“நல்ல நேரம் பார்த்து நீயும் லட்சுமியும் போய் வெங்காடசலம் கிட்ட பேசிட்டு வந்திடுங்க..” என்று கஜேந்திரன் சொல்ல, “சரிங்கய்யா..” என்றவன், அவளைத் தயாராகச் சொல்ல, அவளும் சரியென்றாள்.
“இதையே எத்தனை பேர் எத்தனை தடவ சொல்வீங்க.. நல்ல பொண்ணுங்கிறதுனால தானே கட்டி வச்சீங்க.. இல்ல என்னை கல்யாணம் பண்ணதுனால லஷ்மி நல்ல பொண்ணாகிட்டாளோ..” என்று ஈசனும் சிரித்தபடி கேட்க,
“வர வர நீயும் அவ மாதிரியே பேசுற.. லட்சுமி முகத்துல இப்போதான் ஒரு பொழிவு தெரியுது.. அது எப்பவும் போகாம பார்த்துக்க…” என, “ம்ம்.. சரி கிழவி.. நீ சொல்லிட்டல்ல சிறப்பா கவனிப்போம்..” என்றான் இன்னும் சிரித்து.
“போடா போக்கிரி…” என்று முத்தழகு சொல்லிவிட்டு செல்ல, அடுத்து மரகதம் வந்தார்.
“ஈசா நேரா கோவிலுக்குப் போயிட்டு அப்புறமா அவரைப் பார்க்க போங்க..” என்றிட, அதற்கும் தலையை ஆட்டிக்கொண்டான்.
முன்னெல்லாம் இப்படி வீட்டில் யாராவது ஏதாவது பேசினால், ‘எல்லா நேரமும் நல்ல நேரம் தான்..’ என்பான்.. இல்லை ‘சாமிய எங்க இருந்தும் கும்பிடலாம் கோவிலுக்குப் போய்த்தான் கும்பிடனும்னு இல்லை..’ என்பான் இல்லை எதாவது ஒன்று சொல்வான்.
ஆனால் இப்போது அவனிடம் ஒரு நிதானம்.. ஒரு அமைதி.. அவனுள் ஏற்கனவே இருந்த திடம் எல்லாம் சேர்ந்து அவனை இன்னும் மெருகேற்றியிருந்தது. அதை அவனும் உணர்ந்திருந்தான்.
ஈசன் மட்டுமல்ல, அவன் வீட்டிலிருக்கும் அனைவரும் அதை உணர்ந்தே இருந்தனர்..
ஒரு அன்னையாய், மரகதத்திற்கு ஈசனை நினைத்து அவர் மனதில் பெருமை எழுந்தது தான்.. என் மகன் என்றதையும் தாண்டி, அவனை நான் நன்றாக வளர்த்திருக்கிறேன் என்ற பெருமை.. அதே எண்ணம் இப்போதும் தலைதூக்க, ஈசனைத் தான் பார்த்திருந்தார்..
“என்னம்மா அப்படி பாக்குற??” என்றவன் மேலே ஒருமுறை பார்வையை பதித்துவிட்டு திரும்ப,
“எப்படியும் லட்சுமி வர லேட்டாகும்..” என்று மரகதம் சொல்ல, “அதானே எப்போ நீங்கல்லாம் சீக்கிரம் ரெடி ஆனீங்க…” என்று ஈசன் குறைபட,
“அத்தை.. போயிட்டு வர்றோம்..” என்று அவனோடு கிளம்ப, “கோவிலுக்குப் போயிட்டுப் போங்க..” என்று மரகதம் சொல்ல, லட்சுமி வேகமாய் ஈசனை பார்த்தாள். எதுவும் சொல்லிடுவானோ என்று.
அவனோ சாந்த சொரூபனாய், “வண்டி எடுத்துட்டு வர்றேன்..” என்று சொல்லிப் போக, “ம்ம்..” என்றபடி லட்சுமி வாசலுக்கு வந்து நிற்க, அடுத்த மூன்று நிமிடத்தில் ஈசனின் புல்லட் சத்தம் காதை கிழித்து..
