அவர்களின் மௌனங்களுக்கு நடுவே, மகியின் கைகளில் அந்த அரேபியன் குதிரை மட்டுமே பேசியது போல, விரைவில் ஷோ ரூம் வந்து சேர்ந்தனர் இருவரும். உடனே, வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டான் மகி.
மகிக்கு கோவமெல்லாம் இல்லை, ஆனால் அதே ஒட்டா தன்மை வந்து சேர்ந்தது அவனுள். இப்போது தான் நெருங்கியது போல் உணர்ந்த துர்காவிற்கு இப்போது, அவனின் ஒதுக்கம் இத்தனை வருடமாக உணர்த்தாத, ஒரு வலியை தந்தது அவளுள்.
எனவே மகியின் குணமுனர்ந்து அமைதியாக வந்தாள் துர்கா, வீட்டிலிருந்து போகும் போது இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாறான மனநிலையில் இருந்தனர் இருவரும்.
வீட்டிற்கு வந்தவுடன், மகி மேலே சென்றுவிட்டான். துர்கா, உணவு எடுத்து வைக்க சென்றாள். பத்து நிமிடம் சென்று வந்தவன், உணவு உண்டு திரும்பவும் மேலே சென்றுவிட்டான்.
துர்கா உண்டு, பாத்திரமெல்லாம் எடுத்து வைத்து விட்டு, அங்கேயே ஹாலில் அமர்ந்து கொண்டாள், கமல் வரும் நேரமாதலால்.
கமல் வந்தவுடன், சர்வேஷும் எழுந்து கொள்ள, அதன் பின் நேரம் அவள் வசம் இல்லை. மாலை காபி எடுத்து சென்றால் துர்கா, மகி அறைக்கு. ஏதோ லேப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். முன் போல் “அங்கே வைத்து போ” என்றுவிட்டான்.
பின் மாலை 7 மணிக்கு தான், மகி இறங்கி வந்தான். கையில் லேப்டாப் பாக் மட்டும் தான் இருந்தது.
கமலுடன் இன்னும் போராடிக் கொண்டிருந்த துர்கா ,மகியை பார்த்ததும் என்ன கேட்பது என தெரியாமல் அமைதியாக தன் வேலையை பாத்துக் கொண்டிருந்தாள்.
வந்தவன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அப்போது கமல் அவன் அருகில் வந்து “அப்பா பால்கோவா, சூப்பர்” என்றான்.
மகி என்ன என புரியாமல் பார்க்க, மகன் அவர் தன்னை கவனிக்கவில்லையோ என நினைத்து “அப்பாஆஆஅ” சத்தமாக அழைக்க.
மகிக்கு இப்போது தான் நினைவு வந்தது. எனவே துர்காவை ஒரு பார்வை பார்த்து “உஹும்….” என சுவாரசியமாக கேட்டுக் கொண்டவன். பின்பு “ஹாம் வொர்க் முடின்ச்சுதா” என்றான்.
கமல் “இல்ல ப்பா, இப்போ தான், போனிக்ஸ் கிளாஸ் முடிச்சு வந்தேன். ரீட் பண்றது இருக்கு”. என்றான் கவலையாக.
மகி சிரித்துக் கொண்டே இன்னும் ஏதோ அவனிடம் பேசிக் கொண்டிருந்தான். இதை பார்க்க பொறுக்காத சின்னது, தன் அண்ணனுக்கும், தந்தைக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொண்டது. என்ன பேசுகிறார்கள் என வாய் பார்த்துக் கொண்டிருந்தது.
தன் அன்னையிடம் “அம்மா, துர்கா பத்து நாள் ஷோ ரூம் போகனும் வேலையிருக்கு. பார்த்துக்கோங்க” என்றான். வைதேகிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
துர்காவை பற்றி அவன் பேசுவது ஒரு வகையில் திருப்தி என்றால், அவன் தன்னிடம் சகஜமாக பேசுவதேயே நம்ப முடியாமல் பார்த்திருந்தார் அவர்.
இன்னும் ஏதோ போன் வந்தது பேசிக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் கழித்து “சரி கிளம்புகிறேன் “ என்றான் பொதுவாக. எல்லோரும் பார்த்திருக்க வாசல் நோக்கி சென்றுவிட்டான்.
