எல்லோரும் கிளம்பிய பிறகு, அகில், ராஜேஷ், வினோ, துர்கா, சர்வேஷ் இவர்கள் மட்டும் இருந்தனர். என்ன சொல்லியும் வினோ உள்ளே வரவில்லை, வெளியேவும் செல்லவில்லை அந்த இடத்தை விட்டு எழவேயில்லை.
டாக்டர் ரௌண்ட்ஸ் வந்து சென்றுவிட்டார், மற்ற மூவரும் சர்வேஷுடன் சென்று உணவு உண்டு வந்தனர், வினோவையும் ராஜேஷ் அழைத்து சென்றான். துர்காவிற்கு பார்சல் வந்தது.
மணி பத்தரை யாரும் வீட்டிற்கு செல்லும் வழியை காணம், மகிக்கு இப்போது தூக்கம் வரவில்லை, ஏதோ கண்மூடி படுத்திருந்தான். ராஜேஷ் தான் எப்போதும் போல் ஆரம்பித்தான்.
“மகிண்ணா, என்ன நடக்குது “ என அவன் ஒரு வார்த்தை கேட்க, அகிலும் பிடித்துக் கொண்டான், “வினோ வேற, முகமே சரியில்லை, அப்படியே எது கேட்டாலும் பதிலே சொல்லாமல் அமர்ந்திருக்கார்” என அப்போது தான் வினோ பற்றி சொல்ல.
மகி பதறியே போனான் ‘கூப்பிடு’ என்னும் விதமாக சைகை செய்ய, அகில் திரும்பியும் “எவ்வளவு சொல்லியும் உள்ளே வரமாட்டேன் என்கிறார்” என்று சொல்லிக் கொண்டிருக்க, துர்கா எழுந்து சென்றாள்.
வினோவிடம் “வாங்க வினோ, எதா இருந்தாலும் அவர்ட்ட பேசுங்க, இப்படி ஒதுங்கி நின்னு தண்டிக்காதீங்க” என கிட்ட தட்ட அதட்டினாள். அசரவில்லை அவன், அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான்.
யோசிக்கவில்லை துர்கா, கையை பிடித்துக் கொண்டு “ம், வாங்க வினோ “ என அவனை எழுப்பி இழுக்க, என்ன செய்யமுடியும் வினோவால், “விடுங்க துர்கா வரேன் “ என அவளின் பின் சென்றான்.
உள் வரவில்லை, மகியை பார்க்கவில்லை, கதவின் அருகிலேயே நின்றான், துர்காவின் புறம் மட்டுமே திரும்பி பேசினான் “இங்க பார் துர்கா, நான் என்ன சொல்றேனோ அதை செய்யனும் உன் புருஷன், அத விட்டுட்டு ஏதாவது நியாயம், தர்மம்ன்னு சொன்னான், நான் இப்படியே போறேன், கேட்டு சொல்லு அவனிடம்” என அடக்கப்பட்ட கோவத்துடன், செய்தே தீருவேன் என்ற வெறியுடன் காலையிலிருந்து நின்றுக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது அது உச்சத்தை தொட்டிருந்தது, வெறியாக மாறியிருந்தது, மகியின் நிலை அவனை கையை கட்டியிருந்தது. எனவே கொதி நிலையில் இருந்தான் வினோ.
’ரத்த பந்தமில்லை, தூரத்து வகையில் கூட சொந்தமில்லை, தன்னையே வருத்திக் கொண்டு, நண்பன் என்ற வார்த்தையில், எல்லா உறவையும் தாங்கி, வழி நெடுக நிற்கிறான். என்ன செய்தேன் இவனிற்கு!’ என தான் வினோவை, மகி பார்த்திருந்தான்.
அகில் அருகில் வந்து “வாங்க வினோ முதலில், பேசிக்கலாம்” என்றான். மகி எந்த ஜாடையும் செய்யாமல் அமைதியாக இருந்தான். துர்கா அவனை பார்ப்பது, வினோவை பார்ப்பது என இருந்தாள்.
சர்வேஷ் டிவி ஆப் செய்யப்பட்டதால், நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அகிலால் வினோவை அந்த இடத்திலிருந்து நகர்த்த முடியவில்லை.
