லட்சுமி அனிதாவை அங்கே சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.. எதிர்பார்க்கவில்லை என்பதனை விட அப்படியொருத்தி இருக்கிறாள் என்பதே அவளுக்கு நினைவில் இல்லை.. ஆனால் கண் முன்னால் நிற்பவளை நினைவில் இல்லை என்று அப்படியே ஒதுக்கி, ஒதுங்கிச் செல்ல முடியுமா??
லட்சுமிக்கு ஒரு சில நொடிகள் தேவைப்பட்டது தன்னை சுதாரித்துக்கொள்ள.. ஒருசில நொடிகள் தான். ‘யாரா இருந்தா எனக்கென்ன…’ என்ற எண்ணம் அவளுள் வேகமாய் வந்துவிட்டிருந்தது..
‘இது என் இடம்.. நான் ஈசனின் மனைவி…’ என்ற தோரணை அவள் உடல் மொழியில் தெரிய, அனிதாவை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்தவள் “என்ன வேணும்..??” என்று நிமிர்வாகவே கேட்டாள்.
ஆனால் அனிதா அதற்கும் மேலாய் நீ யார் என்னிடம் கேள்வி கேட்பது என்பது போல் பார்க்க, லட்சுமிக்கு மனதினுள் இன்னமும் ஒரு வேகம்.
அவள் பார்வையில் இருந்த ‘யார் நீ??’ என்ற கேள்விக்கு,
‘உனக்கெல்லாம் நான் நின்று பதில் சொல்ல வேண்டுமா???’ என்று பதில் கேள்வியை தன் நடையில் காட்டிவிட்டு திரும்பிவிட்டாள் லட்சுமி..
‘இவக்கிட்ட நான் என்ன பேசுறது..’ என்று எண்ணிக்கொண்டவள் முன்னே நடந்து வர, “அக்கா குடோன்ல இருந்து போன்.. நீங்க வந்தா வர சொன்னாங்க..” என்று ஒருவர் சொல்ல,
“அவங்களுக்கு என்னன்னு கேட்டு அனுப்பிடுங்க…” என்றவள், அனிதா அங்கே வரும் முன்னே லட்சுமி வெளியேறியிருந்தாள்.
‘யார் இவ.. வந்தா கேள்வி கேட்டா.. தெனாவெட்டாபோறா..?? அவ்வளோ அலட்சியமா??அதுவும் என்கிட்ட??’ என்று நினைத்த அனிதாவிற்கு அந்த நேரத்தில் கோவம் சுறுசுறுவென்று வர, அங்கே இருந்த பெண்ணிடம்,
“இதுதான் உங்க கடைல கஸ்டமர்ஸ கவனிக்கிற விதமா..” என்று கத்த,
“மேடம் நீங்க வந்தப்போவே கேட்டோம்.. நீங்க பதில் சொல்லல.. ஏதாவது வாங்குறதுன்னா வாங்குங்க.. இல்லாட்டி கிளம்புங்க.. அக்கா வந்துப் பார்த்தா எங்களைத் தான் திட்டுவாங்க..” என்று சொல்ல,
“என்னது அக்கா வா?? யாராது…??” என்று புருவத்தை சுருக்கினாள் அனிதா..
“எங்க ஓனர் அக்காத்தான்…..” என்று கடை பெண் சொல்லிவிட்டு போக, அனிதாவுக்கு என்னவோல் போலானது..
திருமணம் முடிந்து முதல் முறையாய் இப்பொழுது தான் தாயகம் திரும்பியிருக்கிறாள்.. அதுவும் அவளது ஒன்றுவிட்ட தங்கையின் திருமணத்திற்காக.
பிறந்த வீட்டிற்கு வந்த மறுநாளே தன்னப்போல் அவள் காதில் ஈசனைப் பற்றி பேச்சு விழ, நாம் வேண்டாம் என்று கை காட்டி விட்டுப் போனோமே அவன் எப்படியிருக்கிறான் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது.
வெளிநாட்டு வாழ்க்கை அது இதென்று பிதற்றி அங்கே சென்றவளுக்கோ அப்படியொன்றும் சொல்லும் படியாய் இல்லை. அவள் கணவனின் சம்பளம் இவளின் ஆடம்பரச் செலவுகளுக்கே சரியாகிப்போக, வரவும் செலவும் சரியாய் இருந்தது..
