காலை, வீடே பரபரப்பாக இருந்தது. துர்கா, மகி, சர்வேஷ் கிளம்பியாயிற்று, கமலேஷ் ‘நான் இப்போது வரவில்லை’ என ஒரே அழுகை ஹாலில், “நான் அண்ணன்களுடன் வருகிறேன்” என தான்.
மகி இதையெல்லாம் உண்டு கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு சத்தம் போட்டால் அமைதியாக வருவான் என தெரியும், ஆனால், அவன் எதுவும் சொல்லாமல் இருப்பதால், அனைவரும் அவன் முகத்தை பார்த்திருந்தனர்.
துர்கா அவன் அருகில் அமர்ந்து ஒரே கெஞ்சல் “வாடா தாத்தா, பாட்டி எல்லாம் கேட்பார்கள் டா” என, எதற்கும் அசையவில்லை. மகியிடம் வந்து “நீங்க ஒரு சத்தம் போடுங்க” என்றாள்.
மகி “இப்போ அவன் வந்து என்ன செய்ய போறான். விடு” என்றான். போகிறது போ என கிளம்பினர் இவர்கள் மட்டும்.
இவர்கள் கிளம்பி நிற்கவும், ராஜேஷ் ஊரிலிருந்து வரவும் சரியாக இருந்தது. மகியையும் துர்காவையும் சேர்ந்து பார்த்தவன், புருவம் உயர்த்தினான்.
நித்யாவிடம் “என்ன அதிசயம், பொண்டாட்டி பக்கத்தில் எல்லாம் நிக்கறாரு தலைவர்” என்றான் மகியை பார்த்துக் கொண்டே ரகசியம் போல் அனைவரும் கேட்க வேண்டும் என தான் சொன்னான்.
மகி, என்று பதில் சொல்லி இருக்கிறான். ஒரு பார்வை பார்த்து, கார் எடுக்க சென்றுவிட்டான். துர்கா தான் “ஏன் தம்பி, பாவாவ சொல்றீங்க, அவரெல்லாம் சரியாதான் இருக்கார்.” என சிரித்துக் கொண்டே கூறினாள்.
ராஜேஷும் “நீங்க இப்படியே இருங்க, அவர காப்பாத்திகிட்டு” என இன்னும் ஏதோ சொல்லியிருப்பான் அதற்குள் மகி காரை வெளியே திருப்பி நிறுத்தி ஹாரன் அடிக்க, துர்கா மிகவும் மகிழ்ச்சியாக, “வரேன்” என அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
நேரே அம்மா வீடு சென்றனர். மதியம், நேரம் சரியில்லாத காரணத்தால், காலையே மண்டபம் செல்வதாக ஏற்பாடு. பெண் வீட்டினர் மண்டபம் வந்து விட்டதாக போன் வரவும் இவர்களும் கிளம்பினர்.
ஊரின் மத்தியில் அமைந்துள்ள, பிரம்மாண்டமான மண்டபம் அது. இவர்களை வரவேற்க தயாராக இருந்தனர் பெண் வீட்டினர். மகியை பார்த்து தான் ஆச்சர்யம் எல்லோருக்கும்.
சொந்தத்தில் பழக்கம் இல்லை என்றாலும், அதே வட்டாரத்தில் இருப்பதால் மகியை எல்லோருக்கும் தெரியும் எனவே எதையும் முகத்தில் காட்டவில்லை அவர்கள்.
நேரம் செல்ல செல்ல, துர்காவின் மாமாக்கள் வர வர அங்கு சூழ்நிலை கொஞ்சம் சகஜம் ஆனது. துர்காவின் அம்மா வகை சொந்தமே நிறைய. வரதராஜன் ஒருவர் மட்டுமே என்பதால், அவர் பக்கம் சொந்தம் கம்மி.
இன்று மாலை ரிஷப்ஷன் போல் ஏற்பாடு செய்திருந்தனர். நண்பர்கள் வியாபார வட்டம் சூழ மண்டபமே சற்று குலுங்கியது தான். மகியும் அதில் சற்று பிஸி.