பார்பதற்கு ஏதோ ஒல்லியாய், உயரமாய் கொஞ்சம் சிவந்த நிறத்தில் இருப்பவனது உறுதியை அசைக்க முடியவில்லை. எனவே, ஏதோ சாந்தமானவன் என தான் அனைவரும் நினைத்தனர்.
ஆனால், அந்த வினோவை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை. இன்னும் பார்வை துர்காவை தாண்டி மகியிடம் செல்லவில்லை.
ராஜேஷ் “ண்ணா என்ன பண்ணனும் சொல்லுங்க பண்ணலாம், யாருன்னு சொல்லுங்க” என்றான் கோவமாக. அவனிற்கு காலையிலிருந்து இதற்கான விடை கிடைக்கவில்லையே என்ற எண்ணம்.
ம்கூம் அசையவில்லை வினோ, மகியை, துர்கா பாவமாக பார்க்க, மகி தான் “வாடா” என வாய் திறந்தான். “பேசாதீங்க “ என்றாள் துர்கா. அவனின் உடல் நிலை காரணமாக. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாத வினோ. கொஞ்சம் நிலையிழந்தான். இது காத்து வந்த பொறுமையெல்லாம் பறக்க.
கிடு கிடுவென மகியின் அருகில் வந்தவன் “நீ நேற்று போகல, இன்னிக்கு இந்த பொண்ணு இங்க இல்ல டா, புரியுதா உனக்கு, ஏதோ நீ போன அதனால, நீ, நீட்டி நிமிர்ந்து படுத்துகிட்ட, இதே” என்றவன் சொல்ல வராமல் துர்காவையும் சர்வேஷையும் ஒரு பார்வை பார்த்தவன் “வேறு ஏதாவது ஆகியிருந்தா” என அவன் குரல் சிதறாமல், சத்தம் வராமல், கதறிக் கொண்டிருந்தான்.
வினோவிற்கு ஆற்றாமை ‘இப்போது தான், தன் நண்பனே குடும்பம், குழந்தை என பார்க்கிறான். அதற்குள் ஏதேனும் ஆகியிருந்தால், யார் பார்ப்பது அவனது முகத்தை, அதையெல்லாம் தாங்குவானா இவன்’ என ஏதேதோ எண்ணம். எல்லாவற்றையும் தன் தலை கோதி தன்னுள் அடக்கியவன் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.
எல்லோருக்கும் இது புதிது, அப்படியா என பார்த்திருக்க, சிறிது நேரமே சென்றது அவர்களின் நிலை மாற. பின்பு அகில், வினோவின் அருகில் வந்து “என்ன” என்க. “கேளுடா, இவனை கேளுங்கடா, எல்லாம் இவனுக்கு தெரியும்” என மகியை காட்டியவன் நடந்ததை சொன்னான்.
கடைசியாக “எல்லாம் இருக்குடா, காசிருக்கு, சொன்னா…. செய்ய ஆளிருக்கு, எல்லாத்தையும் சரி செய்ய பணமிருக்கு ஆனா, உன் அண்ணா அமைதியா ‘இது சரியில்லை, இப்படி செய்ய கூடாது’ என வேதாந்தம் பேசிக்கிட்டு இருப்பான் டா” என்றான்.
துர்காவிற்கே இந்த செய்தி புதிது, இவள் ஏதோ விபத்து என்றிருக்க இப்போது அனைத்தையும் சொல்லவும், எல்லோர் முகத்திலும் துளி துளியாய் கோவம் ஏறியது. துர்காவிற்கு, தனக்கு வரவிருந்தது தான், மகியை தாக்கி விட்டதா என எண்ணம் வந்தது.
வினோ, மகியிடம் திரும்பியவன் “இங்க பாருடா, முதலில் அந்த கதிரை தூக்குறோம், அப்புறம் விவேகனை தட்டுறோம், நம்ம கிட்ட பயம் வேணும் டா, இல்ல இப்படிதான்” என தன் திட்டத்தை அடுக்கினான் வினோ.
மகி வேண்டாம் எனும் விதமாக கையசைத்தான் அதை பார்த்த வினோ “இவன் இப்படி தான் டா, எதையும் செய்ய விடமாட்டான்” என தன் கையிலிருந்த மொபைலை சோபாவில் விசிறினான். சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
எந்த நிலையிலும் தன் நிலை மாறாத மகி, அவன் இட்ட கோட்டை எங்கும் தாண்டாத வினோ,
இப்போது இவர்கள் இருவரையும் தான் மற்றவர்கள் பார்த்திருந்தனர்.