‘அட புல்லட்டு…’ என்று அவள் நினைக்கும் போதே, அவள் முன்னே வந்தவன், “லஷ்மி வா..” என்றழைக்க, அவளோ அவனையும், புல்லட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே வந்தாள்.
“என்ன டி.. சீக்கிரம் வா.. தேரு மாதிரி வர்ற….” என்று சொல்லியபடி எப்போதும் போடும் கூலிங் கிளாசை எடுத்து மாட்ட, லட்சுமியைக் கேட்கவா வேண்டும்..
“வாவ் மாமா…” என்று சொல்ல, “ஆரம்பிச்சிட்டா சைட் அடிக்க..” என்று ஈசன் சிரிக்க,
“ஹலோ.. ஃபுல் ரைட்ஸ் எனக்குத்தான் தெரியும்ல…” என்று மிரட்டியவள், “எங்க கண்ணுல எல்லாம் தூசி விழுகாதா…” என்று சொல்லியபடி அவன் கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டப் போக,
“என்ன டி பண்ற..” என்று பல்லைக் கடித்தான் ஈசன்..
“ஒண்ணு எனக்கும் வாங்கிக் கொடுத்திட்டு நீங்களும் போடுங்க.. இல்ல கண்ணாடி போடவே வேணாம்..” என்று சொல்லி அவனதை எடுத்து அவள் வைத்துக்கொண்டாள்..
“ரொம்ப படுத்துறாளே…” என்று ஈசன் லட்சுமியின் காதுகளில் விழும்படியே சொன்னவன், புல்லட்டின் பக்கவாட்டு கண்ணாடி வழியே அவளைக் காண, அவளோ அவன் கூலிங் கிளாஸை அணிந்திருக்க, அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்துவிட்டது..
“என்னம்மா இந்த வயசுல கண் ஆப்ரேசன் பண்ணிருக்க..” என்றான் கிண்டலாய்.
“அதுவா.. என் மாமாவ சைட் அடிச்சு அடிச்சு கண்ணு பூத்து போச்சு அதான்..” என்று சளைக்காமல் பதில் சொன்னவள் “இந்தாங்க ஈஸ் மாமா புல்லட்ல போறப்போ கண்ணாடிப் போட்டா தான் அழகு..” என்று சொல்லி அவளே கூலிங் கிளாஸை அவனுக்கு பின்னிருந்து மாட்ட, என்னவோ அவனுக்கு சுகமாய் இருக்க, இருவர் முகத்திலும் சிரிப்பு ஒட்டிக்கொள்ள, சந்தோசமாகவே கிளம்பிச் சென்றனர்..
முதலில் அருகேயிருந்த விநாயகர் கோவிலுக்குச் சென்றுவிட்டு, ஈசனும் லட்சுமியும் வெங்காடசலத்தை காணக் கிளம்பினர்..
லட்சுமிக்கு மிக மிக சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோசமே அவள் முகத்தில் ஒரு பொழிவையும், மனத்தில் ஒரு அமைதியையும் கொடுக்க, இனி வாழ்வில் எதுவந்தாலும் அதை தைரியமாக சந்திக்கும் மனவலிமையும் அவளுள் பிறந்தது..
மீண்டும் லட்சுமி ஈசனது வீட்டிற்க்கு வந்தபோது, எது எப்படியோ அனுசரித்து வாழ்ந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் தான் வந்தாள். ஆனால் இப்போது அனுசரிப்புக்கெல்லாம் வேலையே இல்லாது, அவள் நினைத்ததற்கு மாறாய், அதற்கும் மேலாய் அவளிடம் ஈசன் காதலையும், புரிதலையும் பொழிய பூரித்துத்தான் போனாள்..