வைதேகி “சாப்பிட்டு போப்பா” என்றவர். இன்னும் ஏதோ சொல்ல வர காதிலே வாங்கதவனாக சென்றுவிட்டான்.
இதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் இயல்பு தெரிந்ததனால். ஆனால் துர்காவிற்கு ஏனோ ஒரு மாதிரியாக இருந்தது.
மகி அந்தபுறம் நகர்ந்ததும், வைதேகி போன் எடுத்து, அகிலுக்கு பேசியவர், தொடர்ந்து நித்யாவிடமும் பேசி விஷயத்தை சொல்லியே வைத்தார்.
அடுத்த நிமிடம், துர்காவிற்கு போன் வந்தது, நித்யாவிடமிருந்து. “என்ன சொன்னார் பெரிய பாவா” என ஆரம்பித்தவள், துர்காவிடமிருந்து விஷயத்தை வாங்கும் வரை விடவில்லை.
துர்காவும் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள், சிலது தவிர. இப்போதும் நித்யா “கடைசியா என்ன தான் சொன்னாங்க பாவா, டைவர்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்களா” என்றாள் நித்யா, காரியவாதியாக.
எங்கே அதை தவிர மகி மற்றதெல்லாம் தான் சொன்னானே, எனவே துர்கா “அவர் அதை சொல்லலையே” என்றாள் தவிப்பான குரலில்.
சற்றே மறந்துவிட்டிருந்தாள் துர்கா. இப்போது திரும்பவும் நினைவு படுத்திவிட்டாள் நித்யா.
அவளும் துர்காவை சமாதான படுத்தும் விதமாக “சரி, பார்த்துக்க்கலாம் விடு, இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிது” என்றாள்.
“பார்த்து செய் துர்கா, கவனமா இரு“ என நல்ல தோழியாக சொல்லியவள். “இரு ஒரு ஐந்து நிமுஷம் கழிச்சு கூப்பிடுறேன்” என சொல்லி போனை வைத்தாள்.
அதுவரை தான் துர்காவிற்கு நேரம் இருந்தது. கமலிற்கு உணவு ஊட்டி, உறங்க வைக்க கூட்டி சென்றாள். கமல் சீக்கிரம் உறங்கி விடுவான். சர்வேஷ் தான் சற்று நேரம் ஆகும்.
அப்போதிலிருந்து போன் வந்த மயம் துர்காவிற்கு, நித்யா தான் எல்லோரிடமும் சொல்லி விட்டாள்.
முதலில் கீர்த்தி அழைத்தான் “அக்கா” என்ற அழைப்பே சொன்னது அவனிற்கு விஷயம் சொல்லப்பட்டு விட்டது என.
கீர்த்தி “என்ன சொல்றதுன்னு தெரியலைக்கா…. ஆல் தி பெஸ்ட்” என்றான் கரகரப்பான குரலில். உடனே அவரின் அம்மா போனை வாங்கி “தங்கம் “ என்றார் தழு தழுப்பான குரலில்.
“சந்தோஷம்டா, ரொம்ப சந்தோஷம்டா இது போதும்டா… நீ அவர் கண்ணுக்கு இப்போதான் தெரியற போல, விடு இனி நல்லதே நடக்கும்” என்றார்.
அவர்கள் வைத்தவுடன் ராஜேஷ் அழைத்தான். கொஞ்சம் தெளிவானவன், யாரையும் நம்பாதவன், தன் அண்ணே ஆனாலும், சரி. எனவே, யோசனையுடனேயே பேசினான் “நீங்க எல்லாம் பார்த்துக்கிறது சந்தோஷம் தான் அண்ணி, ஆனால் கவனமா இருங்க.” என்றவன் ஏதோ யோசித்தவனாக.
“அவன் என்ன சொன்னான். இப்போது எதுக்கு ஏற்காடு போறான். இங்கயே இவ்வளோ பிரச்சனை, ம்……. இப்போது எதுக்கு உங்கள தனியா விட்டுடு போறான். ம்….”
“உண்மைய சொல்லுங்க அண்ணி, என்ன சொன்னான், வினோ அண்ணா இங்க தானே இருக்கார், நான் பேசறேன். ” என மகியை பற்றி தெரிந்தவனாக, தனது அண்ணியை கேள்விகளால் உலுக்கியே போனை வைத்தான் ராஜேஷ்.
