அமுதங்களால் நிறைந்தேன்…
11
இரண்டு நாட்கள் கடந்திருந்தது… இயல்பாய் நாட்கள் சென்றது.
ஷக்திப்ரியா வீடு…
காலையில்.. தந்தை… தன்னை இரண்டு நாளாக கூட அழைத்து செல்லுவதில்லை என்ற கடுப்பில்.. அவ்வப்போது ஏதாவது பேசிக் கொண்டிருந்தாள்.. இல்லை சண்டை வளர்த்துக் கொண்டிருந்தாள்… சக்தி.
இன்றும்.. தாமோதரன் உடற்பயிற்சி முடித்து.. அவள் கொடுத்த அந்த கஷாயத்தையும் குடித்து விட்டு அமர்ந்திருந்தார்.. சாரங்கன் இன்று மாலை வருவதாக இருப்பதால்.. லிங்கா சக்தி திருமண விஷயம் பேசி விடலாம் என்ற யோசனையில் அவர் இருக்க…
சக்தி “இந்த தீபாவளிக்கு… என்னை, எங்கேயும் கூட்டி போகல… நான் என் ப்ரண்ட்ஸ் கூட மால்தீவ்ஸ் போயிருப்பேன்.. இங்க வான்னு சொல்லிட்டு.. எங்கையும் கூட்டி போகலை.. கேட்டா… எனக்கு முடியலைன்னு பதில் சொல்றீங்க…” என்றாள் எப்படி சண்டையை ஆரம்பிக்கலாம் என… யோசித்து வைத்திருந்தவளாக. ஆம், இத்தோடு நான்காவது முறையாக இதற்கு சண்டை போடுகிறாள்.
தாமு சிரித்தார்.. ஏதும் பேசவில்லை… இன்று காலையில் லிங்காவின் முகம்.. சற்று தெளிந்திருந்ததாக தோன்றியது. எனவே, கட்டாயம் அவன் நல்ல பதில் சொல்லுவான்.. அத்தோடு, அவன் பேசிய தொழில் முறை பேச்சுகள் எல்லாம் சேர்த்து ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார் தாமு…
எனவே, சாரங்கன் வரும் போது பேசிவிட வேண்டும் என்ற சிந்தையோடு.. இன்று பெண்ணிடமும் பேசி விட வேண்டும் என எண்ணம் எழுந்தது… எனவே அதே எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவருக்கு.. சக்தியின் பேச்சு சிரிப்பைதான் தந்தது…
எதிரில் அமர்ந்திருந்த தன் மகளை “வா…” என கண்ணால் அழைத்தார்… வாஞ்சையாக. சக்தியும் ஆசையாக “ப்பா.. சர்ப்ரைஸா… எப்போ போறோம்..” என ஆவலாக அருகே சென்றாள்.
அவளின் கைகளை பிடித்துக் கொண்டார்… இரண்டு நிமிடம் அமைதி தாமுவிடம்.. ஏதும் பேசவில்லை.. அதற்குள் பெண்.. “ப்பா… ப்பா..” என நூறு தரம் அழைத்திருப்பாள்.. அமைதியாகவே இருந்தார் மனிதர்.
ஒரு பெருமூச்சு விட்டு “கண்ணு… நான் சொல்றத பொறுமையா கேட்பியா…” என்றார்.
சக்தி.. ‘தான்’ பிறந்த உடன் அன்னையை இழந்தவள். அதனாலோ என்னவோ.. பொறுப்பானவள். அத்தோடு.. அவளின் ஜாகை எல்லாம் ஹாஸ்டல்தான். அதுவும் ஊட்டிதான்… எனவே அந்த மேல்தட்டு வாசம் எப்போதும் அவளின் செயலில் தெரியும்.. ஒரு சின்ன செயலையும் நேர்த்தியாய் செய்யும் கலை கற்றவள்… அது இயல்பா, இல்லை.. அந்த தனிமையின் பயிற்சியா தெரியாது. எனவே அமைதியான பெண்.. தேவைக்கு மட்டும் கோவம் வரும்.. பொறுப்பான பதுமையவள்.
[the_ad id=”6605″]
தன்போல் தலையசைத்தாள் அவளின் தலையை மற்றொரு கையால் வருடிய தாமு “கண்ணு.. உனக்கு, கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு செய்திருக்கோம்…” என்றார்.. அந்த பெண் முகத்தில் மாற்றமில்லை.