வினோவின் இந்த பர பரப்பை பார்த்து யோசனை வந்தது மகிக்கு. இவன் ஏதாவது செய்துவிட்டால் என நினைத்தவன், துர்காவை “வா“ என அருகில் அழைத்தவன். ‘போன் செய்’ எனும் விதமாக கை காட்ட. துர்கா “வைபவ் அம்மாக்கா “ என்க. ‘ஆம்’ என தலையாட்டினான்.
அவளும் எந்த நேரம் என கூட பாராது போன் செய்தாள் உடனே அழைப்பு எடுக்க பட்டது “உமா ம்மா, நான் துர்கா, இப்போ பேசலாமா” என்றாள்
அதற்கு அவர் “பேசலாம் ம்மா, இப்போதான் என் பொண்ண விட்டு வரேன்னு பையன் கிளம்பினான். சொல்லு ம்மா, ஏதும் முக்கியமா” என்றார்.
அனைவரும் துர்காவையே பார்த்திறுந்தனர் என்ன சொல்ல போகிறாள் எனும் விதமாக, மகி கூட “அம்மா, நாளைக்கு காலையில சீக்கிரம்மா நான் வருவேன் உங்கள கூப்பிட்டு போக, அதாவது நாலு மணிக்கே வருவேன் நீங்க என்ன சொல்லுவீங்களோ, ஏது சொல்லுவீங்களோ உங்க பையனும், நீங்களும் ரெடியா இருக்கணும்.
அப்புறம், நீங்க உங்க பையன் கிட்ட எதுவும் சொல்ல கூடாது. எதுவும் கேட்க கூடாது ஏன்னா, நம்ம விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சி” என கூறி அதையெல்லாம் பொறுமையாக விளக்கி சொல்லி அதனால் எதுவும் சொல்ல கூடாது, என சொல்லி இன்னும் ஏதேதோ சொல்லி அவரை சரி கட்டி பேசி முடித்தாள்
நிமிர்ந்த போது, சர்வேஷ் அவள் மடியில் படுத்து உறங்கி இருந்தான். அவனின் தலை கோதியே அனைத்தையும் பேசி முடித்திருந்தாள்.
இப்போது மகியை நிமிர்ந்து பார்க்க அவன் பார்வையில் ஒரு மெச்சுதல் தன்மை தெரிந்தது. வினோ “விவேகன என்ன பண்ணாலாம் சொல்ல சொல்லு” என அவன் அதிலேயே நின்றான்.
‘முதலில் இதை முடிப்போம்’ என மகி சைகை செய்து வினோவை, சாமியிடம் பேச செய்தான். எங்கே ரிஜிஸ்டர் செய்வது, எப்போது, யாரிடம் சொல்ல வேண்டும், என்ன தேவை, என எல்லாம் கேட்க செய்தான்.
அதை வினோ, அப்படியே கேட்டு அனைவரிடமும் சொல்ல, எதில் செல்வது எப்படி வைப்பவை நம் இடத்திற்கு கொண்டு வருவது யார், யார் செய்வது என எல்லாம் பேசினார்.
இதற்கே நேரம் சென்றது, அங்கிருந்த நர்ஸ் வந்து “போதும் சார் மணி 1 லைட் ஆப் பண்ணுங்க, அவருக்கு இன்னிக்கு தான் ஆபரேஷன் ஆகி இருக்கு இவ்வளவு ஸ்டைன் பண்ண கூடாது “என இரண்டாவது முறையாக வந்து சொல்ல.
வினோ எழவில்லை அந்த இடத்திலிருந்து. மகி, ‘இவன் போக மாட்டான்’ என தெரிந்த பின் தான், அவனை அருகில் அழைத்தான்.
வினோ “சொல்லுடா, வேண்டாம்னு சொல்லுவ, அதானே “ என்க.
திரும்பியும் அருகில் அழைத்தான், வந்தவனிடம் உதடுகளை சிரமப்பட்டு அசைத்து அவன் காதிற்கு மட்டும் கேட்கும் குரலில் ஏதோ சொன்னான். பின் அகிலை கைகாட்டினான்.