ஆம் எல்லோரிடமும், மகி வெளியூர் செல்வதால், தன்னை ஷோரூம் போக சொல்லி இருக்கிறார் என்றே சொன்னாள் துர்கா. ஆனால் மற்ற விவரங்கள் யார்க்கும் சொல்லவில்லை. சாரதி, யாரிடமும் இது குறித்து பேச வேண்டாம் என முன்பே சொல்லிவிட்டார் துர்காவிடம்.
இப்போது மற்ற யாரும் கேட்கவில்லை, ஆனால் மகியை பற்றி நான்கு தெரிந்த ராஜேஷ் இவளிடம் கேட்க, இவளிற்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.
துர்காவும் தன்னால் முடிந்தவரை “இல்லை தம்பி, எதுவும் பிரச்சனை இல்லை” என சொன்னாலும் ராஜேஷ் கேட்பதாக இல்லை. எனவே யோசனையுடன் போனை வைத்து விட்டான்.
‘அப்பாடா’ என்றானது துர்காவிற்கு.
ஆனால் ராஜேஷ் ஓயவில்லை, அடுத்து வினோவிற்கு அழைத்தான். என்ன ஏது என கேட்டும், வினோவிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. ‘என்னமோ செய்ங்க’ என ஆற்றாமையாக கூறியே போனை வைத்தான்.
வினோ உடனே தகவலை மகிக்கு சொல்லி விட்டான். மகிக்கு சிரிப்பு தான் வந்தது அதுக்குள்ள விஷயம் அவனிற்கு யார் சொன்னது. ‘எப்படியோ, எல்லாம் தெரிந்து கொள்கிறான்.’ என தோன்றியது.
வீட்டிலிருந்து கிளம்பிய மகி ஏற்காடு சென்றான். வழியெல்லாம், ஏதோ அவனை உறுத்திக் கொண்டே வந்தது.
நான் செய்வது சரியா, ராஜேஷ் சொல்வது போல், இப்படி ஒன்றுமே தெரியாதவளை, இப்படி செய் என சொல்லி வந்திருக்கிறேனே. இதன் விளைவு.
மகிக்கு தெரியும் துர்கா செய்ய போகும் செயல், விவேகனுக்கு தெரியும் போது, அதன் விளைவு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும் என தெரியும் அவனிற்கு.
என்ன வேண்டுமானாலும் செய்பவன் விவேகன். எனவே இதில் யாரையும் இரக்க முடியாது. ஒன்று, தான் மட்டுமே இறங்க வேண்டும் அல்லது விவேகனே, இறங்கினால் தான் உண்டு.
ஆனால் விவேகன், துர்கா சொல்வது போல் தன்னை பலவீனப்படுத்தி காரியம் சாதிக்க நினைக்கிறான் போல், அதுவரை நான் அவனை விட கூடாது என்பதால் தான் இந்த முடிவு. என தனக்கு தானே மகி சொல்லிக் கொண்டாலும். மகிக்கு இப்போதும் யோசனையே.
இன்று துர்காவின் இயல்பான பேச்சு, தன்னை கவர வேண்டும் என சற்றும் அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை. எங்கேயும் எந்த நிலையிலும் ஒரு வார்த்தை அதிகம் பேசவில்லை. மேலும் கோவம் கொண்ட போதும் கூட தன்னை பார்க்க கூட இல்லையே என நினைத்துக் கொண்டான்.
எப்படியும், துர்கா இதனை கச்சிதமாக செய்து முடிப்பாள், அதன் பின் தான் அவளை நான் பாதுகாக்க வேண்டும். வினோவிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.
அவன் எப்படி வைபவை, ஒளித்து வைத்துள்ளானோ, அதே போல், தான் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த மகி. துர்காவின் மூலமாக வைபவின் தாயாரை மாற்ற முயற்சி செய்கிறான்.
அது விவேகனுக்கு தெரியும் பட்சத்தில்….
%%% %%%% %%%% %%%
துர்கா, கமலை உறங்க வைக்கிறேன் என சென்றவள் வெகு நேரமாகியும் வராததால், பெரியம்மா வந்து பார்த்தார். துர்கா இன்னும் போன் பேசிக் கொண்டிருக்க “இன்னும் என்ன செய்யற, வா சாப்பிட்டு பேசு” என்றார்.
அப்போவே மணி 11. அதன் பின் உணவு உண்டு, இவள் எடுத்து வைத்து விட்டு சென்றாள்.
சர்வேஷ் வேறு, இன்று, இன்னுமும் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் பெரியம்மாவுடன் சேர்ந்து நாடகம் பார்த்து தான் படுப்பது.
நாடகம் முடியவும், அவனை தூக்கி கொண்டு உள்ளே ஓடினாள் துர்கா. அவனை மிரட்டி உருட்டி தூங்க வைக்க. இன்னுமறை மணி நேரம் முடிந்திருந்தது.
மகி இரவு 11 மணிக்கு தான் ரெசார்ட் வந்து சேர்ந்தான். உணவு ஏற்கனவே செய்ய சொல்லி இருந்தான். வந்த உடன், அறைக்கே உணவு வந்தது. உண்ணும் போது தான் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்தான்.
துர்காவிற்கு இன்னும் உறக்கம் வராததால், அவளும் போன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் கடைசியாக, உறங்கும் போது, மகியின் லாஸ்ட் சீன் பார்ப்பது போல்… இன்று பார்க்க.
அவன் ஆன்லைன் என வந்தது. மகிக்கு இவள் டைப் செய்வது போல் காட்டியது. மகி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ டைப் செய்கிறாள் என நினைத்தான்.
துர்கா, போனை வைக்க போக, மகியிடமிருந்து “என்ன “ என மெசேஜ் வந்தது.
துர்காவிற்கு அவன் மெசேஜ் செய்வான் என எதிர்பார்க்க வில்லை. அவனிடம் தன் எண் இருக்கும் என்று கூட அவள் நினைக்கவில்லை. அவளும் “ம்கூம்…” என அனுப்பினாள்.
அங்கு மகிக்கு என்ன செய்வது தொடர்வதா, இல்லை விடுவதா என புரியவில்லை.
இவனும் சாதரணமாக “இன்னும் தூங்கல” என்றான்.
இதுவரை என்ன மனநிலையில் இருந்தாலோ, இந்த வார்த்தையை படித்த உடன் முற்றிலும் மாறினாள் துர்கா, இத்தனை நாள் அவள் தனக்குள் கொண்டிருந்த ஒரு மெல்லிய கோவம், தனக்கும் தன் கணவனுக்கும் மட்டுமேயான கோவம் தலை தூக்கியது அவளிடம்
‘இன்னும் தூங்கலையா’ என திரும்ப ஒரு தரம் படித்தாள். ‘கேட்காத டா, நீ அத கேட்காத……. உனக்கு அந்த ரைட்ஸ் இல்ல, நீ, அத கேட்க கூடாது.’ என ஒரு வீம்பு.
‘யார் மேலும் காட்ட முடியாத கோவம், அவனை மட்டுமே யாசிக்கும் தன் நெஞ்சிற்கு, இத்தனை நாளாக அவன் காட்டிய பாராமுகம்’ என எல்லாம் நினைவு வர கண்களில் ஏனென்றே தெரியாமல் கண்ணீர் வந்தது.
‘எத்தனை நாள் ஏங்கி இருப்பேன் இது போல் வார்த்தைகளுக்காக’ என தான் தோன்றியது. ‘எனக்கான வார்த்தைகள் கூட உன்னிடம் உண்டா.’ என தோன்றியது.
ஆனால், அவளிற்கு எதுவும் அனுப்ப தோன்றவில்லை. அப்படியே இருந்தாள். சற்று நேரம் பொறுத்து மகியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
காலையில் இருந்து கூடவே இருந்தவள், பின்பும் தன்னை இத்தனை நேரம், நினைவுகளால் சூழ்ந்தவள் இப்போது அமைதியாக இருக்கவும். அழைத்தான் அவளிற்கு.
அன்று அவன் செய்ததை, இன்று இவள் செய்தாள். போனை சைலென்ட்டில் போட்டு விட்டு அதில் தெரியும் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
கொஞ்சமும் அந்த கோவம் குறையவில்லை. அந்த கண்ணீரும் தான். அப்படியே பார்த்திருந்தாள். மூன்று தரம் அடித்து ஓய்ந்தது. இப்போது மகிக்கு கோவம் வந்தது. அதென்ன ‘நான் அழைத்தால் எடுப்பதில்லை’ என.
என்ன செய்ய முடியும் மகியால், போனை பெட்டில் போட்டு விட்டு, கையை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அந்த அறையை அளந்தான்.
இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக மகியின் மூளையில் புகுகிறாள் துர்கா. உறக்கம் வரவில்லை அவனிற்கும்.
கொஞ்ச நேரம் சென்று குட் நைட் மெசேஜ் வந்தது துர்கவிடமிருந்து மகிக்கு.
இருந்த கோவம் இன்னும் அதிகமாகியது மகிக்கு. ‘போடி, நீ வேண்டாம், நீ வேண்டவே வேண்டாம். பெரிய டென்ஷன் நீ. உனக்கு போய் மெசேஜ் பண்ணேன் பாரு என்னை சொல்லணும்’. என நினைத்துக் கொண்டான். ஆனால், ‘விட்டேனா பார்’ என அவளின் நினைவே அவனை துரத்தியது.
காலையில் மிகவும் உற்சாகமாக எழுந்தாள் துர்கா, ஏதோ புது தெம்பு அவளிடம். ஒரு உற்சாகத்துடன், கமலேஷை ஸ்கூலுக்கு கிளப்பினாள்.
இன்று சர்வேஷ் துர்கா பின்னால் சுற்றினான், நேற்றே தன்னை விட்டு அம்மா எங்கோ சென்றுவிட்டாள் என தெரிந்து கொண்டு, தன் அன்னை பின்னால் சுற்றியது. அப்படியே, விவரம் ‘மகி’ போல்.
அவனை ஏமாற்றி ஒரு வழியாக ஷோ ரூம் வந்து விட்டாள் துர்கா. பெரிதாக வேலையெல்லாம் இல்லை. பொறுமையாக e-mail பார்த்தாள். அதை தவிர, மகியின் ஓபன் டாக் பற்றியும் வினோவிடம் கேட்டுக் கொண்டாள்.
அன்று முழுவதும் இப்படியே சென்றது. திரும்பவும் ஒவ்வொருவராக அழைத்து ‘என்ன என்ன… எப்படி போச்சு’ என கேட்டனர். எல்லோருரையும் பொறுமையாக சமாளித்தாள்.
ஆனால் மகி போன் செய்யவே இல்லை. ஒரு ஓரமாக வலிக்க தான் செய்தது துர்காவிற்கு. அதற்காவெல்லாம் நான் போன் செய்ய முடியாது என எண்ணிக் கொண்டாள்.
இப்படியே இரண்டு நாள் சென்றது. துர்க்காவின் அம்மா போன் செய்து “தங்கம் நாளை தம்பிக்கு, தாய் மாமாவெல்லாம், நாள் விருந்து செய்வாங்க வந்து விடு” என்றார். துர்காவும் சரி என்றாள்.
அதை தொடர்ந்து அவளின் மாமாக்கள் அனைவரும் போன் செய்தனர். ‘மாப்பிள்ளை எங்கே கொடு சொல்லகிறோம்’ என்றனர். எல்லோரையும் பேசியே சமாளித்தாள்.
அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, வினோவிடமிருந்து போன் வந்தது. “துர்கா, ரெடியா இரு. வைபவ் அம்மா வெளியே போறாங்க.” என்றான்.
துர்காவிடம் பேசிய வினோ, மகியிடமும் சொல்லி இருந்தான். மகிக்கு அங்கு நிலைகொள்ளவில்லை, துர்காவிடம் பேச வேண்டும் என இருந்தது.
எப்படி, தான், அழைப்பது எனவும் இருந்தது. ஏற்காட்டில் வேலை ஓடவில்லை மகிக்கு, சில்லென ஒரு நடுக்கம் வந்தது. எனக்காக செல்கிறாள். எனக்காக மட்டுமே செல்கிறாள். நான் அவளிடம் சொல்ல கூட இல்லை. ‘உன்னை விளக்க போதில்லை’ என. ஆனாலும் கேள்வியே கேட்காமல் செல்கிறாள்.
ஒரு வார்த்தை பேசலாம் நான், ‘பார்த்து போய்ட்டு வா’ என்றாவது சொல்லலாம் தான். என அவன் மனம் துர்காவிர்காக பேசியது. அதெல்லாம் கேட்டு உருகி விட மகி என்ன ஐஸ்கீரிம்மா…. யுகம் யுகமாக இறுகும் அண்டார்டிக்கா பனி மலை. ஏதோ ஒரு யுகத்தில் தான் உருகும். எனவே அமைதியாக அசையாமல் நின்றான்.