கோவிலில் இருந்து கிளம்பும் போதே, “கல்யாணமாகி இத்தனை நாள்ல இப்போதான் செக்கன்ட் டைம் புல்லட்ல வந்திருக்கோம்..” என்று லட்சுமி சொல்ல,
“பர்ஸ்ட் டைம் இப்போதான் கோவிலுக்கே வர்றோம்..” என்று ஈசனும் சொல்ல,
‘இப்போவாது தெரிஞ்சதே…’ என்று லட்சுமிப் பார்க்க, “ஏறி உட்காருங்க ஓனரம்மா.. இனி இந்த புல்லட்டுக்கும் நீங்கதான் ஓனர்..” என்றான் சிரித்தபடி.
அவர்களின் இந்த மகிழ்வான காட்சி தவறாது அனிதாவின் கண்களில் பட்டது. அவளொன்றும் இவர்களை பின்தொடரவெல்லாம் இல்லை.. சாதாரணமாக கோவிலுக்கு வந்துகொண்டு இருந்தாள். அப்போது தான் இவர்களின் தரிசனம் கிடைக்க, முதலில் அவள் கண்களில் பட்டது ஈசன் தான்..
‘ஈசன்…’ என்ற திடுக்கிடலுடன், கொஞ்சம் தூரமாகவே நின்று பார்க்க, அவனோ அந்தப்பக்கம் யாருடனோ சிரித்துப் பேசுவது கண்ணில் பட்டது. அந்தப்பக்கம் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஈசன் மட்டும் தெரிய, அனிதாவின் பார்வை அவனை அளவிடுவது போல் தான் பார்த்தது.
‘ஆளே மாறிட்டான்…’ என்றெண்ணினாள்.
அதுவும் நிஜம்தானே.. ஈசன் மாறித்தானே போனான்.. ஆனால் நல்லதொரு மாற்றும். அது அனிதாவிற்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் ஈசனைக் காண்கையில் என்னவோ அவள் மனதில் ஒரு உணர்வு..
தான் காதலித்தவன் என்பதல்ல, ஆனாலும் அவள் மனதில் ஒரு ஏமாற்றம் பரவியது உண்மைதான். அவள் இல்லாமல் என்னவானோ, நிச்சயம் இந்நேரம் எனதருமை அவனுக்குப் புரிந்திருக்கும் என்று நினைத்திருந்தவளின் எண்ணங்களுக்கு நேர்மாறாய் ஈசன் முன்னைவிட, கம்பீரமாகவும், களிப்பாகவும் புன்னகையோடு நிற்க, அனிதாவிற்கு இது ஏமாற்றம் தான்.
யாரிடம் இப்படி சிரித்துப் பேசுகிறான் என்று பார்க்கும் ஆவலும் வர, யாரென்று பார்க்க முயற்சிக்க, அதற்குள் நடுவில் வேறொரு வாகனம் வந்து அவர்களை மறக்க, வாகனம் சென்றபிறகோ ஈசன் அங்கில்லை..
‘ச்சே இப்போவும் மிஸ் பண்ணிட்டேன்..’ என்றெண்ணியவளுக்கு, ஈசன் யாருடனோ சிரித்துப் பேசுவதே மனதில் வர, ‘அப்.. அப்போ அவன் நான் இல்லாம சந்தோசமா தான் இருக்கான்..’ என்று அபத்தமாய் நினைக்க, இன்றே அவனைப் பார்த்து பேசவேண்டும் என்ற வேகமும் எழுந்தது.
அங்கே ஈசனும் லட்சுமியும் தங்கள் கருத்தை வெங்காடசலத்திடம் சொல்ல, அவருக்கோ மிகுந்த மகிழ்ச்சி.
