வரம் 38

Advertisement

Writer girl

Well-known member
Member
அவற்றுள் ஒரு காளை மாடு மட்டும் மிகவும் அதிகமான மூர்க்கத்தனத்துடன் காணப்பட்டது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகிழம்பூவனுடன் வந்திருந்த பூபாலனுக்கே அதைப் பார்த்து விட்டுத் தொடை நடுங்க ஆரம்பித்து விட்டிருக்க,

“என்ன மாப்பிள்ளை இந்த மாடு ரொம்ப மூர்க்கமாகத் தெரியுது! ஏன் இப்படி இருக்கு? இதுக்குத் திடீர்னு என்னாச்சு?”எனக் கேட்டான்.

“அது தான் எனக்கும் தெரியலை மாமா”என்றவனோ, அந்தக் காளை மாட்டைப் பராமரித்துக் கொண்டிருக்கும் பராமரிப்பாளரை அழைத்து அதைப் பற்றி விசாரித்தான் மகிழம்பூவன்.

“யானைக்கு எல்லாம் மதம் பிடிக்கும்ல ஐயா? அந்த மாதிரி இந்த மாட்டுக்கு ஏதோ சரியில்லை போல! ஒருவேளை உடம்பு சரியில்லாமல் இருக்கலாம்!”என்று தலையைச் சொரிந்து கொண்டே பதிலளித்தார் அந்த ஆள்.

“ஓஹோ! டாக்டரை வரச் சொல்லியாச்சா?”என்று அவரிடம் விசாரித்துக் கொண்டே அந்தக் காளை மாட்டின் அருகில் செல்ல எத்தனிக்க,

உடனே,”அது கிட்டே போகாதே மாப்பிள்ளை! அதோட மூர்க்கத்தைப் பார்த்தாலே ரொம்ப பயமாக இருக்கு!”என்று அவனைத் தடுத்து நிறுத்தினான் பூபாலன்.

“மாமா! அது என்னை ஒன்னும் பண்ணாது! நாங்க எவ்வளவு வருஷமா இந்த மாட்டை வளர்த்துட்டு இருக்கோம் தெரியுமா? அதனால் எனக்கு இதனால் எதுவும் ஆகாது!”என அவனிடம் நம்பிக்கையுடன் உரைத்து விட்டு, அந்தக் காளை மாட்டிடம் சென்றான் மகிழம்பூவன்.

எவ்வளவு நேரமாக அது தனது கயிற்றை அறுத்துக் கொள்ள மிகவும் முயற்சித்துக் கொண்டு இருந்தது போலும்!

அதனாலேயே அவன் தனக்கு அருகே வந்ததுமே அவனது முன்னால் சில அடிகள் எடுத்து வைத்து அவன் தன்னை நெருங்கியதுமே எதிர்பாராத விதமாக அவனது வயிற்றில் தனது கொம்புகளை வைத்து முட்டி விட்டிருந்தது.

திடீரென்று நடந்த இந்தத் தாக்குதலை அங்கேயிருந்த யாரும் எதிர்பார்ககவே இல்லை!

‘ஆஹ்!!”என்று அலறிக் கொண்டே தனது வயிற்றில் கையை வைத்து நிலை தடுமாறிக் கீழே விழுந்து விட்டான் மகிழம்பூவன்.

அதைக் கண்டதும்,”ஐயா!!”என்று அங்கேயிருந்த வேலையாட்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு அவனிடம் வந்தனர்.

அதேபோல் தனது மாப்பிள்ளைக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு அவனிடம் போய்,”மாப்பிள்ளை!”என்றப் பூபாலனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை!

ஆனாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,“வண்டியைத் தயாராக வைங்க”என்று மற்றவர்களுக்கு வலியுறுத்தி விட்டு, இன்னும் சில பேரின் துணையுடன் மகிழம்பூவனைத் தூக்கிக் கொண்டுத் தயாராகி இருந்த வாகனத்தில் ஏற்றி விடவும் அந்த வாகனம் மருத்துவமனைக்கு விரைந்தது.

தனது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மகிழம்பூவன் வலியால் முனகுவதைக் கேட்டுத் தனக்கும் கண்களில் நீர் துளிர்த்து விட்டதை உணர்ந்தான் பூபாலன்.

அவனுடன் பயணித்துக் கொண்டிருந்த வேலையாளோ,”ஐயாவோட வீட்டுக்குத் தாக்கல் சொல்லனும்லங்கய்யா?”என்று பதட்டத்துடன் கூறினார்.

