அவள் எண்ணம் சரியே என்னும் விதமாக பேச்சுகள் தொடர்ந்தது. மகி ‘டீ காபி’ உபசரிப்புக்கு பின், அந்த அட்வகேட்டை பார்த்து “சாமி நீங்களே சொல்லிடுங்க” என்றான். ஆம், அவன் அப்படி தான் அழைப்பது அவரை.
அவர்கள் இயல்பாக தான் உரையாடிக் கொண்டனர். நடுவில் இப்படி மகி சொல்லவும், அவரும் “ஆகட்டும் மகி” என்றவர். துர்காவை பார்த்து லேசாக சிரித்தார். அப்படி தான் அவளிற்கு தோன்றியது.
துர்காவிற்கு பயம் வந்தது, ‘என்ன நடக்கிறது’ என ‘திரும்பவும் தன்னை கையெழுத்திட சொல்வார்களோ’ என எண்ணம் வந்தது.
எனவே “என்ன சார்…” என அவரை பார்க்காமல் மகியை பார்த்துக் கொண்டே பயத்துடன் கேட்க, லேசாக சிரித்தான் மகி.
அவரும் உடனே “மகி, இப்படி பயபடுத்தி வைச்சிருக்க” என்றார் மகியை பார்த்து.
துர்கவிடம் “துர்கா, என் பெயர் பார்த்தசாரதி, நீ நினைப்பது போல் எதுவும் இல்லை. உன்னால் இவனிற்கு ஒரு காரியம் ஆகணும் அதான், நீ வேறு எதுவும் நினைக்காதே.” என்றார்.
இவள் இப்போது மகியை பார்ப்பதை தவிர்த்தாள், ஆனால், மகி அவளையே பார்த்திருந்தான், அதை அவளால் உணரவும் முடிந்தது. துர்காவிற்கு, புது தெம்பு வந்தது.
இப்பொது தான் அவளின் முகம் சாதரணமாக இருந்தது. “சாரி, சாரதி சார் நீங்க சொல்லுங்க, என்ன செய்யனும்மாம்.” என்றாள்.
“நாம இப்போ, அந்த வைபவ்வ, கொண்டு வரணும் அவன் எங்க இருக்கானுத் தெரியல, அதனால நீங்க அங்க அம்மா கிட்ட பேசணும்” என்றார்.
இப்போது தான் வாயை திறந்தான் வினோ “இங்க பாருங்க துர்கா, அவங்க அம்மாக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது. மேலும் அவர்களுக்கு, அவர்களின் மாப்பிள்ளை சொல் தான் முக்கியம். அதனால், நம் நிலையை அவர்களுக்கு, எப்படியாவது நீங்க புரியவைக்கணும்” என்றான்.
சொல்லி முடித்த உடன் எல்லோரிடத்திலும் அமைதி. மகி இன்னும் அவளை பார்ப்பதை நிறுத்தவில்லை. எடுத்த உடன் முடியாது என சொல்லி விடுவாளோ என தான் பார்த்திருந்தான்.
சத்தியமாக அதை தான் சொல்ல நினைத்தாள் துர்கா. ஆனால் தன் கணவனின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தவளால், அப்படி சொல்ல முடியவில்லை.
தனக்குள்ளேயேச் சொல்லிக் கொண்டாள்…. ‘நான் இதை சரியாக செய்ய வேண்டும்’ என. ஆனால் வெளியே எதையும் சொல்லவில்லை.
மேலும் விவரங்கள் சொல்லப்பட்டன துர்காவிற்கு, ‘அவர்களை சுற்றி பாதுகாப்பு போல் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள்’ எனவும் கூறப்பட்டது.
இதை எல்லாம் மகி ஊரில் இல்லாத போது செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது. எல்லா விவரங்களும் தந்த பிறகு, அவர்களின் புகைப்படம் காட்டிய பிறகு… வினோவும், சாரதியும் கிளம்பினர் இருவரிடமும் விடைபெற்று.
மகியும், துர்காவும் தான் அங்கு இருந்தனர். மகிக்கு, புதிதாக அவளை பற்றிய சிந்தனை நேற்றிலிருந்து. விவாகரத்து குறித்து அவள் எப்போதும் பயத்தில் இருப்பதுப் பிடிக்கவில்லை அவனிற்கு.