ஆனாலும் அங்கே உறவுகள் இன்றி ஒரு சுதந்திர வாழ்விருக்க, சொல்லப் போனால் அப்படி தன்னிஷ்டப்படி வாழும் வாழ்விற்காகத் தானே ஈசனை விட்டு அனிதா போனதே.. இங்கே இருந்திருந்தால் அவளது கடமையும் பொறுப்புகளும் எத்தனை எத்தனை இருந்திருக்கும்.
ஈசன் பற்றிய பேச்சு வந்ததுமே, அவன் என்ன செய்கிறான்?? எப்படி இருக்கிறான்?? நான் விட்டு வந்தபின் என் நினைவில் தொய்ந்து போனானா?? போனால் போ என்று நின்றானே இப்போதாவது என்னருமை தெரிந்திருக்கும் என்றெல்லாம் நினைத்தவள், மெதுவாக விசாரிக்கத் தொடங்கினாள்.
முதலில் அவள் மனதிற்கு ஒப்பாத தகவல் ஈசனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது..
‘என்னது கல்யாணம் பண்ணிக்கிட்டான??’ என்று நினைக்கும் போதே, சொந்தத்தில் தான் திருமணம் செய்திருக்கிறான் என்றும் தெரிய,
‘ஹா ஹா.. சொந்தத்துல எதையோ பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.. கர்ம சிரோன்மணி கடமைக்காக உப்பு சப்பில்லாம வாழ்ந்திட்டு இருப்பான்’ என்றெண்ணியவளுக்கு, ‘அவன் முன்னாடி போய் நிக்கனுமே.. அப்படி என்னதான் வாழ்றான்னு பாக்கணுமே..’ என்று ஆசை எழுந்தது.
அவளுக்குத் தெரியவில்லை, ஈசனும் சரி, அவன் மனைவியும் சரி இவள் நினைத்துப் பார்க்க்காத உயரத்தில் இருக்கிறார்கள் என்று.. ஓரளவு அவனது பால் பண்ணை, கேபிள் இதெல்லாம் கேள்வி பட்டாள் தான். ஆனால் வெளியில் வந்து பார்க்கையில் தான் தெரிந்தது ஈசனின் வளர்ச்சி.
ஆனாலும் மனதில் ஒரு ஏளனம்.. என்னதான் தொழிலில் அவன் பெரிய நிலைக்கு வந்திருந்தாலும், அவனுக்கென்று பெயர் இருந்தாலும் அவனது தனிப்பட்ட வாழ்வு அத்தனை சிறப்பாய் இருக்காதென்றும், இவனோடு எவள் நிம்மதியாய் மகிழ்வாய் காதலாய் வாழ முடியும் என்ற எண்ணம் நிறையவே இருந்தது.
ஆக அவன் முன் ‘நான் நன்றாக இருக்கிறேன்..’ என்று காட்டிக்கொள்ள ஆசைப் பிறக்க, அந்த எண்ணத்தில் தான் ஈசனைப் பார்க்கும் ஆவலில் சூப்பர் மார்க்கெட் வந்தாள்.. வந்தவளுக்கோ பெருத்த ஏமாற்றம் தான்..
அவளை யாரும் மதிப்பதாக தெரியவில்லை, ஆக, ‘இருக்கட்டும் ஈசன் வர்றபோ வந்து உங்க எல்லாரையும் பார்த்துக்கிறேன்..’ என்று மனதில் தேவையே இல்லாத ஒரு கோபத்தை வளர்த்துக்கொண்டு போனாள்..
ஆனால் லட்சுமிக்கோ அங்கே குடோனுக்கு சென்ற பின்னும் கூட அனிதாவின் நினைவாகவே இருந்தது.
‘ஏன் திடீர்னு வந்திருக்கா?? ஒருவேளை ஈஸ் மாமாவ பார்க்க வந்திருப்பாளோ…’ என்று தோன்றும் போதே அவள் மனதில் என்னவோ சுருக்கென்று தைப்பது போல் இருந்தது..
