"ஏங்க நான்வாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீக்க போயிட்டே இருக்கீங்க" குரலை சற்று உயர்த்தியவள் அவன் பின்னால் ஓடுவது போல் சற்று வேகத்தை கூட்டினாள்.
தன்னை விடாமல் துரத்துபவளின் பிடிவாதத்தை உணர்ந்தவன் சுற்றிலும் எவரும் இல்லை என்று உறுதி செய்து அவள் புறம் திரும்பி, "எதுக்கு வைஷ்ணவி இப்டி ரோட்டுல வச்சு சத்தமா பேசுறீங்க? யாராவது பாத்துட்டா தப்பா இருக்கும்" நிதானமாக எடுத்துரைத்தான் கார்த்திக்.
"பாக்கட்டும்ங்க... நான் என்ன யார்கிட்டையோவா பேசுறேன்? உங்ககிட்ட தான பேசுறேன் இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?" அவனை நோக்கி மேலும் முன்னேறி வந்தாள் வைஷ்ணவி.
அதில் மிரண்டவன் எவர் கண்ணிலும் படக்கூடாதென்று, "தப்பா நினைக்க ஆயிரம் இருக்கும்ங்க. நான் வர்றேன்" என்றவன் திரும்பி நடக்க அவனை நோக்கி பின்னாலே மீண்டும் வேகமாக தங்கள் தெருவை தொடும் முன் அவனிடம் பேசிவிட வேண்டும் என்று ஓடினாள்.
தூரத்தில் வண்டியில் நின்று கைபேசியில் இவர்களை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த வைஷ்ணவியின் சகோதரன், கார்த்தி கண்ணில்பட இதை சாக்காக வைத்து தப்பிக்க எண்ணி, "உங்க அண்ணன் அங்க நிக்கிறாங்க ஒழுங்கா மாட்டிக்காம போய்டுங்க"
"அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு ஏன் பயப்புடுறீங்க... சுண்டக்கா பய..." மீண்டும் தன் காரியத்திற்கு தாவினாள் "எங்க வர்றிங்க? எப்ப வர்றிங்க? நைட் பதினோரு மணிக்கு மேல மாடிக்கு வர்றிங்களா நானும் வெயிட் பண்றேன்... நாம சைகை பாஷையிலேயே பேசலாம்" இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் பிரேக் அடித்தாற்போல் நின்றிட அவன் பின்னே இதழ்களில் சிரிப்பை அடக்கி முகத்தை அப்பாவியாய் நடித்தாள் வைஷ்ணவி.
"அதெல்லாம் முடியாது தப்புங்க. ப்ளீஸ் இப்டி ரோட்டுல, மொட்டை மாடில-னு சத்தமா கூப்ட்டு பேசாதீங்க" கிட்ட தட்ட கெஞ்சினான் கண்களை சுருக்கி.
இப்பொழுது இதழ்களில் இருந்த சிரிப்பை மறைக்காமல் வெளிப்படையாக காட்டியவள் உள்ளுக்குள், 'அப்டி வா வழிக்கு என் செல்ல கல்லமிட்டாய்...' எண்ணி, வெளியில், "ஓ உங்களுக்கு கூச்சமா இருக்கா? பிரச்சனை இல்ல" என்றவள் இந்த சம்பவத்திற்காகவே பல நாட்களாக தயாராக வைத்திருந்த ஒரு துண்டு காகிதத்தை, அவன் கையிலிருந்த பையில் போட்டு, "அந்த பேப்பர்ல என்னோட போன் நம்பர் இருக்கு. நீங்க என்ன பன்றிங்கனா டான்னு பதினோரு மணிக்கு கால் பண்றீங்க ஓகேவா?" கட்டளையை சிரிப்புடன், சிறு கண்டிப்புடன் கூறினாள்.
"கண்டிப்பா மாட்டேன். உங்க அம்மாகிட்ட வந்து பேச போறேன்" என்றான் சற்று கோவமாக.
அவளோ அதே சிரிப்புடன், "மிஸ்டர் கடலைமிட்டாய் என் அம்மாகிட்ட எல்லாம் நான் பெர்மிஷன் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு. உங்க பெர்மிஷன் மட்டும் தான் பாக்கி"
கண் சிமிட்டி நக்கலாய் அவனை விட்டு வீட்டை நோக்கி முன்னேறியவள் திடீரென நின்று, "இங்க பாருங்க... போன் பண்ணலன்னு வைங்க தெருவே அதிரும்..." என்ற எச்சரிக்கையோடு ஓடியவள் இன்னும் தொலைபேசியில் மூழ்கியிருந்த சகோதரனின் பின்னந்தலையில் விளையாட்டாக ஒரு அடியை வைத்து வீட்டிற்குள் சென்று மகிழ்ச்சியாக நுழைந்துகொண்டாள்.
அதன் பிறகு அவளைத் தவிர்க்கவே பார்த்துப் பார்த்து கீழும் மேலும் சென்று வந்தவன், இரவு உணவு உண்டு தன்னறையில் சென்று படுத்தவனுக்கு அவள் எச்சரிக்கை தான் வந்து கண் முன் படமாகியது. தலையணையை எடுத்து அழுத்தி மூடினாலும் பலன் பூஜ்யம் தான்.
'போயும் போயும் சாத்தான்கிட்ட மாட்டுவியாடா கார்த்தி' தலையணையை வைத்தே அடித்தவன் இன்னும் கொஞ்சம் முயன்று மணியை வேண்டும் என்றே பார்க்காமல் படுத்திருந்தவனுக்கு வெற்றியைத் தந்தது போல் தூக்கம் வரக் கண்களை மூடிய அடுத்த நொடி அதிரடியான இசை கேட்க முதலில் உதறித் தள்ளியவன் அடுத்து வந்த வரிகளில் பதறினான்.
மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளங்கட்டி
அர்ரார்ரா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க...
அடித்துப் பிடித்து எழுந்தவன் தன்னுடைய அறையிலிருந்து பால்க்கனி வந்தவன் கண்களுக்கு தங்கள் எதிர்வீட்டு மாடியின் திண்டில் கையில் ஒரு ரிமோட்டுடன் கால் மேல் கால் போட்டு இவன் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவி தான் தெரிந்தது.
கதவைத் திறந்து வந்த கார்த்திக், "ஏங்க" தங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மனிதர் சத்தம் கேட்டு வைஷ்ணவியின் இல்லத்தைப் பார்ப்பதைப் பார்த்து மெதுவாக அவளை அழைத்தான்.
அவளோ காதில் வாங்காமல் அவன் அழைத்ததும் இன்னும் ஒலியைக் கூட்ட ஸ்பிக்கரின் பலம் நன்றாக இரவின் அமைதியைக் கிழித்து மொத்த தெருவையும் எழுப்பியது.
"ஏங்க வைஷ்ணவி..." விட்டால் நிச்சயம் அழுதிருப்பான்.
"ஏலா என்ன பண்ற இந்த சாமம் தான் உனக்கு பாட்டு கேக்க தோணுமா? பக்கத்து வீட்டுல இருந்து சண்டைக்கு வருவாங்கலா" அவர்கள் வீட்டில் கீழிருந்து வைஷ்ணவி சகோதரன் அவளை அதட்ட, "டேய் போய் தூங்குடா" இவள் அடங்காதவன் என்று விட்ட உறக்கத்தைத் தொடர சென்றான்.
'அட கிறுக்கா...' உள்ளே சென்றவனை நினைத்து தலையில் அடித்தான் கார்த்திக்.
ஆடுரார்ரா நாக்கமுக்க... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
ஆடுரார்ரா நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
"ஏங்க போன் பன்றேங்க. பாட்ட ஆப் பண்ணுங்க ப்ளீஸ்" என்றான் கார்த்திக் கெஞ்சலாக. அவளோ மீண்டும் கண்டுகொல்லாமல் இன்னும் ஒலியை அதிகரித்தாள்.
அவளின் எண்ணம் உணர்ந்தவன் எதற்கும் இருக்கட்டும் என்று சேமித்து வைத்திருந்த எண்ணில் அழைக்க அவன் எண்ணை பார்த்ததும் கார்த்தியை திரும்பி பார்த்து சிரித்தவள், பாட்டை நிறுத்தி, இவர்கள் வீட்டை பார்த்திருந்த மக்களை பார்த்து, "இன்னைக்கு தான் ஸ்பீக்கர் வாங்குனேன். அது தான் டெஸ்டிங்..." என்று அவர்களுக்கு விளக்கமளித்து இன்னும் அவன் எண்ணை எடுக்காமல் வெளியில் வைத்திருந்த ஸ்பீக்கரை தன்னுடைய அறையில் வைத்து அதன் பிறகே மெதுவாக அழைப்பை ஏற்றாள்.
அழைப்பை எடுத்ததும் அந்த பக்கம் கார்த்திக்கிடம் பெரு மூச்சு, "ஏங்க இந்த ஆர்ப்பாட்டம்?"
"எனக்கு தூக்கம் வருதுங்க கார்த்திக். நாளைக்கு வெள்ளன கூப்புடுங்க. குட் நைட்" விருப்பமே இல்லாமல் பேசியவன் இணைப்பையும் துண்டித்தாள்.
'டிங் டிங் டிங்...' காதில் மணியடிக்க கைப்பேசியையும் அவள் அறையையும் மாறி மாறி பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
**********************
பொதுவா நெறையா பேருக்கு இருக்குற ஒரு ஆசை தான் தன்னோட வீட்டுக்கு பக்கத்துல ஒரு அழகான பையன் இருக்கனும்... அவனை சைட் அடிக்கணும், பதிலுக்கு அவன் கண்ணனுக்கு நாம அழகா தெரிஞ்சிட மாட்டோமான்ற ஒரு ஏக்கம். இல்லனு சொன்னிங்கன்னா பரவால்ல இருக்கட்டும் மேல படிங்க... இங்க அந்த சில்லியான எண்ணங்களை உண்மையாக்குனா என்ன? அத அதுக்கு மேல ஒரு படி கொண்டு போனா என்னன்ற ஒரு கேள்வில வந்த கதை தான் இந்த 'டிங் டாங் Love'
அதிக திருப்பங்கள், வில்லன்கள், வில்லிகள் என எதுவும் இல்லாத ஒரு அழகான காதல் கதை இது. என்னால் இயன்ற அளவிற்கு எதார்த்தமாக மனதை இதமாக்கும் விதத்தில் கொடுக்கிறேன். நிச்சயம் சாப்ட் ஸ்டோரீஸ் படிப்பவர்களுக்கு பிடிக்கும் விதமாக இந்த கதை இருக்கும். முயன்ற அளவிற்கு வேகமாக அடுத்தடுத்த பதிவுகள் கொடுக்க முயற்சிக்கிறேன். நன்றி... படித்து தங்கள் ஆதரவை எனக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Comments on teaser....??
Title and book cover nalla iruka?
உங்கள் Bookeluthaporen...
Last edited: