மனைவி - 12

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 12

"கடைக்குப் போயிட்டு வர்றேங்க..." மெல்லிய குரலில் சொன்னாள்.

"கடைக்குப் போயிட்டு வந்தேன்னா... வாங்குன பொருள் எல்லாம் எங்க?"
அவன் வார்த்தைகள் ஈட்டி போல அவள் நெஞ்சில் தைத்தன.

அவளுக்குப் பின்னால் நின்ற அந்த மூன்று பேரின் முகத்தில் தெரிந்த விகாரமான சிரிப்பைக் கண்டபோதுதான், அவர்கள் ஏதோ பெரிய சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது.

"கடை பூட்டியிருந்ததுங்க..."

"நல்ல கதை விடுறடி! நான் தான் உன் பின்னாடியே வந்தேனே... நீ அங்க ஒருத்தன் கூட வழிஞ்சு வழிஞ்சு சிரிச்சுப் பேசிட்டு இருந்தியே... அதெல்லாம் என்ன?"

ராதையின் கண்கள் அப்படியே கலங்கிப் போயின. 'என்னைச் சந்தேகப்பட்டு என் பின்னாடியே வந்தீங்களா?' என்கிற கேள்வி அவள் தொண்டையை அடைத்தது. அவளுக்கு அப்படியே பூமி பிளந்து உள்ளே போய்விட வேண்டும் போலத் தோன்றியது.

"உன்னைச் சந்தேகப்படாம எப்படி இருக்க முடியும்? புருஷன் வெளிநாட்டுக்குக் கிளம்பிட்டா, பொண்டாட்டி வேற ஒருத்தனைத் தேடிக்கலாமா? உனக்கு அசிங்கமா இல்லை? உனக்கு வேற ஒருத்தனைப் பிடிச்சிருந்தா, நீ எதுக்கு இன்னும் என் வீட்ல இருக்குற? எதுக்கு என் காசைத் தின்னுட்டு இருக்குற? நேராகவே அவன் கூடப் போயிருக்க வேண்டியதுதானே?"
அந்த வார்த்தைகள் அவளது உயிரையே வாங்குவது போல இருந்தது.

தன் கணவன் வாயால் இப்படி ஒரு கீழ்த்தரமான பேச்சை அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் உள்ளம் கொதித்தது.

"நான் தப்பு பண்ணேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்க நேர்ல பார்த்தீங்களா? கண்ணால் பார்த்தது தான் உண்மையா?" என்று அவள் கோபமாக, வலியோடு கேட்டாள்.

ஸ்ரீராம் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. அவளுக்குப் பதில் சொல்வதே அருவருப்பாக அவனுக்குத் தோன்றியது.

"உன்கிட்ட பேசவோ, உன் முகத்தைப் பாக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. தயவு செஞ்சு இந்த நிமிஷமே இந்த வீட்டை விட்டு வெளியில போயிரு. இனிமே என் கண் முன்னாடி உன்னை நான் பாக்கக் கூடாது... போ!" என ஆக்ரோஷமாக வாசலைக் கைகாட்டினான்.

அவனையும், அந்த வாசலை காட்டிய அவனது கைகளையும் மாறி மாறிப் பார்த்தவளுக்குத் தலை சுற்றியது. அந்த இடம் முழுக்க ஒருவிதமான இருள் சூழ்ந்தது போன்ற பிரமை.

அவமானத்தின் உச்சிக்குத் தள்ளப்பட்டவளாய், கண்கள் கலங்க, "உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?" என்று உடைந்த அழுகுரலில் கேட்டவளுக்கு, என்ன செய்வது என்றே புரியவில்லை.

இத்தனை வருடத் தவ வாழ்க்கைக்கும், அவனுக்காகவே உருகி உருகிக் காத்திருந்த காத்திருப்புக்கும், இவன் இன்று தூக்கி எறிந்திருக்கும் பரிசு இவ்வளவுதானா?

அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. "நான் உன் கழுத்தைப் புடிச்சு வெளியில தள்ளி உன்ன அசிங்கப்படுத்துவதற்கு முன்னாடி, நீயா இந்த வீட்டை விட்டு நாகரீகமா வெளியில போயிடு," என்று அவன் கத்தினான்.

அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் அவள் காதுகளில் இறங்கியது.

"என்னை என் அம்மா ரொம்ப நாகரிகமா வளர்த்திருக்காங்க... அதனால தான் இப்போ வரைக்கும் நிதானமா பேசிட்டு இருக்கேன். நீயா இந்த வீட்டை விட்டு வெளியில போயிட்டினா அசிங்கம் இல்லாம போயிடும்," என்று அவன் மீண்டும் மீண்டும் அவளைக் காயப்படுத்தினான்.

அருகில் நின்றிருந்த மலர், எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல, "அண்ணா... இவகிட்டெல்லாம் என்ன பேசிட்டு இருக்கீங்க? கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுங்க. இப்படிப் பண்ணிட்டு இருந்தா... இந்த அசிங்கத்தைப் பார்த்து ஊரே நம்மளப் பார்த்துச் சிரிக்குது," என்று அவனை இன்னும் உசுப்பி விட்டாள்.

கலை தன் மகளைத் தடுத்தபடி, "மலர், நீ சும்மா இரு. இது புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்குற பிரச்சனை. இதுல நம்ம தலையிடக்கூடாது. ஸ்ரீராம் என்ன முடிவு பண்ணுறானோ அதுவே நடக்கட்டும்," என்றார்.

ஆனால் அவர் குரலில் ஒருவிதமான தந்திரம் ஒளிந்திருந்தது.
சிறிது நேரம் கழித்து, ஸ்ரீராமைப் பார்த்து, "ஸ்ரீராம்... நீ கொஞ்சம் நிதானமா யோசி. அவ பண்ண தப்பு பண்ணதாவே இருக்கட்டும், இனிமேல் தப்பு பண்ணாம பாத்துக்கலாம். நீ தான் இனிமேல் இங்கேயே இருக்கப் போறேன்னு சொல்றயே... இந்த ஒரு முறை அவள மன்னிச்சு ஏத்துக்கோ. நீ கூட இருக்கும்போது அவ எந்தத் தப்பும் பண்ணப் போறது இல்லையே! அவளும் பாவம்... அவங்க அப்பா அம்மா வீட்ல அவளைக் கண்டுக்க மாட்டாங்க. அவன் அண்ணன் வீட்டுப் பக்கமே விட மாட்டான். இப்போ நீயும் வீட்டை விட்டுத் துரத்தினா அவ எங்க போய் நிப்பா?" என்றார் கலை.

அவரின் அந்த நயவஞ்சகக் குரல் ஸ்ரீராமுக்குள் வேறு விதமான ஆத்திரத்தை மூட்டியது.

"அம்மா! அவ எங்க வேணாலும் போகட்டும். எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. இனி அவ செத்தாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என் கண்ணு முன்னாடி அவ நிக்கக்கூடாது. அவ கூட வாழணும்னு மட்டும் என்கிட்ட சொன்னீங்கன்னா, நான் உயிரோட இருக்க மாட்டேன்! இந்த மாதிரி ஒரு அசிங்கமான பொண்ணோட என்னால வாழ முடியாது," என்று அவன் மனசாட்சியே இல்லாமல், நிதானம் இழந்து கத்திக்கொண்டிருந்தான்.

அவன் பேச்சைக் கேட்டுத் தாங்க முடியாத ராதை, தன் இரண்டு காதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டு,

"போதும் நிறுத்துங்க!" என்று ஆக்ரோஷமாகக் கத்தினாள்.

கலை உடனே சுதாரித்துக் கொண்டு, "என்ன நிறுத்தச் சொல்ற? எதுக்கு நிறுத்தச் சொல்ற? நீ தப்பு பண்ணிருக்கேன்னு அவன் கேட்கிறான். ஒரு மன்னிப்புக் கேட்டா வேலை முடிஞ்சுடும். அதை விட்டுட்டு நீ எதுக்கு இப்படிப் பேசிட்டு இருக்க? எதுக்கு குரல் உயர்த்திப் பேசுற? புருஷன் முன்னாடி இப்படித்தான் கத்துவாங்களா? அவன் இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வீட்டுக்கு வந்திருக்கானே... அவன்கிட்ட அன்பா ஒரு வார்த்தை பேசினாயா? நீ பாட்டுக்கு வெளியில போய் ஒருத்தன் கூட நின்னு பல்லைக் காட்டிக்கிட்டு இருக்கியே..." என்று அடுக்கடுக்காகப் பொய்களைச் சுமத்தினார்.

