
அவன் ரொம்ப பயந்தா மட்டும் மூச்சு திணறுமுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேனே.
நேத்து.. நா கொஞ்சம் டென்ஷன்ல கத்திட்டேன். அதுல பயந்து தான்..” என தடுமாற்றமாய் சொல்ல,
“என்ன..! நீ திட்டினியா..? அதும் குழந்தைய..” என அதிர்ந்தாலும், முன்னிலும் கோபமாக தன்னை பார்த்தவனிடம்,
‘கை நீட்டிவிட்டேன்..’ என எப்படி சொல்வான்..? சொன்னால்.. அடித்துவிடுவானோ..? எனும்படியாக இருந்தது அவன் நின்ற நிலை.
“ம்ம்..” என தலையசைக்க,
“அப்படி அவன அதட்டற அளவு என்ன நடந்துச்சு..?” என்றான் ரியானை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி.
“ப்ம்ச்.. அத விடு..” என பேச்சை நிறுத்த நினைத்தவனை,
“மரியாதையா சொல்லப்போறையா இல்லையா..?
உனக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்.. இரு, மலர் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவா.
அவளுக்கு நீ என்ன பதில் சொல்லறேன்னு நானும் பார்க்கறேன்..” என்று சொல்ல,
‘அய்யோ..! மலருமா..?’ என ஆயாசமாய் இருந்தது ரியானுக்கு.
இதுவரை, ‘தன்னை கேட்க.. பார்க்க.. யாரும் இல்லை’ என தவித்தவனுக்கு,
இப்படி ஆள் ஆளுக்கு தன்னை கேள்வி கேட்பது நன்றாக இருந்த போதும்.. கொஞ்சமே கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது.
error: Content is protected !!