‘நீங்க பண்ணது லவ்வே இல்லை…’ என்று ஈசனுக்கு தெளிய வைத்தவள், அனிதாவின் திடீர் வருகையால் குழம்பிப் போக, அதே எண்ணங்களுடன் குடோனில் என்ன வேலை நடக்கிறது என்று சுற்றிப் பார்த்து வந்தவளிடம்,
“அக்கா இந்த லிஸ்ட் எல்லாம் ஆர்டர் போடணும்..” என்று அங்கே வேலை செய்பவன் கொடுக்க, தன் எண்ணங்களை விடுத்தது, “என்னடா..” என்றபடி லிஸ்டை பார்க்க,
“இதெல்லாம் ஆர்டர் போடணும் க்கா..” என்றான் அவனும்.
அப்போது தான் லட்சுமிக்கு வேறொரு விசயமும் நினைவில் வர, “இப்போதைக்கு எதுவும் ஆர்டர் போடவேணாம்.. ஸ்டாக் இருக்கிறது எத்தனை நாளைக்கு வரும்னு பார்த்திட்டு ஒரு அதுக்கு மட்டும் ஒரு லிஸ்ட் குடு..” என,
அவள் பதிலில் லேசாய் திகைத்தவன் “என்னக்கா சொல்றீங்க.. ஆர்டர் போடவேணாமா..” என்றான்..
“ஆமா.. வேணாம்…”
“ஆனா அண்ணன் கேட்பாரே..”
“மாமாக்கிட்ட நான் சொல்லிக்கிறேன்.. அப்புறம் இன்னொண்ணு ஆர்டர் போட வேணாம்னு சொன்னது நமக்குள்ள தான் இருக்கணும்.. நானே அவர்க்கிட்ட சொல்லிப்பேன்..” என்று லேசாய் அழுத்தம் கொடுத்து பேச,
“அக்கா.. புதுசா எதுவும் ரெடி பண்ண போறீங்களா.. அதானா??” என்று ஆவலுடன் கேட்டான்.
“அடடா.. நீ இருக்கியே.. போ. டைம் வர்றபோ சொல்றேன்..” என்று கிளம்பிவிட்டாள் லட்சுமி. இப்போது மனம் லேசாய் இருப்பதாய் தோன்றியது.
மீண்டும் சூப்பர் மார்கெட் செல்ல “அக்கா.. அவங்க சத்தம் போட்டுப் போனாங்க…” என்று வேலை செய்யும் பெண் வந்து சொல்ல,
“ம்ம் பார்த்துக்கலாம் விடு…” என்று சொல்லியபடி உள்ளிருந்த அறைக்குள் சென்று அமர்ந்தவள், கணக்குகளை எல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க, கொஞ்ச நேரத்திலேயே பேச்சியிடம் இருந்து அழைப்பு வந்தது..
“சொல்லும்மா..”
“கடைல இருக்கியா லட்சுமி..??”
“ம்ம் ஆமாம்மா.. என்ன விஷயம்..ஏன்??”
“பேங்குல இருந்து போன் வந்தது லட்சுமி, அங்க வரச் சொல்றாங்க..”
“பேங்குல இருந்தா??” என்று லட்சுமிக் கேட்கும் போதே, அடி மனதில் ஒரு பயம், ஒருவேளை பேங்கிலும் ஏதாவது வேலாயுதம் கோல்மால் செய்திருக்கிறாரா என்று..
“ம்மா.. எ.. எதுவும் பிரச்சனையா??” என்றாள் வேகமாய்..
“இல்ல லட்சுமி.. உங்க அப்பா உன் பேருல ஃபிக்ஸட்ல போட்ட பணம், அப்புறம் இன்னும் என்னவோ சொன்னாங்க அதெல்லாம் என்னவோ மேச்சுர்ட் ஆகிருக்காம்.. வர சொல்றாங்க.. சரி உனக்கு லீவ் தான போயிட்டு வருவோமா??” என்று கேட்க,
“ம்ம் சரிம்மா நானே அங்க வர்றேன்…” என்றாள்.