ராதைக்கு ஆத்திரம் பொங்கியது. "அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை! இன்னும் ஒரு வார்த்தை நீங்க பேசினாலும் நான் அமைதியா கேட்க மாட்டேன்," என்று கலைக்கு முன்பு விரல் நீட்டிப் பேசினாள்.

இதுவரை அமைதி காத்து வந்த ஸ்ரீராமின் குணம் அப்படியே மாறிப்போனது.

"என்னை பத்திப் பேச உங்களுக்கோ, உங்க பொண்ணுங்களுக்கோ எந்தத் தகுதியும் கிடையாது, எந்த உரிமையும் கிடையாது!" என்று ராதை பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,
'பளார்' என்று அவள் கன்னத்தில் அறைந்தான் ஸ்ரீராம்.

அந்த அறையின் வேகத்தில் அவள் நிலை தடுமாறிச் சுருண்டு கீழே விழுந்தாள்.

அலர், மலர் இருவரும் அவளை கண்டு பார்த்து ஆச்சரியமும் ஆனந்தமுமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.

"டேய் விடுடா... பொம்பளைப் பிள்ளையை இப்படிப் போட்டு அடிக்கக் கூடாது. நான் உன்னை இப்படியா வளர்த்தேன் ஸ்ரீராம்? என்ன பழக்கம் இது? என் பையனா நீ?" என்று கலை கண்ணீரோடு கேட்பது போல நடித்தார்.

"அம்மா அமைதியா இருங்க!" என்று தன் தாயைச் சத்தமாக அதட்டிவிட்டு, கீழே விழுந்து கிடந்த ராதையின் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துச் சென்றான்.

அவளை அப்படியே இழுத்து சென்று நடுத்தெருவில் தள்ளிவிட்டான்.

"இனி உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நாளைக்கு உனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும். உன்ன மாதிரி ஒரு அசிங்கமான ஜீவன் கூட வாழறதுக்கு நான் சாகலாம். என் முகத்துல கூட நீ முழிக்கக் கூடாது. ஏதாவது காரணம் சொல்லி நீ இங்கே வந்தேன்னா, உன் தலையை வெட்டி எடுத்துடுவேன். அம்மாவுக்குத் தகுதி இல்லையா? உரிமை இல்லையா? அப்படிப்பட்ட இடத்துல நீ எதுக்குடி நிக்கிற? அசிங்கமா இல்ல உனக்கு? உண்மையாவே நீ ஒரு நல்ல பொம்பளையா இருந்தா என் கண்ணு முன்னாடி வராதே, இங்கிருந்து கிளம்பு... ச்சீ!" என்று காறி உமிழ்ந்தவன்,

கேட்டைப் படாரென்று மூடிவிட்டு மொத்தக் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

மொத்தத் தெருவும் இன்று வேடிக்கை பார்த்தது. அந்தப் பார்வைகள் ஈட்டியாய் அவளைக் குத்தியது. அவமானமும் வலியும் அவளைக் கொன்றது. எந்தத் தவறும் செய்யாமல் இன்று ஒரு 'தாசி' என்ற பட்டத்தைச் சுமந்து நிற்கும் அந்த அவலம் யாருக்குத்தான் வலியைத் தராது?

அவள் நெஞ்சம் துடித்துப் போனது. தன் மீது யாரோ சாணியை இறைத்தது போன்ற ஒரு அருவருப்பு அவளுக்கு ஏற்பட்டது.

எப்படிப்பட்ட மனிதன் இவன்? நல்லவன் என்று இவனுக்காகவா இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்? ஒரே நாளில் என் முழு நம்பிக்கையையும் கொன்று என்னை நடைப்பிணமாக நிற்க வைத்துவிட்டானே!'