உடனே,”இப்போ வேண்டாம்ண்ணே! ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பெட்டில் சேர்த்துட்டு அப்புறம் பார்த்துப், பொறுத்துத் தான் சொல்லனும்!”என்றுரைத்து விட்டுத் தனது மாப்பிள்ளையின் வயிற்றில் இருந்துக் குருதி வழியும் இடத்தில் ஒரு துண்டை வைத்து அழுத்திப் பிடித்து இருந்தப் பூபாலனோ,

“மாப்பிள்ளை! இங்கே பாரு! என்னைப் பாரு!”என்று அர்த்தம் மயக்கத்தில் இருந்தவனின் கன்னத்தைத் தட்டி அவன் கண்ணை மூடாமல் இருக்க வைப்பதற்கு முயற்சித்தான்.

அதற்குள்ளாக, மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள்.

உடனே மகிழம்பூவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அவனை ஸ்ட்ரெக்ச்சருக்கு மாற்றி பரிசோதனை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

உடனே விஷயத்தைக் கேள்விப்பட்டு மருத்துவர்களும் வந்து விடப் பூபாலன் தான், வரவேற்பறையில் கேட்ட விவரங்களைச் சொல்லிப், பணத்தையும் கட்டினான்.

ஆனால் அவனோ சில நிமிடங்கள் கழித்து தங்கள் வீட்டிற்கு அழைத்து விஷயத்தை உரைக்கலாம் என்று நினைத்து இருக்க, அங்கு மாட்டுப் பண்ணையில் இருந்த மகிழம்பூவனின் விசுவாச வேலையாள் ஒருவர் அவனது தந்தைக்கு அழைத்து அவனுக்கு நடந்த விபத்தைச் சொல்லி, அவனைக் கொண்டு சென்றிருக்கும் மருத்துவமனையின் பெயரையும் கூறி விட்டிருந்தார்.

அதைக் கேட்டதும் தனது ஈரக்குலை நடுங்க,”என்னலே சொல்லுத? என் பையனுக்கா அப்படி ஆச்சு?”என்று அவரிடம் மீண்டுமொரு விசாரித்துப் பார்த்தார் பால்ராஜ்.

அவரால் தனது மகனுக்கு இப்படி விபத்து நேர்ந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!

“ஆமாங்க ஐயா! மகிழு ஐயாவைத்தேன் அந்தக் காளை முட்டித் தள்ளிடுச்சு!”என்று உறுதியாக கூறினார் மறுமுனையில் இருந்தவர்.

“ஐயோ!”என்றவரின் கூக்குரலைக் கேட்டு உடனே அங்கே வந்து,

“என்னாச்சு மாமா? ஏன் இப்படி கத்துறீங்க?”என்று அவரிடம் பதட்டத்துடன் வினவினார் ரமணன்.

“மாப்பிள்ளை! நம்ம மகிழுக்கு…”என்றவரால் அடுத்த வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை!

“நம்ம மகிழுக்கு என்னாச்சு மாமா? ஏதாவது சொல்லுங்க! எனக்கும் மனசுப் பதறுது!”என்று அவரை மேலே பேசுவதற்கு ஊக்கினார் ரமணன்.

“அவனைக் காளை மாடு வயித்துலயே முட்டிடுச்சாம் மாப்பிள்ளை!”என்று கூறிக் கதறத் தொடங்கினார் பால்ராஜ்.

அதைக் கேட்டுத் தானும் அதிர்ந்து, நொடிந்து போய் விட்டவரோ,

“இப்போ மாப்பிள்ளையை எங்கே வச்சு இருக்காங்க மாமா?”என்கவும்,

“மருமகன் தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் சேர்த்து இருக்காராம்!”என்றவருக்கு வலியால் நெஞ்சைப் பிசைந்தது!

உடனே துரிதமாகச் செயல்பட்டு அவருக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்க வைத்து விட்டு,”நாம இப்போவே அங்கே போவோம் மாமா! அதெல்லாம் மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகாது!”என்று அவருக்கு ஆறுதலாகச் சொன்னார் ரமணன்.

“இப்போ கொஞ்ச நாளாகத் தான் எம்மயன் ரொம்ப சந்தோஷமாக இருந்தான்! அதுக்குள்ள போய் இப்படி ஆகிடுச்சே!”என்று சிறு குழந்தையைப் போல் அழுதார் பால்ராஜ்.

என்ன தான், தோளுக்கு மீறி வளர்ந்தாலும் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் அதை அவர்களது பெற்றவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது அல்லவா?

அந்த நிலையில் தான் இப்போது தனது மகனை நினைத்துத் துடித்துக் கொண்டிருந்தார் பால்ராஜ்.

அதேபோல்“இதை நான் எப்படி மதிகிட்டேயும், அழகி கிட்டேயும் சொல்லுவேன் மாப்பிள்ளை?”என்றும் புலம்பத் தொடங்கி விடவும்,

அவரைச் சமாதானப்படுத்திக் காரில் ஏற்றிக் கொண்டு மகிழம்பூவனுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவமனைக்குப் பயணமானார் ரமணன்.

அந்தப் பயணத்திற்கு இடையிலேயே தனது மனைவிக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தி விட்டு அமைப்பைத் துண்டித்து இருக்கவும்,

அவர் கூறியதைக் கேட்டவுடன்,”நம்ம மகிழைக் காளை மாடு முட்டி இபீபோ ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்களாம்!”என்று உரத்தக் குரலில் அலறினார் கஸ்தூரி.

அவரது கூற்றைக் கேட்டதும் மற்றவர்கள் அனைவருமே தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே விட்டுவிட்டு அவரிடம் வந்து,

“என்னச் சொல்றீய? நெசமாவா?”என்று அவரைத் தவிப்புடன் கேட்டனர்.

அதுவும் தன் தம்பியின் நிலையை அறிந்ததும் வண்ணமதிக்கு இதயமே நின்று விட்டதைப் போன்றதொரு நிலை உருவாகி விட்டது!

அதே சமயம் தனது பேரனை வெளியில் அழைத்துச் சென்று அப்போது தான் வீட்டிற்குள் வந்திருந்த ஆறுமுகத்திற்குச் செய்தியைத் தெரிவித்ததும்,

அவரோ,“அவனுக்கு இப்படி ஆகுற வரைக்கும் இந்தப் பாலன் என்னப் பண்ணிட்டு இருந்தியான்? இப்போ எங்கே இருக்காவளாம்?”என்று கலக்கத்துடன் விசாரித்தார்.

“பாலன் தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்கியானாம்ங்க! பரிசோதனை நடந்துட்டு இருக்குதாம்!”என்று கணவரிடம் கூறினார் முல்லைக்கொடி.

இதில் ஒரு ஆள் மட்டும் அங்கே வரவில்லை!

அது சஹஸ்ரா தான்!

அவள் இருந்த அறையின் தாழ்ப்பாளைப் பூட்டிக் கொண்டுத் தனது அலுவலக மீட்டிங்கில் மும்முரமாக இருந்தாள்.

அதனாலேயே கஸ்தூரியின் சத்தம் அவளுக்குக் கேட்கவில்லை!

“இதை எப்படி சஹாகிட்டே சொல்லுவேன்? அவ எப்படி எடுத்துக்கப் போறாள்ன்னுத் தெரியலையே?”என்று தலையிலடித்துக் கொண்டார் கஸ்தூரி.

அவர் அப்படிக் கூறுவதும் நியாயம் தான்! ஏனெனில், சஹஸ்ராவிடம் முன்பு இருந்த அலட்சியக் குணம் இப்போது இல்லை!

அதுவும் அவளிடம் பேசிய குறுகிய நாட்களிலேயே தன்னுடைய தம்பியின் மீது அவளுக்கும் உண்மையான காதல் வந்து விட்டது என்பதை அறிந்து இருந்தாள் வண்ணமதி.

அதனால் அவளிடம் இந்த விஷயத்தைக் கூறினால் நிச்சயமாக அவளால் தாங்கிக் கொள்ள முடியாது என்றெண்ணினாள்.

ஆனாலும் தங்களுக்கு வேறு வழியில்லை என்று ஒரு முடிவுடன் தன்னுடைய செல்பேசியில் இருந்து சஹஸ்ராவின் செல்பேசிக்கு அழைப்பு விடுத்தாள் வண்ணமதி.

அதைக் கண்டதும், தான் மீட்டிங்கில் இருக்கும் சமயங்களில் தங்களது வீட்டினர் எப்பொழுதுமே தன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்களே!

ஆனால் இப்பொழுது தனக்கு வண்ணமதி அழைத்து இருப்பதைப் பார்த்தால் ஏதாவது முக்கியமான விஷயமாகத் தான் இருக்கும் என்று அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து,

“ஹலோ மதி” என்றிருந்தாள் சஹஸ்ரா.

“அழகி! நீ கொஞ்சம் வெளியே வாயேன். உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்”என்றவளின் குரலில் வெளிப்பட்டப் பதட்டமும், கலக்கமும் பெண்ணவளைத் துரிதமாகச் செயல்பட வைத்தது.

தங்களது இன்றைய மீட்டிங் இத்துடன் முடிவடைந்தது என்பதை அதில் இணைந்து இருந்தவர்களிடம் தெரிவித்து விட்டு மடிக்கணினியை அணைத்து விட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வரவேற்பறைக்கு வந்து சேர்ந்திருந்தாள் சஹஸ்ரா.

அவளை அங்கேயிருந்த மற்றக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலக்கத்துடன் பார்த்தனர்.

அதில் தனது மூளையில் அபாய மணி அடிப்பதை உணர்ந்து,”பூவனுக்கு என்னாச்சு?”எனக் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் கேட்டிருந்தாள் சஹஸ்ரா.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top