அவள் ஏதேனும் கேட்பாள், அதனை பிடித்துக் கொண்டு…. சொல்லி விட வேண்டியது தான். இன்று எப்படியும் சொல்லி விட வேண்டும்.
எல்லாம் சரியாக நடந்தால், நாம் எப்போதும் போல் இருக்கலாம் என சொல்லி விட வேண்டும் என தான் நினைத்தான், நேற்றிலிருந்து.
ஆனால், அவளும் கேட்டவே இல்லை ஏதும் இவனிடம்.
மேலும் அவனை, துர்காவுடன் பேசவே விடவில்லை போன். தொடர்ந்து போன் பேசிக் கொண்டே இருந்தான் மகி.
கொஞ்ச நேரம் அமர்ந்திருந்த துர்காவால் அதற்கு மேல் அமர முடியாமல், எழுந்து அங்கே சுற்றிக் கொண்டிருந்தாள். திறப்பு விழாவின் போது வந்தது, அதன் பிறகு இப்போது தான் வருகிறாள்.
அதனால், அங்கு வைத்திருந்த, கார்களின் மாடல், அதன் அட்வாண்டேஜஸ் என்ன, என்ன.. என பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த ஒரு பணியாளர் “மேம், சார் உங்களை அந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க சொன்னார்” என்றான்.
“வாங்க மேம் “ என அழைத்து சென்றார். கூடவே பேசிக் கொண்டே வந்தார் மேனேஜர் போன்ற தோற்றம் கொண்ட அந்த மனிதர் “இப்போது தான் வந்தது, இன்னும் சார் கூட ட்ரையல் செய்யவில்லை” என்றார்.
அழகான வைட் கலர் A5, நல்ல அரேபியன் குதிரை போல் பளபளவென, தொட்டால் சீரும் திமிருடன் நின்றிருந்தது.
பெரிய கார்கள் ஓட்டிப் பழக்கம் தான் என்றாலும், இது புத்தம் புதிய கார். எப்படி இருக்கும் என யோசனையுடன், ஏறி அமர்ந்தவள் சீட் பெல்ட் போட்டு ரெடியாக, அந்த மேனேஜர் போல் இருப்பவர், அந்த புறம் வந்து ஏற சென்றார்.
எங்கிருந்தோ போன் பேசிக் கொண்டே வந்தான் மகி, அவரை தொட்டு, ‘தான்’ பார்த்துக் கொள்வதாக கூறி காரில் ஏறி அமர்ந்தான். “ம்..” போலாம் என்னும் விதமாக கையை வேறு துர்காவை நோக்கி அசைத்தான்.
துர்காவும் பதட்டபடாமல் அழகாக ஸ்டார்ட் செய்து நகர்த்த, வண்டி கோவை பை-பாஸ் நோக்கி சென்றது. எதையும் மகி கவனிக்கவில்லை. தனது வேலையை செய்துக் கொண்டே இருந்தான்.
சிட்டி தாண்டி கார் பறந்தது. அதுவே அவளிற்கு நல்ல ஸ்பீட். இப்போது தான் மகி வினோவிடம் பேசி “கால் டைவர்ட் போட்டு இருக்கேன்… கொஞ்ச நேரம் பார்த்துக்கோ” என சொல்லிக் கொண்டிருந்தான்.
இப்போது தான் மகி அவளை பார்த்தான்… கொஞ்சம் சாய்ந்து இலகுவாக அமர்ந்தான்.
சொல்லிவிட வேண்டும், நான், அவளை டென்ஷன் செய்ய கூடாது என தான் வந்திருந்தான். அவள் இவனை திரும்பியும் பார்க்கவில்லை.
கார் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள், இவனும் தனக்கு பிடித்த விஷயம் பேசும் போது… என்ன செய்ய முடியும் அதை விட்டு அவனால் வர முடியவில்லை.
அதற்குள் சித்தோடு வந்திருந்தது, ஆவின் பால் பாக்டரி முன் நிறுத்தினாள். கூடவே மகியிடம், “கமலேஷ்க்கு பால்கோவான்னா ரொம்ப பிடிக்கும்” என சொல்லிக் கொண்டே இறங்கினாள்.