லட்சுமிக்கு அவளின் தந்தையை அந்த நேரத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.. அவர் அவளுக்காக செய்து வைத்திருந்த ஒவ்வொரு ஏற்பாடுகளும் சரியாய் அவளது திருமண வயதிற்கு ஏற்றார் போல் செய்திருந்தார்.. எத்தனை முன்னோக்கி சிந்தித்திருந்தால் இப்படி எல்லாம் செய்திருப்பார் என்று தோன்ற
‘ப்பா.. எல்லாம் பண்ணீங்க.. ஆனா பாதியில ஏன் விட்டு போனீங்க..’ என்று நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை..
கொஞ்ச நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.. அவளுக்கு எப்போதெல்லாம் தந்தையின் நியாபகங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் லட்சுமியின் மனம் ஈசனைத் தான் எதிர்பார்க்கும்.. இப்போதும் அதுவே தோன்ற, சரியாய் அவனே அழைத்தான்..
வேகமாய் அழைப்பை ஏற்றவள் “மாமா..” என, அவள் குரலில் தெரிந்த வித்தியாசம் கண்டு,
“என்ன லஷ்மி.. என்னவோ போல பேசுற..” என்றான் அவனும்.
தன்னை இத்தனை தெரிந்திருக்கிறானா, என்றெண்ணியவள் “இல்.. அதெல்லாம் இல்லையே…” என்றவளின் குரலில் இப்போது உற்சாகம்.
“ம்ம் சரி அத்தை போன் பண்ணாங்க.. பேங்க்ல இருந்து கால் வந்துச்சாம்..” என்று சொல்ல, “நானும் அங்கதான் போறேன் மாமா..” என்றாள்.
“ம்ம் சரி..” என்றவன், அவனாகவே “வெங்காடசலம் சார் இப்போதான் கிளம்பினார் லஷ்மி.. அவர் ஸ்கூல் கட்றார் இல்லையா.. அவரோட பார்ட்னர்ஷிப் போட்டவருக்கு இப்போ அமௌன்ட் அரேஞ் பண்ண முடியலையாம்.. அதான் நம்மக்கிட்ட ஃபைனான்ஸ் பண்ணக் கேட்டார்..” என்றதும்,
அப்போது தான் லட்சுமிக்கு அப்பாடி என்று இருந்தது. எங்கே இந்த வேலாயுதம் இழுத்துவிட்டு போன பிரச்சனைகளில் வால்பிடியாய் எதுவும் வந்துவிடுமோ என்று அவள் பயம். ஆனால் இப்போது அனைத்தும் சரியாகிட, மனம் வேறு யோசனை செய்ய,
“எவ்வளோ அமௌன்ட் மாமா??” என்றாள்.
“அதெல்லாம் அப்புறம் பேசலாம்.. நீ அத்தைக்கூட போய்ட்டு வா..” என்று ஈசன் சொல்ல,
“சரி மாமா..நீங்க இங்க வர்றீங்களா..” என்று கேட்கும்போதே தொண்டை அடைத்தது.. ஒருவேளை மறுபடியும் அனிதா வந்தால் என்ன செய்வது என்று தோன்றியது.
“இல்ல லஷ்மி.. தோட்டத்துல வேலையிருக்கு.. கேபிளுக்கு போகணும்..” என்று ஈசன் சொன்னதும், இது அடுத்த ஒரு நிம்மதி பெருமூச்சு லட்சுமிக்கு..
“சரி மாமா.. நான் பேங்க் போயிட்டு கடைக்கு வந்திடுறேன்..” என்றவள் அடுத்து பேச்சியை அழைத்துக் கொண்டு செல்ல கிளம்பினாள்..
லட்சுமியிடம் பேசிவிட்டு வைத்த ஈசனுக்கோ யோசனையாய் இருந்தது. என்னவோ லட்சுமி இயல்பாய் இல்லையென்று தோன்றியது.
‘என்னாச்சு…’ என்று யோசித்தவன், ‘சரி வரட்டும் பார்த்துப்போம்..’ என்று முடிவெடுத்து, “ம்மா.. தோட்டத்துக்கு போய்ட்டு வர்றேன்…” என்று கிளம்பப் போக,
ஈசனோ “பார்த்துக்கலாம்யா..” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்..
அவனுக்கே அவன் பதில் வித்தியாசமாய் இருந்தது.. முதலில் எல்லாம் சட்டென்று ஒரு முடிவிற்கு வந்துவிடுபவன் இப்போதெல்லாம் ஆற ஆமார, கொஞ்சம் நிதானித்து யோசித்துத் தான் எதையும் முடிவு செய்கிறான்..