தாமு “என்ன ப்பா… செய்திடலாமா” என்றார் ஆசையாக.. கனவுகள் மின்னிய கண்களில் கேட்டார்..
சக்தி “ஏன்.. ரொம்ப சீக்கிரமா இ..இல்ல… நான் இன்னும் படிப்பை முடிக்கலையே..” என்றாள் பொறுமையாக.
தாமு “அதனால் என்ன, கல்யாணம் செய்துகிட்டு படி.. அதெல்லாம்.. நான் பார்த்திருக்க மாப்பிள்ளை ஒன்னும் சொல்ல மாட்டார்… உனக்கு அவர பிடிக்கும்.. யாருன்னு கேளு..” என்றார் பெருமையான குரலில்..
சக்தி கேள்வியாய் பார்த்தாள்.. தன் தந்தையை. அவரும் ஆர்ப்பாட்டமாய்.. “அதான், காலையில் தினமும் பார்க்கிறியே அவர்தான்… ரொம்ப நல்ல பையன்.. உன்னை பிடிச்சிருக்குன்னு கேட்கிறார்… என்ன சொல்ற…” என்றார் ஏதோ பெண்ணின் விருப்பம்தான் முக்கியம் என்பது போல…
சக்திக்கு, ஏதோ முரணாக தெரிந்தது.. அத்தோடு.. அவன் தன்னை ஆர்வமாய் பார்த்ததாக கூட தோன்றவில்லை.. ‘என்னை பிடிச்சிருந்தா என்கிட்டே சொல்லணும், அதென்ன.. அப்பாகிட்ட சொல்றது… ‘நீ இருவது முதியவானா… எந்திரத்தில் கடை குட்டியா… ஓஒ ஹேய்…’ என மனம் சத்தமில்லாமல் இசைத்து பார்த்தது. ஆனால் அதில் அபஸ்வரமாய் ஒரு நிகழ்வும் நினைவு வந்தது.
தன் தோழியின் திருமணம் அது. அவள் ஒரு தெலுங்கு மாஜி சட்டமன்ற உறுப்பினரின் பேத்தி. அவளுக்கு திருமணமாகி எட்டு மாதம் ஆகிறது.. இன்னமும் எங்களுடன்தான் இருக்கிறாள்.. கணவன் பெரிய தொழிலதிபன். தனி தெலுங்கான கிடைக்க.. போராடியவர்களில் அவரின் தாத்தாவும் ஒருவராம்.. இப்போது எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை, அதனால்.. பெரிய இடமாக பார்த்து பேசி முடித்தனர் வீட்டினர். நன்றாகவே செல்கிறது இவர்களின் வாழ்க்கை… என்ன! கண், காது.. வாய்.. என எல்லாவற்றையும் மூடிக் கொண்டு வாழ்ந்தால்… இது கௌரவமான திருமணம்.
ஆம், திருமணம் ஆன புதிதில்.. எல்லா மீடியாவிலும் இவர்களின் புகைப்படங்கள்.. இந்த தொழிலதிபர்.. யாரும் கண்டுகொள்ளாத அமைச்சர் பேத்தியை மணந்தார் என புகழாரம். அதனால் அவருக்கு கட்சியில் சில சலுகைகள் கிடைத்தது.. அந்த மாஜி தாத்தா அமைச்சரின் மகனும் வெளி உலகுக்கு வந்தார்.
இப்போது எல்லாம் நேர்மார்.. அவனுடன் வேறு பெண் இருக்கும் புகைப்படம்தான் சத்தமில்லாமால் கிசு கிசுக்கபடுகிறது… மனைவியான, அவளின் தோழியும் கேட்டேவிட்டாள்… ஆனாலும் பதில் “பேபி… இதென்ன.. தெரியாதா நம்ம சொசைட்டி பத்தி, இப்படிதானே கண்டதையும் பேசும்..” என சமாதானம் செய்பவன்.. நேரில் தனிமையில்.. “அதெல்லாம் கண்டுக்காத பிஸினெஸ் டீல்.. நீ என்னோட பட்டத்து ராணி..” என சொல்லி சமாளிக்கிறானாம்.