மகி அயர்ந்தே போனான், ‘எனக்கு இதெல்லாம் தெரியாதே’ என எண்ணம் வர. ‘என்னவோ பேசிக் கொண்டிருந்தாள். எப்போது இதெல்லாம் யோசித்தாள்’ என இவன் எண்ணிக் கொண்டு பார்த்திருக்க
“சேன்ஜ் இருக்கா” என வந்து நின்றாள், அவனின் முன். அவன் பர்சை எடுத்துக் கொடுத்தான், வேண்டியது எடுத்துக் கொண்டு திரும்பி தந்து விட்டு சென்றாள்.
கையில் இரு டீ கப்புடன் வந்தாள், ஒன்றை அவனிடம் தந்துவிட்டு, “இங்க டீ நல்ல இருக்கும், தயிர் சாதம் இன்னும் சூப்பர்ரா இருக்கும், தீர்ந்து போச்சாமா” என்றாலே பார்க்கலாம்.
மகி அப்படியே ப்ரேமம் நிவின் போல் சிரித்துக் கொண்டே நின்றான். உள்ளுக்குள் ’65 லட்சம் ரூபாய் கார், உனக்கு தயிர் சாதம் வாங்க வா’ என ஓடிக் கொண்டிருந்தது.
ஆனாலும் “இன்னும் வேறு வேணும்மா, வாங்கிக்க “ என்றான். இல்லை என தலையசைத்தவளை, ‘இப்படி வா வென சொல்லி, தான் சென்று டிரைவ் செய்தான்.
வெளியே இருந்தவரை பேசிக் கொண்டே இருந்தவள் கார் கிளம்பவும் அமைதியானாள். மகிக்கு, ‘என்ன பேசுவது எப்படி பேசுவது’ என தெரியவில்லை, மனைவியுடன் இப்படி வெளியே வந்த நியாபகம் கூட அவனிடம் இல்லை.
அதுவும் எப்போதும் அமைதியாக இருப்பவள், தன்னிடம் இவ்வளவு உரிமையாக பேசுவாள் என அவன் ஷணமும் நினைக்கவில்லை. அதானல், எப்படி அவளிடம் சொல்வது என யோசனை.
வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்தினான்.
‘ஏன்’ என்னும் விதமாக துர்கா பார்க்க, இவனால் பார்க்கவே முடியவில்லை அவளை. 7 வருடமாக குடும்பம் நடத்திய மனைவியிடம் தான் இந்த தயக்கம்.
அவளிடம் இயல்பாய் பேசலாம் என தான் நினைக்கிறான். ஆனால் அது அவனிற்கு வரவில்லை.
துர்காவிற்கு, ‘எப்போதும் நிற்காதவன், தன் முகம் பார்க்காதவன், நேற்று தனது பேச்சை காது கொடுத்து கேட்டதே ஏதோ பெரிய விஷயம் போல் அவள் உணர்ந்திருந்தாள்.
இதில் இவன் இப்போது ஆபீஸ் கூட்டி வந்தது, இதோ இப்போது தனியே நிற்பது இதெல்லாம் அவளின் கற்பனைக்கு அப்பாற்பட்ட செயல்.
அதனால் அவளிற்கு டென்ஷன் ஆனது, உடலெல்லாம் குளிர் எடுத்தது. ஏசியை குறைக்க நினைத்து பார்க்க, ‘எந்த பட்டன்’ என கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அந்த தளிர் விரல்களை பற்றியது, மகியின் விரல்கள். எதோ மின்சார தீண்டல் போல் உணர்ந்தாள் அவள். ‘தன்னவன் தான்’ என அவள் மூளை அவளுக்கு சொல்லும் முன், அதை அவள் முழுதாக உணரும் முன், அவளின், அனிச்சை செயலாய், தன் விரல்களை நகர்த்திக் கொள்ள, தன் கைகளையும் இழுத்துக் கொண்டான் மகி. ஏதோ அடிவாங்கியவன் போல்.
துர்காவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவள் வேண்டுமென இதை செய்யவில்லை, ஆனால் நடந்தே விட்டது. மீண்டும் அங்கயே கையை வைத்தாள் துர்கா. ‘”அது, தெரியாமா..” என ஏதோ சொல்ல வர.
தெளிந்து விட்டான் மகி “இல்ல நான் தான், பரவாயில்லை விடு” என மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
“நான் நைட் கிளம்பறேன், நீ பார்த்து செய், கவனமா இரு “ என பழைய மகியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லி விட்டு வண்டியை கிளப்பினான்.