‘ப்பா இப்போது தான் சற்று தணிந்தான் வினோ’ மகியிடம் “சாமியை எல்லாம் ரெடி செய்ய சொல்றேன்” என்றான்.
மகி இப்போது சற்று சத்தமாக “பொறுமையா செய் ஒன்னு ஒன்னா, அவசரபடாதே” என்றான். வினோவை பார்த்து. வினோ, இப்போது அவன் கையை பிடித்துக் கொண்டான் பேசவேயில்லை. மகியும் அவனையே பார்த்திருந்தான்.
ஏதேதோ கேட்க தோன்றியது தான் வினோவிற்கு, ‘ஏண்டா இப்படி’ என திட்ட தோன்றியது தான் ஆனால் , ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவனிடம் கை கொடுத்து ஒரு இரண்டு நிமிடம் நின்றான்.
கொஞ்ச நேரம் சென்று “சாரி டா, நான் தான் முதலில் பார்த்திருக்கணும்.” என்றான் வினோ. அதன் பின் அமைதி மட்டுமே, மகியும் கண் மூடி இருக்க, அங்கு ஒரு நிறைவான அமைதி “ம்…. சீக்கிரம் வா, என்னாலா உன்னை இப்படி பார்க்க முடியல” என்றவன் எழுந்துவிட்டான். .
விடைபெற்று கிளம்பினான் வினோ. அவனிற்கு இப்போது தான், தன் வெறி அடங்கியது. மகிக்கு விபத்து என்ற நிலையிலேயே வினோ நிலைகுலைந்து போனவன்.
இப்போது தான் மகியின் வார்த்தையில் கொஞ்சம் தெம்பு வந்ததாக உணர்ந்தான். எனவே, முகம் பழைய நிலைக்கு மீண்டது. அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
மகி “ராஜேஷ்” என அழைத்து “நீ துர்கா கூட காலையில் போ” என்றான். எனவே, ராஜேஷ் அங்கு மருத்துவமனையிலேயே தங்கிக் கொண்டான். சர்வேஷை தூக்கிக் கொண்டு அகில் வீட்டிற்கு கிளம்பினான்.
அதிகாலை, துர்காவும் ராஜேஷும் கிளம்பினர். மகி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான், அவனை தனியே விட மனதேயில்லை அவர்களுக்கு. துர்கா சிறிது நேரம் நின்றிருந்தாள்.
வெளியே சென்ற ராஜேஷ் ஒரு ஆண் ஸ்டாப்புடன் வர, அவரை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்றனர். ஆனாலும், மனது கேட்காமல் துர்கா கீர்த்திக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டே சென்றாள்.
சென்றவர்களுக்கு பெரிதாக எந்த தடையும் இல்லை. காவல் இருந்தவர்கள் கூட காணவில்லை. உள்ளே சென்று துர்கா கால் செய்ய இதற்காவே காத்திருந்தவர்கள் போல் கதவை திறந்தார் உமா.
வைபவ் கொஞ்சம் பேசினான், அவனின் அம்மா எது சொன்னலும் முடியாது என்றான். துர்காவும் பேசி பார்க்க ஒன்றும் வேலையாகவில்லை,
நேரம் வேறு சென்று கொண்டிருந்தது. விடிந்துவிட்டால், கொஞ்சம் இல்லை நிறையவே சிரமம், துர்கா வேறு ராஜேஷை சங்கடமாக பார்த்தாள், ‘அவன் பொறுக்கமாட்டான் கை வைத்து விடுவானோ என பயம்.’
ஒரு கட்டத்தில் ராஜேஷ், உமா அம்மாவை கைபிடித்து தர தரவென இழுத்து சென்று காரில் விட்டான். பின்னாடியே சத்தம் போட்ட வண்ணம் வைபவ் வர, துர்காவை காரை எடுக்க சொன்னவன். வைபவை வாய் மூடி காரில் ஏற்றினான் ராஜேஷ்.
கீர்த்தி, அந்த நேரத்திற்கே கமலுடன் அங்கு, மருத்துவமனையில் இருந்தான். கமல் நேற்று இரவு சீக்கிரம் உறங்கியதால், கீர்த்தி சென்று தன் அன்னையிடம் சொல்லும் போது கமல் விழித்திருந்தான்.