சக்தியிடம், அவளின் தோழி புலம்புவாள்… “ஒரு மனிதக்கு முன்னெல்லாம் இரண்டு பக்கம் சொல்லுவாங்க.. இப்போ நாலு பக்கம்… பர்சனல், குடும்பம், பிசினஸ்.. மீடியா.. இப்படி நாலு பக்கம் இப்போவெல்லாம்..” என ஒன்றும் செய்ய முடியாத குரலில் சொல்லுகிறாள்.. அதுதான் நினைவு வந்தது சக்திக்கு.
தாமு “கண்ணு.. “ என்றார், அனிச்சையாய்.. நிமிர்ந்தாள்..
அவள் கண்ணில் கலக்கம்தான் வேறு எதுவும் தெரியவில்லை.. சக்தி “ஏன் ப்பா… உண்மையாவே என்னை பிடிச்சிருக்குன்னு கேட்டாங்களா” என்றாள் தயங்கிய குரலில்.
அந்த வீடே அதிர… அதிரத்தான் சிரித்தார் தாமோதரன்… பின் “பின்ன, என் பெண்ணை பிடிக்காம போகுமா… நல்ல பையன்.. நல்ல குடும்பம்… உங்க அப்பாகிட்ட பேசுறேன்… நீ என்ன சொல்ற” என்றார் பொறுமையாக… அவளுக்கு ஏதும் தோன்றவில்லை… அமைதியாக சென்றாள் உள்ளே.
@%@%@%@@%@%@%@
அன்றும் அப்படிதான் ஒரு குதூகல மனநிலையுடன் வீடு வந்தான் லிங்கா… காலையில் இயல்பு நிலையில் வீடு இருக்க… லிங்கா அப்போதுதான் ஜாகிங் முடித்து வந்து அமர்ந்தான்..
அன்னை இல்லாததாலோ என்னமோ தீபக் சமத்தாக அப்பாவின் பேச்சை கேட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனை, பள்ளி வேனில் ஏற்ற காவ்யா சென்றாள்.
[the_ad id=”6605″]
இன்னும் லதா வந்திருக்கவில்லை நான்கு நாட்கள் ஆகிறது. இளாவும் போன் செய்யவில்லை… ‘வரட்டும்.. நம்ம நிலையை மட்டும் பார்க்கக் கூடாது..’ என எண்ணி அமைதியாக இருந்தான்.
காமாட்சி சரியாக இரண்டு நாள் சென்று தன் மருமகளுக்கு போன் செய்துவிட்டார்தான்.. லதாதான் “அத்த ட்டேட்… முடித்து வருகிறேனே..” என்றாள்… மாமியார் ஒன்றும் சொல்லவில்லை… “சரிம்மா” என்றுவிட்டார்.
இது இளாக்கு தெரியும் என எண்ணியிருந்தார்… அன்னை. பாவம் இளா போனே செய்யவில்லையே… எனவே எதுவும் அவனுக்குத் தெரியாது. அவனும் தன் மகன் தீபக்கை போல.. நேற்று வந்து விடுவாள், இன்று வந்து விடுவாள் என எண்ணியிருந்தான்.
காலையில் வீடு பரபரப்பாக இருக்க… லிங்கா வந்து அமர்ந்ததும்.. சத்தியமூர்த்தி அப்போதுதான் பூஜை முடித்து வந்தார். தீபக் சென்றுவிட்டதால்.. வீடு இப்போது அமைதியாகியது. கொஞ்சம் பரபரப்புகள் குறைந்து.. பொறுமையாக அவரவர் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்..
ஹாலில் அமர்ந்து இளாவும், லிங்காவும் ஏதோ பேசிய படியே பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். இரு பசங்களும் அங்கே இருப்பதால்.. மூர்த்தி மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து பேச்சை தொடங்கினார்…
மூர்த்தி “இளா… காவ்யா கல்யாணத்துக்கு மண்டபம் புக் செய்ததோட நிக்குது… அதுக்கப்புறம் என்னென்னவோ ஆகிடுச்சி… இந்த வாரத்தில் குலதெய்வ கோவில் போயிட்டு வந்து, அந்த வேலையை தொடங்கணும் டா… நேரம் நிறைய இருக்கற… மாதிரியே இருக்கும்… சட்டுன்னு போயிடும்… எப்போ போறது… என்ன…” என தன் மகன்களிடம் பேச்சை தொடங்கியவர்..