“ரொம்ப சந்தோசம்.. என் ஃபிரண்ட் தான் பார்ட்னர்ஷிப் போடலாம்னு சொல்லிருந்தான். ஆனா இப்போ அவனுக்கு சூழ்நிலை சரியில்லை. வட்டிக்கு வாங்கி நம்ம பள்ளிக்கூடம் ஆரம்பிக்கணுமான்னு கவலையோட தான் அங்க வந்தேன். ஆனா இப்போ என்னோட ஸ்டூடன்ஸ் எனக்கு கை கொடுக்கிறதுல ரொம்ப சந்தோசம்..” என்றதும், மற்ற இருவருக்குமே மனதில் ஒரு நிம்மதி பிறந்தது.
“நாங்களும் கொஞ்சம் தயக்கமாவே தான் சார் வந்தோம்..” என்று லட்சுமி சொல்ல,
“இதுல தயங்க என்ன இருக்கும்மா.. நல்ல விசயம்தானே.. எனக்கு பரிப்பூரண திருப்தி.. அடுத்து லாயர்கிட்ட சொல்லி டாகுமன்ட்ஸ் ரெடி பண்ணிடலாம்..” என்றவர் நிஜமாகவே அவரது மகிழ்வை வெளிப்படுத்தினார்..
“சார்.. லஷ்மிக்கு இன்னும் படிப்பு முடியல… சோ அவங்க வந்து பொறுப்பேத்துகிற வரைக்கும் நான்தான் எல்லாம் பார்த்துக்கணும்..” என்று ஈசன் சொல்ல,
‘இதென்ன புதுசா மரியாதையா ஈஸ் மாமா பேசுறாங்க..’ என்று லட்சுமி ஆச்சர்யமாய் பார்க்க,
வெங்காடசலமோ, “தாராளமா படிக்கட்டும்.. என்னிக்குமே படிப்பு தான் பெருசு ஈசா.. அது சரியா கிடைக்காம எத்தனை பேர் வாழ்க்கை மாறிடுது..” என்று சொல்கையில்,
லட்சுமி, “சார் நான் ஒண்ணு சொல்லட்டுமா..” என்று மற்ற இருவரின் முகத்தையும் பார்த்தாள்.
இருவருமே என்னவென்பதுபோல் பார்க்க, “இப்போ நீங்க சொன்னீங்களே.. சரியான படிப்பு கிடைக்காம நிறைய பேரோட வாழ்க்கை மாறிடுத்துன்னு அதுக்கேன் நம்ம ஒரு முயற்சி எடுக்கக்கூடாது.. இப்போ நம்ம ஆரம்பிக்கப் போறது ப்ரைவேட் ஸ்கூல் தான்.. அதோட குவாலிட்டி நம்ம மெய்ண்டைன் பண்ணனும்.. அதேபோல, நம்ம லாபத்துக்காக எதையும் செய்யாம, ஸ்டூடன்ஸ்க்கு என்ன தேவையோ அதை சரியா கொடுக்கணும்..
அப்புறம் எனக்கொரு சின்ன ஆசை, ஒவ்வொரு கிளாசுக்கும் முப்பது ஸ்டூடன்ஸ் இருந்தா போதும்.. அந்த முப்பது ஸ்டூடன்ஸ்ல ஒரு அஞ்சு பேருக்காவது ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி பசங்களுக்கு ப்ரீ எஜுகேசன் நம்ம ப்ரோவைட் பண்ணனும்…” என்றதும், அங்கே கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.
நிச்சயமாக ஆண்கள் இருவரும் லட்சுமியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. வெங்காடசலத்தின் உணர்வுகள் ஒருமாதிரி என்றால் ஈசனின் உணர்வுகள் வேறு மாதிரி இருந்தது.. அவன் ஒன்றுமே பேசவில்லை.. என்ன பேசுவது என்பது கூட அவனுக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாய் ஈசன் இதெல்லாம் யோசிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
கடனாக வந்துக் கேட்டார், அதற்கு பதில் அவரோடு கை கோர்த்து சிறந்த முறையில் பள்ளியை நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவனுக்கு. ஆனால் லட்சுமி பேசியதைக் கேட்டதும் ஆச்சர்யமாய் இருந்தது..