‘நானும் வருவேன்’ என ஒரே பிடிவாதம், அதனால் அழைத்து வந்து விட்டான் கீர்த்தி. மகி விழித்து விட்டான். கமல் தன் தந்தையின் தாடையை வருடிய படி ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
உமா அம்மா, வைபவை உள்ளே அழைத்து வந்து, துர்கா முறையாக அறிமுகம் செய்து வைத்தாள். மகியை இப்படி காட்சி பொருள் போல் காட்டுவது பிடிக்கவில்லை தான் ஆனாலும், அந்த பதின்ம வயதில் இருக்கும் வைபவிர்காக, அதன் நிலையை புரியவைக்கவே இந்த செயல்.
இல்லையேல் பின்னாடி ஏதேனும் ‘என்னை ஏமாற்றிவிட்டனர்’ என விவேகனுடன் சேர்ந்து மீண்டும் ஏதேனும் பிரச்சனை என்றால், அது பெரிதாகி விடும் அல்லவா, அதனை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
சிலர்க்கு சொல்லி புரியவைப்பது கடினம், உணர்ந்தால் மட்டுமே புரியும். அந்த வகையே இது. எல்லாம் மகியின் செயல் தான்.
எல்லாம் சரியாக சென்றது. மகியின் வீட்டில் தான் ரிஜிஸ்ட்ரேஷன் அதானல் இவர்களை பாதுகாப்பாக அங்கு சேர்க்க வேண்டும். இப்போது கீர்த்தியும் துர்காவும் கிளம்பும் சமயம்.
வினோவிடமிருந்து துர்காவிற்கு போன் வந்தது. “யாரும் எங்கும் செல்ல வேண்டாம்” என்ற செய்தியை தாங்கி வந்தது.
நேற்று இரவு பேசிய போது, ரிஜிஸ்ட்ரேஷனுக்கு மகி இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற செய்தி, இப்போது மகி தேவை என்னும் விதமாக மாறியிருந்தது.
இன்னும் சில நடைமுறை சிக்கல்கள். எனவே தான் சாமி வருவதாக இருந்தது. ஹோஸ்ப்பிட்டலில் அனுமதி பெறப்பட்டது. அனைவரின் வருகைக்காகவும்.
நேரம் செல்லவும், அங்கிருந்த ஆட்கள் மூலமாக கதிர்க்கு விஷயம் சொல்லப்பட்டது. அப்படியே விவேகனுக்கு சென்றது. எத்தனை விவரங்கள் சேகரித்துருப்பான் இதற்காக. ஒரு சின்ன நேரத்தில் காரியம் கை மீறவும் கதிரின் சட்டையை பிடித்திருந்தான் அவன்.
மரியாதை என்பதெல்லாம் காற்றில் பறக்கவிட்டிருந்தான் விவேகன். கதிர் சற்று ஆடித்த்தான் போனான், விவேகன் செய்கையில். “எப்படியாவது நிறுத்து கதிர்ண்ணா” என்றான்.
இதை இப்போது பணம் கொடுத்து சரி செய்ய முடியும் என தோன்றவில்லை கதிர்க்கு. ஒரு கட்டத்தில் நம் யோசனைகளை தீர்ந்து போகும், அந்த நிலையில் இருந்தான் கதிர்.
கமிஷனருக்கு போன் செய்தான் விவேகன், அவர் ‘கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறிர்களா’ என்றார். இல்லை என்ற விடை. அடுத்து அட்வகேட்’ என இப்படி தன்னாலான முயற்சியை செய்த பிறகே கதிரின் சட்டையை பிடித்திருந்தான் விவேகன்.
இனி மேற்கொண்டு ஏது செய்தாலும், உபயோகமில்லை என உணர்ந்தான் விவேகன். கதிரை பகைத்துக் கொண்டே உணர்ந்தான்.
அங்கே தேவையான அனைத்தையும் தேடி எடுத்து கொண்டு, மகியின் உடல் நிலை கருத்தில் கொண்டு ரிஜிஸ்டார்கள் மருத்துவ மனைக்கே வந்தனர்.
இப்படி அப்படி என எல்லாம் கையெழுத்திட்டு முடிய மாலை நான்கு மணியானது. இப்போது அனைத்தும் மகிக்கு சொந்தமானது.