லட்சுமியை பற்றிய அவன் கணிப்பு தவறாய் போனதிலேயே ஈசன் ஒரு நிதானத்திற்கு வந்திருந்தான். வாழ்க்கைக்கான ஒரு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்திருந்தாள் லட்சுமி. அதை அவனும் மனதார உணர்ந்துகொண்டான்.
பேங்கில் இருந்து வந்த லட்சுமிக்கோ தலை எரிச்சலாய் இருந்தது.. இப்போதெல்லாம் அவளுக்கு பணம் என்ற சொல்லைக் கேட்டாலே அத்தனை கடுப்பாய் போனது..
நேராய் பேச்சியோடு வீட்டிற்கு வந்தவளைப் பார்த்து, “ஏன் டி இவ்வளோ எரிச்சல் உனக்கு…” என்றார் பேச்சி..
“பின்ன.. அப்பா ஏன் மா இவ்வளோ பணத்த ஃபிக்ஸட்ல போட்டாரு.. இப்போ அதை வச்சு என்ன செய்ய… நீயும் இப்போவே என்னை வாங்கிக்க சொன்னா நான் என்ன செய்ய… ஈஸ் மாமா கண்டிப்பாத் திட்ட போறார்..”
“இதென்ன டி கொடுமை.. பெத்தவங்க பிள்ளைக்குச் சேர்த்து வைக்க மாட்டாங்களா???”
“சேர்த்து வைக்கட்டும்.. அளவா வைக்க வேண்டியது தான.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தானே மதுரைல இருக்க இடம் வித்தோம்.. இப்போ இது… இதுல நீ உன் நகை, பாட்டி நகை வேற வாங்கிக்க சொல்ற..” என்று நிஜமாவே அவளுக்கு சலிப்பாய் இருந்தது..
பணம் இருந்தாலும் பிரச்சனை.. இல்லையென்றாலும் பிரச்சனை.. ஒரு அளவில் இருந்தால் தான் எதுவுமே நன்றாய் இருக்கும். லட்சுமிக்கோ இல்லை பேச்சிக்கோ ஏன் ஈசன் குடும்பத்திலும் சரி ஆடம்பர செலவுகள் செய்யத் தெரியாது யாருக்கும். தேவைக்கு ஏற்ப செலவுகள் இருக்கும்.. ஆனால் சேமிப்பில் இப்படி பணம் சேர்கையில் ஒருநிலையில் அதை செலவு செய்திட வேண்டும் என்கிற நிலை வரும்போது என்ன செய்ய என்ற முழிப்பும் வந்தது..
“நல்லாயிருக்கா நீ சொல்றது.. விடு நானே வந்து பேசுறேன்…”
“வேண்டவே வேணாம்.. நானே ஈஸ் மாமாக்கிட்ட சொல்லிக்கிறேன்.. இப்போ சொல்றேன் ம்மா இனிமே வீடு வாங்குறேன்.. இடம் வாங்குறேன்னு எதையாவது சொல்லிட்டிருந்த பார்த்துக்கோ.. வீட்டு வாடகைப் பணமே உனக்கு ஜாஸ்தி தான்..” என்று அவளுக்குத் தோன்றியதை எல்லாம் பேசிவிட்டு கிளம்பிச் சென்றாள்..
என்னவோ அன்றைய நாள் லட்சுமிக்கு பல விதமான உணர்வுகளைக் கொடுக்க, எரிச்சல் எரிச்சலாகவும் வந்தது.. மனம் ஒருநிலையில் இல்லை. என்னவோ குழப்பம் அவள் மனதில் புகை மூட்டமாய் இருக்க, அந்த புகை மூட்டத்தை தாண்டி அவளால் எதையும் தெளிவாய் சிந்திக்க முடியாமல் போக, வேலையெல்லாம் முடிந்து மதியம் வந்தவள் சோர்வாய் இருப்பது கண்டு மரகதம் என்னவென்று விசாரித்தார்..
அனிதா விஷயம் தவிர்த்து அனைத்தையும் சொல்ல, “நல்ல பொண்ணு போ… இதுக்கா இவ்வளோ டென்சன்..” என்றவர், அவளை உண்ண வைத்தார்.