மிகவும் சிம்பிளான காட்டன் வைட் நிற குர்த்தியில் நின்றிருந்தான் மகி. பச்சை நிற காஞ்சி பட்டுடுத்தி, அண்டிக் ஜூவ்வல் அணிந்து, தோளில் வழிந்த மல்லிகையுடன், கண்ணில் மையுடன், அவன் மேல் உள்ள மையலும் சேர்ந்து கொள்ள அவனையே பார்த்த வண்ணம் அவன் அருகே வரவேற்புக்காக நின்றிருந்தாள் துர்கா.
துர்காவிற்கு இப்போது முகம் ஜொலித்தது, மகி அருகில் நிற்கிறான் என்ற எண்ணத்தில். ஆனால் அதெல்லாம் ஒரு சிலரின் பார்வையை இவள் கவனிக்கும் வரை தான்.
எல்லோரின் பார்வையும் ஒரு குறுகுறுப்புடன் அவர்கள் மீதே படிந்தது. ‘இவர்கள் தானே ஒரு மாதம் முன்பு விவாகரத்து கேட்டதாக பேசிக்கொண்ட தம்பதி’ என ஒரு பார்வை, ஒரு சிலரிடம்.
மகியின் அலட்சியம், இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. துர்கா தான் சங்கடமாக உணர்ந்தாள். மனம் வாடியது, முகத்தில் அந்த வலியை காட்டாமல் சமாளித்தாள். ஓர் இழுத்து வைத்த சிரிப்பை முகத்தில் கொண்டு வந்தாள்.
திரும்பி கணவன் முகம் பார்க்க, அவன் இவளை கவனிக்க வில்லை. எப்போதும் போல் கணவனில் அறுதல் முகம் அவளிற்கு கிடைக்கவில்லை. அது தான் இன்னும் அவளை வாட்டியது. ‘அவன் அப்படி தான்’ சொல்லிக் கொண்டாள் தனக்குள். ‘இந்த திருமணத்திற்கு, இவன் இப்படி வரவேற்ப்பில் நிற்பதே, பெரிது, இதில் அவன் எதற்கு உன்னை பார்க்க போகிறான்’ என அவளின் மனம் அவளின் நிலை சொல்ல, ஓய்ந்து போனாள்.
கொஞ்ச நேரம் வரவேற்பில் நின்றவள், தன் மாமா பசங்களிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். முதலில் இதை கவனிக்கவில்லை மகி. பின்பு தான் யோசனை ஓடியது.
‘எங்கே இவளை காணவில்லை’ என பார்த்திருந்தான். யாரிடம் கேட்பது என தெரியவில்லை. ஆனால் இடத்தை விட்டு அசையவில்லை. தன் வேலையை சரியாக செய்தான்.
கொஞ்சம் கூட்டம் குறைந்து, எல்லோரும் குடும்பமாக போட்டோ எடுத்துக் கொள்ள சென்ற பிறகே, அங்கிருந்து நகர்ந்தான். தன் குடுப்பத்துடன் போய் அமர்ந்து கொண்டான்.
திரும்பவும் ஒரு கோவம் வந்தது அவனிடம், ‘என்ன, ஏது’ என ‘தன் மனையாள், தன்னை வந்து பார்க்கவில்லை’ என தான்.
சம்பந்தி வீட்டு போடோவிற்காக இவர்கள் அழைக்கப்பட, அப்போது தான் கண்ணில் பட்டாள் துர்கா. அழவில்லை, ஆனால் முகம் சொன்னது. இவள் சரியில்லை என.
நித்யா தான், ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அருகருகே நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். ஆனால் அவள் மேல் உள்ள கோவத்தில் இவன் திரும்பியே பார்க்கவில்லை அவளை.
மண்டபத்தில், மகி வீட்டு ஆட்கள் அனைவரும் உண்டு முடித்து கிளம்பினர், காலை வருவதாக சொல்லி. மகி கிளம்ப போக, வரதராஜன் வந்து “மாப்பிள்ளைக்கு இங்கு ரூம் இருக்கிறது, நீங்க அலைய வேண்டாம்” என்றார்.
மகிக்கு இங்கு இருக்கிற எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் மறுக்கவும் முடியவில்லை. தடுமாறினான். துர்காவின் மாமா பசங்க எல்லோரும் வந்து மகியை கம்பெல் செய்ய வேறு வழியில்லாது “சரி” என்றான்.
இதிலெல்லாம் துர்கா கலந்து கொள்ளவில்லை. அமைதியாக தன் அம்மா உடன், ஏதோ வேளையில் இருந்தாள்.
மணமக்களை போட்டோ செஷனுக்காக, படுத்திக் கொண்டிருந்தார் போடோக்ராபர், அதனை கிண்டல் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். அங்காங்கு கொஞ்சம் பேர் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்படி மகியை சூழ்ந்திருந்தது ஒரு குரூப் காரணம் ‘சீட்டடுவதற்காக தான்’ அங்குள்ள ஒரு குரூப் இதற்காக பிளான் செய்து தான், மகியை இங்கே தங்க வைத்திருந்தது. இதெல்லாம் தெரியாதா மகி, சிக்கிக் கொண்டான். ஆனாலும், முடியவே முடியாது என அழகாக மறுத்துக் கொண்டிருந்தான்.
“இப்பவே மணி 11, இதில், இனிமேல் கச்சேரி ஆரம்பிச்சு, எப்போ முடிச்சி” என என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தான். இப்படியே அந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.
துர்கா அப்போது தான் வந்து அமரவும், அந்த போட்டோ குரூப்பிலிருந்து ஒரு உறவு, கணவன் மனைவியாக எழுந்து துர்கா அருகில் வந்து அமர்ந்தனர்.
துர்காவின் உறவில் அவளின் இரண்டாவது மாமாவின் பையன் அவன் சிறு வயதில் அவளிற்கும் இவனிற்கும் தான், திருமணம் என பேச்சு எழுவதுண்டு. ஆனால் அவன் வேறு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவன். இப்போது ஒரு 3வயது பையனுண்டு.
அந்த பெண் மெதுவாக “என்ன அக்கா, ஏன் இப்படி டல்லாக இருக்கீங்க, எல்லாம் சரியாகிடிச்சுன்னு இருந்தோம், உங்க முகம் அப்படி இல்லைன்னு சொல்லுது” என்றாள்.
துர்காவிற்கு அய்யோ என் முகம் அப்படியா இருக்கு, இல்லையே நான் சரியாக தானே இருந்தேன் என எண்ணிக் கொண்டிருந்தாள். ஏதும் பேசவில்லை.
திரும்பவும் அந்த பெண் அவளை அழைக்கவும் நிமிர்ந்தவள் இப்போது தெளிவாக “அப்படி இல்ல நர்மதா, நீ தான், சொல்ற நான் எப்போதும் போல தான் இருக்கிறேன்.” என சிரித்தாள் தான் ஆனால் உயிர்ப்பில்லை.
இது துர்காவின் தவறல்ல, அவள் கண்கள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கின்றனவோ, அந்த பெண் துர்காவின் மணிக்கட்டு காயத்தை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அப்படி தான் அவனிற்கு தோன்றியது. மகி அவர்களை தான் இப்போது பார்த்துக் கொண்டிருந்தான் தூரத்திலிருந்து.
தன்னருகில் வந்து அமரவில்லையே என நினைத்தான். இங்கு இந்த கூட்டத்திலிருந்து தப்பிக்கவும் முடியவில்லை அவனால். ஆனால், அவளையே பார்த்திருந்தான். துர்கா தன்னையறியாமலே, அவனை ஈர்த்துக் கொண்டிருந்தாள்.