கிட்சென் நோக்கி குரல் கொடுத்தார் “காமாட்சி.. இந்த வாரம் போயிட்டு வந்திடலாமா… பிள்ளைகளை கேட்டு சொல்லு..” என பொதுவாக பெண்களிடம் சொன்னவர் தன் மகன்களின் முகத்தை பார்த்தார்.
லிங்கம் ஏதோ சைகை செய்வது தெரிந்தது.. இளா அதை கண்டும் காணாததாக இருப்பது தெரிந்தது.. தந்தை இதை பார்த்துக் கொண்டே இருந்தார்.. ஏதும் கேட்கவில்லை.
இளா, தந்தையின் பார்வையை உணர்ந்து “சரி ப்பா.. போயிடலாம் ப்பா…” என்றான் தன் தம்பியை சமாளிக்க முடியாமல்.
லிங்காவிற்கு கோவம் வர எழுந்து மாடி ஏறினான்..
இன்னும் ஹாலில்… மூர்த்தியின் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது..
[the_ad id=”6605″]
காமாட்சி கிட்செனிலிருந்து வெளியே வந்தார்… ஈஸ்வர் அங்கு இல்லை.. குரல் கேட்டுதே என அன்னையின் கண்கள், இளைய மகனை தேடியது… அவன் இப்போதுதான் மேலே ஏறிக் கொண்டிருக்கவும் “ஈஷ்வர்… எங்க டா… பேச பேச போனா எப்படி… இங்க வா…” என்றார் அதட்டலாக.
லிங்கா “ஆமாம்… என்னமோ நான் சொல்றத கேட்கற மாதிரி கூப்பிடுறீங்க” என சொல்லிய படியே வந்து அமர்ந்தான்.
காமாட்சி.. “ஆமாம்.. கேட்காமதான் இருக்கு… “ என தன் மகனுக்கு பதில் கொடுத்தவர்… தன் கணவனிடம் “ஏங்க.. அ… அந்த ரூமில்.. அங்க, இளா அடிபட்ட இடத்தில்… கணபதி ஹோமம் ஒன்னும் செய்திடலாங்க… அ.. அது உறுத்திட்டே இருக்கு… அத, முடிச்சிட்டு.. கோவில் போயிட்டு வந்திடலாம்…” என்றார் வேண்டுதலில் ஆரம்பித்த குரல் கட்டளையில் முடிந்ததோ…
இளாக்கு சங்கடமாக போனது, அதை பார்த்த லிங்கா “ஏன் ம்மா..” என்றான் அண்ணன் முகம் வாடுவது பிடிக்காமல்.
காமாட்சி ஒன்றும் சொல்லவில்லை.. சற்று நேரம் அமைதியாக இருந்தார்… பின் ஒரு பெருமூச்சு விட்டு… “அது அப்படிதான்.. டா… சங்கடபட்டாலும்.. சிலதை மனது நிம்மதிக்காக செய்துதான் ஆகவேண்டும்… நீ இதிலெல்லாம் தலையிடாத… நாங்க பேசிக்கிறோம்.. என்ன இளா..” என்றார் தன் பெரிய மகனையும் பேச்சில் இழுத்து.
லிங்கா “அதுக்குதான் கூப்பிட்டியா… என்னமோ பண்ணுங்க” என எழ…
அன்னை “டேய் டேய் இருடா… ஓடாத… இப்போதான் ஏதோ பொறுப்பா இருக்கானேன்னு நினைச்சேன்.. இரு டா… காவ்யா கல்யாணம் முடிந்ததும் உன்னோடதுதான்.. இப்படி பொறுப்பில்லாமல் இருந்தா எப்படி பொண்ணு பார்க்கிறது…” என்றார் காரமாக.
லிங்கா “அதுக்குதான் நான் பேசினா எல்லோரும் சின்ன பையன்னு சொல்றீங்களே..” என்றான்.
அன்னை “இரு டா.. இப்போ என்ன உனக்கு…” என்றவர் சட்டென “இரு ஈஷ்வர்.. நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.. இந்த வாரம் எல்லோரும் ப்ரீங்க… இந்த வாரத்தில்.. பூஜையை முடிச்சி.. கோவிலுக்கு போயிட்டு வந்திடலாம்” என முடித்தவர் “இப்போ சொல்லு டா” என்றார் அமர்ந்து கொண்டு..
பாவம் அந்த வீட்டின் தலைவர்.. இவர்களை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு பேசவில்லை.. அமைதியாவே இருந்தார்.