ஏனோ அங்கே நின்று அவனிடம் கெஞ்சவோ, மீண்டும் அவனைப் பார்க்கவோ அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஒரு துளி நம்பிக்கை கூட இல்லாமல் இவ்வளவு அசிங்கப்படுத்தியவனுடன் மீண்டும் வாழ்வதா? அங்கேயே, அப்போதே உயிர் விட்டு விடத் தோன்றியது அவளுக்கு. ஆனால் சாவைக் கூட எளிதாக அவளால் அடைய முடியவில்லை.

'நான் செத்துட்டா அவங்களை யார் பாத்துக்குறது? எனக்காகக் காத்துட்டு இருக்காங்களே... அவங்களுக்காக நான் வாழ்ந்தாகணும்.' கண்ணீரோடு எழுந்து நின்று, யாரையும் நிமிர்ந்து பார்க்கக் கூடத் துணிவின்றி, கூனிக் குறுகி நடந்தாள்.

தவறு செய்தவர்களை விட, செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவிக்கும் போது அதன் வலி நூறு மடங்கு அதிகமாக இருக்கும்.

உத்தமியாய், பத்தினியாய், கணவனை மட்டும் மனதில் நினைத்து அவனுக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தவளுக்கு அவன் கொடுத்த பரிசு 'தவறானவள்' என்பதுதான்.

அதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை.

அவள் மீண்டும் தேடிச் சென்றது அந்தத் தாய் காளி அன்னையைத் தான். அவள் நிலைக் கண்டு குருவம்மா துடித்துப் போனாள்.

"ராதை... என்ன ஆச்சு உனக்கு?" நடை சாற்ற வேண்டிய நேரத்தில் ராதை வந்து குலைந்து போய் நின்று கொண்டிருந்தாள்.

"அக்கா..." அந்த வார்த்தையை முழுதாகக் கூட அவளால் சொல்ல முடியவில்லை. அந்தப் படிக்கட்டிலேயே அமர்ந்து வாய் விட்டுப் குழந்தையை போலக் கதறி அழுதாள்.

கோவிலில் இருந்தவர்களின் பார்வை முழுவதும் அவள் மீது படிந்திருந்தது.
குருவம்மா வுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

பூசாரி தான் அங்கிருந்தவர்களை பார்த்து, "நேரம் ஆயிடுச்சு, எல்லாரும் வெளிய போங்கப்பா," என்று அவர்களை அப்புறப்படுத்தினார்.

"குருவம்மா, நீ பேசு... நான் அப்படியே ஓரமாகப் போகிறேன்," என்று ராதையின் அழுகையைத் தாங்க முடியாமல் அவரும் அங்கிருந்து நகர்ந்தார்.

குருவம்மா ராதையின் அருகில் அமர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தப் போராடினார். ஆனால் அவளின் அழுகையும் கதறலும் குறையவே இல்லை. வாரிச் சுருட்டி அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

தொடரும்......
 
அடேய் ஸ்ரீராம் இத்தோடு நிறுத்திக்கோ. இனி உனக்கு மன்னிப்பே கிடையாது. ராதைக்கு ஏற்ற கிருஷ்ணர் வந்து இனி அவளை காப்பாற்றட்டும்.

ஆனா உனக்கு சீதா கிடைக்கமாட்டா, சூர்ப்பனகை தான் பொண்டாட்டியா வந்து உன்ன உன்ன பெத்தவ,கூடப்பிறந்த சனியன்களை எல்லாம் வதம் பண்ணனும்.
 
Last edited:
இனி கதறி கதறி மன்னிப்பு கேட்டாலும் அவனுக்கு no more second chance, ராதை!!! குடுக்கவே கூடாது. இந்த மூஞ்சிக்கு ஶ்ரீராம்னு பேரு வேற! 13 வருஷம் மனைவிக்கிட்ட பேசவே பேசாத இந்த லூசு... இன்னிக்கு கணவன் ரோல் play பண்ணுது. 🙄
 
apadi yaru ka ah than radha saga kuda mudiyama ivvalavu porumaiya ella avamanathaiyum thankikura🤔🤔🤔 sri ram ellam manusane ila iavanuku poe sriram nu name oru kedu 🤦‍♀️🤷‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top