உண்டு முடித்தவள், “அத்தை நிஜமா சொல்றேன் சாப்பிட்டப்புறம் தான் கொஞ்சம் நல்லாருக்கு..” என்று சொல்லி பாத்திரங்களை ஒதுக்கிப் போட்டு வந்தமர்ந்தாள்..
“ஹ்ம்ம் நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கணும் லட்சுமி..” என்று மரகதம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஈசனும் வந்துவிட்டான்..
“ஈசா சாப்பிடு..” என்று மரகதம் சொல்ல,
“எடுத்து வைம்மா…” என்றவன், “நீங்க சாப்பிட்டாச்சா…” என்று பெண்கள் இருவரையும் கேட்க, “ஆச்சு..” என்றனர் இருவரும்..
“அதுசரி.. வெயிட் பண்ணி பண்ணி அல்சர் வந்தது தான் மிச்சம்.. போங்க மாமா.. பாசத்தை எப்படிவேணாலும் காட்டலாம்.. இப்படி சாப்பிடாமா இருந்து தான் காட்டணும்னு இல்ல..” என்றவள்,
“அத்தை நீங்க உட்காருங்க.. நான் எடுத்து வைக்கிறேன்..” என்று சொல்லி அவனுக்குப் பரிமாற, ஈசன் இப்படியான ஒரு தெளிவைத்தான் அவளிடம் எதிர்பார்த்தான்.
காத்திருப்பு நல்ல விஷயம் தான். ஆனால் உணவை ஒதுக்கித் தான் செய்யவேண்டும் என்றில்லை..
“என்ன யோசனை மாமா சாப்பிடுங்க..??” என்றவளின் முகம் பார்த்தவன் அடுத்து ஒன்றும் சொல்லாமல் சாப்பிட,
மரகதம் “லட்சுமி ஈசன் சாப்பிடவும் எல்லாத்தையும் எடுத்து மட்டும் போட்டு போ.. ஆள் வந்து கழுவிக்கட்டும்..” என்றுவிட்டு உள்ளே சென்றிட, அவளும் அவனருகே அமர்ந்துகொண்டாள்..
ஈசன் உண்டு முடிக்கவும் அனைத்தையும் எடுத்துப் போட்டவள், அவன் ஹாலில் அமர்ந்திருக்கவும் அவளும் வந்தமர, “காலையில பேசுறப்போ ஏன் லஷ்மி ஒருமாதிரி டென்சனா இருந்த..” என்று கேட்டான்.
ஏன் டென்சனாய் இருந்தாள் என்று நினைவில் வர, வேகமாய் “இல்ல.. ஒண்ணுமில்ல மாமா…” என்றாள்.
“பொய் சொல்லாம சொல்லு…” என்றான் கண்களை சுருக்கி..
“அட நிஜம்தான்.. சரி வெங்கடாசலம் சாருக்கு என்ன பதில் சொன்னீங்க..” என்று பேச்சை மாற்ற,
“பேச்சை மாத்துற…” என்றவன் “ரெண்டு நாள் டைம் கேட்டு இருக்கேன்..” என்றான்..
“எவ்வளோ அமௌன்ட் மாமா…??”
“நெருக்கி ரெண்டு கோடி லஷ்மி.. அவ்வளோ இப்போயில்ல.. வசூல் பண்ணது, கைல இருக்க பணம் எல்லாம் சேர்த்து ஒரு கோடி வரும்.. பாப்போம்” என்று ஈசன் சொல்ல, அவளுக்கோ பேங்க் சென்று வந்தது நினைவில் வந்து,
“மாமா அவர்கிட்ட சரின்னு சொல்லிடுங்க..” என்றவள் பேங்க் சென்று வந்த விஷயத்தை சொல்ல, ஈசன் யோசனையாய் நெற்றியைத் தேய்த்தான்..
“என்ன மாமா பிடிக்கலையா??”
“இல்லல்ல.. கொஞ்சம் கணக்கு போட்டு பார்த்தேன்.. சரி அய்யாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்…” என்று ஈசன் லட்சுமியிடம் சொல்லும்போதே அவன் மனதில் வேறு சில எண்ணங்களும் தோன்றலாயின..