இவள் பேசிக் கொண்டிருந்த பெண்ணை, யாரோ அழைக்க அவள் எழுந்து செல்லவும், அந்த பையனுடன் பேசிக் கொண்டிருந்தாள் துர்கா. அவனும் “எல்லாம் சரியாகிடிச்சுனு அப்பா சொன்னார், நீ எல்லாத்தையும் சரி செய்திடுவாய்னு நம்பிக்கையா சொன்னார். அப்புறம் என்ன…. மகிய பார்த்த அப்படி கொடுமையானவனா தெரியலை” என்றான் சிரியாமல். ஆனால் துர்கா சிரித்துவிட்டாள்.
இதை தூரத்திலிருந்து பார்த்த மகி, அங்கே அமர முடியாமல், அந்த கூட்டத்திடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டு எழுந்து துர்கா அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
துர்காவுடன் பேசிக் கொண்டிருந்தவன், அமர்ந்த மகியை, ஆச்சிரியமாக பார்த்து சிரித்தே விட்டான். துர்காவும் தான். இவ்வளவு நேரம் கழித்து மலர்ந்து சிரித்தாள். மகி அவளையே சிரிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மகிக்கு இப்போது கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் சிரித்து முடித்து மகியை பார்க்கவும், கோவமாக வந்த இவனும் இலகுவாக, ‘என்ன’ என கண்களால் கேட்க, இவள் ஒன்றுமில்லை என தலையாட்டினாள்.
“பங்காளி பொய் சொல்றா, இவ்வளவு நேரம் உம்முன்னு இருந்துட்டு நீங்க வரவும் தான் சிரிக்கரா” என்றான்.
மகி, அமைதியாக துர்காவை பார்க்க, அந்த பார்வையில் துர்காவிற்கு ஜிவு ஜிவு என முகம் சிவந்து போனது, அவளால் நிமிர்ந்து கூட அவனை பார்க்க முடியவில்லை. திரும்பிக் கொண்டாள்.
மகிக்கு அவளிடமிருந்து பார்வையை எடுக்க முடியவில்லை, அருகில் மூன்றாம் நபர் இருக்கின்றாறே என தன்னை கட்டுபடுத்திக் கொண்டான். இந்த நிகழ்வை கண்டு கொண்ட அந்த மூன்றாம் நபர்.
“தோ வரேன் துர்கா“ என சொல்லி எழுந்து சென்றுவிட்டான். இப்போது தான் மகியிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்தது. துர்காவை பார்த்து “இங்க பாருடி” என்றான் அதிராமல்.
‘டி யா’ என, இவள் தான் அதிர்ந்து அவனை பார்க்க, அவளை பார்த்து “என்ன அப்படி ஒரு சிரிப்பு” என்றான், கொஞ்சம் சிரிப்பும், கோவமும் கலந்திருந்தது அந்த வார்த்தையில்.
துர்காவிற்கு பயம் வந்தது ‘என்ன நினைக்கிறான் இவன்’ என புரியவில்லை. எனவே அமைதியாக தன் கைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகிக்கு இப்போது தான் அவளை ரசித்து பார்க்க தோன்றியது போலும், கொஞ்சம் அவள் புறம் திரும்பி அமர்ந்து அவளை வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
தன்னவன் பக்கத்தில் இருப்பதாலோ என்னவோ, அவள் முகம் அந்த நேரத்திலும் ஒளிர்ந்தது. ஆனால் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை துர்கா.
சிறிது சிறிதாக தன் கண் வழியே, அவளை தனக்குள் நுழைத்துக் கொண்டிருந்தவன் அதரங்கள் தன்னையறியாமலே சொன்னது அந்த வார்த்தையை “அழகா இருக்க“ என்றான்.
துர்காவும், ஏதும் பேசாமல், அவனின் வேலையை தான் செய்தாள், அது தான், அவனை சைட் அடிப்பது. ‘திரும்பவும் எனக்கே எனக்கான’ வார்த்தை என்ற எண்ணம் எழுந்தது,
சும்மாவே அவனிடம் மயங்கி நிற்பவள், இப்போது இந்த வார்த்தையில் கொஞ்சம் உணர்வு பெற்றாள். “என்னால் முடியும், எப்போதோ வரும் இந்த வார்த்தைக்காக, வாழ்நாள் முழுக்க தள்ளி இருக்க முடியும்” என தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.